Showing posts with label islam. Show all posts
Showing posts with label islam. Show all posts

Friday 20 April 2012

காணொளி - இனவாத பிக்குகளின் வெறியாட்டம்! இலங்கை தம்புள்ளை பள்ளிவாசல் தகர்ப்பு!




இலங்கையில் தம்புள்ளையிலுள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான பள்ளிவாசலை உடைக்கக் கோரி பௌத்த பிக்குகள் ஆரம்பித்த ஆா்ப்பாட்டம் கூர்மையடைந்து வரும் இலங்கையின் இனவாத அரசியலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கின்றது.

அரசாங்கம் புண்ணிய பூமியாய் பிரகடனப்படுத்தியிருக்கும் தம்புள்ளைப் போன்ற பிரதேசங்களில் மாற்று மதத்தினரின் எவ்வித வணக்கஸ்தலங்களோ அடையாளங்களோ இருக்கக் கூடாதென பௌத்த தீவிரவாதிகள் அண்மைக்காலமாக அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த இனவாத செயற்பாடு இதுவரை அனுராதபுரத்திலுள்ள ஒரு தர்காவையும், தம்புள்ளையிலுள்ள ஒரு பள்ளிவாசலையும் பதம் பார்த்திருக்கிறது.

நாளை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் இந்த இனவாத நோய் பரவக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

அரசாங்கமும் இனவாத சக்திகளின் இந்த மோசமான நிலைப்பாட்டை  ஆதரிக்கும் நிலையில் இருப்பது, இந்த நாட்டின் எதிர்காலத்தை மீண்டுமொரு முறை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் என்பதில் எவ்வித சந்ததேகமுமில்லை.

அரசியல் ரீதியாக இடம்பெறும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டங்களை தமது இராணுவ பொலிஸ் படைகளை வைத்து கடுமையாக சனநாயக உரிமைகளை மீறி கண்ணிர்ப்புகை,  குண்டாந்தடி பிரயோகம் போன்றவற்றால் அடக்கும் அரசாங்கம் இந்த தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில் நேர்மாற்றமாக நடந்துக்கொண்டிருக்கின்றது. ஆர்ப்பாட்டக்காரர்களை தடுப்பதற்கு அரசாங்கத்தால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தம்புள்ளையில் ஏனைய மத வணக்கத்தலங்களை இல்லாதொழித்து புண்ணிய பூமியாக மாற்ற திட்டமிடும் அரசும் இனவாத சக்திகளும் கங்கனம் கட்டிக்கொண்டு களமிறங்கியிருக்கும் இவ்வேளையில்  தம்புள்ளையில் இவர்கள் கூறுகின்ற புண்ணிய பூமியில் இருக்கின்ற உல்லாச பிரயாண விடுதிகளில் இடம்பெறும் அனாச்சாரங்களை இந்த பௌத்த தீவிரவாதிகள் அங்கீகரித்தே இருக்கின்றனா்.

சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் சக்திகளை பயங்கரவாதம் என வர்ணித்து அவர்களை அழித்து ஒழிக்கும் அரசாங்கம் இந்த பௌத்த பிக்குகள் சட்டத்தை தம் கையிலெடுத்து பள்ளிவாசலை உடைத்த போது அதற்கு அவகாசம் அளித்திருக்கிறது.

Dambulla, Mosque, Sri Lanka

Saturday 24 December 2011

அகன்ற இஸ்ரேலுக்கு அனுசரணை வழங்கும் அல்லாஹ்வின் நேசர்கள்.

இந்தத் தலைப்பு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இல்லாவிட்டால் ஆத்திரமாக இருக்கிறதா?

இஸ்ரேல் அதன் கொள்கையிலுள்ள 'அகன்ற இஸ்ரேல்' என்று சொல்லக் கூடிய,  மக்கா மதீனா புனித ஸ்தலங்களை உள்ளடக்கிய ஓர் அகன்ற இஸ்ரேல் இராஜ்யத்தை மத்திய கிழக்கில் உருவாக்கும் கருத்திட்டத்தை மையமாக வைத்து செயலாற்றி வருகின்றது.


இஸ்ரேலின் விரோதிகளான முஸ்லிம்கள் இதற்கு ஆதரவு அளிப்பதா?
அது நடக்கவே நடக்காது! என்று நீங்கள் என்னோடு சண்டைக்கு வரலாம்.

ஆனால் எங்களையறியாமல் அது நடக்கின்றது. எங்களையறியாமல் நாம் சிலரால் அந்த இலக்கை நோக்கி வழி நடாத்தப்படுகின்றோம்.
அது எப்படி என்பதை சுட்டிக்காட்டுவதே இந்தப் பதிவின் நோக்கம் .

அரசியல்,கட்சி,  இயக்கம், ஜமாத்து, பிளவுகள் , பிரிவுகள் என்ற முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் அதிலிருந்து வெளியே வந்து சுதந்திரமாக சிந்தித்தால் இந்த உண்மையை உங்களால் உணர முடியும்.

ஆப்கானிஸ்தான், ஈராக்... லிபியா அடுத்த படியாக...சிரியா .. ஈரான்..!

அரபுலகின் பூரண ஆதரவோடு , இஸ்லாம் விரோத மேற்குலக அணியான நேட்டோவின் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் லிபியாவின் தலையெழுத்தும் மாற்றப்பட்டு விட்டது.

லிபியாவில் அமெரிக்கப் பிரஜையான, சீஐஏயின் வாரிசான மஹ்மூத் ஜிப்ரீல் லிபியாவின் காப்பாளராக நியமிக்கப்பட்டும் இருக்கின்றார். அமெரிக்காவால் நியமிக்கப்பட்ட ஜிப்ரீல் இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இனி  ஒருபோதும் இருக்கமாட்டார்.

இனி, இஸ்ரேலின் வாக்களிக்கப்பட்ட 'அகன்ற இஸ்ரேல்' என்ற வாதத்திற்கும், அமெரிக்காவின் எண்ணெய் கொள்ளையிடலுக்கும் அடுத்த தடையாக இருப்பவை சிரியாவும் ஈரானும்தான். இந்த இரண்டு தடைகளையும் தகர்க்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கிறது.

நேட்டோவின் அடுத்த இலக்கு சிரியாவையும் ஈரானையும் நோக்கி திரும்பும் என்பதில் சந்தேகமேயில்லை.

இப்போது அந்தக் களத்தையும், தளத்தையும் அமைக்கின்ற பணியில் "இஸ்ரேலிய, அமெரிக்க, அரபு முக்கூட்டு லொபி" (Lobby) கச்சிதமாக இயங்க ஆரம்பித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் யுத்தத்தின் போது இந்த முக்கூட்டு லொபி ஜிஹாதை ஜனரஞ்சகப் படுத்தி கம்யூனிஸம் தொடர்பான மிக மோசமான கருத்தாடலை மக்கள் மயப்படுத்தியது.

ஓர் இணைபிரியாத இயங்கு நிலையைக் கொண்ட அமெரிக்க முதலாளியத்திற்கும், அரபு வஹாபிஸத்திற்கும் உள்ள உறவு,  இந்த இரு சக்திகளுக்கும் ஊடகங்களில் உள்ள ஆதிக்கம் இக்கருத்தை உலக ரீதியில் மக்கள் மயப்படுத்துவதில் வெற்றியளித்து வருகிறது.

ஜிஹாத் என்ற சொல்லாடலை வெள்ளை மாளிகையின் வெறுப்பிற்கு ஆளானோர் மீது தொடுக்கப்படுகின்ற தூய போராட்டமாக அரபு வஹாபிஸம் அர்த்தப்படுத்தி காட்டி வருகிறது. தேவையான போது மாற்றமான கருத்து பெறும் இந்த ஜிஹாத் சொல்லாடல், அமெரிக்காவிற்கு எதிராக இருந்த லிபியாவிற்கு ஒரு விதமாகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாக இருக்கும் பஹ்ரைனுக்கு இன்னொரு விதமாகவும் அர்த்தப்படுவதை அவதானிக்க முடியும்.

இன்று நேரடியாக அமெரிக்காவையும், மறைமுகமாக இஸ்ரேலையும் ஆதரிக்கின்ற மத்திய கிழக்கின் வஹாபிய அரபு ராஜாக்களின் அரசியல் தலைமைத்துவங்கள்,  அடுத்த கட்டமாக சிரியா, ஈரான் இரண்டு நாடுகளுக்கும் எதிராக தனது பிரசார வியூகத்தை இப்போதே ஆரம்பித்திருக்கின்றன.

உலகம் பூராவும் இயங்குகின்ற, அரபுகளின் பெற்றோல் டொலர்களால் உயிர்வாழும், பிற்போக்குவாதிகளால் போஷிக்கப்படுகின்ற இயக்கங்களான தனது "ஏஜன்ட்"களை வைத்து இந்த அரபு அரசியல் தளம் சிரியாவிற்கும், ஈரானுக்கும் எதிராக பிரசார நடவடிக்கைகளை இயங்கு நிலையில் வைத்திருக்கிறது.  இது இந்த தீய சக்திகளின் பிரசார யுத்த நடவடிக்கையாகும்.

இராணுவ நடவடிக்கையாக லிபியாவில் கதாபிக்கு எதிராக போர்தொடுத்த அல்காயிதா உறுப்பினர்களையும், ஏனைய பிறநாட்டு ஜிஹாதிய கூலிப்படைகளையும், அமெரிக்க சீ.ஐ.ஏ உளவு நிறுவனம் சிரியாவிற்குள் நகர்த்தி வருவதாக அமெரிக்க எப்.பி.ஐ. உளவு பிரிவில் துருக்கிய மொழி பெயர்ப்பாளராககடமையாற்றிய சீபல் எட்மன்ட்  Russia Today (RT) தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் கூறியிருக்கின்றார்.

துருக்கி சிரிய எல்லையில் நேட்டோ படையின் முக்கிய புள்ளிகளால் இவர்களுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அறிய வருகிறது.

தற்போதைய லிபியாவின்,  திரிப்போலியின் இராணுவ கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் இருக்கும் அல்காயிதாவின் லிபியத் தலைவரான இருந்த ஹாகிம் பில் ஹஜ் தற்போது சிரியாவிற்குள் புகுந்திருப்பதாகவும் ஏனைய அரபு நாடுகளிலிருந்து போராட்டக்காரர்களை சிரியாவிற்கு கொண்டு வரும் வேலையை ஹாகிம் பில் ஹஜ்ஜோடு இணைந்து சீஐஏ திட்டமிட்டு செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுவரும் நேட்டோவின் தலைமையிலான இந்த அகன்ற இஸ்ரேலுக்குக்கான அமெரிக்க அக்கிரமிப்பிற்கு அரபு லீக் என்ற பொம்மைக் கூட்டம் அனுசரணை வழங்கியும் வருகிறது.

கடந்த திங்கட் கிழமை டமஸ்கஸ்ஸில் சிரியா விவகாரம் தொடர்பாக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அமெரிக்க அனுசரணையில் அரபு லீக் தயாரித்துள்ள இந்நத ஒப்பந்தத்தில் சிரியாவிற்குள் சென்று அரபு லீக் உறுப்பினர்கள் சிரிய நிலைமைகளை அவதானிக்க முடியும் என்று விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் இடம்பெறுவதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களை அவதானிக்கும் பொறுப்பை பெற்றுக் கொள்வதில் அரபு லீக் காட்டும் ஆர்வத்தின் பின்னணியில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலே இருக்கிறது.

கடந்த கால வரலாற்றை கொஞ்சம் மீட்டிப்பாருங்கள்.
அமெரிக்க,  இஸ்ரேலிய படைகளால் பலஸ்தீனிலும், ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் மெய் சிலிர்க்கின்ற மனித உரிமை மீறல்கள் நிகழும் போது எவ்வித கரிசனையும் காட்டாத இந்த அமெரிக்க பொம்மைகளான அரபு லீக், சிரிய விவகாரத்தில் மாத்திரம் "சீரியஸாக" சிந்திப்பது சீஐஏயின் வழிகாட்டலில்தான் என்பது தெளிவாக தெரிகின்றது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசியல் நலன் காக்கின்ற உளவாளிகளுக்கு இலகுவாக சிரியாவிற்குள் நுழைகின்ற அனுமதி கிடைத்திருக்கின்றது.

உண்மையை திரிபுபடுத்தும் மேற்குலகின் ஊடகங்களுக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு வரப்பிரசாதமாகும்.  இஸ்ரேல், பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் அரபு எண்ணெய் 'ஷெய்க்கு'களின் ஊதுகுழலான அல் ஜஸீராவும் சிரியாவின் மீது நேட்டோ தாக்குதல் ஒன்றிற்கான நியாயத்தை ஏற்படுத்தும் பக்கச்சார்பான செய்திகளை திட்டமிட்டு பரப்பி, உளவியல் ரீதியிலான ஒரு யுத்தத்தை நடாத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு மிகவும் விசுவாசமான, கத்தார் மன்னரின் ஆஸ்த்தான முப்தியான கர்ளாவியும் சிரியாவின் மீது நேட்டோவின் காருண்ய படை கால் வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்.


ஆனால், சிரியாவின் வன்முறையை முடிவிற்குக் கொண்டு வர அந்நாட்டின் மீது தொடுக்கப்பட தயாராகியிருக்கும் அமெரிக்க ஆதரவிலான படை நடவடிக்கையை ஐநா சபையில் ரஷ்யா கண்டித்திருக்கிறது.

லிபியாவின் பாணியில் சிரியாவை அமெரிக்காவிற்கு தாரை வார்த்துக் கொடுக்கும் இஸ்ரேல் அமெரிக்க நட்பாளர்களான சவூதி, கத்தார், குவைத் அரபு நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஓர்அச்சுறுத்தலாக ரஷ்யாவின் கோரிக்கை அமைந்திருக்கிறது.

ரஷ்யாவின் பிரபல அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் இகோர் பெனரின்  Professor Igor Panarin இஸ்ரேல் பிரித்தானிய அமெரிக்க ஆதரவு சக்திகள் சிரியாவின் உள்நாட்டுப் பிரச்சினையில் பெரும் பங்காற்றி வருவதாக குற்றம் சாட்டியிருக்கிறார். 



அரபு லீக்கிலிருந்த சிரியாவை தள்ளிவைத்தல் தீர்மானம்  முற்றாக இஸ்ரேலின் தேவைக் கருதி கொண்டுவரப்பட்ட ஒன்று எனவும் அவர் கூறியிருக்கின்றார்.


இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாட்டின் பாதுகாவலராய் இருக்கும் அமெரிக்க முதலாளியம் தான், சவூதி அரேபிய வஹாபிஸத்தின் பாதுகாவலராய் இருக்கின்றது. 


சுருக்கமாகச் சொன்னால் அமெரிக்காதான் மத்திய கிழக்கின் இரு பெரும் சக்திகளான சவூதியையும், இஸ்ரேலையும் பாதுகாக்கிறது. எனவே சவூதியால் பணம் வழங்கி பாதுகாக்கப்படுகின்ற ''இஸ்லாமிய வாதி(?)'' களுக்கு இஸ்ரேலைப் பாதுகாக்கின்ற நிர்ப்பந்தங்கள் (மறைமுகமாக) நிறையவே இருக்கின்றன. இதனை யாராலும் மறுக்க முடியாது.




இந்த அடிப்படையில் தான் கர்ளாவியின் பத்வாக்கள் அமெரிக்க முதலாளியத்தினதும் அரபு வஹாபிஸத்தினதும் அரசியல் திருப்திக்கு ஏற்றவாறு வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.


இஸ்ரேலை அமெரிக்கா நேசிக்கிறது. அமெரிக்காவை அரபு நாடுகள் நேசிக்கின்றன. அரபு நாடுகளை இஸ்லாமிய வாதிகள் (?) நேசிக்கின்றார்கள்.
உறவில் இவர்கள் ஓரணியில்தான். இலக்கில் மட்டும் எப்படி வித்திசாப்படுவார்கள்???.


எல்லோரினதும் இலக்கு ஒன்றுதான்.


அதுதான் மத்திய கிழக்கு முழுவதையும் ஒன்றிணைத்த அகன்ற இஸ்ரேல்!
அது அமைய தடையாக இருப்பவர்களை தட்டி வீழ்த்துவது தான் அமெரிக்க ஜிஹாத்!


ஆப்கானிஸ்தான்...ஈராக்...லிபியா விடயத்தில் இஸ்ரேலின் கனவு நனவாகிவிட்டது. இனி சிரியாவும் ஈரானும் தான்.!


எங்கே? இஸ்லாமியவாதிகளே! (?) 80களில் ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்யப் படையை விரட்டி அந்த பூமியை அமெரிக்காவிற்கு பெற்றுக்கொடுக்க அன்று போட்ட அந்த பழைய கோஷங்களை மீண்டும் முழங்குவோமே!
ஸபீலுனா... ஸபீலுனா... அல் (அமெரிக்கா) ஜிஹாத்!  
அல் (அமெரிக்கா) ஜிஹாத்!

Tuesday 20 April 2010

19.04.2010 அன்று தடுப்புக் காவல் நீடிக்கப்பட்ட நிலையில்.....அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”



அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”

“இருளிலிருந்து ஒளி”க்கு என்ற இஸ்லாம் சார்ந்த சிங்கள் நூலை வெளியிட்டு இலங்கை காவல் துறையினரால் கடந்த ஒரு மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் சாரா மாலினி பெரேரா.

19.04.2010 அன்று  சகோதாரி சாரா மாலினி பெரேரா கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும், அவருக்கு சரீர பிணை நிற்பதற்கு கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இருவர் தேவைப்படுவதாகவும் சதோரரர்கள் இம்ராஸ், கலீலுர் ரஹ்மான் ஆகியோரிடமிருந்து தகவல் கிடைக்க நீதிமன்றை நோக்கி விரைந்தேன்..

சாரா மாலினி  சிறை வைக்கப்பட்ட நாள் முதல் இந்தப் பிரச்சினையை தனது சொந்தப் பிரச்சினையாய் நினைத்து ஒரு மாத காலமாக முயற்சி செய்து வரும் சகோதரர் அஜ்மல், மேமன் இனத்தைச் சேர்ந்த சகோதரர் அபூ ஆகியோர் சாரா மாலினியின் விடுதலைக்கான பெரும் எதிர்பார்ப்போடு நீதிமன்றில் காத்திருந்தனர். கூடவே கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இரண்டு சகோதரர்கள்  பிணை நிற்பதற்காக காத்திருந்தனர்.

செய்தி கேசரிக்க வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலரும்  காலை முதல் மாலை வரை காத்திருந்தனர்.

ஆனால் அன்று மாலை வரை அவரை காவல் துறை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல், தடுப்புக் காவலை   மீண்டும் ஒரு மாத காலத்திற்கான நீடிப்பதற்கான ஆணையைப் பாதுகாப்பு  அமைச்சிடமிருந்து பெற்றிருப்பதாக  எமக்கு அறியக் கிடைத்தது.

இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மூன்று இன மக்களில் அதிகப்படியான அரசியல் கட்சிகளையும், அதிகப்படியான இயக்கங்களையும் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றது.

ஆனால், சாரா மாலினி இன்று தனிமைப்பட்டிருக்கிறார்.

Sunday 21 March 2010

இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும் “இளிச்ச”வாயர்களைக் கொண்ட இஸ்லாமிய சமூகமும்!

இரத்தக் கறைப் படிந்த அமெரிக்க கைகளும்
இளிச்சவாயர்களைக்கொண்ட  
இஸ்லாமிய சமூகமும்!




இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு விஜயம் செய்து அதன்  தலைவர் உட்பட அதன் செயலாளருடன் “மகிழ்ச்சி”கரமாக கருத்துப்பறிமாறுகின்றார்.


முஸ்லிம் உலகை ஆக்கிரமித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா. அதன் அடாவடித்தனத்தாலும், ஆக்கிரமிப்பாலும், அநியாயத்தாலும்  இராணுவ பலத்தாலும் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இலடசக் கணக்கானோர் காயங்களோடு கப்றுகளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கின்றார்கள்.

அமெரிக்க இராணுவத்தால் கணவன்மார் கொலை செய்யப்பட்டு விதவைகளான ஆயிரக்கணக்கான எங்கள் உடன் பிறவா சகோதரிகள் ஈராக் வீதிகளில் விபசாரத்தை தனது தொழிலாக மாற்றியிருக்கின்றார்கள்.

தாய், தந்தையை இழந்த அனாதைச் சிறுவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்ற போர்வையில் அமெரிக்கா வடிவமைக்கும்  குண்டு வெடிப்புகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில்  பல உயிர்களை காவு கொள்ள காரணமாய் இருந்ததும் காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பு அரசியலை முஸ்லிம் நாடுகளில் கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களின் இரத்தத்தையும், அந்நதந்த  நாடுகளின் வளங்களையும்  உறிஞ்சிக் குடிப்பதை குறிக்கோளாய் கொண்டு அதன் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பமானது.

அதன் இராணுவ சப்பாத்துகளின் கீழ் நசுங்குண்டு ஈராக் தன் இன்று இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்களை பாதுகாக்கும் அமெரிக்காவின்  வீட்டோ அதிகாரத்தில் சிக்குண்டு பலஸ்தீன் திறந்த வெளிச்சிறையொன்றில் தவித்துக் கொண்டிருக்கிறது.  உணவு, மின்சாரம், தண்ணீர் என்று அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அவர்கள் வாழ்வுக்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆப்கான் அழிந்துக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம்  உலகின் மீது இவ்வளவு அக்கிரமங்களையும் நிகழ்த்திக் கொண்டு ஒரு சில முஸ்லிம் நாடுகளோடும், ஒரு சில  முஸ்லிம் இயக்கங்களோடும், அமைப்புகளோடும் மறைமகமாவும், நேரடியாகவும் கொலைகார அமெரிக்கா நட்பை பேணி வருகிறது.

இந்த அமெரிக்க முஸ்லிம் (?) நட்பின் மூலம் முஸ்லிம் உலகை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை  இந்தக் கைக்கூலி கும்பல்கள்  சாதுர்யமாக செய்தும் வருகின்றன.

Tuesday 15 September 2009

எழுந்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும் விழுந்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்




பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது.தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.

பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக்கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியலான் பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது.

பள்ளிவாசல்கள் இப்படி எழுந்து வரும்போது முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியே நிற்கின்றன. கல்வி தொடர்பான முஸ்லிம்களின் வரலாறு கசப்பானதாகவே இருந்து வருகிறது. காலா காலமாய் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள்.

Tuesday 1 September 2009

ஸக்காத்தின் வீழ்ச்சியும் உழ்ஹிய்யாவின் எழுச்சியும்


ஸக்காத்தின் வீழ்ச்சியும்
உழ்ஹிய்யாவின் எழுச்சியும்

ஸக்காத் ஏழை வரி இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று.

ஸக்காத் இஸ்லாம் முன்வைக்கும் ஒரு மகத்தான பொருளாதார திட்டமும் கூட. அல்குர்அன் தொழுகையைப் பற்றி பேசும் அனேக இடங்களில் ஸக்காத் பற்றியும் பேசுகிறது.

ஸக்காத் எற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்திற்கு அத்திவாரமாகின்றது. குர்ஆனிய சமூகமொன்றில் ஸக்காத் பொருளாதார பலத்திற்கு துணையாக நிற்கிறது.

இன்றைய தஃவா (?) தளத்தில் ஒரு பேசு பொருளாக மட்டும் மாற்றப்பட்டிருக்கும் ஸக்காத்தின் நிலையைப் பற்றி நாங்கள் பேசியே ஆக வேண்டும். ஸக்காத்தின் உயிரோட்டத்தைச் சிதைத்து, சில்லரை காசுகளில் சங்கமமாகும் ஒரு சடங்காக அது இடம்பெற்று வருகிறது. வெறுமனே உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல்லாக மட்டுமே அது உலா வந்துக் கொண்டிருக்கிறது.

ஸக்காத்தின் இந்த பின்னடைவான நிலைக்கு அமெரிக்க பூகோள ஏகாதிபத்திய அரசியலே காரணமாகியிருக்கிறது, அந்த அரசியல் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

அந்த அமெரிக்க அரசியல் சஊதி ஆன்மீகம் ஊடாக எங்கள் உள்ளங்களுக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. சஊதி சார்பு இஸ்லாமிய இயக்கங்கள் இந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியும் வருகின்றன. கருத்தாடலோடு மட்டும் ஸக்காத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அமெரிக்க சஊதி திட்டத்திற்கு இந்த இயக்கங்கள் உறுதுணையாய் நின்று உதவியும் புரிகின்றன.

Sunday 16 August 2009

ஜுன்துல்லாஹ் ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!


ஜுன்த் அன்ஸாருல்லாஹ் - ஹமாஸ் மோதல்
மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!

பலஸ்தீனின் ரபாஹ் நகரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது காஸா பிராந்தியத்தை “ காஸா அமீரகமாக” (Gaza Emirate) பிரகடனப்படத்திய ஜுன்து அன்ஸாருல்லாஹ அமைப்பிற்கும், ஹமாஸின் பொலிஸ் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லத்திப் மூஸாவும் மேலும் 23 பேரும் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் ஹமாஸ் பொலிஸ் பிரிவைச் சார்ந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போன்று பலஸ்தீனில் திடீரென்று தோன்றிய இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு எப்போது? எப்படி வந்தது? இதன் பின்னணி என்ன?

சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வந்த போது எல்லோருக்கும் ஏறபட்ட சந்தேகம் இது.

2006ம் ஆண்டு பலஸ்தீனில் நடைபெற்ற அதன் அதிகார சபைக்கான தேர்தலில் மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது. ஹமாஸ் இயக்கம் அமோக வெற்றியைப் பெற்றது.

பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்கள் ஹமாஸின் கைக்குள் வந்தது. ஆயுதப் போராட்டத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தது ஹமாஸ் இயக்கம்.

ஹமாஸ் மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்காவும், சஊதியும், ஏனைய மேற்குலக நாடுகளும் தமது நிலைப்பாட்டை பலஸ்தீன் மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டதைக் கண்டு மிரண்டு போயினர்.

பலஸ்தீன் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஹமாஸுக்கு இஸ்ரேலும், மேற்குலமும் பல நெருக்குதல்களை கொடுத்தன. பொருளாதார தடைகளை திணித்தன. ஹமாஸ் அரசாங்கம் செயலாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டது.

Sunday 9 August 2009

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.







அதிகரிக்கும் பள்ளிவாசல்களும்
அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் இலங்கையில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. பாதை நெடுகிலும் பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன. விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட ஒரு பள்ளிவாசல், அது அவர்களின் பள்ளிவாசல், இது இவர்களின் பள்ளிவாசல் முஸ்லிம் சமூகம் முரண்பட்டு , பிரச்சினைப் பட்டு, பிரிந்து கிடக்கிறது.

பாவம் பாமர மக்கள் ! இந்த றியால், தீனார் தஃவா காரர்களின் பின்னணி புரியாமல் நடு வீதியில் தட்டுத் தடுமாறி திணறி நின்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

ஒற்றுமையை உரத்துப் பேசி பேசி ஒருவரின் உதிரத்தை மற்றவர் உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டிருக்கிறார்கள். வஹாபிஸம் என்ற சஊதி, குவைத் மன்னராட்சியை மறைமுகமாய் பாதுகாக்கின்ற சித்தாந்தம் பொது ம்ககளை மட்டுமல்ல அவர்களிடம் பணம் வாங்கும் கூலிப்பட்டாளத்தைக் கூட குறி வைத்து பிரித்துத் தான் வைத்திருக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை தஃவா களத்தில் இருக்கும் தப்லீக் இயக்கத்தை தவிர ஏனைய அத்தனை இயக்கங்களும் இந்த வஹ்ஹாபி பணத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பவையே.

தப்லீக் இயக்கம் தனது தஃவா இயக்க செயற்பாட்டில் பாரிய மாற்றங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற கருத்து பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் தனது சொந்த பணத்தில் தஃவா செய்கின்ற புனிதத் தன்மையை அது என்றும் பேணிப் பாதுகாத்து வ்ந்திருக்கிறது. அது காசு வழங்குபவனுக்கு கைக்கூலியாய் வேலைசெய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படாத ஒரு அமைப்பு.

Wednesday 22 July 2009

இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்


உலகளாவிய ஏகாதிபத்தியம் அடக்குமுறையின் மூலம் முழு உலகையும் ஆட்டிப் படைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.

எகாதிபத்தியத்தின் சுரண்டலுக்கு இரையாகாமல் தப்பி வாழ்வது இயலாத காரியமாய் இருக்கிறது. தனது விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சியை தனக்கே உரிய அதிகார சக்தியாய் ஆக்கிக்கொண்ட அமெரிக்கா மனிதம் வெட்கித் தலை குனியும் அளவிற்கு மனிதநேயத்திற்கு எதிராக எழுந்தக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் அநியாயத்தின் பொதுச்சின்னமாக அது அடையாளமாகியிருக்கிறது.

அமெரிக்க அடிவருடிகளும் அழிக்கப்பட்ட ஆபகானிஸ்தானும்

80களில் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு எதிராக போராடுவதற்கு, ஜிஹாத் என்ற போர்வையில் அந்த நாட்டு மக்கள் ஆயுதபாணிகளாக்கப்பட்டார்கள். 

ஸீ.ஐ.ஏ பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. உடன் இணைந்து ஆப்கானிஸ்தானிலிருந்து ரஷ்ய துருப்புகளை விரட்டுவதற்கு திட்டம் தீட்டியது. இதற்கு சஊதி அரசு கோடிக்கணக்கான பணத்தை “ஆப்கான் ஜிஹாதிற்காக” கொட்டித் தீர்த்தது.

நீண்ட நாட்களாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் மௌனமாக இடம்பெற்று வந்த பனிப்போரை ஆப்கானிஸ்தானில் ஆயுதப்போராக மாற்ற ஸீ.ஐ.ஏ க்கு சந்தர்ப்பம் கிடைத்தது. பாமரர்களை அதிகம் கொண்ட ஆப்கான் நாட்டிற்கு “ஜிஹாத்” எரியும் நெருப்பிற்கு எண்ணெய் ஆனது. 

சஊதி பணத்தால் ஒட்சிசன் பெற்று வந்த இஸ்லாமிய இயக்கங்கள் எழுந்து நின்றன.  ஜிஹாத் உணர்ச்சியால் இளைஞர், முதியோர், பெண்கள், சிறுவர்கள் வீதிக்கு வந்தனர். 

 ரஷ்யாவிற்கு எதிரான இந்த ஜிஹாதை சவூதி பணத்தில் இயங்கும் அமெரிக்க நேச இயக்கங்கள் நன்றாக பயன்படுத்திக் கொண்டன. சஊதி அரசு ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை தெரிவு செய்தது. 

ஜமாஅதே இஸ்லாமி ரஷ்யாவிற்கு எதிரான போர் ஜிஹாத் என்றும், இஸ்லாத்தி்ன் அடிப்படை கடமையான ஜிஹாதுக்கு முஸ்லிம்களின ஆதரவு தேவையென்றும் உலகமெல்லாம் பிரசாரப்படுத்தியது.

அன்று ஆப்கானிஸ்தான் மக்கள் ஆயுத மயமாக்கப்பட்டதற்கும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் பட்டம் சூட்டப்பட்டதற்கும் இருக்கும் தொடர்பை இன்று சஊதியும் அதன் பணத்தில் இயங்கும் இயக்கங்களும் மூடி மறைத்து விட்டன.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் முளைத்ததே அமெரிக்க சஊதி வடிவமைத்த ஜிஹாத் களத்தில் தான். அன்று ஹிக்மத்தியார்களுக்கும், ரப்பானிகளுக்கும் ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி இரைத்து பிறகு அவர்களை அடித்து விரட்டி தாலிபான்களிடம் ஆப்கானை தாரை வார்த்து கொடுத்த சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டாளிகள். தாலிபான்களை அடித்துத் துரத்தி இறுதியில் அமெரிக்காவின் கைக்கு அந்த நாட்டை ஒப்படைத்தனர்.

அண்மையில் ஹிலாரி கிளின்டன் ஆப்கான் ஜிஹாதுக்கு அமெரிக்கா நுர்ற்றுக்கு நுர்று வீதம் உதவி செய்ததை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் உலகளாவிய எகாதிபத்திய அரசியலுக்காக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போருக்கு ஜிஹாத் சாயம் பூமி ஆப்கானை அழிக்க துணைபோன சஊதியும் அதன் கைக்கூலி தஃவா இயக்கங்களும் மன்னிக்க முடியாத குற்றவாளிகளே.

ஆப்கானை பயங்கர ஆயுத கிடங்காக மாற்றியதன் விளைவாக “இஸ்லாமிய பங்கரவாதம்” என்ற சொற்றொடரை முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவே பயன்படுத்த அரம்பித்தது.

சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட “ ஜிஹாத் ” அடுத்த கட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தப்பட்டது.
இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க புறப்பட்டு முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்யும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு சஊதியும் அதன் கைக்கூலிகளும் மறைமுக உதவி பரிந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆப்கானில் இன்னும் யுத்தம் தொடர்கிறது. அன்று ஜிஹாத் பேசி மக்களின் உணர்வலைகளை உசுப்பி விட்ட உத்தம புத்திரர்கள் அமைதியாய் கிடக்கின்றார்கள்.

அமெரிக்காவிற்கு செய்த ஒப்பந்த பணியின் வெற்றியின் களிப்பில் ஊமையாய் இருக்கின்றார்கள்.

Tuesday 21 July 2009

இஸ்லாமிய பயங்கரவாதம் ? கெட்ட நண்பர்களின் கூட்டுச் சதி!


இஸ்ரேலின் நண்பன் அமெரிக்கா
அமெரிககாவின் நண்பன் சஊதி அரேபியா
ஆக இஸ்ரேல், அமெரிக்கா, சஊதி அரேபியா மூவரும் கூட்டு நண்பர்கள்.

இதை இப்படியும் சொல்லலாம் அமெரிக்காவிற்கு இரண்டு நட்பு நாடுகள் இருக்கின்றன.

ஒன்று இஸ்ரேல்

மற்றையது சஊதி அரேபியா.

வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் இரண்டு நாடுகள்.

ஒரு சிறு பிள்ளையிடம் புதிர் கேள்வியொன்றாய் மேலே நான் சொன்ன நட்பு தொடர்பான தர்க்கத்தை முன்வைத்து இஸ்ரேலுக்கு உள்ள இரண்டு நண்பர்கள் யாவர் என்று கேட்டால் அந்த சின்ன பிள்ளை சஊதியும் அமெரிக்காவும் என்று சற்றென்று பதில் சொல்லும்.


சஊதி அரேபியா இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக (?) சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு. இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்காவுடன் அதற்கு இருக்கும் நட்பு மிகவும் நெருக்கமானது. அமெரிக்காவின் தந்திரோபாய “ எண்ணெய் அரசியல்” மத்திய கிழக்கை அதிக்கம் செலுத்துவதற்கு சஊதி பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.

மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடும் அமெரிக்காவின் தந்திரத்திற்கு இருப்பது இரண்டு விதிகள்.

ஒன்று நண்பனாய் நெருங்கி வளங்களை விழுங்குவது

அடுத்தது, விரோதி, பயங்கரவாதி என்ற பெயர்சூட்டி பொருளாதாரத் தடை, போர் என்று கூறி அத்துமீறி அந்தந்த நாடுகளுக்குள் ஆக்கிரமிப்பாளனாய் நுழைந்து அந்த நாட்டின் செல்வங்ளை சூறையாடுவது.

துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நிலைமைகளுக்கும் மத்திய கிழக்கின் அரபு ஆடசியாளர்கள் இரையாகியிருக்கின்றார்கள். சாத்தானோடு இந்த மன்னர்களுக்குள்ள சிநேகம் இவ்வுலகிலே அவர்களுக்கு சுவர்க்கத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இஸ்லாத்திற்கு அழிவை கொடுத்துள்ளது.

கஃபாவின் ஒளியைச் சுமந்த பூமியில் இன்று ஜாஹிலிய்யத் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இஸ்லாத்தின் உயிரோட்டமான கிலாபத் கொச்சைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அல்குர்ஆன் வேண்டி நிற்கும் ஆட்சிஅங்கு குழிதோண்டி புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஷரீஅத் முலாம் பூசப்பட்ட போலி ஆட்சி இஸ்லாத்தின் புனிதத்தை அங்கு புதைத்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா இஸ்ரேலை போஷித்து மத்திய கிழக்கில் அராஜகத்தை வளர்ப்பதபோல். சஊதியை நேசித்து அங்கு ஜாஹிலிய்யத்திற்கு புத்துயிர் அளித்துக்கொண்டிருக்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல், சஊதி
மூவரும் நண்பர்கள்தான் ஆனால் ஒரு வித்தியாசம்!

இந்த மூவருக்குள்ளேயே வெளிப்படையான நட்பும், உள்ரங்கமான நட்பும் இருக்கிறது. சஊதி அமெரிக்க நற்பு வெளிப்படையானது. அதேபோல் அமெரிக்க இஸ்ரேல் நட்பும்வெளிப்படையானது.

மௌனமாக மறைந்திருக்கும் நட்பு சஊதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இருக்கிறது. அதனால் இஸ்ரேலின் அடாவடித்தனங்களை சஊதி அவ்வளவாக கண்டுகொள்வதில்லை. இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்ட முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸைப் பற்றி சஊதி மூச்சு விடுவதுமில்லை.
மாறாக ஆப்கான் மண்ணிலிருந்து ரஷ்யாவை விரட்டி அமெரிக்காவிற்கு அதைப் பெற்றுக்கொடுக்க பெரிய ஜிஹாதையே பிரகடனப்படுத்தி ஆப்கானுக்குள் பணத்தையும் ஆயதத்தையும் அள்ளி வீசியது.

ஆப்கானை மீட்டு அமெரிக்காவிற்கு கொடுக்க முயற்சி செய்த சஊதி, அல்லாஹ்வின் இல்லமான பைத்துல் முகத்தஸை இஸ்ரேலிடமிருந்து மீட்டெடுக்க எந்த ஜிஹாதையும் பிரகடனப்படுத்தவில்லை. பலஸ்தீன் போராளிகளுக்கு எந்த ஆயுதத்தையும் வழங்கவில்லை.
ஆயுதமயமாக்கப்பட்ட ஆப்கானுக்கும், அமெரிக்கா இஸ்லாத்திற்கு எதிராக குற்றம் சாட்டும் “அடிப்படைவாதம்” “பயங்கரவாதம்” என்ற பதப்பிரயோகத்திற்கும் நேரடி தொடர்புள்ளது. ஆப்கான் போராட்டத்திற்கு பிறகே இந்தப் பெயர் இஸ்லாத்திற்கு சூட்டப்பட்டது. ஆப்கானை ரண களமாக்கிய பெருமை சஊதியையும், அமெரிக்காவையுமே சாரும்.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு ஊழியம் புரிந்த சஊதியும், அதன் உளவு நிறுவனங்களினால் வழி நடாத்தப்படும் இஸ்லாமிய இயக்கங்களும் இஸ்லாத்திற்கு ஏற்பட்ட இந்த அவப்பெயருக்கு பொறுப்பு சொல்ல வேண்டும்.

அமெரிக்காவின் விருப்பத்திற்காக ஆப்கான் யுத்தத்திற்கு உதவிய சஊதி அல்லாஹ்வின் விருப்பத்திற்கு பலஸ்தீனத்திற்கு உதவவில்லை.

அநீதியாளர்களொடு சஊதிக்கு உள்ள நேசமும், முஸ்லிம் என்று அது போடும் வேஷமும் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

சஊதிக்கும், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் உள்ள நேரடி, மறைமுக உறவுகளை இப்போது முஸ்லிம்கள் உணர்ந்திருக்கின்றார்கள்.

சரி, இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கிடையே உள்ள இந்த நட்பை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்?

இவர்களின் நட்பிற்கான இலக்கணம் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமி்புகளையும், படுகொலைகளையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் ஆமோதித்து அமெரிக்கா அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு மன்றில்தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இஸ்ரேலை பாதுகாக்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாய் நின்று உதவி செய்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு சண்டித்தனம் செய்ய சான்றிதழ் வழங்குகிறது.


இதுவே அமெரிக்க இஸ்ரேல் நட்பிற்கு நற்சான்று!

இனி இந்த அமெரிக்க இஸ்ரேல் சஊதி முக்கூட்டு நட்பிற்கு சஊதியின் சான்று என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலை அரவணைக்கறது. அதன் அட்டகாசத்தை அடக்கி வாசிக்கிறது?

சஊதி அரேபியாவோ-
அமெரிக்கா இஸ்ரேல் அகிய இரண்டு நாடுகளின் அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அடக்கி வாசிக்கிறது . இரண்டு நண்பர்களின் ஈனச்செயல்களையும் அமைதியாக நின்று ஆமோதிக்கிறது.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...