Friday 31 October 2014

சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் சக்தி ஓரம் போகுமா?



சிங்கள பௌத்த பேரினவாதம் கூர்மையடைந்த நிலையில், 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் வரப்போகின்றது. 2004ல் வன்னிமக்களின் வாக்குரிமையை தடுத்து நிறுத்தி, ஒரு சிறிய வாக்கு வித்தியாசத்தில் ஐ.தே.க வை தோற்கடித்து ஆட்சியமைத்த மஹிந்த ராஜபக்ஸ, 2009ல் புலிகளை அடியோடு அழித்த பெருமிதத்தில் சிங்கள மக்களின் விடுதலை வீரராக தன்னை அடையாளப்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்.
2015 தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு ‘வழி’ வரப்பிரசாதமாக வந்திருக்கின்றது. ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் புலிகள் இயக்கத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கியதால், தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு மையப்புள்ளி மஹிந்தவின் மடிமீதே வந்து வீழ்ந்திருக்கின்றது.
பெரஹர ஊர்வலத்திற்கு முன்னால் கசையடிப்பவன் வந்து செய்தி சொல்வது போல், அரசு அச்சிட்ட ‘புலி’ ரணில் போஸ்டர்கள் முன்னால் வெளிவந்து செய்தியை சொல்லி விட்டது.
எதிர்வரும் 2015 ஜனாதிபதித் தேர்தல் புலி பற்றி ஒரு கிலியை தெற்கின் சிங்கள பிரதேசங்களில் பரப்பும் தேர்தலாகத்தான் தடம்பதிக்கப் போகின்றது. ஐரோப்பிய யூனியன் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியிருப்பது. மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்கு உதவப்போகின்றது.
இந்தத் தடை நீக்கத்தை அச்சாணியாக வைத்தே மஹிந்தவின் தேர்தல் பிரசாரக் சக்கரம் சுழலப்போகின்றது. தற்போது ஐரோப்பிய யூனியனின் இந்தத் தடை நீக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்க உதவியுள்ளார் என்று மஹிந்த தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஐ.தே.க.வோ இதை ஓர் அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்கின்றது.
புலிகள் மீதான தடை நீக்கம் மஹிந்த அரசாங்கத்திற்கு அனுகூலமாக இருப்பதால், புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கத்தை அரசாங்கம் அறிந்தும், அறியாதது போல் இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதை அறியயாமல் இருந்தது கூட பல சந்தேகங்களை எழுப்புகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மிகவும் பொறுப்புவாய்ந்த இராஜதந்திர ரீதியில் செயற்படவேண்டிய நிலையிலுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த வழக்கு விவகாரத்தில் கோட்டைவிட்டு விட்டதையும், அந்தக் குற்றத்தை எதிர்க்கட்சியின் மீது திணிப்பதையும் சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போர் குற்ற விவகாரத்தில் மின்சாரக் கதிரையை முத்தமிடவும் தயாரென முழங்கி சிங்கள வாக்குகளை கொள்ளையடித்த ராஜபக்ஸ இம்முறை ஐரோப்பிய யூனியனின் புலி தடை நீக்கத்தை அடிப்படையாக்கி மீண்டுமொருமுறை வாக்குகளை கொள்ளையிட முன்வரலாம்.
இது இப்படியிருக்க, மஹிந்தவின் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே இப்போது குழப்பம் வந்திருக்கின்றது.
மஹிந்த அரசின் தோழமைக் கட்சியான, கடும் போக்கு சிங்கள பௌத்த கட்சியான ஹெல உறுமய மஹிந்த அரசின் அதிகாரத் து’பிரயோகம் மற்றும் சிங்கள மக்களின் உரிமைகள் தொடர்பாக போராடப் போவதாக தருணம் பார்த்து அறிவித்திருக்கின்றது.
ஹெலஉறுமய கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவர் அத்துரலியே ரத்ன தேரர், அக்டோபர் 14ம் திகதி தமது கட்சி 18வது அரசியல் யாப்பை ஆதரித்ததன் மூலம் தாம் தவறிழைத்து விட்டதாகவும் அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல்,
ஹெல உறுமய கட்சி, இந்நாட்டின் அரசியல் யாப்பில் அவசர மாற்றங்கள் வரவேண்டும் என்று கூறி உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான வரைபொன்றை முன்வைத்திருக்கிறது.
இந்த வரைபில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைப்பது மற்றும் அமைச்சரவையை 20 அல்லது 25 ஆக குறைப்பது போன்ற யோசனைகளை முன்வைத்துள்ளது. தமது கட்சி முன்வைத்துள்ள இந்த வரைபை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அது அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளால் ஆளும் கட்சியின் அரசியல் தளம் கொஞ்சம் கொஞ்சமாக அதிர்வடைந்து வருவதையே எடுத்துக் காட்டுகின்றது.
பேரம் பேசும் அரசியலின் அடையாளங்களாக இருந்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளின் செயற்பாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தலை மாற்றவே தெற்கின் இனவாதசக்திகள் இலக்கு வைத்திருக்கின்றார்கள் என்பதை அவர்களின் செயற்பாடுகளே சொல்லி வருகின்றன.
ஒரு காலத்தில் ‘‘நாட்டின் தலைவர்களை உருவாக்குவது நாம்தான்’’ என்று மார்தட்டி, கூப்பாடு போட்டு தெற்கின் சிங்கள இனவாத சக்திகளை தட்டியெழுப்பிய சிறுபான்மை கட்சிகளின் அரசியல் தலைவர்கள் அதிர்ந்துபோய் நிற்கின்றார்கள்.
தேர்தல்களின் போது சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிங்கள தலைவர்களிடம் மண்டியிட்டு பேரம் பேசி வசந்ததத்தை சுவாசித்து வாழ்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்.
இவர்களினால் பேரம் பேசி பெறப்பட்ட எந்த அமைச்சர் பதவிகளாலும் சாதாரண மக்களுக்கு எவ்வித புண்ணியமும் கிடைக்கவில்லை. மாறாக, சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் ஓரம் கட்டப்பட்டதைத் தவிர எதுவுமே நிகழவில்லை.
அண்மைய பேருவளை, அளுத்கம நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சமூகத்திற்கு எவ்வித பலனுமில்லாத இந்த பேரம் பேசிப் பெறப்பட்ட அமைச்சர் பதவிகளை, சோரம் போய் பெறப்பட்ட சொத்தாய்தான் சமூகம் பார்க்கிறது.
ஹெல உறுமய இந்த ‘பேரம்’ பேசும் அரசியலுக்கு ஓர் ஆப்பு வைக்கத்தான் இப்போது அணி திரண்டிருக்கிறது. பேரம் பேசும் அரசியலை ஒரம் கட்டும் ஓர் உபாயத்தைத்தான் மஹிந்தவிற்கு முன் வைத்திருக்கிறது.
ஹெல உறுமய கட்சி, அரசியல் யாப்பில் மாற்றங்கள் வரவேண்டும் என்று கூறி உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக முன்வைத்துள்ள வரைபில், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைப்பது மற்றும் அமைச்சரவையை 20 அல்லது 25 ஆக குறைப்பது போன்ற யோசனைகளை முன்வைத்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட நாடாக வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் இந்த ‘மெகா’ அமைச்சரவை நாட்டிற்கே ஒரு சாபக்கேடாகத்தான் அனைத்து மக்களாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆனால், அமைச்சரவையை 20-25 ஆக குறைப்பது என்ற ஹெலஉறுமயவின் யோசனையால் சிறுபான்மைக் கட்சித்தலைவர்கள் கதிகலங்கிப் போயிருக்கின்றார்கள். அமைச்சரவை மட்டுப்படுத்தப் படுவதால் தமது கட்சிகளுக்குள்ளும் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருப்தால் காய் நகர்த்தல்களை எப்படி சமாளிப்பதென்று கற்பனை செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சரவை குறைப்பு, சிறுபான்மை கட்சிகளுக்கும், எதிர்க்கட்சி அங்கத்தவர்களுக்கும் ஏலம் போட்டு அமைச்சர் பதவிகளை விற்பனை செய்ய மஹிந்த அரசிற்கு முடியாமல் போகலாம்.
எதிர்க் கட்சினரை அமைச்சர் பதவிகளைக் காட்டி தம்பக்கம் இழுத்தெடுக்கும் அரசியல் தந்திரத்தை ஒருவகையில் இது பாதித்தாலும், இந்த மிகப்பெரிய கபினட் அமைப்பின் மூலம் சிறுபான்மைக் கட்சிகள் ஏதும் அடைந்துவிடக் கூடாது என்பதில் ஹெல உறுமய அவதானமாக இருக்கின்றது.
ஹெல உருமய 2004, 2009 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போது மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்கு தெற்கில் இனவாதத்தை விதைத்து வெற்றி பெறுவதற்காக சூழலை உருவாக்கியதற்கான பெருமை தனக்குரியதாக கூறிவருகின்றது.
தேர்தல் காலங்களில இலங்கையின் இரண்டு தேசிய கட்சிகளும் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் உரிமைகளை பலியிடுவதாக ஹெலஉறுமய கட்சி குற்றம் சுமத்தி வந்தது.
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் சிறுபான்மை சமூகங்களை கருவறுக்கும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவரும் ஜனாதிபதியை உருவாக்கும் செயற்திட்டத்தில் சிங்கள கடும்போக்காளர்களிடையே பெரும் போட்டி நிலவுகின்றது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசடி, அடாவடித்தனங்களால் அரசின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், மக்களை திசை திருப்பி வாக்குகளைப் பெறுவதற்கு இனவாதம் ஒன்றே இலக்காக அமைய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
ஹெல உறுமயவின் ஏழு அம்சத்தில் இருக்கும் அமைச்சரவை குறைப்பு, சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசி ‘அமைச்சர் பதவி’ பிச்சைவாங்கும் அரசியலுக்கு ஒரு அடியையே கொடுத்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய மந்திரி சபையைக் கொண்ட இலங்கைத் திருநாட்டின் மந்திரி சபையால் சிறுபான்மை உரிமைகள் சிறை வைக்கப்பட்டது என்பது வேறு விடயம்.
அதிகமானோருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி சிறுபான்மைக் கட்சித் தலைவர்களை சிறைவைக்கும் இந்த நிறைவேற்று அதிகாரத்தால் அந்த அமைச்சரைத் தவிர, அவர் சார்ந்த சமூகத்திற்கு எவ்வித பலனுமில்லை என்று மக்கள் உணர்ந்திருந்தாலும், இனவாதிகள் என்னவோ இந்த அமைச்சுப் பதவிகள் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைத்திருக்கின்ற பாதுகாப்புக் கவசங்களாகவும், கிரீடங்களாகவுமே பார்க்கின்றார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் சமூக நலன்சார்ந்த, கல்வி, பொருளாதார, வாழ்வுரிமை, பாதுகாப்பு உட்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து பேரம் பேசப்படாத அரசியலில், சிறுபான்மை சமூகங்கள் அன்றுபோல் இன்றும் தனிமைப்பட்டு அநாதரவாகவே இருக்கின்றன.
(26.10.2014 தமிழ்த்தந்தி பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

கொழும்பா? கொஸ்லந்தையா ? அரசாங்த்திற்கு எந்த நிலம் பெறுமதியானது?


பதுளை கொஸ்லந்தையில் ஏற்பட்ட மண் சரிவிற்கு ஏழைத் தமிழ் தோட்டத் தொழிலாளா்கள் இரையாகியிருக்கின்றாா்கள்.
இலங்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகவும் சோகமான ஒரு நிகழ்வுதான் இந்த கொஸ்லந்த சம்பவம். 2004 ம் ஆண்டு சுனாமிக்குப் பிறகு மனதை உலுக்கிய ஒரு உருக்கமான நிகழ்வு.

இந்த அனா்த்த சம்பவத்திற்குப் பின்னால் அரச அதிகாரிகளின் பொடுபோக்கு காரணமாக இருந்ததை மறுக்க முடியாமல் இருக்கிறது.
2005ம் ஆண்டு மற்றும் 2011 ஆண்டுகளில் நிலச்சரிவுக்கான எச்சரிக்கை தொடா்பான அறிவுருத்தல்கள் இப்பகுதியில் வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இரண்டு தடவைகள் எச்சரிக்கை விடுத்த அரச அதிகாரிகள் உாிய நடவடிக்கை எடுக்காததன் மர்மம் என்ன? அவர்களுக்கான அடிப்படை வசதிகளுடனான புதிய குடியிருப்புகளை ஏற்படுத்தி ஏன் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வில்லை.
தோட்டத்தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் என்ன நடவடிக்கையை மேற்கொண்டன.
இன்று 31.10.2014 ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த இப்பிரதேச அரசாங்க அதிபா் கூட ஏற்கனவே இவா்களுக்கு அறிவுருத்தல் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு மாற்றுத் திட்டத்திற்காக மூன்று வீடுகள் அமைக்கப்பட்டதாகவும் கூறினாா். முன்னூறுக்கும் அதிகமாமோா் வாழ்ந்த லைன் வீடுகளுக்கு மாற்றீடாக மூன்று வீடுகள் அமைத்தாா்களாம். இது வேடிக்கையாக இருக்கிறது.
நிலச் சரிவு அச்சுறுத்தல் இருந்தும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்தது, இந்த ஏழை தோட்டத் தொழிலாளா்கள் தொடா்பான பொறுப்பற்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.
அரசாங்கம் அக்கறையோடு செயற்பட்டிருந்தால் இவா்களை 2005ம் ஆண்டே வேறு இடங்களில் குடியமர்த்தி இருக்கலாம். அடிப்படை வசதிகளோடு கூடிய வீட்டுத்திட்டத்தை உருவாக்கி அவா்களை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கலாம். இது அரசாங்கத்தின் கடமை.
பன்னாட்டு கம்பனிகளுக்கு கொழும்பின் நிலம் போன்று கொஸ்லந்தையின் நிலம் பெறுமதியாக இருந்திருந்தால் என்றோ இந்த தொழிலாளா்கள் பலாத்காரமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருப்பாா்கள்.
ஆனால் நடந்ததோ நிலச்சரிவின் அபாயத்தை அறிவித்து விட்டு அரசாங்கம் மௌனமாக இருந்ததுதான். அதற்குக் காரணம் தொழிலாளா்களது உயிா்களும் அவா்கள் வாழும் பிரதேசங்களும் இவா்களுக்கு பெறுமதியற்றதாக இருப்பதே.
தொழிலாளர்கள் வேறு இடங்களுக்கு செல்வதற்கு எவ்வித மறுப்பையும் தொிவித்திருக்கவில்லை. அப்படித்தான் மறுப்புத் தொிவித்திருந்தாலும், அவா்களை பலாத்காரமாக வேறு இடங்களுக்கு மாற்றியிருக்லாம். கொழும்பில் செய்யும் பலாத்காரத்தை ஏன் மலையகத்தில் செய்ய முடியாது போனது.
அரசாங்கம் கொழும்பில் தனக்கு தேவையான காணிகளை பெறுவதற்கு பல்லாண்டுகளாக குடியிருந்த மக்களை தனது குடியிருப்புகளிலிருந்து அகற்றி வீடுகளை தரைமட்டமாக்கி, மக்களை அடித்து விரட்டி காணிகளைக் கைப்பற்றுகிறது. கொழும்பு மக்களின் வாழ்க்கைத்தரத்தை கூட்டுவதற்கு இத்தகையை நடைமுறைகளை மேற்கொள்வதாக போலி காரணங்களையும் கூறி வருகின்றது.
இப்படி பறிக்கப்படுகின்ற காணிகள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பொிய விலைக்கு விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருவதாகவும் அறிய வருகின்றது.
ஆனால் கொஸ்லந்த தொழிலாளா்களின் நிலங்கள் பெறுமதியற்றவை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு பொருத்தமற்றவை. எனவே அவா்கள் மீது கரிசனை கொள்ளப்படவில்லை.
இந்த தோட்டத் தொழிலாளர்கள் விடயத்தில் அரசாங்கம் ஏன் இன்னும் கண்ணை மூடிக்கொண்டிருந்திருக்கின்றது?
கொஸ்லந்த தொழிலாளா்களுக்கு ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
300 தோட்டத் தொழிலாளா்களின் உயர்களுக்கும், அனாதையாக்கப்பட்ட அவா்களின் பிள்ளைகளுக்கும் அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். பொறுப்பற்ற முறையில் செயற்பட்ட அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

Sunday 26 October 2014

பொதுபலசேனாவையும் மஹிந்தவையும் திட்டும் பௌத்த பிக்கு மாணவன்!

அனைத்து பல்கலைக்கழக மாணவா்கள் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் கடந்த 21.10.2014 அன்று பாராளுமன்றத்திற்கு அருகில் இடம்பெற்றது. இந்த அா்ப்பாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஒரு பௌத்த பிக்கு மாணவர் ஒருவரால் நிகழ்த்தப்பட்ட உரையே இது.

இந்த ஆா்ப்பாட்டத்தின் போது பொலிஸாா் நடாத்திய தாக்குதலில் பல மாணவா்கள் படுகாயமுற்றனா். அரசாங்கத்தையும் அது போஷித்து வளா்க்கும் இனவாத சக்திகளான பொதுபலசேனாவையும் இந்த மாணவா்கள் கடுமையாக தாக்கி உரையாற்றினா்.

பொதுபலசேனாவின் வன்முறை சாா்ந்த ஆா்ப்பாட்டங்களுக்கு அனுமதியளிக்கும் மஹிந்த அரசு, மாணவர்களின் இந்த போராட்டத்தை பொலிஸாரின் மூலம் காட்டுமிராண்டித் தனமான தாக்குதல்களைத் தொடுத்து கலைத்தது.
மஹிந்த அரசு தனக்கு சாா்பான இனவாத கூலிப்பட்டாளங்களின் ஆா்ப்பாட்டங்களுக்கோ கூட்டங்களுக்கோ தடைவிப்பதில்லை. மாறாக அவா்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கி வருகின்றது.

கடந்த ஜுன் மாதம் முஸ்லிம்களின் பல உயிர்களையும், கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதியான உடமைகளையும் அழித்த பொதுபலசேனாவின் ஊா்வலத்தை தடை செய்யவில்லை, தடுத்து நிறுத்தவில்லை.
ஆனால் ஜனநாயக ரீதியிலான தொழலாளா்களின்,மாணவா்களின் போராட்டங்களை காவல் துறையின் காட்டுமிராண்டித் தனமான வன்முறையைப் பயன்படுத்தி தடுத்து வருகின்றது.

Friday 24 October 2014

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !


நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் மூலம் 150 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டதாக நேற்று பாராளுமன்றத்தில் அரசாங்கம் ஒத்துக்கொண்டது.

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ஹா்ஷ டி சில்வா எட்டு மாதங்களுக்கு முன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு நேற்றுதான் மின்சார எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி பதிலளித்தாா்.

அரசாங்க கொள்வனவு தொடர்பான விதிமுறைகளை மீறி இந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகவும் தரம் குறைந்த இந்த நிலக்கரி கொள்வனவினால் சுமாா் 150 கோடி ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் ஏற்றுக் கொண்டாா்.  இந்த நிகழ்வு  தான் அமைச்சராக பொறுப்பேற்க முன்னர் இடம் பெற்றதாகவும் அவா்  கூறினாா்.

முன்னாள் எரிசக்தி அமைச்சா் சம்பிக்க ரணவக்க கூட ஊடகங்களுக்கு இன்று தனது கருத்தை தெரிவித்தாா். ஊழல் இடம்பெற்றுள்ளதை ஏற்றுக்கொண்ட இவா் விதி முறைகளை மீறி கப்பல் கூட்டுத்தாபனம் தான்தோன்றித்தனமாக இந்த கொள்வனவில் ஈடுபட்டதாகவும் அரசாங்கத்தின் உயரதிகாாிகள் சிலரது போக்கே இதற்கு காரணம் என்றும் கூறினாா்.

நடக்கின்ற இந்த சம்பவங்களைப் பாா்க்கின்ற போது  இதன் பின்னணி வேறொரு இலக்கை  நோக்கி நகா்கின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.

இரண்டு அமைச்சா்களும் ஒருவரை மற்றவர் குற்றம் சாட்டுகின்ற ஒரு போக்கை அவதானிக்க முடிகிறது. காலத்திற்கு காலம் அமைச்சா்கள் மாறினாலும் இது மஹிந்த ராஜபக்ஷ ஆடசிக் காலத்தில் இடம்பெற்றிருக்கிறது என்பதே உண்மையாகும்.

அரசாங்கம் ஒரேயடியாக பாராளுமன்றத்தில் 150 கோடி ரூபாய்கள் தொடா்பான மோசடியை எவ்வித சஞ்சலமுமின்றி ஏற்றுக்கொண்டிருக்கின்றது. இது ஆளும், எதிா்க்கட்சியினரிடையே ஆச்சரியத்தை தோற்றுவித்திருக்கிறது.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஊழல் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டால் அந்த கேள்விகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் ஒழுங்காக ஒருபோதும் பதிலளிப்பது கிடையாது.  கேள்வி கேட்கும் எதிா்க்கட்சி அங்கத்தவரை  கடுப்பேற்றும் நையாண்டி பதில்களைத்தான் ஆளும் கட்சினர் வழங்கி வந்தனர்.

ஊழல் தொடர்பான விவகாரம் வரும் போதெல்லாம், “உங்கள் ஆட்சிக் காலத்தில் அப்படி நடந்ததே இப்படி நடந்ததே“ என்று புரளி பண்ணுவதே பாராளுமன்றத்தின்  வழக்கமாக இருந்தது.  இத்தகைய புரளிகளை தொடா்பாக சபாநாயகர்  அவ்வப்போது  ஆளும் தரப்பினரை கண்டித்தும் உள்ளாா்.  சாியான பதிலை வழங்குமாறு பணித்தும் உள்ளாா்.

ஆனால் இந்த நிலக்கரி ஊழல் தொடா்பாக மிகவும் உற்சாகமாகவும், தெளிவாகவும்  அரச தரப்பில் பாராளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டது. வாய் நோகாமல் 150 கோடிகள் இழப்பு என்றும் கூறப்பட்டது.

இந்த பதிலைக் கேட்டு எட்டு மாதங்களுக்கு முன்னர்  வினா தொடுத்த ஹா்ஷ டி சில்வாவே அதிர்ந்து போயுள்ளாா்.

சம்பிக்கவின் கட்சிக்கும் மஹிந்த அரசிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருக்கும் நிலையில் அரசாங்கம் இப்படி வெளிப்படையாக தவறை ஏற்றுக்கொண்டிருப்பதில் இரகசியங்கள் நிறைய இருக்க வாய்ப்பிருக்கின்றன.

தோ்தல் காலம் என்பதால் வெகு விரைவில் விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும்.


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...