Sunday 16 August 2009

ஜுன்துல்லாஹ் ஹமாஸ் மோதல் மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!


ஜுன்த் அன்ஸாருல்லாஹ் - ஹமாஸ் மோதல்
மத்திய கிழக்கில் மற்றுமொரு பொறி!

பலஸ்தீனின் ரபாஹ் நகரத்தில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் போது காஸா பிராந்தியத்தை “ காஸா அமீரகமாக” (Gaza Emirate) பிரகடனப்படத்திய ஜுன்து அன்ஸாருல்லாஹ அமைப்பிற்கும், ஹமாஸின் பொலிஸ் காவல் துறையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில், ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பின் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட லத்திப் மூஸாவும் மேலும் 23 பேரும் கொல்லப்பட்டனர். இதில் 6 பேர் ஹமாஸ் பொலிஸ் பிரிவைச் சார்ந்தவர்கள்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் போன்று பலஸ்தீனில் திடீரென்று தோன்றிய இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு எப்போது? எப்படி வந்தது? இதன் பின்னணி என்ன?

சர்வதேச ஊடகங்களில் இந்த செய்தி வந்த போது எல்லோருக்கும் ஏறபட்ட சந்தேகம் இது.

2006ம் ஆண்டு பலஸ்தீனில் நடைபெற்ற அதன் அதிகார சபைக்கான தேர்தலில் மஹ்மூத் அப்பாஸின் பத்தாஹ் இயக்கம் படுதோல்வியைச் சந்தித்தது. ஹமாஸ் இயக்கம் அமோக வெற்றியைப் பெற்றது.

பாராளுமன்றத்தின் அதிக ஆசனங்கள் ஹமாஸின் கைக்குள் வந்தது. ஆயுதப் போராட்டத்தில் தன்னை வளர்த்துக்கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்தது ஹமாஸ் இயக்கம்.

ஹமாஸ் மக்கள் ஆதரவு இல்லாத இயக்கம் என்ற நிலைப்பாட்டிலிருந்த அமெரிக்காவும், சஊதியும், ஏனைய மேற்குலக நாடுகளும் தமது நிலைப்பாட்டை பலஸ்தீன் மக்கள் தலைகீழாக மாற்றிவிட்டதைக் கண்டு மிரண்டு போயினர்.

பலஸ்தீன் பாராளுமன்றத்தைக் கைப்பற்றிய ஹமாஸுக்கு இஸ்ரேலும், மேற்குலமும் பல நெருக்குதல்களை கொடுத்தன. பொருளாதார தடைகளை திணித்தன. ஹமாஸ் அரசாங்கம் செயலாற்ற முடியாதவாறு முடக்கப்பட்டது.


ஹமாஸின் பலம் வாய்ந்த பிரதேசமாக கருதப்படும் காஸாவை விட்டு விட்டு மேற்குக் கரை தோல்வியடைந்த பத்தாஹ் அமைப்பிற்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. மேற்குக் கரையை பிரிக்கும் போராட்டத்திற்கு இஸ்ரேல் பகிரங்கமாகவே பத்ததாஹ் அமைப்பிற்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியது.

மேற்குலக நாடுகளும், இஸ்ரேலும், சஊதி அரேபியாவும் பத்தாஹ் அமைப்பிற்கு தமது ஆதரைவை வெளிப்படையாகவே தெரிவித்தன.

நெருக்குதல்களுடன் காஸாவில் தனது நிர்வாக கட்டமைப்பை கொண்டு சென்ற ஹமாஸுக்கு யுத்தம் ஒன்றின் மூலம் பாடம் புகட்ட இஸ்ரேல் முயன்றது. ஆயிரக்கணக்கான உயிர்களையும், உடைமைகளையும் அழித்த காஸா யுத்தம் பலஸ்தீன் வரலாற்றில் மிகக்கொடுமையான யுத்ததமாக வர்ணிக்கப்பட்டது.

இஸ்ரேல் செய்த இந்த அநியாய படுகொலைகளை மேற்குலகோடு அமெரிக்காவும் அதன் நேசர்களான சஊதி மற்றும் ஏனைய அரபு நாடுகளும் பார்த்து அங்கீகாரம் வழங்கின.

பொருளாதார தடைகள், அரசியல், பொருளாதார ரீதியிலான நெருக்குதல்கள், எதிர்க்கருத்துள்ள அரசியல்வாதிகளின் இடையூறுகள் அத்தனைக்கும் முகம் கொடுத்த ஹமாஸ் இயக்கம் அரசியல் ரீதியாக எழுச்சி பெற ஆரம்பித்தது.

இத்தருணத்தில்தான் ஜுன்த் அன்ஸாருல்லாஹ என்ற சஊதி, ஸீ.ஐ.ஏ. இணைந்து உருவாக்கிய இந்த புதிய படை கடந்த ஜுன் மாதம் தன் கைவரிசையைக் முதன்முதல் பலஸ்தீனில் காட்ட ஆரம்பிக்கின்றது.

சஊதி சலபி சிந்தனையின் உருவாக்கமாய் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் அமைப்பு, இஸ்லாத்தின் எதிரிகளின் மறைமுக நிதியுதவியோடு இயங்கும் “தௌஹீத்” அமைப்புகளோடு நெருங்கிய தொடர்பையும் வைத்திருந்தது.

இத்தகைய அமைப்புகள் முஸ்லிம் சமூகத்திற்குள்ளேயே உட்கருத்து மோதல்களையும், பிரிவினைகளையும் தோற்றுவிக்கவல்வன. ஒரு நாட்டின் பணத்தைப்பெற்று பல பெயர்களில் பல நாடுகளில் இத்தகைய இயக்கங்கள் இயங்கி வருகின்றன. (அண்மையில் பேருவளையில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு இத்தகைய இயக்கமொன்றின் தூண்டுதலே காரணமாகின)

ஒரே நாட்டின் பணத்தைப் பெற்று பல குழுக்களாக பிரிந்து செயலாற்றும் இவர்கள் அவர்களுக்குள்ளேயே முரண்பாடுகளை வளர்த்துக்கொள்கின்றனர். இன்று சர்வதேச அரசியல் முதல் சாதாரண நிகழ்வுகள் வரை அனைத்திலும் ஆதிக்கஞ் செலுத்தக் கூடியதாக இந்த அமைப்புகள் செயற்பட்டுவருகின்றன.

பணத்தை வீசி முஸ்லிம்களை மூளைச் சலவை செய்யும் இந்த சலபி அமைப்புக்களில் அநேகம் பேர் சிக்கியும் வருகின்றனர்.

இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளை சீர்குலைப்பது, அநீதிக்கு எதிரான போராட்டங்களை பயங்கரவாதமாய் சித்தரிப்பது, அரச பயங்கரவாதத்தால் போராட்டங்களை நசுக்குவது போன்ற நிகழ்ச்சி நிரல்களை மேற்படி அமைப்புகள் செயற்படுத்தி வருகின்றன.

பலஸ்தீன் தொடர்பான பிரச்சினை கூர்மையடைந்து வரும் இக்கால கட்டத்தில் ஹமாஸ் இயக்கம் அரசியல் சார்ந்த நகர்வாய் தனது செயற்றிட்டங்களை மாற்றி வரும் வேளையில், மத்திய கிழக்கின் தலைவிதி மாற்றம் ஒன்றிற்கான தடயமாக பலஸ்தீன் பிரச்சினை உருவாகி வருவதை விரும்பாத சஊதியும், ஸீ.ஐ.ஏ யும் சேர்ந்து ஜுன்த் அன்ஸாருல்லாஹ்வை உருவாக்கியிருக்கின்றனர்.

விடுதலைக்கான போராட்டத்தை வேறுபக்கம் திசை திருப்பிய சதிகார சக்திகள் தனக்கு கீழ்ப்படிவுள்ள பத்தாஹ் அமைப்பிற்கு மேற்குக் கரையை கொடுத்து விட்டு, காஸாவை கூறு போட வகுத்த வியூகமே இந்த ஜுன்த் அன்ஸாருல்லாஹ் படையாகும். காஸாவில் உருவான இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் இஸ்ரேலுக்கு ஒரு சன்மானத்தை இந்த ஸலபி இயக்கம் வழங்கியுள்ளது.

சலபி, அல்கைதா சிந்தனைப்போக்கில் உருவான ஜுன்த் அன்ஸாருல்லாஹ் ரபாவில் இப்னு தைமிய்யா (சஊதி ஆதரவு) பள்ளிவாசலை மையமாக வைத்து செயற்பட்டிருக்கிறது. மன்னர்கள் ஆளும் குட்டி குட்டி நாடுகளான அபூதாபி, பஹ்ரைன், துபாய், கதார் போன்ற ஒர்அமீரகமாக காஸாவை பிரகடனப்படுத்தியதிலிருந்து அதன் இலக்கு தெளிவாக தெரிகிறது.

இந்தப் பிரகடனத்தின் மூலம் உயிரோட்டமாக இருக்கும் ஹமாஸின் போராட்டத்தை மலுங்கடிக்கச் செய்யவே இத்தகைய காரியத்தை இந்த அன்ஸாருல்லாஹ செய்திருக்கிறது. காஸாவை பிளவு படுத்துவதன் மூலம் இஸ்ரேலுக்கு நன்மையை ஏற்படுத்த இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

சஊதியை பின்புலமாக கொண்டு இயங்கும் அத்தனை இயக்கங்களும் பலஸ்தீன் போராட்டத்தை கவனத்திற் கொள்ளாமல் இருப்பவையே.

திடீரென சஊதி பின்புல சக்தியொன்று பலஸ்தீன் போராட்டத்தில் குதித்து பங்கு கேட்டிருப்பதன் மர்மம் என்ன என்பதை ஹமாஸ் இயக்கம் நன்கு உணர்ந்து செயற்பட்டிருக்கிறது.

இஸ்லாமிய அரசு, இஸ்லாமிய கிலாபத் அமெரிக்காவிற்கு எவ்வளவு கசப்பானதோ அதேயளவு சஊதிக்கும் கசப்பானது. அதே போல மத்திய கிழக்கில் தேர்தல் ஜனநாயம் என்ற வாசகங்கள் எல்லாம் சஊதி, அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் அலர்ஜியானது.

ஹமாஸை ஒழிப்பதன் மூலம் அல்லது ஹமாஸுக்கு போட்டிக் குழுவொன்றை இஸ்லாமிய சாயம் பூசி ஏற்படுத்துவதன் மூலம் இந்த மத்திய கிழக்கின் ஜனநாயகம், தேர்தல் என்று வித்திடப்பட்டிருக்கும் ஆட்சி முறையை அடியோடு அழித்து விட சஊதியும் சந்தர்ப்பம் பார்த்து இருக்கிறது.

இலங்கை, இந்தியா, சோமாலியா, ஈராக், பாகிஸ்தான் மற்றும் பலஸ்தீன் வரை பிரித்தாளும் இந்த இயக்கங்களின் செயற்பாடுகள் நீண்டு வருவதை இன்று காணக் கூடியதாக இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் உஸாமாவின் தலைமையில் சஊதி, அமெரிக்காவின் தேவைக்காக உருவாக்கிய ஜிஹாத் முஸ்லிம் உம்மத்திற்கே பெரிய அழிவுகளையும், அவப்பெயரையும் தேடிக்கொடுத்தது.

பிறகு அல்கைதாவை உருவாக்கியவர்களே அது பயங்கரவாதம் என நாமம் சூட்டி ஆப்கானிஸ்தானை அழித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆப்கானிஸ்தானில் ஜிஹாதாக அமெரிக்கா முதலீடு செய்ததற்காக இலாபத்தை ஈராக்கைக் கைப்பற்றி அடைந்துக்கொண்டது.

தாலிபான்களை உருவாக்கிய இரகசியத்தை அண்மையில் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஹிலாரி கிளின்டன் பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க வளர்த்த தாலிபான்களோடு இன்று அமெரிக்காவே போராடிக்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வகுத்த திட்டம், நீண்ட கால அளவில் முஸ்லிம் நாடுகளைக் கைப்பற்ற அமெரிக்கா வகுத்த அரசியல் வியூகம் என்பதை நாம் இப்போது தெளிவாக விளங்கி வருகிறோம்.

செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் ஆப்கானிஸ்தானுக்குள்ளும் பிறகு ஈராக் நாட்டிற்குள்ளும் அத்துமீறி பிரவேசித்த அமெரிக்கா தனது நிகழ்ச்சி நிரலை நேர்த்தியாக அரங்கேற்றியது.

இன்னும் அதன் ஆக்கிரமிப்புப் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. இத்தகைய உலக ஏகாதிபத்திய அரசை நோக்கிய அமெரிக்காவின் பயணத்திற்கு சஊதி அரேபியா ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவது மட்டுமல்லாமல், அவ்வப்போது காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தையும் அது செய்து வருகிறது.

அமெரிக்கா இஸ்லாமிய உலகிற்கு செய்யும் சதியைப்போலவே சஊதியும் சதி செய்கிறது.

கோடிக்கணக்கான பணத்தை அதன் ஏஜன்டுகளாள தஃவா(?) இயக்கங்களுக்கு கொட்டுவதன் மூலம் அரசியல் சார்ந்த முஸ்லிம் உம்ம்த்தின் சிந்தனையை அது வேறு பக்கம் திசை திருப்பி வருகிறது.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற அடைமொழிக்குள் அல்கைதாவை தள்ளிவிட்டு வேடிக்கைப்பார்க்கும் இந்த இரண்டு நாடுகளும் தமக்கு தேவையான போது ஜிஹாத் பத்வா வழங்குவதும், தமக்கு தேவையில்லாத போது ஜிஹாதுக்கு எதிராக பத்வா வழங்குவதும் நடைமுறையாகி மாறியள்ளது.

சஊதி ஸலபி சிந்தனையில் வாழும் இயக்கங்கள் அனைத்தும் ஜிஹாத் தொடர்பான கருத்தியலில் அமெரிக்காவின் நிலைப்பாட்டையே சார்ந்திருக்கின்றன.

பலஸ்தீன் போராட்டம் உலகமே ஏற்றுக்கொண்ட ஒரு போராட்டம். அந்த போராட்டத்தைக் கூட கொச்சைப்படுத்த சஊதி முயன்று வருவதை ஜுன்த் அன்ஸாருல்லாஹவின் வருகை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

காஸாவில் ஹமாஸ் பலவீனப்படுவதன் வெற்றி இஸ்ரேலுக்குக் கிடைக்கிறது. இஸ்ரேல் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செய்வத்ன் வெற்றி அமெரிக்காவிற்கு கிடைக்கிறது. அமெரிக்கா மத்திய கிழக்கை ஆக்கிரமிப்பதன் வெற்றி சஊதிக்கு கிடைக்கிறது. சஊதி மன்னராட்சியின் பாதுகாப்பிற்கு கிடைக்கிறது.

சஊதியை பாதுகாக்கும் ஸலபிகள், மறைமுகமாக அமெரிக்காவையும், இஸ்ரேலையும் பாதுகாக்கின்றார்கள்.
என்பது மட்டும் உண்மையிலும் உண்மை!

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...