Monday 31 March 2014

துருக்கி தேர்தல்: பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி


துருக்கி நாட்டில் இன்று நடந்த தேர்தலில் பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி 47 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது, முக்கிய எதிர்கட்சி 27 சதவீத வாக்குகள் மற்றுமே பெற்றுள்ளதாக பி.பி.சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பிரதமர் தயிப் எர்டோகன் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சமூக வலைதளங்களுடாக எர்டோகனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக துருக்கிய  அரசு குற்றம் சாட்டியிருந்தது. அவற்றிலிருந்து மீளும் வகையில் அவரது தற்போதைய வெற்றி அமைந்திருப்பதாக  அறிய வருகிறது..

Friday 28 March 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கை!


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை, இலங்கை தொடர்பான தன்னுடைய அறிக்கையினை நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் சமர்பித்தார். அவருயைடய அறிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு;

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஆகிய நான் இலங்கையின் மனித உரிமைகள் மற்aறும் நல்லினக்க செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை (A/HRC/25/23) இச்சபையில் சமர்பிக்கின்றேன்.

இவ்வறிக்கையானது இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டினுள் நடைமுறைப்படுத்துவதற்காக அதாவது 2013ம் ஆண்டு ஆணைக்குழு கூட்டத்தொடரின் பின்னரான காலம் முதல் ஆவணி 2013 என்னுடைய இலங்கையிற்கான விஐயம் வரையிலான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24ம் கூட்டத்தொடரின் பொழுது இலங்கையில் மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளக அளவில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்தல், வடமாகாண சபைக்காக தேர்தல்களை நடாத்துதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் அதாவது மும்மொழிக் கொள்கையினை அமுல்படுத்துதல் என்பன தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

ஆணைக்குழு 22/1 தீர்மானத்தின் அடிப்படையில் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் என்பன கடந்த காலத்தில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறு அளவிலேனும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதனை நாம் இங்கே வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.

மனித உரிமைகள் தலைமையகத்தினால் இலங்கையிற்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவிகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் சரியான முறையில் பதிலுரைக்க தவறிவிட்டது. இவ்வாறான உதவிகள் நாட்டினுள் நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க உதவும்.

மேலும் உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்தோரிற்கான கல்வி மற்றும் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட திட்டத்திணை அமுல்படுத்துவதை வரவேற்கின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளிற்காக ஏனையோரும் ஊக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகள் தொடர்பில் மனம் வருந்துகின்றோம்.

இக்கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலும் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் சேவையாற்றும் இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களுடைய விடுதலையை வரவேற்கின்றோம். செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகின்றோம்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. யுத்த காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அதன் கடமையாகும்.

இவ் வன்முறைகளின் பொழுது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமுற்றனர், இறந்தனர் மற்றும் காணமற்போயினர். இவ் வன்முறைகளிலிருந்து உயிர்பிழைத்தோர் மற்றும் பாதிப்புற்றோரிற்கு நாட்டிலுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்றது.

அதேவேளை புதிய சாட்சிகள் சர்வதேச பொறிமுறையின் முன்னர் தங்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் எடுத்துரைக்க முன்வருகின்றனர். இதன் மூலமாக தங்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென நம்பிக்கை கொள்கின்றார்கள்.

இச்செயற்பாடு சர்வதேச விசாரணையினை மாத்திரம் கூறவில்லை மாறாக புதிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாகவும், ஜனநாயக செயன்முறை தோல்வியடைந்த ஓர் இடத்திலிருந்து பல உண்மைகளை வெளிக்கொணரவும் வழிகோலும்.

ஜனநாயக செயற்பாட்டினை தொடர்ச்சியாக அவதானிப்பதற்காகவும், சர்வதேச மனித உரிமைகள் மீறல்களை தடுப்பதற்காகவும் சுதந்திரமான சர்வதேச விசாரணையினை இலங்கை மீது மேற்கொள்ள வேண்டுமென இவ்வாணைக்குழுவை கேட்டுக்கொள்கின்றோம்.

இப்பொறிமுறை புதைந்து போயுள்ள மேலதிக உண்மைகளை வெளிக்கொணரவும், நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கையர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக நீங்கள் இறுதி தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் உங்கள் அவதானத்தை அண்மையில் மனித உரிமைகள் தொடர்பில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் அதாவது சிறுபான்மையினரின் மத தலங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்குள்ள தடங்கல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தார்.

Thursday 27 March 2014

மனித உடல் உறுப்புகளின் சந்தை!

மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market.



நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market”  .
மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?
’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி,  பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.
ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த  நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.
பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?
முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.
தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.
மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி  எனும் ஊரில் உள்ள  “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற  ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின்  மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.
ஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு.  அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை  மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!
அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு  இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக்  கண்டுகொள்வதில்லை.  ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம்  சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை (Red Market) பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி  சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.
சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு  குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.
சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம்  எடுத்துக்கொண்டு,  நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார்.  இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.
கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.
மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு  சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.
ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.
-courtesy: vinavu.com

ஜெனிவாவில் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது“ ஆவணப்படம்!

ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது' திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படம் இராணுவ மயமாக்கப்பட்ட பகுதிகளில் இன்றைய நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நில அபகரிப்பு பற்றியும், போரின் போது இலங்கை இராணுவம் எப்படி நடந்து கொண்டது என்பதையும் மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் மகா பிரபாகரன் அவர்களால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் வந்து ஆவணப்படத்திற்கான தகவல்களை சேகரிக்கும் போது தமிழ் மகா பிரபாகரன் இராணுவத்தினரால் கைது செய்யப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.வில் மீண்டும் ஒரு ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் 25 வது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகிற நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு உப மாநாடுகள் இலங்கையின் மனித உரிமைகள் பிரச்னை தொடர்பாக நடக்கின்றன.
அப்படி இலங்கை மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பாக நேற்று அறை எண் 22 யில் உபமாநாடு ஒன்று நடைப்பெற்றது. அதில் இலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர் நிமல்கா பெர்னான்டோ, சுனந்த தேசப்பிரிய, பாதர் போன்ட்காலன்ட் உள்பட ஆம்னெஸ்டி இன்டர்நேசனல் போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளும் இந்தியாவை சேர்ந்த மனித உரிமையாளர்களும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் இறுதியாக இலங்கையில் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் மகா.தமிழ்ப் பிரபாகரனின் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
பிரித்தானியா பாராளமன்றத்தில் ஜனவரி மாத இறுதியில் இப்படம் வெளியான போதே அதிலிருந்த காட்சிகளும் பேட்டிகளும் இலங்கைத் தரப்பை பதற்றத்துக்கு உள்ளாக்கியது.
சில நாட்களுக்கு இப்படத்திலிருந்த இராணுவ சிப்பாயின் பேட்டி இந்தியாவின் ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒன்றில் வெளியாகி இருந்தது.
அதில் இரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மக்கள் படுகொலைகள் தொடர்பாகவும் ஆதாரப்பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதோடு இன்றைய வட கிழக்கின் இராணுவமயமாக்கலை உள்ளடக்கிய காட்சிகளே இன்று ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடந்த உபமாநாட்டில் திரையிடப்பட்டது.
நன்றி - தமிழ்வின்

Wednesday 26 March 2014

CCTV சிசிரீவி காட்சி - மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் மேல்மாகாண சபை வேட்பாளர் சுமதிபால மானவடு விபத்தில் சிக்கும் காட்சி


மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் மேல்மாகாண சபை வேட்பாளரும், தொழிற்சங்க தலைவருமான சகோதரர் சுமதிபால மானவடு அவர்கள் கடந்த 25.03.2014 அன்று இரவு 8.10 மணியளவில் கொழும்பு கண்டி வீதியில் இபுல்கொட பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்துச் சம்பவம் சிசிரிவி கமெராவில் இப்படி பதிவாகியிருந்தது

.

Tuesday 25 March 2014

அஸ்ஸாம் இனக்கலவரம் - 2012 குறித்த ஆவணப்படம் ‘THE WOLVES'


கற்பனைகளை காட்சியாக்குவதுதான் சினிமா. சற்றே மாறுபட்டு நிகழ்வுகளை, காட்சித் தொகுப்பாக்குவதை “ஆவணப்படம்” என்கிறோம்.

ஆய்வுகள், வரலாறு, வன்முறை நிகழ்வுகளின் பதிவுகள் என ஆவணப்படங்கள் பல்வேறு தளத்தில் எடுக்கப்படுகின்றன. உண்மைச் சம்பவங்கள் சினிமாக்களாக எடுக்கும்போது பாதிப்புகள் வர்ணிக்கப்பட்டாலும், வலிதனை உணரச் செய்வது ஆவணப்படங்கள் மட்டுமே. நாயகர்களின் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் இரத்தத்தின் சாட்சியல்லவா?
அந்த வரிசையில் அஸ்ஸாமின் இருள் முகத்தினை விவரிக்கும் படமாய் வெளிவந்திருக்கிறது “ஓநாய்கள்” (The Wolves).

அஸ்ஸாமின் அவலம்
ஜூலை 20, 2012… அந்தி  மாலைப்பொழுதில் அனைவரின்  கவனமும் ரமழான் முதல் பிறை பார்த்திடும் ஆவலில் இருக்கையில், திடீர் சப்தம் திடுக்கத்திற்கு உள்ளாக்கியது ஜோய்பூர் கிராம (கோக்ரஜார் மாவட்ட) மக்களை!
பீதிக்குள்ளான மக்கள் ஒன்று கூடினர். இராணுவ சீருடையில் வானை நோக்கி துப்பாக்கியால்  சுட்டுக் கொண்டே சென்ற நால்வர்தான் வெடி சப்தத்திற்கு காரணம் என்றறிந்த மக்கள், அவர்களை மடக்கி பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் அவர்கள் போடோ லிபரேஷன் டைகர் (BLT ) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டனர்.
இது அம்மக்களுக்கு புதிதல்ல. அவ்வப்போது வன்முறை குழுக்களை எதிர்கொள்வதும், அவர்களால் உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையே என அஸ்ஸாம் கிராமத்தின் பாதுகாப்பற்ற சூழலை விளக்கியவாறு துவங்குகிறது படம்.

போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் அவர்களுக்கு அரசின் எந்தவொரு பாதுகாப்பு உறுதியையும் பெற்றுத் தந்திடவில்லை. மாறாக போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களின் உயிரையே பறித்தது.

கலவரத்தின் பின்னணி
பதட்ட சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகள் (?), தங்களின் சுய இலாபத்திற்காக மூட்டிய “தீ”தான்  அஸ்ஸாம்-2012 இனப்படுகொலையின் பின்னணி என காட்சிகள் விரிகின்றன.
இவர்களது வெறுப்புப் பேச்சால் 90 நபர்கள் பலி கொடுக்கப்பட்டும்,  244 கிராமங்களில் சுமார் 5000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும், 4.5 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தும் தவிக்கின்றனர் என்பதும்தான் பெருத்த சோகம்.

திசை திருப்பும் பாஜக
போடோ இனத்தவருக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்குமான பிரச்னையை, பாஜக அரசியலாக்க முனைவதையும் படம் பிடிக்கிறார் இயக்குனர். சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஆங்கிலேயர்களால் இங்கு கொண்டு வரப்பட்ட வங்கதேச முஸ்லிம்கள், சுதந்திரத்திற்குப் பின் இந்தியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை ஊடுருவல்காரர்களாக சித்தரித்து, அவர்களால் நாடு மீண்டும் ஒரு பிரிவினைக்கு உள்ளாகும் எனும் துவேஷ கருத்தினை பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான (லாஹூரில் பிறந்து சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா வந்த) வந்தேறி எல்.கே. அத்வானி பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துகிறார்.

தேசம் முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்றால்,  அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கு தங்கள் குடியுரிமையையே நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அந்தோ பரிதாபம்!
முஸ்லிம்களின் அடர்த்திமிக்க மாநிலமாக அஸ்ஸாம் இருப்பதும், அவர்களின் மக்கள்தொகை (1991-2001 கணக்கின்படி) 4 சதவிகித அளவில் சற்றே உயர்ந்திருப்பதும் காவி அரசியலின் கண்களுக்கு அஸ்ஸாமை இலக்காய் ஆக்கியிருக்கிறது. ஆனால் மேகாலயா பிரிக்கப்படும்போது மற்ற சமூகத்தித்தினர் அம்மாநிலத்திற்கு  சென்றதே முஸ்லிம்களின் சதவிகித உயர்வுக்கு காரணம் என விளக்குகிறார் இயக்குனர்.

போராட்டம் தொடர்கிறது
கலவரங்களில்  வாக்காளர் அட்டை உட்பட, தங்களிடமிருந்த   அனைத்து ஆவணங்களையும் இழந்து அகதி முகாம்களில் வாடும் அஸ்ஸாமிகள், தங்களை இந்தியர்களாய் நிரூபிக்கும் போராட்டம் தொடர்கிறது.
அம்மக்களின் நிலையை ஆவணப்படுத்தி நியூ இந்தியா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதனை மிகுந்த சிரமங்களுக்கிடையில் உருவாக்கிய இஸ்மாஈல் பின் ஸக்கரிய்யா, அஹமத் இக்பால் தன்வீர் ஆகியோரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

அவர்கள் இதே போன்று பல படங்களை வெளியிட்டு உறங்கிக் கிடக்கும் உண்மைகளையும், மண்டிக் கிடக்கும் மர்மங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட வேண்டும் என்பதே எம் அவா!

வீடியோவை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்
http://www.newindia.tv/tn/review/2676-the-wolves-a-documentary-on-assam-riots-2012
நன்றி : http://www.thoothuonline.com

Friday 21 March 2014

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்போம்!

alt
'இன்போம்" நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு ருகி பர்ணாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டமைப்பு சம்பந்தமான நிலையத்தின் முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கடந்த 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு
 
' ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களுக்கு எதிராக குரலெழுப்பும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குரல்வளையை நசுக்குவதற்காக எடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மார்ச் 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களான 'இன்போம்" நிறுவனத்தின் ருகீ பர்னாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டபை்பு சம்பந்தமான முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்த கைது இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கு சிறந்த உதாரணமாகும். 16ம் திகதி இரவு அவர்கள் இருவரும் கிளிநொச்சியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் திகதி கிளிநொச்சி தர்மபுறம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டோடு சம்பந்தப்பட்டவர்கள் எனக்கூறி தாயும் மகளும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காகச் சென்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
கிளிநொச்சி, தர்மபுறம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமாரி பாலச்சந்திரன் என்பவரின் வீட்டுப்பக்கமாக வெடிச்சத்தம் கேட்டதாக கூறி அவரும் அவருடை 13 வயது மகள் விபுஷிகாவும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். ஜெயகுமாரி பாலச்சந்திரனின் மூன்று ஆண்மக்கள் காலஞ்சென்றிருப்பதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். அவருடைய மகள் காணாமல் போனவர்கள் தேடுவதற்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டது காணாமல் போனவர்கள் தொடர்பான ஆர்ப்பாட்டங்களை செயலிழக்கச் செய்வதற்காவே என்பது தௌிவு. 
 
இப்போது அது குறித்து குரலெழுப்பிய மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ருகீ பர்ணாந்து மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த ஒரு வழக்குரைஞர் கிளிநொச்சி பொலிஸில் விசாரித்தபோது கைது செய்யப்பட்டதை நிராகரித்தமை பாரதூரமான நிலையாகுமென்பதே எமது கருத்தாகும். 
 
இப்படியான நிலைமையின் கீழ் அவர்கள் உயிராபத்தான நிலையில் இருப்பது தௌிவாகிறது. ருகீ பர்ணாந்து மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் இந்நாட்டின் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது இவ்வாறான அச்சுறுத்தல் தொடுக்கப்பட்டிருப்பதன் மூலம், மனித உரிமைகளுக்காக தோற்றி நிற்பவர்களுக்கு இலங்கை ஆபத்தான நாடாக மாறுவது தெரிகிறது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையில மனித உரிமைகள் சம்பந்தமான பிரேரணை குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருப்பதன் மூலம், எப்படியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சர்வாதிகார் மற்றும் ஜனநாய விரோத பயணத்தை கைவிட அரசாங்கம் தயாரில்லை என்பது தெரிய வருகிறது. இந்த நிலைமையின் கீழ் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக பரவலான மக்கள் செயற்பாடொன்று தேவைப்படுகிறது. 
 
அதற்காக ஏதாவதொரு வெளிச்சக்தியின் மீது நம்பிக்கை வைப்பதில் பலனில்லை. மக்களின் பரவலான தலையீட்டின் ஊடாகவே ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும். மனித உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் அனைத்து வித அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்துமாறு ஆட்சியாளர்களை வற்புறுத்தும் நாம்,  தமது உரிமைகளுக்காக நிறுவனப்படுமாறும், அணிதிரளுமாறும், செயற்படுமாறும் இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
 
-முன்னிலை சோஷலிஸக் கட்சி-

Thursday 20 March 2014

ஆயிரக்கணக்கான தாய்மாரின் குரலாயிருந்தோர் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கிளிநொச்சி தருமபுரத்தில் பாலேந்திரா ஜெயகுமாரியும் அவரது மகள் சிறுமி விபூசிக்காவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரால் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணான்டோவும் மத குருவான பிரணவீனும் அதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த வருடம் செப்ரம்பர் மாதத்தில் விஞ்ஞான பாட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் காணாமல் போனார். 

அண்மையில் மாங்குளத்தில் அவரது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதனை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு வடக்கில் தொடரும் மனித உரிமை மீறல்கள்களையும் அரசாங்கத்தின் இராணுவ முனைப்புடனான போரினவாத ஒடுக்குமுறையினையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. 


அதேவேளை கைது செய்யப்பட்டோர் உடன் விடுவிக்கப்படுவதையும், காணாமல் போய் எலும்புக் கூடாகக்கப்பட்ட ஆசிரியர் நிரூபன் பற்றி உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் கட்சி வற்புறுத்துகின்றது.

இலங்கையில் கைதுகளும் தடுத்து வைப்புகளும் காணாமல் போதல்களும் எலும்புக்கூடாக்குதல்களும் புதிய விடயங்கள் அல்ல. அவை வடக்குக் கிழக்கில் மட்டுமன்றித் தெற்கிலும் தாராளமாக இடம்பெற்று வந்தவையாகும். அதன் தொடர்ச்சியே அண்மைய கிளிநொச்சி மாங்குளச் சம்பவங்களாக வெளிப்பட்டு நிற்கின்றது. அவற்றின் எதிரொலிகளே இன்று ஜெனிவாவிலும் உரத்துக் கேட்கின்றன. இத்தனைக்கு நடுவிலும் மகிந்த சிந்தனை அரசாங்கம் தனது பேரினவாத ஒடுக்குமுறை அகங்காரத்தைக் கைவிடத் தயாராக இல்லை. அதனாலேயே திட்டமிட்டுப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

தனது மகன் காணாமல் போனோர் பட்டியலில் இருந்துவருவதை எந்தவொரு தாயாலும் பொறுத்துக் கொள்ளவியலாது. அவ்வாறே ஒரு கணவனையோ சகோதரனையோ சகோதரியையோ இழந்து நிற்பவர்களால் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும்? அவ்வாறான பல ஆயிரக் கணக்கானோரில் ஒருவராகவே பாலேந்திரா ஜெயக்குமாரியும் அவரது மகளான சிறுமி விபூக்காவும் இருக்கின்றனர்.

தனது மகனுக்காகவும் சகோதரனுக்காகவும் நீதி நியாயம் கோரி வந்தமையை எவ்வகையிலும் தவறானது எனக் கொள்ள முடியாது. பல ஆயிரக்கணக்கான தாய்மார்களின் குரலாகச் செயற்பட்டமைக்காகப் பழிவாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும். எனவே கைது செய்யப்பட்டவர்கள் உடன் விடுவிக்கப்படல் வேண்டும் என்பதுடன் கடத்தப்பட்டு எச்சமாக மீட்கப்பட்ட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் என எமதுக் கட்சி வற்புறுத்துகின்றது.

18.03.2014

 சி.கா. செந்திவேல்  
பொதுச் செயலாளர்  
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி

Thursday 13 March 2014

மலேசிய விமானம் தொடர்பாக செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது சீனா


சீன அரச இணையதளம் ஒன்று காணாமல் போன மலேசிய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் தென்படும் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- 

வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில் கடந்த மார்ச் 9ம் தேதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் "மூன்று சந்தேகத்திற்குரிய மிதக்கும் பொருட்கள்" மாறுபட்ட அளவுகளில் தென்பட்டுள்ளன. காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் விமானத்தின் பாகங்கள் அதிகபட்சம் 22-24 மீட்டருக்குள் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது. 

Wednesday 12 March 2014

சிங்கள ராவணா பலய ஆர்ப்பாட்டத்திக்கு தடை





சிங்கள பௌத்த இனவாத அமைப்பான ராவணா பலய  இன்று (12.03.2014 )ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றம் தடைசெய்தள்ளது.

ராவணா பலய அமைப்பும், சட்டக் கல்லூரிக்கு தோற்றிய  மாணவர்கள் சிலரும் இதை ஒழுங்கு படுத்தியிருந்ததாக அறிய வருகிறது.

கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற விருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மலேசிய விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை: விமானப்படை அதிகாரி



தென் சீனக் கடலில் மாயமான மலேசிய விமானம் எந்த திசையில் சென்றிருக்கும் என்பது தெரியவில்லை என மலேசிய விமானப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமானத்தை தேடும் பணி தொடர்ந்தது நடைபெற்றுவருகிறது. 

தேடுதல் எல்லை விரிவாக்கப்பட்டு ஆயிரம் கடல்மைல் பரப்பில் 10 நாடுகளைச் சேர்ந்த 36 போர் விமானங்கள், 40 போர்க்கப்பல் கள், நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடி வருகின்றன.

இந்நிலையில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரேடர் தொடர்பில் இருந்து விலகுவதற்கு முன்னர் மீண்டும் மலேசியாவுக்கே திரும்ப முயற்சித்திருக்கலாம் என அந்நாட்டு விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார் இருப்பினும் விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை என கூறினார்.

கோட்டா பாரு என்ற பகுதியில் இருந்து விமானம் திசை மாறி மலாகா ஜலசந்தி பகுதியில் மிகவும் தாழ்வாகப் பறந்திருப்பது ரேடார் பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக வெளியான செய்திகளை அந்த அதிகாரி மறுத்துள்ளார்.

நன்றி - தி இந்து 

மலேசிய விமானத்தின் மர்மம் தொடர்கிறது...!


தென் சீனக் கடலில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் என்னவானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதா, கடலில் மூழ்கியதா, தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தனரா அல்லது கடத்திச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 நாள்களாகியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

தேடுதல் பணியில் 10 நாடுகள்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்குப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.30 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்தது.
இதைத் தொடர்ந்து மலேசியா முதல் வியட்நாம் வரையிலான கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை 3-வது நாளாக தேடுதல் பணி நீடித்தது. 40-க்கும் மேற்பட்ட கப்பல்கள், 36-க்கும் மேற்பட்ட விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் சல்லடை போட்டு தேடுகின்றன.

மலேசியா மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 10 நாடுகளின் போர்க்கப்பல்கள், அதிநவீன போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீனவர்கள் கூட்டு முயற்சி
பன்னாட்டு கடற்படை, விமானப் படை இணைந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியாததால் உள்ளூர் மீனவர்கள் தற்போது தேடுதல் பணியில் களம் இறங்கியுள்ளனர். மலேசியா மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் சென்றுள்ளனர்.
வியட்நாம் எல்லைப் பகுதியில் இதுவரை எதுவும் கிடைக்காததால் தாய்லாந்தை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தாய்லாந்து கடற்படை தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளது.

காத்திருக்கும் உறவினர்கள்
காணாமல் போன மலேசிய விமானத்தில் 152 சீனர்கள் பயணம் செய்தனர். அவர்களின் குடும்பத்தினர் பெய்ஜிங்கில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் உள்பட 5 இந்தியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த இந்தியர் ஆகியோரும் பயணம் செய்தனர். அவர்களது குடும்பத்தினரும் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

வியட்நாம் எல்லையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் படலங்கள் மிதப்பதை அந்த நாட்டு ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அந்தப் படலம் சேகரிக்கப்பட்டு கோலாலம்பூர் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. இதில், கடலில் பரவியிருந்த பெட்ரோல் படலம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எரிபொருள் அல்ல என்பது தெரியவந்தது.

போலி பாஸ்போர்ட் பயணி அடையாளம் தெரிந்தது
மலேசிய விமானத்தில் 4 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் மட்டுமே சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று மலேசிய போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலேசிய காவல் துறை தலைவர் காலித் அபுபக்கர் நிருபர்களிடம் பேசியபோது, 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அவர் மலேசியாவைச் சேர்ந்தவர் அல்ல என்றார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்த 5 பேரின் உடமைகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் விமானத்தில் ஏறவில்லை.

நன்றி - தி இந்து

Tuesday 11 March 2014

நாங்கள் அடிப்போம்! நீங்கள் அழக் கூடாது..!


இலங்கையில் இடம் பெற்ற மற்றும் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் , அடக்கு முறைகள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு தகவல்கள் வழங்குவதையும், வழங்குவோரையும்  நாட்டுக்கே துரோகம் இழைப்போராக  இன்று சிங்கள இனவாதிகள் அடையாளப்படுத்தி அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகங்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக   யாரும் எவருக்கும் எந்த தகவலும் வழங்கக் கூடாது அப்படி வழங்குவது இந்த நாட்டையே காட்டிக் கொடுப்பதற்கு நிகரானது என்று பிரசாரம் செய்யப்படுகின்றது.

1988 1989 களில் ஜேவிபி போராட்டத்தின் போது  ஐ.தே.க அரசின் இராணுவ, பொலிஸ் மற்றும் துணைப்படைகளால்  கடத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான  இலங்கையின் தென்பகுதி  சிங்கள இளைஞர் யுவதிகளுக்காக தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐ.நா மனித உரிமைக் கவுன்ஸிலுக்கு தகவல் கொடுக்க முயற்சி செய்ததை யாரும் தேசத் துரோகமாக பார்க்கவில்லை.

அதற்கு காரணம் 88, 89 காலப்பிரிவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள் இருசாராரும் சிங்களவர்கள்.  சிங்கள அரசுக்கு எதிராக சிங்கள இளைஞர்கள் கிளர்ச்சி செய்த போது அதனை அடக்குவதற்காக சிங்கள அரசு மனித உரிமையை மீறியது.

அப்போதைய எதிர்க் கட்சி தரப்பிலிருந்த மகிந்த ராஜபக்ஸவின் சுதந்திரக் கட்சியினரின் இந்த செயற்பாட்டை ஆளும் கட்சிக்கு எதிராக கொண்டு வரும் ஒரு சாதாரண செயற்பாட்டாகவே சிங்கள மக்கள் பார்த்தனர்.



இந்த காணொளி பிரபல ஊடகவியலாளர் பில் ரீஸ் இலங்கை மோதல்கள் குறித்து  தயாரித்த  பிரிந்த தீவகம்  என்ற விவரணம். ஐ.தே.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஸவின் மனித உரிமை போராட்டம் தொடர்பாகவும் இது பேசுகிறது.

நாட்டுக்கு இழைக்கும் துரோகமாக யாரும் பார்க்கவில்லை. காரணம் மனித உரிமையை மீறி கொலை செய்யப்பட்டவர்களும், கொலையாளிகளும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். சிங்கள இனத்தவர்கள்.  எனவே இன்று போல் வேறு அர்த்தம் கற்பிப்பதற்கு காரணம் இல்லாமல் இருந்தது.

ஆனால் தற்போதுள்ள நிலைமை மிகவும் வித்தியாசமானது. மனித உரிமை மீறல் தொர்பாக அரசின் மீது குற்றம் சாட்டுபவர்கள் சிறுபான்மை இனத்தவர். குற்றம் சாட்டப்படுபவர்கள்  சிங்கள் பெரும்பான்மை இனத்தவர்கள்.

அன்று ஐ.நா மனித உரிமை கவுன்ஸிலுக்கு ஐ.தே.க அரசுக்கு எதிராக தகவல் கொடுக்கப் போன மஹிந்த ராஜபக்ஸவை ஒரு ஹீரோவாக  சிங்கள சமூகம் பார்த்தது.

இன்று சிறுபான்மை சமூகங்கள் தமது பிரச்சினைகளை ஐ.நா அரங்கிற்கு கொண்டு செல்வதை ஒரு துரோகமாக அதே சிங்கள சமூகம் பார்க்கின்றது. நீதியும் நியாயமும் இலங்கையில் இனங்களை வைத்துதான் எடைபோடப்படுகின்றது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.

பெரும்பான்மை இனத்திற்கு அநீதி இடம்பெற்றால் அதனை ஐ.நாவிற்கு மட்டுமல்ல அதற்கு மேலும் கொண்டு செல்லலாம். அது வீர தீர செயல்.

சிறுபான்மைக்கு அநீதி இடம்பெற்றால், அதை யாரும் எவருக்கும் சொல்லக் கூடாது. அந்த அநீதியை எவரும் கண்டு கொள்ளவும் கூடாது.  இது தான் மஹிந்த அரசின் நிலைப்பாடு...!  நாங்கள் அடிப்போம்! நீங்கள் அழக் கூடாது..!

Tuesday 4 March 2014

குஜராத் இனக்கலவர வேட்டைக்காரனும், இரையும் ஒன்றிணைந்த மேடை!


2002 ஆம் ஆண்டு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் நேரடி காட்சியாக மக்கள் மனங்களில் நிறைந்த இரண்டு பேர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரேமேடையில் தோன்றினார்கள்.
சங்க்பரிவார வெறியர்களுக்கு முன்னால் உயிர் பிச்சைக் கேட்டு கூப்பிய கைகளுக்கும், மிரட்சி மிகுந்த கண்களுக்கும் சொந்தக்காரரான குத்புதீன் அன்ஸாரியும், தலையில் காவி ரிப்பனும், இடது கையில் சூலமும் ஏந்தி ஆக்ரோஷமாக வெறிக் கூச்சலிடும் சங்க்பரிவார ஹிம்சையின் நேரடி காட்சியாக ஊடகங்களில் நிறைந்து காணப்பட்ட அசோக் மோச்சியும் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் ஒரே மேடையில் கலந்துகொண்டார்கள்.
பல்வேறு இடதுசாரி அமைப்புகளின் கூட்டமைப்பு கேரள மாநிலம் தளிப்பரம்பில் உள்ள சிரவக்கில் என்ற இடத்தில் “இனப்படுகொலையின் 12 ஆண்டுகள்” என்ற பெயரில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது.
முஸ்லிம் இனப்படுகொலையின் வேட்டைக்காரனுடைய முகமாக உயர்த்திக் காட்டப்பட்ட தலித் இளைஞனான அசோக் மோச்சி மனம் வெதும்பி இறுதியில் சங்க்பரிவாரத்தின் துவேச அரசியலுக்கு எதிராக குரல் எழுப்ப முதன் முதலாக மேடையில் தோன்றியுள்ளார்.
வெறுப்பு அரசியலை வளர்த்தும் சங்க்பரிவாரத்தின் தந்திரங்களை குறித்து இருவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் அபூர்வமான காட்சியை காண ஏராளமானோர் நிகழ்ச்சியில் திரண்டிருந்தனர்.
கலவரத்தின் அக்னிக்கு பதிலாக நேற்று அன்ஸாரிக்கு, மோச்சி சுகந்தம் மிகுந்த ரோஜாப்பூவை வழங்கினார். அன்றும், இன்றும் செருப்பு தைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து வரும் மோச்சி, செலவுகள் தாங்க முடியாததால் திருமணம் கூட செய்யாமல் இருக்கிறார். அவருடைய முகத்தில் பழைய கொடூரம் இன்று இல்லை. புன்சிரிப்புடன் காணப்பட்டார். மோச்சியின் வார்த்தைகளில் அன்பு கலந்திருந்தது. மனிதநேயத்தை விளக்க எந்த மொழியும் தடையில்லை என்று கூறி அன்ஸாரியை கட்டி அனைத்து மோச்சி கூறினார்.
மோச்சி மேலும் கூறும்போது; ‘இனி மேலாவது நாம் வெறுப்பின் அரசியலை நிறுத்தியே தீரவேண்டும். இனப்படுகொலை ஏற்படுத்திய வேதனையால் விழிப்புணர்வு பெற்ற நான் அதன் பிறகு யாருக்கும் வாக்கு அளிக்கவில்லை. எனது மனதில் உள்ள எதிர்ப்பை நான் தெரிவித்தேன். நான் என்னையே கொள்ளையடித்தேன். இனியாவது எனக்கு அதில் இருந்து விடுதலை வேண்டும்.’ என உரக்கக் கூறினார்.
குத்புதீன் அன்ஸாரி பேசும்போது; ‘இது ஒரு மாற்றத்தின் துவக்கமாக அமையட்டும். கேரளாவின் அன்பு தாங்கமுடியாமல் தவிக்கிறேன். குஜராத் இன்று அமைதியாக உள்ளது. காரணம், மோடி பிரதமராக துடிப்பதே. வளர்ச்சியின் மந்திரங்களை அவர் கட்டவிழ்த்து விடுகிறார். அவ்வாறு குஜராத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் எனது மாநிலத்தவரான அசோக் மோச்சிக்கு செருப்பு தைத்து பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்குமா?’ என்று கேள்வி எழுப்பிய அன்ஸாரி தனது உரையில் குஜராத் மோடியின் வளர்ச்சி என்ற மாயையை தோலுத்துக் காட்டினார்.
இந்நிகழ்ச்சியில் ஸஈத் ரூமி எழுதிய ‘நான் குத்புதீன் அன்ஸாரி’ என்ற சுய சரிதை நூல் வெளியிடப்பட்டது. பல்வேறு இடதுசாரி ஆர்வலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நன்றி - http://indru.todayindia.info

ஆப்கான் போர், அமெரிக்கா,மேற்கத்திய நாடுகளின் நலனை பாதுகாக்க:கர்ஸாய் குற்றச்சாட்டு!


ஆப்கான் போர், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நலனை பாதுகாக்கவாகும் என்று அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்ஸாய் குற்றம் சாட்டியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்டிற்கு அளித்த பேட்டியில் கர்ஸாய் கூறியிருப்பது:ஆப்கானை பாதுகாக்கவோ, அங்குள்ள மக்களின் நன்மைக்காகவோ ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்படவில்லை.

மேற்கத்திய நாடுகளின் நலன்களை பாதுகாக்கவும், அமெரிக்காவுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்பட்டது.நான் ஏமாற்றப்படுகிறேனோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு நாட்டிற்கு ஏற்படுத்திய நட்டங்கள் என்னை தனிப்பட்ட ரீதியாக பெருமளவு அலைக்கழித்தது.ஆப்கானில் தாலிபான் மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவ்தை விட பாகிஸ்தானில் உள்ள கிராமங்களையே இலக்காக கொள்ள அமெரிக்கா முயற்சிச் செய்தது.இவ்வாறு கர்ஸாய் கூறினார்.பேட்டியில் அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்த கர்ஸாய், அமெரிக்க அரசுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்றார்.

நன்றி - http://www.thoothuonline.com

உக்ரேனில் நடப்பது என்ன... ?


சிரியாவில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும் கடந்து, கடந்த சில வாரங்களாக உக்ரேன் செய்திகள் உலக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. அமைதியாக இருந்த உக்ரேனில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக என்ன நடக்கின்றது..? ஏன் அங்கு வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்தன..? 

காரணம் ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்று உக்ரேனில் ஒரு பகுதியினர் நடத்திவரும் போராட்டமும் அதற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகளும்தான் இந்த உச்ச வன்முறைக்கும், அந்நாட்டு அதிபரும், பிரதமரும் பதவியைவிட்டோடியுள்ள நிலைக்கும் காரணம்.

சோவியத் ஒன்றியக் கூட்டமைப்புக்குள் இருந்து பிரிந்து தனித்தேசமானதுதான் உக்ரேன். தனித் தேசமானபோதும் அது தமது செ(ர)ல்வாக்குக் கட்டுப்பட்ட தேசமாக இருக்க வேண்டும் என்பது ரஷ்ய ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்து ரஷ்யாவை ஓரங்கட்டிவிடுவதுடன், பொருளாதார நலன்களையும் அடையவேண்டும் என்பது மறுதரப்பின் எதிர்பார்ப்பு. இந்த இரு தரப்புக்கும் இடையில் சிக்கித்திணறுகின்றது உக்ரேன்.


உக்ரேன் நிலைமைகளைப் பார்ப்பதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியம் குறித்துச் சற்று மேலோட்டமாகப் பார்ப்போம். 1992ம் ஆண்டு 12 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து அமைத்துக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union அல்லது EU) இப்போது 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு என பொதுவான ஐரோப்பியச் சட்டவிதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களுக்கும் உட்பட்டே அந்த நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். 

அத்துடன், இந்த 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 21 நாடுகள் ‘நோட்டோ’ (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டுப் படையொன்றை அமைப்பதை அடுத்த இலக்காகக்கொண்டு இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒரு பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவருவதாக இந்த படையமைப்பு விளங்கும் என்று கருதப்படுகின்றது. அதேவேளை, பொருளாதார ரீதியாகவும் ஒரு பலமிக்க கட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மாற்றமடைந்துவருகின்றது.


உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சீனா, இந்தியா என்ற இரு நாடுகளுக்குள் அடைந்துகிடக்க, இப்போது இன்னொரு மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அதிகமானவர்கள் இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ளடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு (ஒவ்வொரு நாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையில்) தங்கள் நாட்டு உறுப்பினரைத் தெரிவு செய்கின்றனர்.

இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இறுதியாகக் கடந்த ஆண்டு யூலை முதலாம் திகதி இணைந்து கொண்டது குரோசியா. இப்போது இந்த அணியில் தங்கள் நாட்டையும் இணைந்துகொள்ள உக்ரேனின் ஒரு பிரிவினர் முயன்று வருகின்றனர். இதனைவிட துருக்கியும் தம்மை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்குக் கடுமையாக முயன்று வருகின்றது (இதுகுறித்து இன்னொரு தருணத்தில் பார்ப்போம்).

தங்கள் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு உக்ரேனியர்கள் போலந்தை உதாரணமாகக் கூறுகின்றனர். வளங்கள் பல இருந்தும், உக்ரேன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே இந்தச் சரிவில் இருந்து மீள ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் சாய்வதா? அல்லது ரஷ்யாவுடன் ஒண்டிக்கொண்டிருப்பதா என்ற நிலை. தமது நாட்டுக்கு அருகில் உள்ள போலந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்ததன் பின்னர் பெரும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் கூறும் உக்ரேன் எதிர்க்கட்சியினர், தங்கள் நாட்டையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினார்கள்.

ஆனால், உக்ரேன் அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யாவுடன் அதிகம் உறவைக் கொண்டிருக்க விரும்புபவர். தமது நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு எதிரான கொள்கையைக் கொண்டிருப்பவர். எதிர்க்கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் கருத்துக்களை வலியுறுத்தத் தொடங்கியநிலையில்தான், அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யா சென்று அதிபர் விளாடுமீர் புட்டீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, உக்ரேனுக்கு சலுகை விலையில் எரிவாயுவை வழங்குவதுடன், பல பில்லியன் டொலர்களை செலுத்தி உக்ரைன் நிறுவனங்களின் பிணை முறிகளையும் ரஷ்யா கொள்வனவு செய்ய முன்வந்து உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. அத்துடன், அரசு நிறுவனங்களில் சுமார் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டம் ஒன்றை மேற்கொள்வதாகவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது. 

ரஷ்யாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகச் செயற்பாடுகள் பலவற்றில் இருந்து உக்ரேன் விலகிக் கொண்டது. இது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியதுடன் உக்ரேன் இணைவதனை தடுப்பதற்காகவே ரஷ்யா வேண்டுமென்று இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.  

அதிபர் விக்டர் யானுகோவிச்சின் நடவடிக்கையால் கொதிப்படைந்த எதிர்க்கட்சியினர், கடந்த நவம்பர் மாதம் போராட்டத்தில் குதித்தனர். ரஷ்யாவினுடைய உதவியை பெறுவதற்காக உக்ரேனின் நிறுவனங்களையும் வருமான மார்க்கங்களையும் ரஷ்யாவிடம் யனுகோவிச் தாரைவார்த்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளின் தலைவரும் குத்துச்சண்டை வீரருமான விடாலி கிலிட்ஷோகோ, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டவர மொஸ்கோவுடனான பொருளாதார ஒப்பந்தத்தை திரும்பப் பெறுமாறு சிறையில் இருந்தபடியே கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அதிபர் மறுத்துவிட்டார். போராட்டம் தொடர்ந்தது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீன் கடும்கண்டனம் தெரிவித்தார். இதேவேளை, போராட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் விக்டர் யானுகோவிச் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டார். நிலைமையை விளக்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் யானுகோவிச், ‘தேர்தல் மூலம் மக்கள் வாக்களித்தே தாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததாகவும், எதிர்க்கட்சியினர் ஜனநாயகம் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு எதிராக மக்களை திரட்ட அழைப்பு விடுக்கின்றனர். என்னைப் பதவியில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இந்த மோதல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன், போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்பவர்களையும், போராடுபவர்களையும் ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய சட்டங்களையும் நாடாளுமன்றம் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக படையினர் தலைநகரில் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி ஆதாரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் போராட்டம் இன்னும் உத்வேகம் பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைய வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தியும் புதிய போராட்டத்தை மேற்கொண்ட அவர்கள், அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலகக்கோரியும் தலைநகர் கீவில் குவியத் தொடங்கினார்கள். இதேவேளை, தலைநகர் கீவில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது.

அதேவேளை, ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மர்க்கலுடன், அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமைகள் குறித்து ஆலோசித்தார். இதேவேளை, அதிபர் யானுகோவிச்சிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடோன், ‘எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை காலம் தாழ்த்தாமல் அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டு வருமாறும், தற்போது அவசர நிலையை பிரகடனப்படுத்தினால் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்தார்.

இதேவேளை, போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், போராட்டத்தைத் தணிக்க போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிபரின் நிபந்தனைகளை எதிர்க்கட்சி நிராகரித்து விட்டது. அதிபர் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் எதிர்க்கட்சி அறிவித்தது. இதனால், உக்ரேன் பிரதமர் மிகோலா அகாரோ தனது பதவியைவிட்டு விலகினார். அதிபர் தொடர்ந்து பதவி வகித்துவந்தார். அதிபர் யானுகோவிச் பதவி விலக வேண்டும் அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்த போராட்டம், கடந்த 17ம் திகதி திங்களன்று மோசமடைந்தது. 

கலவரத்தை அடக்க நடந்த மோதலில் சிலர் கொல்லப்பட்டதையடுத்து, மறுநாள் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கில் குவிந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மறுநாள் புதன்கிழமை வரை தொடர்ந்த வன்முறையில் சுமார் 75 பேர் வரை கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் காயங்களுக்கு உள்ளானார்கள். கொல்லப்பட்டவர்களில் 7 காவல்துறையினரும் அடங்கியிருந்தனர். இருதரப்பிலும் காயமுற்ற 255 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உக்ரேன் வன்முறைகள் உச்சமடைந்ததால், ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்கவும் உடனடியாகத் தலையிட்டன. உக்ரேன் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்தது. கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு இந்தத் தடை கொண்டுவரப்பட்டது. இந்தத் தடையில் மருத்துவ உதவிகள், காயமடைந்தவர்கள் மற்றும் அரசு அதிருப்தியாளர்களுக்கு விசா வழங்குதல் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தலைநகரில் இருந்து படையினரை விலக்கிக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. அரசாங்கமும் மற்றும் எதிர்கட்சியினர் பேச்சுவார்த்தையை நடத்தி வன்முறைகளை நிறுத்தத் தவறிய நிலையில் இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேவேளை, அமெரிக்காவும் இதில் தலையிட்டது. இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்கள் உக்ரேன் ஆட்சியாளர்கள் எனக் கடுமையாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உக்ரேனில் பெரும்பான்மையான மக்கள் வர்த்தகம், கலாசார பரிமாற்றம் போன்றவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில் ஆர்வமாக உள்ளனர் என்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சில தலைவர்கள் மற்றும் ரஷ்ய அதிபருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேச்சுக்களையும் ஒபாமா நடத்தினார். இதன்போது, உக்ரேனில் வன்முறை நீடிக்காமல் தடுத்து சுமூகமாகத் தீர்வுகாண உரிய முயற்சிகளை எடுக்குமாறு அந்நாட்டுத் தலைவர்களிடம் ஒபமா வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன், உக்ரேனின் 28 அரச அதிகாரிகளுக்கு விசா வழங்கவும் அமெரிக்கா தடை விதித்தது.

இதேவேளை, உக்ரைனில் உள்ள தனது நாட்டுத் தூதரகம் தாற்காலிகமாக மூடப்படுவதாக கனடா அறிவித்தது. அரசு எதிர்ப்பாளர்கள் புகலிடம்தேடி கனடா தூதரகத்தில் நுழைய முயன்றதையடுத்து கடந்த 20ம் திகதி வியாழக்கிழமை இந்த முடிவை அந்த நாடு எடுத்துள்ளது. கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் கூறுகையில், உக்ரேனில் நிகழும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். யானுகோவிச் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். உக்ரேனில் சுமார் ஒன்றேகால் இலட்சம் கனடா நாட்டினர் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உக்ரேனில் நிகழ்ந்து வரும் விரும்பத்தகாத அனைத்து சம்பவங்களுக்கும் கிளர்ச்சியாளர்களே பொறுப்பு என்று குற்றம்சாட்டிய ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெல்கோவ்,  இந்த விவகாரத்தில் அதிபர் புட்டீனின் கருத்துப்படி ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கியே போராட்டங்கள் நிகழ்வதாகவும்,  ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ரஷ்யா கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃப்ராங் வால்டர் ஸ்டீமினீயரை சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உக்ரேனில் எதிர்க்கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட ஊக்குவிப்பதாக கண்டனம் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறிருக்க, உக்ரேன் எதிர்க்கட்சிகளின் தொடர்போராட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் உக்ரேன் அதிபர், அதிபர் மாளிகையில் இருந்து இரகசியமாகத் தப்பிச் சென்றுள்ளார். நாடாளுமன்ற வாக்கெடுப்பை ஏற்க மறுத்த அவர், தானே அதிபர் பதவியில் நீடிப்பதாகவும், நாடாளுமன்ற நடவடிக்கை அனைத்தும் சட்டவிரோதமானது என்று கூறியதுடன், நாட்டில் தீவிரவாதத்தை தூண்டிவிடும் சமூகவிரோதிகளின் செயல்பாடுகளை ஏற்று எதிலும் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிவிட்டு, பதவி விலகல் கடிததத்தில் கையப்பமிட மறுத்துவிட்டுடே அதிபர் மாளிகையில் இருந்து இரகசியமாக உலங்குவானூர்தியில் தப்பிச்சென்றுள்ளார்.  

விமான நிலையம் ஒன்றில் இருந்து ரஷ்யாவிற்கு தப்பிச்செல்ல இருந்த அதிபரை, படையினர் தடுத்து நிறுத்தியதால், உக்ரேனின் கிழக்குப் பகுதியில் தலைமறைவாகத் தங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. தற்போது இவரைக் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிபர் பங்கேற்காமலேயே நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டிய ஆளுங்கட்சிக்கு ஆதரவான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சபாநாயகரை தேர்வு செய்து அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியை பறித்து தீர்மானம் நிறைவேற்றியதுடன், வருகிற மே 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தனர். எதிர்கட்சித் தலைவியையும் விடுதலை செய்ய நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

இதனையடுத்து மறுநாள் சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவி விடாலி கிலிட்ஷோகோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி உடன்பாட்டில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர், கடந்த 22ம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே இரு தடவைகள் பிரதமாராகப் பதவி வகித்த இவரை, உக்ரேன் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் மே மாதம் தேர்தலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பதவியை ஏற்க இவர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விடுதலை செய்யப்பட்ட உக்ரேன் எதிர்க்கட்சி தலைவி, சுதந்திர சதுக்கத்தில் அதிபருக்கு எதிராகப் போராடிவருபவர்களிடையே பேசியபோது, அதிபர் விக்டர் யனுகோவிச்சின் சர்வாதிகாரம் வீழ்ந்தது. ஜனநாயகம் வென்றது என்று தெரிவித்ததுடன், இந்த இடத்தில் கொலைசெய்யப்பட்ட மக்களுக்கு யார் காரணமோ அவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சூளுரைத்தார்.

எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்நாட்டில் கூட்டாட்சியை நிறுவ வேண்டும் என அமெரிக்கா தற்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.  அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி இதுகுறித்துக் கூறுகையில், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எங்களது குறிக்கோள்களை நெருங்கி வந்துள்ளன. அந்நாட்டு மக்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான கோட்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் அரசு வழிநடத்தப்பட வேண்டியது அவசியம். உக்ரேனில் அமைதியை நிலைநாட்டவும், அரசு நிறுவனங்கள் முறையாகச் செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அந்நாட்டில் வலுவான ஜனநாயகம் மலர ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச அமைப்புகள் மற்றும் எங்கள் கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா உதவும் என்று ஜே கார்னி தெரிவித்தார்.

அமைதியாக இருந்த உக்ரேன் இப்போது ஒரு புயலைச் சந்தித்து ஓய்ந்திருக்கின்றது. இனி உக்ரேன் யார் வசம் செல்லப்போகின்றது என்ற கேள்வியே முக்கியமானது. ஏற்கனவே ரஷ்யத் தலைநகரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுற்றிவளைத்திருக்கின்றன. இதில் உக்ரேனும் சேர்ந்துகொண்டால் ரஷ்யா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்குச் சென்றுவிடும் என்பதால், இந்த இணைவுக்கு ரஷ்யா எதிராகவே இருக்கும் என்பது உறுதியானது. ஆனால், உக்ரேனை இணைப்பதன் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்திவிட முடியும் என்று கருதுபவர்கள் எதிர்க்கட்சியினரை ஆட்சிக்குக் கொண்டுவரவே விரும்புவார்கள். இந்த இரு பகுதியினருக்கும் இடையேயான மோதலில் யார் வெற்றிபெறப்போகின்றார்கள்..? எதிர்வரும் மே மாதமே விடை தெரியும்.

நன்றி: ஈழமுரசு

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...