Saturday 6 April 2013

படங்கள் - ஜெய்லானி Vs பொதுபலசேனா













கிரீஸ் நாட்டு பள்ளிவாசலில் 90 வருடங் களுக்கு பின்னர் தொழுகைக்கு அனுமதி



கிரீஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான தெஸலொனிக்கியில் உள்ள பள்ளிவாசலில் 90 ஆண்டுகளுக்கு பின்னர் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர்.

கொமொடி நகரில் இருந்து வந்த 50 மத்ரசா மாணவர்கள் 111 ஆண்டு பழைமையான தெஸலொனிக்கி பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை தொழுகை நடத்தியுள்ளனர். நகர மேயர் யியனிஸ் புடாரிஸின் ஏற்பாட்டுக்கு அமையவே பல தசாப்தங்களுக்கு பின்னர் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டது சாதகமான முடிவு என கிரீஸ்கான துருக்கி தூதுவர் கெரின் உராஸ் குறிப்பிட்டுள்ளார். “ஏனைய விடயங்களையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக ஏதன்ஸ் நகரும் முஸ்லிம் தொழக்கூடிய இடமாக மாறும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.

தெஸலொனிக்கி பள்ளிவாசல் 1902 ஆம் ஆண்டு இத்தாலி கட்டடக் கலைஞர் ஒருவரால் கட்டப்பட்டது. ஆனால் 1923 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் மூடப்பட்டது. பின்னர் 1925 தொடக்கம் 1963 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த பள்ளிவாசல் நூதனசாலையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இது தெஸலொனிக்கி மாநகர கண்காட்சி மண்டபமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10.7 மில்லியன் சனத்தொகை கொண்ட கிரீஸில் 1.3 வீத முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகில் பள்ளிவாசல் இல்லாத ஒரே தலைநகராக கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் உள்ளது. 1800களின் ஆரம்பப் பகுதியில் உஸ்மானிய அரசின் முடிவுக்கு பின் ஏதன்ஸில் பள்ளிவாசல்கள் செயற்படவில்லை. சுமார் 200,000 முஸ்லிம்கள் ஏதென்ஸில் வசித்த போதும் அவர்கள் நிலவறைகள் மற்றும் தனியார் அறைகளிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஏதென்ஸில் ஜன்னல்கள், காற்றோட்டம் இல்லாத சுமார் 130 தொழுகை நடத்தும் நிலவறைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

எனினும் பழைமைவாத கிறிஸ்தவ திருச்சபைகள், ஏதென்ஸில் மினாரத்தை காண இன்னும் தயார் இல்லை என கூறி வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் கிரீஸில் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2011 ஏதென்ஸில் பெருநாள் தொழுகையை நடத்த முற்பட்ட முஸ்லிம்களுக்கு உள்ளூர் மக்கள் இடையூறு விலைவித்தது குறிப்பிடத்தக்கது. தொழ வந்த முஸ்லிம்களை முட்டையால் தாக்கிய உள்ளூர் குடியிருப்பாளர்கள் வானொலிகளின் சத்தத்தை அதிகரித்து இடையூறு விளைவித்தனர்.

எனினும் ஏதென்ஸ் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலை அமைத்துக் கொடுக்க கிரீஸ் அரசு தற்போது முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும்




சமயத் தூய்மைவாதம், தீவிரவாதம், எளிமை ஆகிய அம்சங்களே வஹாபியத்தின் அடிக்கட்டுமானங்களாகக் கருதப்படுகின்றன. வஹாபியம் சமய உண்மைகளை நேர் பொருளிலேயே விளக்குகின்றது. அக்கொள்கை விளங்குவதற்கும் அதன் பரவுகைக்கும் அது எளிதாக அமைந்தது. இஸ்லாம் எளிமையான மார்க்கம் என்பதை இப்பின்புலத்திலேயே அது விளக்கியது. சமய உண்மைகளுக்கு தமது நோக்கில் விளக்கமளிப்பதற்கும் சிலவற்றை சமயத்திற்கு எதிரானவை என்று நிராகரிப்பதற்கும் எளிமைக் கொள்கை அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இது பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் அவர்களுக்கு வெளியிலும் ஓர் உளவியல் யுத்தமாக மாறியது.


சமயத்தை நேருக்கு நேராகவும் எளிமையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வஹாபிகளின் இறுக்கமான கோரிக்கை செமித்திய மதங்களின் பண்பாடுகளின் பின்புலத்திலிருந்தே நாம் நோக்க வேண்டும். எல்லா உண்மைகளையும் அர்த்தங்களையும் எளிமையாகக் காண்பதில் வஹாபிகள் பிடிவாதமாக இருந்தனர். அதனால் இஸ்லாமிய புனிதப் பிரதிகளின் தர்க்கவியல், தத்துவம், உருவகம், மொழி அழகியல், குறியீடு போன்றவற்றால் வஹாபிகள் சினமூட்டப்பட்டனர். ‘தூய இஸ்லாத்தின் பக்கம் திரும்புங்கள்’ என்பதே வஹாபிகளின் சர்வதேச அழைப்பாகும். ஆனாலும் வஹாபியம் வேறுபல கூறுகளையும் சமாச்சாரங்களையும் தன்னகத்தை கொண்டுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அதில் அரபுத் தேசியவாதமும் ஒன்றாகும். அரபுத் தேசங்களில் பரவிய துருக்கிய, பாரசீக ஆதிக்கத்தையும் அவர்களின் சமயக் கொள்கைகளையும் மறுவாசிப்புக்களையும் முற்றாக எதிர்த்தது. இவற்றுக்கு எதிராக அரபு மண்ணில் எழுந்த அரபிஸத்திற்கு வஹாபியம் உறுதுணையாக இருந்தது. அரபு மண்ணிலிருந்து துருக்கியை வெளியேற்றியதில் வஹாபியத்திற்கு நேரடியான பங்கிருந்தது.

வஹாபிய எழுச்சி ஐக்கிய அரபுத் தேசத்தையும் அரபு மைய அதிகாரத்தையும் வலுப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் நிலைத்து வாழ்ந்தோரும் அசையும் நாடோடிச் சமூகங்களுக்குமிடையில் எழுந்த முரண்பாடுகளையும் மோதுகைகளையும் அழித்தொழிப்பதில் வஹாபிய இயக்கம் வெற்றிபெற்றுள்ளது. வஹாபியத்தின் எழுச்சி ஒரு தற்செயல் நிகழ்வோ, சமயத்தை மட்டும் இலக்காக்க் கொண்டதோ அல்ல. ஏறத்தாழ 300 ஆண்டுகள் நஜ்த் பிராந்தியத்தில் ஏற்பட்டுவந்த சமூக, அரசியல் மோதுகைகளின் விளைவுகளிலேயே இதன் தோற்றமும் வளர்ச்சியும் இடம்பெறுகின்றது. அசையும் நாடோடிச் சமூகங்களுக்கு எதிராக நிலைத்து வாழ்வோர் அணிதிரண்டு போராடியதே வஹாபிய வரலாறாகும். பொருளாதார நெருக்கடி, விவசாயப் பிரச்சினைகள், சமயப் பண்பாட்டு நெருக்கடிகள் யாவும் வஹாபியப் போராட்டத்தில் கலந்திருந்தன.

நிலைத்து வாழ்வோரின் நகரமயமாக்கமும் நகர்ப்புற நாகரிக அபிலாஷைகளும் வஹாபிய சமயத் தூய்மைவாதத்துடன் முரண்பட்டு நின்றன. உலமாக்களின் தீவிரப் போக்கும் அசையும் நாடோடிகளின் கிராமிய மனப்பாங்கும் வஹாபியத்துக்குள் உள்முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. வஹாபியத் தூய்மைவாதம் பிற்போக்கிற்கு இட்டுச் செல்லும் இறுக்கமான சமயக்கட்டுப்பாடுள்ள வாழ்க்கைக்கு இஸ்லாத்தைப் போதிக்க தயாராக இருந்தது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றகர யுகத்தில் பின்னோக்கிச் செல்லும் உத்தியின் மூலமே சமயத்தில் உறுதிப்பாட்டைத் தோற்றுவிக்கலாம் என்பதை வஹாபியம் உறுதியாக நம்பியது.

ஆனால் இதற்கு எதிரான நிலைப்பாடு வஹாபியத்தின் உட்கட்டமைப்பிலிருந்தே உருவாகியது. நிலைத்து வாழ்வோரின் நாகரிக உணர்வு வஹாபியத்தில் வெற்றிகண்டதை 1929 இல் அப்துல் அஸீஸின் படைகள் வெற்றிபெற்றதில் அவதானிக்கலாம். சமூகக் கட்டமைப்பிலும் கருத்தியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தாது புதிய நாகரிக உற்பத்திகளை நுகர்வதற்கு வஹாபிய சஊதி அரசு தயாராக இருந்தது. இதற்கு வஹாபிய சமயத் தூய்மைவாதிகள் எதிர்ப்புக்காட்டினர். ஆகாயவிமானத்தையும் தெலைபேசியையும் இவர்கள் பித்அத் பட்டியலில் இணைத்த அபத்தங்கள் அங்கே நிகழ்ந்தன. பித்அத்துக்கு அவர்கள் வழங்கிய விளக்கங்கள் அதன் எல்லைகளையும் தாண்டிச் சென்று சமூக நடவடிக்கைகளிலும் மானிட முன்னேற்றங்களிலும் நவீனத்துவ நோக்குகளிலும் தலையிட்டது. வஹாபியத்துக்குள்ளே தோன்றிய முன்னேற்றத்திற்கெதிரான சக்திகளுடன் வஹாபியமே போராட வேண்டியிருந்தது.
விஞ்ஞானத் தொழில்நுட்பக் கல்வியையும் அது உருவாக்கிக் கொடுக்கும் கருவிகளையும் வஹாபிய தீவிரவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இசைக்கும் அழகியலுக்கும் எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அரபு நாடோடித்துவ பிற்போக்கு யுகத்திற்கேற்ற கோட்பாடாக இஸ்லாத்தை அவர்கள் உருவகித்துக் காட்டினர். கவினுறு கலைகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மெய்யியல், சமூகவியல், விளிம்புநிலை மக்களுக்கான இடம் உட்பட பல்வேறு துறைகளையும் கொண்ட இஸ்லாத்தின் பரந்த நாகரிக மரபுகள் ஒதுக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படுவதையும் வஹாபிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சமாதிகளையும் கபுறுகளையும் சுவடே தெரியாமல் அழித்தொழிப்பதில் வஹாபிகள் கட்டற்ற தீவிரவாதத்தை வெளிப்படுத்தினர். பதினாலு நூற்றாண்டுகால இஸ்லாத்தின் பண்பாடுகளையும் நாகரிக எச்சங்களையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு சிலவற்றையாவது விட்டுவைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் இணங்க மறுத்தனர். 1800 களின் ஆரம்பத்தில் நபிகளின் சமாதி மண்டபத்தை உடைப்பதற்கு அவர்கள் முடிவெடுத்த போது அதற்கெதிராக உலக முஸ்லிம்கள் எதிர்ப்புக்காட்டினர். 1920 களில் மீண்டும் உடைப்பதற்கு முயற்சித்த போது இந்தியாவின் கிலாபத் இயக்கம் அதனைக் கடுமையாகக் கண்டித்தது. 1950 களில் இந்திய இஸ்லாமிய அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி, இஸ்லாமிய மரபுச் சின்னங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

சமாதிகளிலும் கபுறுகளிலும் நடாத்தப்பட்ட அனாச்சாரங்களையும் மூட நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துவதிலும் இல்லாதொழிப்பதிலும் வஹாபிகள் உண்மையில் ஒரு முற்போக்கான பங்கை ஆற்றினர். போலி அவுலியா வழிபாட்டினால் வளர்ந்த மௌட்டீகம் இஸ்லாத்தினை எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. மத்ஹபுகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டிருந்த முஸ்லிம் உலகை அவர்கள் விடுதலை செய்தனர். கண்மூடிப் பின்பற்றுவதை கைவிடுமாறு அழைப்பு விடுத்தனர். ஒரு முஸ்லிம் எந்தவொரு விடயத்தைப் பேசினாலும் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்பதை வலியுறுத்தினர். இஜ்திஹாதுக்கு தனிநபர் சுதந்திர சமயத்தீர்ப்புக்கு இடமுண்டு என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் இவை மத்ஹபு வாதிகளின் கடும்போக்கிற்கு எதிராக அமைந்த போதிலும் நவீன உலகிற்கு ஏற்றவாறு இஸ்லாத்தை விளக்கும் பணியில் அவர்கள் பங்காற்றவில்லை என்பது முக்கியமாகும்.

ஆனால் முஸ்லிம்களையே முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டுபோய் நிறுத்துவதற்கும் தூய இஸ்லாத்தை கடைப்பிடிக்க வில்லை என்ற உளவியல் யுத்தத்தை இன்றுவரை நடத்திக் கொண்டிருப்பதற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்தொழித்து வரலாறற்ற சமூகங்களாக அவர்களை மாற்றுவதிலும் வஹாபிகளுக்கு மகத்தான பங்குண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஹம்மத் பின் சுஊதின் அரசியல் அபிலாஷைகளுக்கும் அப்துல் வஹாபின் சமயத் தூய்மைவாத மறுமலர்ச்சித் திட்டங்களுக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கைகளும் ஒத்துழைப்புக்களின் ஊடாகவே இவை அனைத்தும் நடந்தேறின. எண்ணைவளக் கண்டுபிடிப்பும் செல்வப் பெருக்கமும் நவீனத்துவத்துடன் அரேபியா இணைவதை துரிதப்படுத்தின. விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுக்காகவும் உலக வர்த்தகத்தில் பங்குகொள்வதற்காகவும் சஊதி பிரித்தானியாவையும் அமெரிக்காவையும் நாடவேண்டி இருந்தது. மன்னர் சுஊதுக்குப் பின்னர் அப்துல் அஸீஸ், பைசல், பஹ்த் என மன்னராட்சியும் தொடர்ந்து வந்தது. இவர்கள் தாராளவாத கொள்கையை அனுஷ்டித்ததுடன் நாட்டை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தனர். சர்வதேச சட்டங்களிலும் வர்த்தக ஒழுங்குகளிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் ஷரிஆச் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குற்றவியல், சிவில், தனிநபர் சட்டங்களில் மாற்றங்களைச் செய்யவில்லை. இப்னு தைமியாவின் சிந்தனைகளும் ஹன்பலி சட்டவியலும் தான் அப்துல் வஹாப் அவர்களை சமயத்தூய்மைவாதத்தை நோக்கி ஆழமாக வழிநடாத்தியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் இவர் பிறந்த நஜ்த் பிரதேசத்தில் ஹன்பலி சட்டமரபு காணப்பட்டமையும் அம்மரபையே அவர் ஆரம்பக் கல்வியாகப் பெற்றமையும் இதற்கான பின்புலமாகும். ஹன்பலி மத்ஹபு தனியார் சட்டங்களில் ஏனைய முஸ்லிம் சட்டப்பள்ளிகளைவிட மிகவும் பழமைவாத தன்மை கொண்டதாக இருந்தது.

இதே காலப்பிரிவில் இலங்கையிலும் மற்றெல்லா சமூகங்களையும் போல இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சிக்கான முன்னெடுப்புக்களும் போராட்டங்களும் மேற்கிளம்புவதை அவதானிக்கலாம். மேற்கத்திய காலனித்துவ அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கோடு இலங்கை முஸ்லிம் சமூகம் பல படிநிலைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொள்கின்றது. இஸ்லாமியச் சூழலில் மேற்கத்திய கல்விமுறையை முஸ்லிம் பண்பாட்டுக்குள் உள்ளீர்க்கின்ற பணியை அறிஞர் சித்தி லெவ்வை மேற்கொள்கின்ற அதேவேளை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இஸ்லாமிய சமய பண்பாட்டுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டு புதிய யுகத்திற்கேற்றவாறு இலங்கையின் பல்பண்பாடுகளையும் அனுசரித்த நிலையில் மத்ரஸாக் கல்வி முறையைத் தோற்றுவிக்கின்றார். 19 ஆம் நூற்றாண்டில் மேற்குக் கரையில் தோன்றிய இக்கலாசாலைகள் 1950 களுக்குப் பின் கிழக்குப் பகுதியிலும் பரவ ஆரம்பிக்கின்றன. இஸ்லாமிய பாரம்பரிய கலாநிலையங்களில் கற்று வெளியேறிய ஆலிம்கள் அல்குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரு துறைகளோடு மட்டும் தமது பயில்வை சுருக்கிக் கொள்ளாது பதினான்கு நூற்றாண்டுகளாக தோன்றிய பல துறைகளையும் கற்றவர்களாக வெளியேறினர். இதனால் இலங்கையில் வாழ்ந்த ஏனைய பண்பாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் எழா வண்ணம் சகவாழ்வுப் போக்கிலேயே தமது சமய சிந்தனைகளை முன்வைத்து வந்தனர்.

ஆனால் ஐம்பதுகளுக்குப் பின் மத்திய கிழக்கில் தோன்றிய எண்ணெய்வளப் புரட்சியும் செல்வப் பெருக்கமும் காலனித்துவத்திற்கு நீண்டகாலம் உட்பட்டு சுரண்டப்பட்ட இலங்கையிலிருந்து ஆன்மீகம், கல்வி, பொருளாதாரம் இன்னபிற தேவைகளுக்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணிக்கும் நிலை ஏற்படுகின்றது. மத்திய கிழக்கில் தோன்றிய வஹாபிய மறுமலர்ச்சிச் சிந்தனையும் அதில் இழையோடும் இஸ்லாமியத் தூய்மைவாதமும் இலங்கை சமூகத்திற்குள்ளும் படிப்படியாகக் கடத்தப்படுகின்றது. யாரை ஒன்றிணைத்தாலும் ஆலிம்களை ஒன்றிணைக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு சூழலில் ரியால் மௌலவி போன்ற ஒரு சில ஆலிம்களின் அர்ப்பணிப்புக்களின் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் செல்வாக்குப் பெற்ற சிவில் அமைப்பாக உலமா சபை உருவாகின்றது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே தனக்கான காரியாலயத்தை கொழும்பில் அமைத்துக் கொண்ட அது, அதற்கு முன்னர் ரியால் மௌலவி அவர்களின் கைப்பையிலேயே இயங்கி வந்தது இங்கு குறிப்பிட வேண்டிய வரலாற்றுண்மையாகும். அந்தளவு பல தியாகங்களுக்கு மத்தியில் மத்ரஸாக்களில் எட்டு வருடங்களை கழித்துவிட்டு வெளியேறுகின்ற மௌலவிமார்களின் மேலதிகக் கல்வி, தொழில் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இலங்கை உலமா சபை கணிசமான பங்களிப்பை வழங்கியதை யாரும் மறுக்கமுடியாது. அல் ஆலிம் பாடத்திட்டம், இலங்கை பாடசாலையின் இஸ்லாம், அரபு கலைத்திட்டம் போன்றவற்றோடு முஸ்லிம்களின் தொழுகை நேரசூசி, பெருநாட்கள், பிறை விவகாரம் போன்ற பண்பாட்டு விடயங்களில் தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் அது மிகவும் கரிசனை கொண்டிருந்தது.

ஆனால் இலங்கையின் அரசியல்வாதிகளும் முஸ்லிம் வர்த்தக மேட்டுக்குடிகளும் விடுத்த சவால்களைவிடவும் இலங்கையில் உருவாகிய வஹாபிய சக்திகள் உலமா சபையை பலவீனப் படுத்துவதில் பல அந்தர் பெல்டிகளை அடித்துள்ளனர். பன்முகத் தன்மையான பல்பண்பாடுகள், பல் மொழிகள், பல்வகைச் சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தட்டையான, ஒருதலைப்பட்சமான போக்கிலேயே அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதில் வஹாபிகள் உறுதியாக இருந்து வந்துள்ளனர். இன்றும் கூட பொதுபல சேன குறிவைத்திருப்பது வஹாபிஸத்தையே அன்றி உலமா சபையை அல்ல. ஆனால் துரதிஸ்ட வசமாக குறிவைக்கப்பட்டவர்கள் உலமா சபைக்கு வெளியிலேயே நிற்கின்றனர். இந்த இரண்டக நிலையை நாம் விளங்கிக் கொள்வது மிகவும் முக்கியமாகும். இன்று உலமா சபைக்கு வஹாபிய முகமூடி அணிவிக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வஹாபியம் வேறு இலங்கை பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை மரபு வேறு என்பதை பொதுக்களத்தில் வெளிப்படுத்துவதில் உலமா சபை பின் நின்றதாலும் அண்மையில் இன, மத பேதமில்லாது எதிர்க்கப்பட்ட ரிசானா விவகாரத்தில் உலமா சபை காத்த மௌனமும் எவ்வளவு பேராபத்தில் அவர்களைச் சிக்கவைத்திருக்கிறது என்பதை இன்னும் அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. குனூத், தொப்பி, விரலாட்டுதல், தராவீஹ் என எண்ணற்ற மார்க்கத்தின் கிளைப் பிரச்சினைகளில் சொல்லொண்ணா நெருக்கடிகளை இலங்கை முழுவதும் உருவாக்கி, பள்ளிவாயல்களையும் பிரித்து தனியான பள்ளிவாயல்களையும் உருவாக்கி பொலிஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று முஸ்லிம்களை கைகட்டி, வாய்பொத்தி நிற்கவைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்திய துர்ப்பாக்கியமான சூழ்நிலையை உருவாக்கிய வஹாபிய தூய்மைவாதத்தை மிகச்சரியாக இனங்கண்டு உலமா சபை எதிர்வினையாற்றவுமில்லை. அவர்களை அறியாமலேயே வஹாபியத்தின் தூய்மைவாத நோக்குமுறைக்குள் அவர்களை உட்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ ஹராம்-ஹலால் தூய்மைவாதம் இந்த வரலாற்றுப் போக்கில் அறியாமல் உள்வாங்கப்பட்டதே. நீண்டகாலமாக முஸ்லிம் புலமைத்துவ வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்த கருத்தாக்கமாக அது இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை நீண்டகால நோக்கில் சிக்கல்கள் எழாதவாறு அமைக்கப்பட்டிருக்கும்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக உலக விவகாரங்களிலே கிஞ்சிற்றும் அக்கறை செலுத்தாத பள்ளிவாசலுக்குள் உலக விவகாரங்களைப் பேசினாலே நாற்பது நாள் செய்த அமல் போய்விடும் என்று கடைசி வரைக்கும் சொல்லிக் கொண்டு செயல்வாதிகளாக இருந்த தப்லீக் இயக்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்னால் உலமா சபையை கைப்பற்றுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. இதுவும் கூட வரலாற்றுப் போக்கில் வஹாபியம் கொடுத்த அழுத்தம் காரணமாக தன்னைத் தக்கவைப்பதற்கு தப்லீக் தேடிக்கொண்ட புகலிடமாக உலமாசபை மாறுகின்றது. அப்போதுதான் அவர்கள் தம்முடைய நிகழ்ச்சி நிரலில் இல்லாத இலங்கை முஸ்லிம்கள் அரசியல், பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு முகம்கொடுக்க ஆரம்பிக்கின்றனர். அதற்குரிய முதிர்ச்சியும் அதனிடம் இருக்கவில்லை. பொதுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநித்துவப்படுத்தும் உலமா சபைக்கு அத்தகைய புலமைச் சாகித்தியம் கொண்ட தலைமையே பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் பல்பண்பாட்டை புரிந்து கொண்ட ஆலிம்சாக்களை கணிசமாகக் கொண்டிருந்த ஒரு சூழலில் தெளிவில்லாத ஆலிம்கள் வந்தமரக்கூடிய இடமாக உலமா சபை மாறியமை இஸ்லாமிய புலமைத்துவத்தின் கையறு நிலையையும் நீண்டகாலமாக முஸ்லிம்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வஹாபிய பிசாசின் பித்தலாட்டமுமே காரணம் என்பதை வரலாறு நிறூபித்துக் கொண்டிருக்கிறது. ஆழமான இஸ்லாமிய புலமைத்துவவாதிகள் உலமா சபைக்கு வெளியே இருப்பது மட்டுமல்ல இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கும் வெளியேதான் இருக்கிறார்கள். இலங்கை அனுபவத்தில் பெரிய இஸ்லாமிய புலமைத்துவவாதிகளை திட்டமிட்டு உருவாக்கிய வரலாறுகளும் இல்லை. அவர்களாக சுயமாக வாசித்து பல்வேறு அனுபவ பட்டறிவுகளுடன் உருவாகிக் கொண்டால்தான். இறுக்கமான இயக்க கட்டமைப்புகளும் ஆழமான இஸ்லாமிய புத்திஜீவிகளை உள்வாங்கிக் கொள்வதற்கான நெகிழ்வுத்தன்மைகளும் இல்லாதிருப்பதே இதற்கான காரணமாகும்.

கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக தொடங்கப்பட்ட முஸ்லிம் அரசியல் இயக்கம் எவ்வாறு மேற்கில் பெருந்தேசிய வாதங்களுடன் அல்லது முஸ்லிம் மேட்டுக்குடி வர்த்தக சமூகங்களுடன் சராணகதி அடைந்ததோ அதே போன்றுதான் இலங்கை முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக் கட்டுக்கோப்பையும் பல்பாண்டுகளுக்கு மத்தியில் சகவாழ்வை மேற்கொள்வதற்கான காலத்துக்கேற்ற சமய சிந்தனைகளையும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய இலங்கை உலமா சபை தொடர்ந்தும் மேற்குப் பகுதி ஆலிம்களாலேயே இதுவரை வழிநடாத்தப்படுகின்றது. இஸ்லாமிய யுத்த தர்மங்களையே ஒட்டுமொத்தமாக மறந்து கிழக்கில் என்னதான் இழப்புக்கள் இருந்தாலும் தொப்புள்கொடி உறவாக இருந்த தமிழ்-முஸ்லிம் உறவை அறுத்தெறியும் நடவடிக்கையாகவே உலமா சபை ஜெனீவா சென்று வக்காலத்து வாங்கியதையும் அதற்குப் பின்னால் இருக்கும் சமய சந்தர்ப்பவாத அரசியலையும் ஒதுக்கிவிட்டு எவ்வாறு பார்க்க முடியும்? இலங்கை முஸ்லிம்களின் மற்ற சமூகங்களின் எல்லா விடயங்களிலும் தொடர்ச்சியான ஊடாட்டம் இருந்து ஒரு முடிவை எடுப்பதற்கும் சிறுபான்மைச் சமூகத்தை பிரதிநித்துவம் செய்கின்ற உலமாசபை போன்ற அமைப்பு திடீரென ஒரு தரப்புக்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

இன்று உலக அளவில் நடைபெற்று வரும் மாற்றங்களை விளங்கிக் கொள்வதிலும் உலமா சபை பின்னுக்குத்தான் நிற்கின்றது. இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வல்லரசு சக்திகளுக்கு மத்தியில் ஒரு அதிகாரப் போட்டிக்குரிய களமாக எவ்வாறு மாறிவருகிறது என்பதை புரிந்து கொள்ளவில்லை. சீனப் பொருளாதாரம், சீன-இலங்கை சமயத் தொடர்புகள், பௌத்த சமூகங்களுக்கு மத்தியில் அது உருவாக்கி வரும் சமயவாதங்கள் குறித்த விரிவான புரிதலுக்குரிய தளங்களையோ, வாதவிவாதங்களையோ, அவற்றுக்குரிய புத்திஜீவித்துவ மட்டங்களையோ இதுவரை உலமா சபை உருவாக்கிக் கொள்ளவுமில்லை.

இலங்கையின் மத்ரஸா வரலாறு கூட குறிப்பிட்ட இயக்கங்களின் சிந்தனைகளை விரிவாக்கம் செய்வதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மை புரியப்பட்டு பொதுத் தளத்திற்கான இஸ்லாமிய மத்ரஸா கலைத்திட்டத்தை உருவாக்கும் பணியிலோ அவற்றைப் பயில்நிலைக்கு கொண்டுவரும் நிலையிலோ இதுவரை உலமா சபை இயங்கவில்லை. உலமா சபையின் தலைமை மட்டுமல்ல, அதன் நிருவாகக் கட்டமைப்பு இலங்கையின் பல பாகங்களையும் உள்ளடக்கியதாக தகைமை, தலைமைக் காலம் வரையறுக்கப்பட்டு ஆலிம்களின் வாக்கெடுப்புக்கள் பரிந்துரைகளுக்கு மத்தியில் தெரிவு செய்யப்படும் நிலையும் இதுவரை காணப்படவில்லை. உலமா சபை இலங்கை முஸ்லிம்களின் மிகவும் பொறுப்புவாய்ந்த சிவில் சமூகக் கட்டமைப்பு என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அல்லது நகர்ப்புற மேட்டுக்குடி வலதுசாரி உலமாக்களின் ஆடுகளமாக மாறிவிடக்கூடாது.

இந்த ஹலால் கருத்தியலைக்கூட இதுவரை மிகச்சரியாக முன்வைத்து உரையாடவில்லை என்பதுதான் உண்மை. மனித ஆரோக்கியத்திற்கான இஸ்லாமிய கோட்பாடுதான் ஹலால் என்பது. அதை வைத்து பிழைப்பு நடத்துகின்ற ஒரு கும்பலை இஸ்லாத்தின் பெயரால் உருவாக்குவது நீண்டகாலத்தில் எத்தகைய துஸ்பிரயோகங்களை உருவாக்கிக் கொடுக்கும் என்பது ஒருபுறமிருந்தாலும் போர் முடிவுற்று நான்காண்டுகளுக்குப் பிறகும் அடுத்த சிறுபான்மையான முஸ்லிம்களை கருவறுக்க காத்திருக்கும் ஒரு சூழ்நிலையில் நாம் அறியாமல் உள்வாங்கி இருக்கும் வஹாபியத் தூய்மைவாதம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் காவுகொள்கின்ற நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதே தற்போதைய இலங்கை நிலவரமாகும். நிருவாகக் கட்டமைப்பில், ராணுவத்தில், ஊடகத்துறையில், கல்வியில் உறுதியாக கால்பதித்திருக்கும் பெருந்தேசியவாத வர்க்கங்கள் அடுத்து முன்னேற துடியாய்த் துடிப்பது பொருளாதாரமே. அந்தப் பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் ஹலால் தூய்மைவாதத்தை தூக்கி எறிவதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள்.

ஒரு குறித்த காலத்தில் ஆட்சியிலிருக்கும் அரசையோ அரசியல்வாதிகளையோ மட்டும் உலமா சபை இன்னும் நம்பி ஹலால் தொடர்பான கணக்கறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்க முடியாது. அது நீண்டகாலத்தில் சாதகமான முடிவையே தரும் என எதிர்பார்க்கவும் முடியாது. பொதுவாக போர் முடிந்துவிட்டாலும் இனத்துவ அரசியலும் பௌத்தமயமாக்கலும் காணப்படுவதால் ஹலால் தூய்மை வாதத்தை ஒரு நிறுவன முறையாக தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான சாத்தியமான வழிகளை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. ஹலால் விவகாரம் முடிவதோடு பிரச்சினை முடிந்துவிடும் என்பதல்ல. அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய தூய்மைவாத இலக்குகள் குறித்தும் அழுத்தங்கள் வரலாம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

நூற்றாண்டு காலமாக பல்பண்பாடுகளுடன் புளங்கிய சோனக முஸ்லிம் பண்பாட்டு வெளியின் முகம் திடீரென மாற்றமடைவதையும் இங்கு கவனப்படுத்த வேண்டியுள்ளது. உடல் மொழி, தொப்பி, நீண்ட தாடி, நீண்ட அங்கி, கறுப்பு ஹிஜாப், முகத்திரை, கையுறை, புதிய பள்ளிவாயல் என தடாலடியாக மாற்றியமைக்கப்பட்டு வரும் முஸ்லிம் பண்பாட்டு வெளி பெரும்பான்மை சமூகங்களின் மனத்தில் பேரச்சத்தை உருவாக்கி வருகிறது. அடையாளத்தையும் தூய்மைவாதத்தையும் அளவுக்கதிகமாக தூக்கிப்பிடிக்கும் போது மற்றமைகள் வெறுக்கப்படுவதும் மிரள்வதும் இயல்பே. இது பெருந்தேசிய குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதற்கு ஏதுவாகவும் அமைந்துவிடுகிறது. எந்தவொரு செயல்திட்டத்திலும் மக்கள் பங்கேற்பும் அரச ஆதரவும் இருப்பதே விவேகமானது. இல்லாவிட்டால் அது ஒரு குழுசார்பானதாக மாறிவிடும். உணர்ச்சிகரமான நிலையில் வஹாபியத் தூய்மைவாதத்திற்குச் செல்லாமல் மற்றமைகளையும் கருத்திற்கொண்டு செயற்படுவதே பொருத்தமானது. மேலும் மேலும் முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்துவதற்கான தூய்மைவாத இலக்குகளைப் பற்றி ஆராயாமல் மற்றமைகளுடன் கலந்து ஊடாடி பண்பாட்டு புரிதலை உருவாக்குவதே எதிர்காலத்தில் ஆரோக்கியமானது.
நன்றி - http://idrees.lk

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...