Saturday 28 July 2012

துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு நீதிபதி பொலிஸாரைப் பணித்தார் : ஜம்இயத்துல் உலமா சபை

மன்னாரில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மன்னர் நீதிபதி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உப்புக்குளம் மீனவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளுமாறு பொலிஸாரைப் பணித்தார் என்று அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் மன்னார் மாவட்டக் கிளை குற்றம் சுமத்தியுள்ளது .

அது வெளியிட்டுள்ள அதன் ஊடக அறிக்கை ஒன்றில் நீதிமன்றிலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியே வந்த மன்னார் நீதிபதி அவர்கள் எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர் மக்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர் என்று தெரிவித்துள்ளது .

இது குறித்து குறித்த உலாமா சபை கடந்த 24-07-2012 திகதியிடப்பட்ட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கில் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த எமது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் விரட்டப்பட்டு 23 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மீள்குடியேற வருகின்றனர். இந்த நிலையில் எமது மக்கள் பல்தேவைப்பாடுகள் உடையவர்களாக இருந்துவருகின்றனர். குறிப்பாக கடற்றொழிலைப் பிரதான தொழிலாகக் கொண்டவர்களாக மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் இருக்கின்றனர். இவ்வாறான நிலையிலும்,விடத்தல்தீவிலிருந்து வந்த தமிழ் கத்தோலிக்க மீனவர்களுக்கு எமது முஸ்லிம்களின் மீனவ துறையினை மனிதாபிமானத்தின் அடிப்படையில் தொழில் புரிவதற்கு சந்தர்ப்பம் வழங்கினோம்.

எமது முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேறும் போது இவர்கள் இவ்விடத்திலிருந்து செல்ல வேண்டும் என்று அன்று புலிகளின் மன்னார் பொறுப்பாளராக இருந்த அமுதன் என்பவரால் உடன்படிக்கையும் செய்யப்பட்டது.

இருந்த போதும் இன்று வரை இந்த விடத்தில் தீவு கத்தோலிக்க மீனவர்கள் எமது முஸ்லிம் மீனவ சமூகத்திற்கு சொந்தமான உப்புக்குளம் துறையினைக் கொடுக்காமல் இருக்கின்றனர். அரச அதிகாரிகள் உட்பட தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்து இவர்களிடம் கூறியும் அது நடைபெறவில்லை;.

எமது உரிமைகள் பறிக்கப்படும் போது இந்த ஜனநாயக நாட்டில் மக்கள் நியாயம் கோரி பல தரப்பினரிடம் வேண்டுகோள்விடுத்த போதும் ,அது காத்திரமான பதிலை கொடுக்கவில்லை. அதனால் வேதனையடைந்த எமது மக்கள் வீதியில் இறங்கி மிகவும் அமைதியாக எவ்வித வன்முறைகளுமின்றி தமது கோரிக்கையினை முன்வைத்தனர் .இதன்போது நீதிமன்றிலிருந்து தமது உத்தியோகபூர்வ ஆடையுடன் வெளியே வந்த மன்னார் நீதிபதி அவர்கள், எமது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறு பொலிஸாரைப் பணித்ததன் பின்னர்,மக்கள் அல்லோலகல்லோலப்பட்ட நிலையில் சில அசம்பாவிதங்களில் ஈடுபட்டனர். இது எமது மக்களால் திட்டமிடப்பட்ட முறையில் முன்னெடுக்கப்பட்டதொன்றல்ல. அப்போது நீதிமன்ற கட்டிடத்துக்கும் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதை அறிய முடிந்தது. இந்த சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தவறு செய்தவர்களுக்கு சட்டம் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் மாற்றுக் கருத்துடன் இல்லை.

அதே போன்று மன்னாரில் நடந்த சம்பவத்தை திரிபுபடுத்தி இந்த சம்பவத்தின் பின்னணியில் எமது வன்னி மாவட்டத்தில் வாழும், தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்களுக்கு எவ்வித பேதமுமின்றி பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களை சம்பந்தப்படுத்தியுள்ளதை நாம் முற்றாக மறுக்கின்றோம்.நடந்ததை சரியாக அறிந்து கொள்ளாமல் பிழையான தகவலின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படுவது எமது வடபுல முஸ்லிம்களுக்கு செய்யும் இழப்பாகும்.

சட்டத்தை மக்களுக்காக செயற்படுத்தும் சபையின் சட்டத்தரணிகள் அமைப்பு எவ்வித இனத்துக்கும், மதத்துக்கும் சொந்தமானதல்ல என்பதால், நீங்கள் நியாயத்தினையும், உண்மையின் தகவல்களின் அடிப்படையில் செயற்படுவதினாலும், ஒரு தரப்பின் கருத்துக்களுக்கு முன்னுரியைமளித்து எமது முஸ்லிம்களுக்கும், எமது மக்களினது விமோசனத்திற்கும் அயராது பாடுபடும் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக எடுக்கும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதுடன்,உண்மையினைக் கண்டறிய உங்களது உயர் சபையின் பிரதி நிதிகள் மன்னாருக்கு விஜயம் செய்து எமது மக்களிடமும் கலந்துரையாட வேண்டும் என்பதையும் தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.

இதே வேளை கொடிய யுத்தம் அகன்று பயங்கரவாதம் அழிக்கப்பட்டு இன்று இனங்களுக்கிடையில் கசப்புணர்வுகள் நீங்கிச் செல்லும் வேளையில் மீண்டும் ஒரு குழப்பத்தைத் தோற்றுவிக்க திரை மறைவில் எடுக்கப்படும் முயற்சிகளைத் தோற்கடித்து ஒரே தேசத்தின் மக்களாக நாம் அனைவரும் வாழ தங்களது சட்டத்தரணிகளின் சங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை இதன் மூலம் வேண்டிக் கொள்கின்றேன். 


நன்றி- வீரசேகரி

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...