Thursday 26 July 2012

பகுதி நேர முஸ்லிம் -கவிக்கோ அப்துல்ரஹ்மான்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrkbgBqBOttXhLztoHse2fl3lfIjiek_TWAcVCJA76WF2RLCbIpigj0zvNsQNVaCdJxbluQ09CdPrPEDi9OE2im2ELt7tx2E38DGdPmjFDD4GUvasLjpRebQQOT_JgdzYsdvBGBZmW7isU/s320/north-pole-moon2.jpg
சகோதரா!
எப்படி இருந்த நீ
எப்படி ஆகிவிட்டாய்!

பிறைச் சின்னத்தைத்
தேர்தெடுத்தவனே!
பிறையாகவே
உறைந்து போனாயே!

ஒரு காலத்தில்
நீ முழு நிலவாக இருந்தாய்
உன் ஏகத்துவ ஒளி
இரவுகளை யெல்லாம்
மதம் மாற்றியது

இருண்டு கிடந்த
ஐரோப்பாக் கண்டத்திற்கே
ஒளியைக் கற்றுக் கொடுத்த நீ
அணைந்து போன விளக்காய்க்
கிடக்கிறாய்

மனித மலர்களைச்
சகோதரத்துவத்தால்
மாலையாக்கிய நீ
சமுதாய மாலையைப்
பிய்த்தெறியும்
குரங்காகிவிட்டாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjvXj6NDEpN6B8o1UdYPjs23BEerqCH0wzliyKmZ3YwMK7iR3ECI9MCaAA0MpMKOAtRkPJa8Jai4hW_XvvhcfImElAzZKrYz9GGfmvwO-W_oIvL-FcWKcIlrPDJTC7S5tg0v2cQcdNergib/s320/Asad+processon.JPG
ஒன்றாக இருக்க வேண்டிய நீ
பிரிந்து
அல்லாஹ்வின் கயிற்றிலே
டக்ஆஃப்வார்
விளையாடிக் கொண்டிருக்கிறாய்

நீ நூல் பல கற்ற போது
நூலால் உயரும் பட்டம் போல்
உயர்ந்து கொண்டே சென்றாய்
உயர்த்திய நூலை
உலகியல் என்று அறுத்தாய்
விழுந்துக்கொண்டேயிருக்கிறாய்

மறுமைக் கல்வி
கற்றால் போதும்
இம்மைக் கல்வி
தேவையில்லை என்று
இம்மையை ஒதுக்கினாய்
இம்மை
உன்னை ஒதுக்கி விட்டது
மறுமையின் மகசூலுக்கு
விதைக்கத்தானே இம்மை
விதைப்பதைப்
புறக்கணிப்பவனே!
மறுமையில்
எதை அறுவடை செய்வாய்?

இந்த உலகத்தை
வீணாகவா படைத்தான்
இறைவன்?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjomvV8usi5VQkKAUuEJ6xuXo-FQLXNw06BxV9EUWzlfB4hoiKlgi5sYFST7OsmaPVZWmLdhJUdnhXxnWN8oVeeKl4ucW8L7xiCXSlFaSRLnyNRj9xHFgsOARVmFIaxzKrko8Q1JMERE1c5/s320/image.jpg
நீ வசிக்கும்
பாலை வனங்களில்
மேலே வறட்சியை வைத்து
இறைவன்
கீழே
செல்வ சமுத்திரத்தை வைத்தான்
வறுமையோடிருந்த போது
தூய்மையாக இருந்த நீ
வளமடைந்தபோது
அழுக்காகிவிட்டாய்

உன் மண்ணெண்ணெயால்
பகைவர்களின் வயிறு
எரிந்தது
அதனால் இப்போது
உன் நாடுகள்
எரிந்துக் கொண்டிருக்கின்றன

இதிலே கொடுமை
உன் பகைவரின் தீப்பந்தத்திற்கு
நீயே எண்ணெய்
ஊற்றிக் கொண்டிருக்கிறாய்

சாதியற்ற சமுதாயத்தைப்
படைத்தது இஸ்லாம்
நீயோ
இனவுணர்வுக் குட்ட நோயால்
அழுகிக்கொண்டிருக்கிறாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiurC8mMgWj8Oa-Hxt3S1VkZYDln_aYkZZKfVircraYCKE846nEnvC6miqPoZFz2jwfH53q4cdqmINJNM9K7tLwYxNsXoGBIDgL0gy4Jz-CBMPqOve5AYNrcpvdPWM-d-0mbPLPiAgeJP9K/s320/islamic-jihad-commander1.jpg
உலகெங்கும்
சாந்தியைப் பரப்ப வேண்டிய நீ
பயங்கரவாதிஎன்ற
கெட்டப் பெயரை
வாங்கிக் கொண்டு நிற்கிறாய்

முஸ்லிம்என்ற
லேபிள்மட்டும் ஒட்டிய
சீஸாவாக இருக்கிறாய்
உள்ளேயோ
சாக்கடையை
நிரப்பிவைத்திருக்கிறாய்
அப்பாவி மக்களைக் கொள்வது
ஜிஹாத்என்று
உனக்கு
மூளைச் சலவை செய்தவர்கள்
அகாரணமாய்

மனிதன் ஒருவனைக் கொல்வது
மனித குலத்தையே
கொல்வதாகும் என்ற
இறைவசனத்தை
உனக்குப் போதிக்கவில்லையா?

வேகம் இருக்குமளவு
உனக்கு
விவேகம் இல்லை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtJ-aUE8MzU9r0yMWgo0nCllRQN9VitkLtTfnSnk0QFZU8VRCDoOY4xqGagWV5t3Ox-PiVg7SVxe1V3Fx1TkCH_uXFI0Y_SwpOiyskmmPjJa6bHhSZ26B0ks8nMvTNWAt9LtpZppdr2mrH/s320/TwinTowers.jpg
முன் யோசனை இல்லாமல்
இரண்டு கோபுரங்களைத்
தகர்த்தாய்
அவனோ உன்னுடைய
இரண்டு நாடுகளை
நாசமாக்கிவிட்டான்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH_gDRnlvPC0JBuMSxNHojswsAZ4yaTK7tIXWaMcxFY3D5EhwpzWPMcrlB5r3ZJWxIaiOEjn_LJLjPyMg0K_bCmfo2gXjs2m3d9WeIgc0N_TDzGArf-0K_up8LYRtBjy24MFEVkcopszn1/s320/horror_of_iraqi_invasion_6.jpg
மார்க்கத்தின்
உயிரை விட்டுவிட்டு
உடலைக்
கொண்டாடிக் கொண்டிருக்கிறாய்

வீட்டுக்கு வெளியே
வெள்ளையடிப்பதிலேயே
கவனம் செலுத்தும் நீ
வீட்டுக்குள்ளே கிடக்கும்
குப்பையைப் பற்றிக்
கவலைப்படாமல் இருக்கிறாய்

தாடி வளர்பதில்
நீகாட்டும் அக்கரையில்
கோடியில் ஒரு பங்கு
தக்வாவை வளர்ப்பதில்
காட்டியிருந்தால்
நீ வளர்ந்திருப்பாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrOMTC47v7BfxT5r3gZLaMAmoTynG3k5qayvJpkVPj5lJzURaUPdparDGGhQXp4TX64vP-sWkeDwYmiS5W8Lqu79U11ouTtWD6jJ0SjXg_LwwQaK9qry_0ASnxEjDW0h5UQESVv55c9YSl/s320/58581237420643Prayer.jpg
தலைக்கு மேலே வைப்பதற்கு
நீ காட்டும் சிரத்தையில்
ஆயிரத்தில் ஒரு பங்கு தலைக்கு
உள்ளே வைப்பதில்
நீ காட்டியிருந்தால்
பகைவருக்கு முன்னால்
உன்தலை
குனியும் நிலை
ஏற்பட்டிருக்காது

லுங்கியைக்
கணுக்காலுக்குக மேலே
உயர்த்துவதில்
நீ காட்டும் கவனத்தில்
நூற்றில் ஒரு பங்கு
உன் உள்ளத்தில்
நஜீஸ்ஒட்டாமல் இருக்கிறதா
என்று பார்ப்பதில் இருந்திருந்தால்
நீ இறைவனை
நெருங்கியிருப்பாய்

உன் பகைவர்கள்
உன் கண்ணில்
விரலை விட்டு
ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்
நீயோ
அத்தஹிய்யாத்தில்
விரலை ஆட்டுவதா
நீட்டுவதா என்று
சர்ச்சையிட்டுச்
சண்டைபோட்டுக்
கொண்டிருக்கிறாய்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQ4moVxJ24tzc9Y6ri3jdcRtIiEX8E87n7KhJ6sQYjiVtFWxFuF2klL6rHqW8umY2BLr3Zz8DY70pABE1hOUi9TipW8wT7Y8nI4RYrhNNxRZcmFuP5uHKTD9KoSBEWAwIlmnkkO_BvgI8F/s320/r123101-2-26.jpg
அந்த விரல் உணர்த்தும்
ஏகத்துவத்திற்கு
முக்கியத்துவம் தருவதை விட்டு
விரலுக்கு முக்கியத்துவம்
தருபவனே!
அந்த விரல் இல்லாதவன்
தொழுதால் கூடுமா?
இல்லையா?

சமூகத்தில் தொழுவதே
கொஞ்சம் பேர்கள் தாம்
அவர்களையும் நீ
குழப்பிக் கொண்டிருக்கிறாய்

பெண்கள்
முழுக்க மறைக்கும்
முக்காடு போடவேண்டும்
என்பவனே!
அவர்களில் பலருக்கும்
மாற்றாடை இல்லை என்பதை
நீ அறிவாயா?
அவர்கள் ஆடையின் கிழிசலில்
உன் மார்க்கமும் கிழிந்திருக்கிறது
என்பதை உணர்வாயா...?

நன்றி: சமவுரிமை மாத இதழில் கவிக்கோ அப்துல்ரஹ்மான்

1 comment:

  1. இந்த உண்மை புரிந்தால்
    உயரும் நம் சமூகம்...

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...