Friday 20 July 2012

எலி ஒரு தலை வலி?


எலி என்பது மனிதர்களுக்கு ஒரு தலைவலியாகத்தான் பார்க்கப்படுகின்றது.  அது தரும் தொந்தரவுகளும் தொல்லைகளும் அப்பப்பா.. வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. எலி பற்றி வித்தியாசமான ஒரு தகவலை பிபிசி தமிழோசை தந்ததிருக்கின்றது படித்துப்பாருங்கள்.


மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம், செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
பொதுவாக எலி இனம் என்றாலே அது கிராமப்புறமாக இருந்தாலும் சரி, நகர்ப்புறமாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாகவே பார்க்கப்படுகிறது. கிராமப்புற விவசாயிகளின் விளைந்த பயிர்களை நாசமாக்குவது முதல் நகர்ப்புறங்களில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் தானியங்களை தின்று தீர்ப்பது வரை, எலி இனம் என்றாலே மனிதர்களுக்கு பெரும் வெறுப்பும், விரோதமும் தான் நிலவுகிறது.
ஆனால் இந்த எலி இனங்கள் இயற்கைக்கு ஒரு மிகப்பெரிய சேவை செய்வதாக கூறுகிறார் நெதர்லாந்து நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி பேட்ரிக் ஜேன்சன்.
மிகப்பெரிய மரங்கள் முதல் சின்னஞ்சிறு செடிகொடிகள் வரை பல்வேறு வகையான தாவர விதைகளை, கொட்டைகளை பார தூரமாக கொண்டு சென்று சம்பந்தப்பட்ட மரம் செடி கொடிகளை பூமிப்பந்தில் பரப்புவதில் எலி இனங்கள் மிக முக்கியமான பங்காற்றுவதாக கூறுகிறார் இவர்.
தனது இந்த கருத்தை இவர் ஒரு ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கிறார்.
இதற்காக இவர் சுமார் அரை மீட்டர் நீளமுள்ள அகவுடிஸ் என்று அழைக்கப்படும் ஒருவகை பெருச்சாளிகளை தேர்வு செய்தார். தென்னமெரிக்க காடுகளில் காணப்படும் இவற்றின் கழுத்தில் கண்காணிப்புக்கருவிகளை பொருத்தினார்.
இவற்றை தொடர்ந்து மாதக்கணக்கில் கண்காணித்த பின்னர் இவர் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவுகளின் படி, ஒரு குறிப்பிட்ட மரத்தின் விதைகளை, முதலில் எடுத்துச்சென்ற பெருச்சாளி அதை சுமார் 9 மீட்டர் தொலைவில் கொண்டு சென்று புதைத்து வைத்தது. அதை எடுத்துச்சென்ற இரண்டாவது பெருச்சாளி, ஐந்துமீட்டர் தொலைவில் புதைத்துவைத்தது. இப்படியே ஒன்றிலிருந்து ஒன்றாக 25 பெருச்சாளிகள் இந்த விதையை பறித்துச்சென்றன. முடிவில் இந்த விதை சுமார் 70 மீட்டர் தொலைவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
விளைவு, இந்த விதை அதன் தாய்மரத்திலிருந்து 70 மீட்டர் தொலைவில் முளைப்பதற்கு இந்த பெருச்சாளிகள் காரணமாக அமைந்திருந்ததை உறுதிப்படுத்திய பேட்ரிக் ஜான்சன், பூமியில் விதைகள் பரவுவதற்கு எலி இனங்கள் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், இப்படி விதைகள் பரவலாக சென்று விதைக்கப்பட்டால் தான் இந்த மரம் அல்லது செடிகள், தம் இனத்தைச்சேர்ந்த மற்ற தாவரங்களுடன் இணைந்து மரபின கலப்பு உருவாக வழி பிறக்கும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
எனவே எலி இனங்கள் மனிதர்களுக்கு வேண்டுமானால் நண்பனாக இல்லாமலிருக்கலாம், இயற்கைக்கு அது நண்பன் தான் என்கிறார் அவர்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...