Friday 28 March 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கை!


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை, இலங்கை தொடர்பான தன்னுடைய அறிக்கையினை நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் சமர்பித்தார். அவருயைடய அறிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு;

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஆகிய நான் இலங்கையின் மனித உரிமைகள் மற்aறும் நல்லினக்க செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை (A/HRC/25/23) இச்சபையில் சமர்பிக்கின்றேன்.

இவ்வறிக்கையானது இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டினுள் நடைமுறைப்படுத்துவதற்காக அதாவது 2013ம் ஆண்டு ஆணைக்குழு கூட்டத்தொடரின் பின்னரான காலம் முதல் ஆவணி 2013 என்னுடைய இலங்கையிற்கான விஐயம் வரையிலான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24ம் கூட்டத்தொடரின் பொழுது இலங்கையில் மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளக அளவில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்தல், வடமாகாண சபைக்காக தேர்தல்களை நடாத்துதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் அதாவது மும்மொழிக் கொள்கையினை அமுல்படுத்துதல் என்பன தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

ஆணைக்குழு 22/1 தீர்மானத்தின் அடிப்படையில் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் என்பன கடந்த காலத்தில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறு அளவிலேனும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதனை நாம் இங்கே வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.

மனித உரிமைகள் தலைமையகத்தினால் இலங்கையிற்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவிகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் சரியான முறையில் பதிலுரைக்க தவறிவிட்டது. இவ்வாறான உதவிகள் நாட்டினுள் நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க உதவும்.

மேலும் உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்தோரிற்கான கல்வி மற்றும் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட திட்டத்திணை அமுல்படுத்துவதை வரவேற்கின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளிற்காக ஏனையோரும் ஊக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகள் தொடர்பில் மனம் வருந்துகின்றோம்.

இக்கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலும் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் சேவையாற்றும் இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களுடைய விடுதலையை வரவேற்கின்றோம். செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகின்றோம்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. யுத்த காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அதன் கடமையாகும்.

இவ் வன்முறைகளின் பொழுது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமுற்றனர், இறந்தனர் மற்றும் காணமற்போயினர். இவ் வன்முறைகளிலிருந்து உயிர்பிழைத்தோர் மற்றும் பாதிப்புற்றோரிற்கு நாட்டிலுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்றது.

அதேவேளை புதிய சாட்சிகள் சர்வதேச பொறிமுறையின் முன்னர் தங்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் எடுத்துரைக்க முன்வருகின்றனர். இதன் மூலமாக தங்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென நம்பிக்கை கொள்கின்றார்கள்.

இச்செயற்பாடு சர்வதேச விசாரணையினை மாத்திரம் கூறவில்லை மாறாக புதிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாகவும், ஜனநாயக செயன்முறை தோல்வியடைந்த ஓர் இடத்திலிருந்து பல உண்மைகளை வெளிக்கொணரவும் வழிகோலும்.

ஜனநாயக செயற்பாட்டினை தொடர்ச்சியாக அவதானிப்பதற்காகவும், சர்வதேச மனித உரிமைகள் மீறல்களை தடுப்பதற்காகவும் சுதந்திரமான சர்வதேச விசாரணையினை இலங்கை மீது மேற்கொள்ள வேண்டுமென இவ்வாணைக்குழுவை கேட்டுக்கொள்கின்றோம்.

இப்பொறிமுறை புதைந்து போயுள்ள மேலதிக உண்மைகளை வெளிக்கொணரவும், நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கையர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக நீங்கள் இறுதி தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் உங்கள் அவதானத்தை அண்மையில் மனித உரிமைகள் தொடர்பில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் அதாவது சிறுபான்மையினரின் மத தலங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்குள்ள தடங்கல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...