Tuesday 1 September 2009

ஸக்காத்தின் வீழ்ச்சியும் உழ்ஹிய்யாவின் எழுச்சியும்


ஸக்காத்தின் வீழ்ச்சியும்
உழ்ஹிய்யாவின் எழுச்சியும்

ஸக்காத் ஏழை வரி இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று.

ஸக்காத் இஸ்லாம் முன்வைக்கும் ஒரு மகத்தான பொருளாதார திட்டமும் கூட. அல்குர்அன் தொழுகையைப் பற்றி பேசும் அனேக இடங்களில் ஸக்காத் பற்றியும் பேசுகிறது.

ஸக்காத் எற்றத்தாழ்வற்ற ஒரு சமுதாயத்திற்கு அத்திவாரமாகின்றது. குர்ஆனிய சமூகமொன்றில் ஸக்காத் பொருளாதார பலத்திற்கு துணையாக நிற்கிறது.

இன்றைய தஃவா (?) தளத்தில் ஒரு பேசு பொருளாக மட்டும் மாற்றப்பட்டிருக்கும் ஸக்காத்தின் நிலையைப் பற்றி நாங்கள் பேசியே ஆக வேண்டும். ஸக்காத்தின் உயிரோட்டத்தைச் சிதைத்து, சில்லரை காசுகளில் சங்கமமாகும் ஒரு சடங்காக அது இடம்பெற்று வருகிறது. வெறுமனே உச்சரிக்கப்படுகின்ற ஒரு சொல்லாக மட்டுமே அது உலா வந்துக் கொண்டிருக்கிறது.

ஸக்காத்தின் இந்த பின்னடைவான நிலைக்கு அமெரிக்க பூகோள ஏகாதிபத்திய அரசியலே காரணமாகியிருக்கிறது, அந்த அரசியல் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

அந்த அமெரிக்க அரசியல் சஊதி ஆன்மீகம் ஊடாக எங்கள் உள்ளங்களுக்குள் இறங்கிக்கொண்டிருக்கிறது. சஊதி சார்பு இஸ்லாமிய இயக்கங்கள் இந்த வேலையை கச்சிதமாக நிறைவேற்றியும் வருகின்றன. கருத்தாடலோடு மட்டும் ஸக்காத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அமெரிக்க சஊதி திட்டத்திற்கு இந்த இயக்கங்கள் உறுதுணையாய் நின்று உதவியும் புரிகின்றன.


ஸக்காத்தை கட்டுப்படுத்துவதால் அமெரிக்காவுக்கு என்ன லாபம்? அமெரிக்காவுக்கும் ஸக்காத்திற்கும் என்ன தொடர்பு? என்று கூட நீங்கள் கேட்கலாம்.

ஸக்காத் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வை சரிசெய்கின்ற சரியான மருந்து என்பதை நாங்கள் மறந்து போயிருக்கிறோம். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஸக்காத்தின் வளர்ச்சி வட்டியில் இயங்கும் தனது வல்லாதிக்கத்தை அழிக்க வல்லது என்பதை அறிந்து செயற்படகிறது.

வட்டியையும், வறுமையையும் ஒழிக்கும் திட்டத்தை ஸக்காத் தனக்குள் புதைத்து வைத்துள்ள பொருளாதார மந்திரமாகும்.

உலகிலேயே இரண்டு பொருளாதாரங்கள் இருக்கின்றன.

ஒன்று வட்டியை அடிப்படையாக வைத்து இயங்குகின்ற முதலாளித்துவ பொருளாதாரம்.

மற்றையது வட்டியில்லாத மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய பொருளாதாரம்.

வட்டியின் பொருளாதாரத்திற்கு அடையாளமே அமெரிக்கா தான்!
வட்டிக்கு கடன்கொடுப்பதும், ஆயுதம் விற்பதும் தான் அமெரிக்காவின் அடிப்படை ஆதாய மார்க்கங்கள்.

அமெரிக்காவின் வட்டி பொருளாதாரத்திற்கு எதிரான கொள்கை உலகில் இஸ்லாம் ஒன்று மட்டுமே! அமெரிக்க பொருளாதாரம் உலகை ஆக்கிரமிக்க வேண்டுமானால், வட்டியை எதிர்க்கின்ற இஸ்லாமிய பொருளாதாரம் உலகில் நின்றும் மறைந்து விட வேண்டும்.

இஸ்லாத்திற்கு எதிரான அமெரிக்க போக்கிற்கு மறைமுக காரணி இதுவும்தான்.

யுத்தம் செய்து மனிதர்களை அழிக்கலாம். ஆனால் ஒரு கொள்கையை யுத்தத்தால் அழிக்க முடியாது. கூட்டாளி ஆகி அந்தக் கொள்கையை கலங்கப்படுத்த முடியும். இன்று சஊதியை கூட்டாளியாக்கி அந்த வேலையை அமெரிக்கா செம்மையாக செய்து வருகிறது.

இஸ்லாம் வட்டியை சாடுகிறது. வட்டியை எதிர்க்கிறது! வட்டியை உலகிலிருந்து ஒழிக்க அறைகூவல் விடுகிறது.

வட்டிக்கு எதிரான இஸ்லாத்தின் இந்த அறைகூவல்,

அமெரிக்க பொருளாதாரத்திற்கு எதிரான அறைகூவல் என்பதையும் அதன் பொருளாதாரத்திற்கு விழுகின்ற அடி என்பதையும் அமெரிக்கா நன்கு உணர்ந்தே வைத்திருக்கிறது.

இஸ்லாம் வட்டிக்கு எதிரான அறைகூவலை ஸக்காத் என்ற புனித கடமையை மையப்படுத்தியே மும்மொழிகிறது.

அமெரிக்கா தனது வட்டிக்கு எதிரான சவாலாக ஸக்காத்தை கணிக்கிறது. அந்த வகையில் ஸக்காத்தை ஊமையாக்கும் செயற்றிட்டத்தை சுஊதியையும் முஸ்லிம்களை வைத்தே அது செயற்படுத்தியும் வருகிறது.

அமெரிக்கா தனது நேச நாடுகளான சஊதி, குவைத், கதார் போன்ற நாடுகளை பயன்படுத்தி எப்படி இதை நிறைவேற்றுகிறது என்பதை இனி பார்ப்போம்.

சின்ன சின்ன முரண்பாடுகளையெல்லாம் இயக்கங்காக மாற்றி பணம் கொடுத்து வளர்க்கும் அரபு நாடுகள் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஸக்காத்தைப் பற்றி மூச்சு விடாமல் இருப்பதின் இரகசியம் என்ன?

ஸக்காத்தை உயிர்ப்பிக்க இதுவரை அவர்கள் என்ன செய்திருக்கின்றார்கள்? எல்லோரும் ஸக்காத்தை வாய்ப்பேச்சோடு மட்டுப்படுத்தியிருப்பதைதானே பார்க்கிறோம்?

சுன்னத்தான விடயங்களுக்காக தனித்தனி பள்ளிவாசல் கட்டி பிரிந்துபோக கற்றுக்கொடுப்பவர்கள் பர்ளான ஸக்காத் விடயத்தில் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?

ஹஜ் காலத்தில் சுன்னத்தான உழ்ஹிய்யா கடமைக்கு கோடிக்கணக்கான பணத்தை இலங்கையில் கொட்டுபவர்கள் பர்ளான ஸக்காத் பணத்தை மடடும் ஏன் கோடிக்கணக்கில் கொட்ட மறுக்கின்றார்கள்?

அதன் அந்தரங்கம் என்ன?

வட்டிக்காக வாழும் அமெரிக்க ஏகாதிபத்தியமும், வட்டியை நிராகரிக்கும் இஸ்லாமும் இணைபிரியா நண்பர்களாய் வாழவே முடியாதல்லவா?

அதாவது வட்டியும் ஸக்காத்தும் ஒன்றுக்கொன்று முரணானவை ஒன்று அல்லாஹ்வால் வெறுக்கப்பட்டது. மற்றையது அல்லாஹ்வால் நேசிக்ப்பட்டது.

இன்று அல்லாஹ்வால் வெறுக்கப்பட்டதும், அல்லாஹ்வால் நேசிக்கப்பட்டதும் இணைபிரியா நண்பர்களாக இருக்கும் துர்பாக்கியத்தை இவ்வுலகில் நாம் கண்டுவருகிறொம்.

அதாவது இரண்டு துருவங்களான அமெரிக்காவும் சஊதியும் ஒன்றோடொன்று உறவாடி மகிழ்கின்றன. ஒன்றுக்கொன்று உறுதுணையாய் இருக்கின்றன.

இன்று இஸ்லாமும் வட்டியும் (சஊதியும், அமெரிக்காவும்) வாஞ்சையோடு வாழும் நிலையை நாங்கள் காண்கின்றோம்.

இப்போது விடயத்திற்கு வருவோம்

ஷிர்க், பித்அத் எதிர்ப்பு இயக்கங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தை இந்த அரபு நாடுகள் அள்ளி வழங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள்.

சுன்னத்துகளை ஹயாத்தாக்குங்கள், பித்அத்களை ஒழித்துக்கட்டுங்கள் என்ற போர்வையில் பள்ளிவாசல்களைக் கட்டிக்கொடுப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
சுருக்கமாக சொன்னால் பித்அத்தை எதிர்க்க இயக்கம் இருக்கிறது. ஸக்காத்தை வளர்க்க இயக்கம் இல்லை.

ஸக்காத்தை பெயரளவில் பேசும் இயக்கத்திடம் வேலைத்திட்டம் இல்லை. இந்த இயக்கங்களிடம் எந்த ஏழையும் பிரயோசனம் பட்டதும் இல்லை. ஒரு கூட்ட்ம் ஸக்காத்தை மறைத்து வாழ்கிறது . மறு கூட்டம் ஸக்காத்தை பெற்று அது வாழ்கிறது. இதற்கு சிற்ந்த உதாரணமாக இலங்கையிலுள்ள ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தை குறிப்பிட முடியும். ஸக்காத்தை கூட்டாக கொடுங்கள் கூட்டாக கொடுங்கள் என்று அரை நுாற்றாண்டுகளுக்கு மேலாக அலறிவந்த இந்த இயக்கம் கூட ஸக்காத் விதியானோர் உதவிக்கு விண்ணப்பித்தபோது கூட ஸக்காத்தை கொடுக்க மறுத்து வருகிறது. இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.

இந்த சதியை இரண்டு விதமாக பார்க்கலாம்

ஒன்று ஸக்காத்தை வேறு பிரச்சினைகளை (ஷிர்க், பித்அத்) மண்டையில் போட்டு மறைத்து விடுவது

அடுத்தது காலா காலமாக ஸக்காத் பற்றியும், கூட்டு ஸக்காத் பற்றியும் பேசியவர்களை செயற்படாமல் வைப்பது. சேர்த்த பணத்தையும் ஏழைகளுக்கு கொடுக்க மறுப்பது.

அல்லாஹ்வின் கடமையை இருட்டடிப்பு செய்யும் இந்த அமைப்புகள் சஊதி, ஸீ.ஐ.ஏ சதி வலையில் தாம் சிக்குண்டு இருப்பதை புரியாமல் இருக்கின்றன.
புரியாமல் இருப்பதாய் நடிக்கின்றன.

பாருங்கள்! இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஸக்காத்தை ஒழுங்கான முறையில் நிறைவேற்றுவதற்கு, உயிராக்குவதற்கு, செயற்படுத்துவதற்கு எந்த அமைப்பும் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டதே! அப்படி இருந்திருந்தால ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக ஸக்காத்தைப் பற்றி பேசி வந்த இயக்கங்கள் எந்த இலக்கையும் அடையாமல் இளிச்ச வாயர்களாய் இருந்திருக்க முடியாதல்லவா? உண்மையை இனி நாங்கள் ஏற்கத்தானே வேண்டும்?

ஸக்காத்தை உயிராக்கும் அமைப்புகளை உருவாக்குவதற்கு அரபு பணமும், அமெரிக்காவும் தயராக இல்லை. பெயரளவில் அரபு நாட்டிலிருந்து வரும் சொற்ப ஸக்காத் பணத்தை பெயரளவில் இந்த இயக்கங்கள் பகிர்வதாக பத்திரிகையில் செய்திகளும் வருகின்றன. பிச்சைக் காசாக வரும் அந்த சொச்சப்பணத்தால் சமூகத்தின் பாரிய குறைகளை நிவர்த்திக்க முடியுமா?

இலங்கைச் சமூகத்தில ஸக்காத்தின் தேவை அதிகம் இருக்கிறது. அரபுகள் இன்று கோடிக்கணக்கான பணத்தை ஹஜ் கால உழ்ஹிய்யா என்ற போர்வையில் இலங்கைக்கு அள்ளி இரைத்து வருகின்றனர். வருடமொன்றுக்கு இலங்கைக்கு வரும் பணம் சுமார் பத்து கோடிகள் என்று மதிப்பிடப்படுகின்றது. (இதன் உண்மையான மதிப்பீட்டை எந்த இயக்கமும் வெளியே அறிவிக்காதததால் மதிப்பிடுவதில் சிரமம் இருந்தாலும் ஊர்வாரியான ஒவ்வொரு சஊதி நிதியில் வாழும் இயக்கங்களும் செலவிடும் மாடுகளின் தொகையை வைத்து இப்படி கணிப்பிட முடியும்)

வறுமையில் பொருளாதார கஷ்டங்களுக்குள் வாடும் முஸ்லிம்கள் அதிகம் பேர் வாழும் இலங்கை நாட்டில், பிள்ளைகள் கற்பதற்கு ஒழுங்கான பாடசாலைகள் இல்லாத இந்த சமூகத்தில், ரமழான் நோன்பை நோற்று விட்டு பெருநாள் கொண்டாடுவதற்காக வட்டிக்கடையில் தனது சிறிய தங்க ஆபரணத்தை வைத்து பணம் பெற காத்திருக்கின்ற முஸ்லிம்கள் வாழும் இந்த சமூகத்திற்கு உழ்ஹிய்யா எதைத்தான் சாதிக்கப்போகின்றது.

ஸக்காத்தை முற்றாக மறந்து, மறைத்து வாழும் இந்த சஊதி இயக்கங்கள், இன்று போட்டி போட்டுக் கொண்டு தமது எஜமானர்களின் ஆணைப்படி உழ்ஹிய்யா பணியில் மும்முரமாக ஈடுபாடு காட்டுகின்றன. சில இயக்கங்கள் தமது பெயர் பொறிக்கப்பட்ட பைகளில் இறைச்சியை போட்டு பெயர் பொறிக்கப்பட்ட T Shirt களோடு ஊரை வலம் வருவதை பெருமையாக கருதுகின்றன.

பர்ளான ஸக்காத் கடமையை புறந்தள்ளி விட்டு இந்த இயக்கங்கள் உழ்ஹிய்யாவை பெருமையாக பெரும் பணியாக கருதி பங்கிட்டு திரிவதன் பின்னணி என்ன? ஸக்காத்தை மறைத்து மாற்றீடாக உழ்ஹிய்யாவை முன்வைக்கும் சதியின் வெளிப்பாடே இந்த நாடகம்.

அதுவும் பத்துக்கோடிக்கு மேல் இலங்கை வரும் பணம் பட்டினில் சாவும் எத்தியோப்பியா சோமாலியாவிற்கு செல்லாமல் இலங்கைக்கு வருவதன் இரகசியம் என்ன?


உழ்ஹிய்யா என்ற சுன்னத்தான அமலை குறையாக பார்ப்பதாக யாரும் இங்கு கணிக்கக் கூடாது. மாடுகளை அறுக்க கோடியாய் கொட்டும் அரபிகள் ஏன் தமது ஸக்காத் பணத்தை இலங்கைக்கு வழங்குகிறார்கள் இல்லை. பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் எத்தியோப்பியா, சோமாலியா போன்ற இதர நாடுகளுக்கு இந்த உழ்ஹிய்யா இறைச்சியை அனுப்பி விட்டு, ஸக்காத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினால் அந்தப்பணத்தினால் ஏழைகள் பிரயோசனம் படலாமே!

சரி, சொந்த நாட்டில் கிடைக்கும் ஸக்காத் பணத்தைக் கூட ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்காத சில இயக்கங்கள் உழ்ஹிய்யாவை மட்டும் தடபுடலாக செய்து வருவதைப்பார்த்து சந்தேகம்தான் வருகிறது.

அண்மைக்காலமாக இலங்கையில் ஸக்காத்தை மறைத்து விட்டு எழுச்சி பெற்றுவரும் உழ்ஹிய்யாவில் மறைந்திருக்கும் ஓர் அரசியலை விளக்கவே நான் மேலே சில தகவல்களை தந்தேன்.

இலங்கை ஒரு பௌத்த நாடு அணை்மைக்காலமாக முஸ்லிம்கள் மத ரீதியிலான சில பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தும் வருகின்றார்கள். மாடு அறுப்பது தொடர்பாக பிரச்சினைகள் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன. ஹஜ்பெருநாளைத் தொடர்ந்து வருகின்ற உழ்ஹிய்யா தினம் பௌத்தர்களின் பௌர்ணமி தினத்தோடு மிக நெருங்கியே நிகழ்கிறது. இந்த நெருப்பு ஒருநாள் பற்றத்தான் போகிறது.

இலங்கை முஸ்லிம்கள் தனது சொந்த செலவில் செய்யும் உழ்ஹிய்யா கடமை ஆராவாரம் இல்லாமல் அடக்கமாகவே கடந்த காலங்களில் இடம் பெற்றும் வந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனைய மதத்தவர் அறியாதவாறு அடக்கமாக அவை நிறைவேற்றப்ப்பட்டன.

ஆனால் உழ்ஹிய்யாவிற்காக வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் கோடிக்கணக்கான பணமும், நாடு பூராக மாடு தேடி ஓடுகின்ற இந்த இயக்கங்களின் வேகமும் பௌத்த முஸ்லிம் உறவுகளில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி வருவதை சிங்கள ஊடகங்கள் சொல்லும் தகவல்களில்
புரியக் கூடியதாய் இருக்கிறது. சில வேளை பௌத்த முஸ்லிம் மோதல் ஒன்றுக்கான சர்வதேசத்தின் சதியாகக கூட இந்த சஊதி உழ்ஹிய்யாவை சொல்லி வைக்கலாம். பௌர்ணமிக்கும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கும் உள்ள நெருக்கத்தைப்போல், இனமுறுகலும் நெருங்கி வருதாக எனக்குப் படுகிறது.

உழ்ஹிய்யா இறைச்சியை விட இலங்கைக்குத் தேவை அரபுகளின் சதகாவும், ஸக்காத்தும் தான். கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை மாட்டை அறுத்தே முடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தோடு உழ்ஹிய்யா பணம் வருகிறது.

பசித்த சோமாலியனுக்கு துப்பாக்கிகளையும், வீடு, வர்த்தகம்,பாடசாலை இல்லாதவனுக்கு, கடனில் வாழ்பவனுக்கு இறைச்சியையும் கொடுக்கும் இந்த சர்வதேச சதியை முடிவுக்கு கொண்டு வர முஸ்லிம்தான் முன்வர வேண்டும்.

ஸக்காத்தை உயிராக்குவதற்கு தடையாய் நிற்கும் அத்தனை சதி முயற்சிகளையும் தகர்த்து எறிவது முஸ்லிம்கள் மீதுள்ள கட்டாயக் கடமையாகும்.

இந்த பதிவு தொடர்பாக உங்கள் கருத்தை (ஆங்கிலம் அல்லது தமிழில்) ஓரிரு வரிகளாவது பதியுங்கள்!

நன்றி!

9 comments:

  1. _______________________________________________
    வறுமையில் பொருளாதார கஷ்டங்களுக்குள் வாடும் முஸ்லிம்கள் அதிகம் பேர் வாழும் இலங்கை நாட்டில், பிள்ளைகள் கற்பதற்கு ஒழுங்கான பாடசாலைகள் இல்லாத இந்த சமூகத்தில், ரமழான் நோன்பை நோற்று விட்டு பெருநாள் கொண்டாடுவதற்காக வட்டிக்கடையில் தனது சிறிய தங்க ஆபரணத்தை வைத்து பணம் பெற காத்திருக்கின்ற முஸ்லிம்கள் வாழும் இந்த சமூகத்திற்கு உழ்ஹிய்யா எதைத்தான் சாதிக்கப்போகின்றது.
    _______________________________________________

    Dear sir your arguments are absolutly correct i apprecaite your courage................... i saw your blog address .........by a mail i recieved and i sugested you to intrduce your blog in srilanka muslim yahoo grups. the one who alwys keeps the good and unbias judjemnts in his activities will find the truth in your article

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும், மிகவும் முக்கியமான ஒரு விடயத்தைப்பற்றிப் பயப்படாமல் பேசியிருக்கிறீர்கள்..நவீன இஸ்லாமிய சட்டவியல் பாஷையில் Fiqh of preorஇtization & contemporary issues என்ற விடயத்தையொட்டி வெளிப்படையாகப் பேசியிருக்கிறீர்கள்...

    அறபு நிதி உதவியில் இயங்கும் பித் அத் ஒழிப்பு பிரச்சார அமைப்புகள் இலங்கையில் இரண்டு வகையான அபாயங்களை உருவாக்கியிருக்கிறது
    1. முஸ்லிம் சமூகத்தினுள்ளே so called பித் அத் களில் தொடர்புள்ள முஸ்லிம் சகோதரர்களை தமது சொந்த இலங்கை முஸ்லிம் சகோதரர்களாக அல்லாது மக்கா காலத்து இறைமறுப்பாளர்களைப்போன்று எதிரிகளாக கருதுகிற மனோபாவத்தை தங்களை மட்டும் ஏகத்துவவாதிகள் என்று அழைத்துக்கொள்பவர்களிடம் ஏற்படுத்தியுள்ளமை. இது மிக இலகுவாக சகோதர முஸ்லிமை காபிர் என்று தீர்பு சொல்லும் அபாயமகிறது.
    2. நாங்கள் இலங்கை முஸ்லிம்கள் என்பதை மறந்து எமது முதன்மைப் பிரச்சினைகளை அறபு நாட்டு ஷைக்மார்களிடமிருந்து (நிதியுடன் கூடி) அடையாளப்படுத்த நினைப்பது.நமது அரசியல், சமூக பிரச்சினைகளின் அடிப்படைகள் அறியாத அவர்கள் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கும் எமக்கான தீர்வுகளை பித் அத் ஒழிப்பிலிருந்துதான் ஆரம்பிக்கச்சொல்லபோகிறார்கள்.

    அல்லாஹ் ஒரு நாளும் இலங்கை முஸ்லிம்களிடம் வெளிநாட்டுப்பனத்தில் ஏன் பள்ளி கட்டவில்லை? ஒன்றுக்கு பல மாடுகளை ஏன் அறுக்கவில்லை உன்னிடம் பணம் இல்லாத போது வெளினட்டுப்பணத்தில் ஏன் இப்தார் நடத்தவில்லை என்றெல்லாம் கேட்கப்பொகிறானா??

    இது தொடர்பில் இன்னும் நிறையவே ஆய்வுகள் தேவை.. எங்களது மனைவி, பெண்பிள்ளைகளின் உளைப்பையும் கற்பையும் சுறண்டி, நமது ஒற்றுமை சிதைத்து, எமக்கு புதிய புதிய பள்ளிகளையிம் நிறைய மாடுகளயும் தரும் அடிமை வைத்து வேலை வாங்கும் மனேபாவமுள்ள அறபு எஜமானிகளிடம் எப்போது இந்த ஏஜெண்டுகள் வாய் திறக்கப்போகிறார்களோ தெரியவில்லை.. பணிப்பெண் வேலை முறையை நிறுத்த சகாத் முறையினை வைத்து திட்டமிட இந்த so called தொளஹீத் அமப்புகள் நிய்யத் வைப்பர்களா அல்லது இன்னும் பேச்சிலும் எழுத்திலும் வன்முறை கலந்து, இரத்தம் சிந்தி நாட்டில் இருக்கும் மத சுதந்திரத்தை குறைத்துக்கொள்ளபோகிறார்களா தெரியவில்லை...

    போருக்கு பிந்திய அரசின் நகர்வுகள், முஸ்லிம்கள் என்ற பின்னனியில் இது குறித்து நிறய சிந்திக்க வேண்டியுள்ளது.... இன்னும் நிறய எழுதுவீர்கள் என எதிர் பார்க்கிறேன் இன்ஷா அல்லாஹ்...

    நன்றி... வஸ்ஸலாம்..

    ReplyDelete
  3. உங்கள் கருத்திற்கு நன்றி! றிபாஜ் அஸ்லம்

    இந்த ஏகாதிபத்தியத்திற்கு துணைபோகும் இயக்கங்கள் இஸ்லாத்தை பணத்திற்கு துணை போகும், அல்லது பணம் சம்பாதிக்கும் ஒன்றாக மாற்றி வருகின்றன.

    ஊதியம் பெறும் தாஈ களின் உற்பத்தி நிலையங்களாக இவை மாறி வருகின்றன.

    ReplyDelete
  4. நன்றி சம்மா!

    //மிகவும் முக்கியமான ஒரு விடயத்தைப்பற்றிப் பயப்படாமல் பேசியிருக்கிறீர்கள்..நவீன இஸ்லாமிய சட்டவியல் பாஷையில் Fiqh of preorஇtization & contemporary issues என்ற விடயத்தையொட்டி வெளிப்படையாகப் பேசியிருக்கிறீர்கள்...//

    அமெரிக்க ஏகாதிபத்திய, வஹ்ஹாபிய அரசியலில் சிக்குண்டு இருக்கும் இஸ்லாத்தை அதிலிருந்து பிரித்தெடுக்கும் முயற்சி நிறைய தேவைப்படுகிறது.

    முதலாளித்துவ அரசியலோடு முரண்படும் ஸக்காத் பற்றி முஸ்லிம்களிடம் தெளிவு மிகவும் குறைவு.

    முதலாளித்துவத்தை பாதுகாப்பதற்காக இந்த இயக்கங்கள் திட்டமிட்டு ஸக்காத்தை முடமாக்கிவருகின்றன.

    ReplyDelete
  5. நில்லுங்கோ சியாட காசிக்கே இப்படிப்பேசியன்டா, சவுதிடமட்டும் காசு கிடச்சா????????
    this is month of Ramazan, so please wait i will reply comment regarding the matter. first fear on Almighty Allah,
    Please write me some artilce regarding Aysah R.A the wife of Prophet Muhammad. then your mask will be removed

    ReplyDelete
  6. சகோதரர் அஸ்பர்,
    இஸ்லாத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றான ஸக்காத் அமெரிக்க சதியில் எப்படி சிக்கியிருக்கிறது என்று தான் நான் விளக்கினேன்.

    அந்த சதியை அம்பலப்படுத்தும் போது நீங்கள் ஏன் ஆத்திரப்படுகிறீர்கள்? அல்லாஹ்வைப் பயந்துக் கொள்ளுங்கள்!. சஊதி அமெரிக்க பணம் உங்களுக்கு உலகில் நன்றாக பிரயோசனப்படும். மறுமையில் நீங்கள் இஸ்லாத்தின் எதிரிகளுக்கு கைக்கூலியாய் கடமையாற்றியதற்கு கைசேதப்படத்தான் போகின்றீர்கள்.

    நான் பதித்த கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது.
    அதைவிட்டு விட்டு ஏன் எனக்கு ஷீஆ சாயம் பூசுகின்றீர்கள்?

    தயவு செய்து கோடிக்கணக்கான அமெரிக்க பணத்தில் தஃவா செய்யும் இயக்கங்கள் ஸக்காத் கடமையை (வாய்ப்பேச்சில் மட்டும்)வைத்து கண்ணாமூச்சி விளையாடுவதை நிறுத்துவதற்கு உறுப்படியாக எதாவது செய்வோம். வாருங்கள்.
    நான் வைத்துள்ள ஸக்காத் தொடர்பான கருத்தில் ஆரோக்கியமாக விவாதிப்போம்.
    அதைவிட்டு வேறு குகையில் தஞ்சம் அடையாதீர்கள்.

    ReplyDelete
  7. Assalamu Alaikkum Bro,
    I never know about your site until today and obviously your writings made me to submit a feed back. There are few things I on which would like your attention;
    The background of spreading “Salafism” has emerged from the geopolitical interest of Saudi. It is identical that of “Shia” of Iran. Both the countries are hell bent on spreading their ideologies. It is also identical with “Capitalism” of the West or the “Zionism” of the Israel. As an operational method, these ideologies identify or establish “Channels” among Muslims or in other countries. As you know these are simple logics.
    But as long as Sri Lankan Da’va movements concerned, there are movements which operate purely on foreign funds. Also there are movements which are concentrating on many contemporary issues faced by Muslims, like education, poverty, healthcare etc, which ALSO receive foreign funds for certain projects. I think we have to be very careful about identifying such movements and give them the right credits and right criticism each one deserve.
    One criterion by which we can identify their true colours is; the fact that they have a holistic view about Islam and its objectives and the way these movements decently conduct themselves among Muslims in Sri Lanka. We can expect a lot from these sorts of movements if we constructively criticise them. And at the same time we cannot expect anything more than what we saw in the tragic Beruwala incident, from the “other types” of movements.
    I am eager to pen more and Allah will accept your deeds and my thoughts.
    Amanullah, UAE.

    ReplyDelete
  8. assalamu allaikkum good artical

    ReplyDelete
  9. தெரிவு செய்துள்ள பேசுபொருள் மிக முக்கியமானதும் உடனடியாக ஆய்வு செய்து சரிப்படுத்தப்பட வேண்டியதுமாகும். ஆனால் அது நம் சமூகத்தில் முதன்மைப்படுத்தப்படாமல் போனமைக்கான காரணங்களாக கூறியுள்ளவற்றில் ஒத்தக்கருத்தில்லை. தவறை நம் பக்கம் வைத்துக்கொண்டு தொட்டதற்கெல்லாம் அமெரிக்காவையும் யூதர்களையும் அரபு நாடுகளையும் சாடி எப்பிரயோசனமும் இல்லை.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...