Wednesday 14 November 2012

ஆயுத மோதலில் தொடர்புபடாத கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனரா?



இலங்கையில் வெலிக்கடை சிறைச்சாலையில் வெள்ளிக்கிழமை நடந்த ஆயுதமோதல்களில் கொல்லப்பட்டதாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட கைதிகளில் சிலர், மோதல் முடிந்த பின்னர் சிறைக்கூடத்துக்கு வெளியில் அழைத்துவரப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.
மோதல்களில் சம்மந்தப்படாது சிறைக்கூடங்களுக்குள் ஒதுங்கியிருந்த சில கைதிகள் காலை 4 மணிக்குப் பின்னர் வெளியில் கூட்டிவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தமிழோசையிடம் பேசிய தாய் ஒருவர் குற்றஞ்சாட்டுகிறார்.
சிறைச்சாலை கலவரம் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்ட இரவு 11.30 மணிக்குப் பின்னரும் தமது மகன் தம்மோடு தொலைபேசியில் உரையாடியதாகவும், அவர் இருந்த சிறைக்கூடம் பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளதால் தமக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் கூறியதாகவும் அந்த தாய் தெரிவித்தார்.
ஆட்டோவில் துப்பாக்கிகளுடன் தப்பிச்செல்ல வந்த கைதிகளை சுட்டுக்கொன்றதாக அரசு கூறுகிறது
தனது மகனுடன் அதே சிறைக்கூடத்தில் இருந்த மற்றக் கைதிகளும் தமது குடும்பங்களுடன் அதிகாலை 4 மணிவரை தொடர்பில் இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
சிறைக்கூடத்துக்குள் பாதுகாப்பாக இருந்த கைதிகள் அதிகாலை 4 மணியளவில் வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்றுள்ளதாகவும் அதன்பின்னர் காலை துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடனேயே அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் பிபிசியிடம் பேசிய அந்த தாய் தெரிவித்தார்.

அரசு மறுக்கிறது


இதேவேளை, மோதலில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட 27 கைதிகளில் சில கைதிகளின் உறவினர்கள் முன்வைக்கின்ற இவ்வாறான குற்றச்சாட்டுக்களை இலங்கை சிறைச்சாலைகள் விவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
இரவு 12 மணிக்குப் பின்னரும் துப்பாக்கிகளுடன் இருந்த கைதிகளுடன் மோதல்கள் தொடர்ந்ததாகவும் காலை 4 மணிக்குப் பின்னரே நிலைமை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் சிறைச்சாலைகள் விவகார அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே பிபிசியிடம் கூறினார்.
துப்பாக்கிகளை ஒப்படைக்க மறுத்து தொடர்ந்தும் மோதலில் ஈடுபட்ட கைதிகளே இராணுவ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, ஆயுதமோதலின் போது சிறப்பு அதிரடிப்படை மற்றும் கமாண்டோ அணியினர் தற்பாதுகாப்பு என்பதையும் தாண்டி செயற்பட்டுள்ளதாகவும் அரசு இவ்வாறான அசம்பாவிதங்களின் போது இராணுவ உபாயங்களையே கையாள்வதாகவும் மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட எதிரணிக் கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இந்த சிறை வன்முறை குறித்து நாடாளுமன்ற மட்டத்திலான விசாரணை அவசியம் என்று வலியுறுத்தியிருக்கிறது.
(பிபிஸி)

துப்பாக்கி படத்திற்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு!


நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளி வந்து உள்ள துப்பாக்கி படத்தில் முஸ்லிம்களை விமர்சித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக காட்டும் சர்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தேசிய லீக் வற்புறுத்தி உள்ளது. துப்பாக்கி படத்துக்கு எதிராக விஜய் வீட்டு முன் போராட்டத்தில் ஈடுபடவும் சில அமைப்புகள் தயாராகி வருகின்றன.

இதனால் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இது போல் அடையாறில் உள்ள விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் வீட்டிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tuesday 13 November 2012

வீடியோ - அமெரிக்க பயங்கரவாதம்.

அமெரிக்கா தனது பயங்கரவாத ஆக்கிரமிப்பு சார்ந்த இராணுவக் கட்டமைப்பை மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் நிலைநிறுத்தி வருகின்றது.

மத்திய கிழக்கில் புதைந்துள்ள எண்ணெய் வளத்தை கொள்ளையிடும் நோக்கத்தில் உலகில் மிக சக்திவாய்ந்த எண்ணெய் நிறுவன முதலாளிகளான
புஷ் வகையறாக்கள் இந்த எண்ணெய்க்கான போரை அப்பாவி மக்கள் மீது திணித்து மனித உயிர்களை காவு கொண்டு வருகின்றனர்.

ஜனநாயகத்தை நிலை நிறுத்த தாம் உதவி புரிவதாகக் கூறி தனக்கு தேவையான நாடுகளில் போராட்டங்களை ஊக்குவிக்கும் அமெரிக்கா, அந்த நாட்டு  மக்களையும், ஏனைய வெளிநாட்டுக் கூலிப்படைகளையும் ஆயுதமயமாக்கி அந்தந்த நாடுகளில் சிவில் யுத்தங்களை தோற்றுவித்து வருகின்றது. ஆட்சிமாற்றம் என்ற போர்வையில் தனது தாளத்திற்கு ஆட்டம் போடுகின்ற அரபு மன்னர்களையொத்த தலைவர்களை அந்தந்த நாட்டில் தலைவர்களாக ஆக்குவதன் மூலம் தனது சுரண்டல் அரசியலை அமெரிக்கா மிகவும் கச்சிதமாக செய்து வருகின்றது.

இந்த சிறிய விவரணம் அமெரிக்காவின் இந்த பயங்கரவாதத்தைப் பற்றி பேசுகிறது.

Sunday 11 November 2012

காணொளி - அட்டகாசம் புரியும் அதிபர்கள் !



கற்பித்தல் சேவை காலத்தால் அழியாத கௌரவமான தொழிலாகும்.

ஆசிரியர்கள் என்போர் அனைவராலும் போற்றப்படுபவர்கள்.  காரணம் அவர்கள் இவ்வுலகில் அனைத்து அறிஞர்களையும் உருவாக்குபவர்கள்.

வர்த்தகமயமான இன்றைய சூழ்நிலை ஆசிரியர்களை மோசமான நிலைக்கு தள்ளியிருப்பதை அண்மையில் வெளியான ஊழல் சம்பந்தமான ஒரு கணிப்பீடு தெளிவு படுத்தியது.

இலஞ்சம் வாங்குவதில் இலங்கையில் பொலீஸ் உத்தியோகத்தர்களை விட ஒரு படி மேல் பாடசாலை நிர்வாகம் அதாவது அதிபர்களும், ஆசிரியர்களும் இருப்பதாக அதிர்ச்சித் தரும் தகவல் ஒன்றை“ ட்ரான்ஸ்பெரஸி இன்டர் நெஷனல்” வெளியிட்டது.

எதிர்கால சமுகத்தை செதுக்கின்ற சிற்பிகளாக கௌரவமான சமூகமாக கருதப்பட்ட இந்த ஆசிரியர் வர்க்கம் எதிர்கால சமூகத்தை சிதைக்கின்ற சின்னத்தனம் கொண்டர்களாக மாறி வருவதை இந்த காணொளி எடுத்துக் காட்டுகின்றது.

பாடசாலை நிர்வாகத்தை தனது இஷ்டம் நடாத்தும் சில அதிபர்கள் அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக  பிள்ளைகளின் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற ஓர் அநாகரீக அவதாரமாக மாற்றம் எடுக்கின்றார்கள்.

இந்த காணொளி அத்தகைய ஒரு மோசமான அதிபரைப் பற்றி பேசுகிறது.


படங்கள் - கொழும்பு வெலிக்கடை சிறை -விபரீதம்!







வெலிக்கடை சிறைச்சாலை மோதல்களுக்கு முக்கிய இடமாக குறிக்கப்படும் இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள 1880களில்  அப்போதைய ஆங்கில ஆட்சியாளர்களினால் அமைக்கப்பட்ட சிறைச்சாலையாகும்.

 ஊடகங்களில் பேசப்பட்ட இன்றும் பேசப்படுகின்ற  ஒரு சிறைச்சாலையாக இருப்பதற்கு அதில் இடம்பெறும் கலவரங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றன.

1983ம் ஆண்டு ஜுலைக்கலவரத்தின் போது இந்தச் சிறைச்சாலையில் கைதிகளாக இருந்த இருபதுக்கும் அதிகமான தமிழ்க் கைதிகள் சிங்கள கைதிகளினால் கொடுரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் முழு உலகையும் வெலிக்கடை சிறைச்சாலையின் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது.

நேற்றைய சம்பவம் கூட மற்றுமொரு முறை வெலிக்கடையை வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

 நேற்றைய  மோதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளுக்கு பொறுப்பான அமைச்சர் சந்திரசிறி கஜதீர பாராளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.

குறித்த மோதலில் கொல்லப்பட்ட 16 சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 11 சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெலிக்கடைச் சிறையில் கைதிகளுக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் நேற்றுமாலை பயங்கர சண்டை வெடித்தது. இந்தக் கலவரத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

32 பேர் காயமடைந்தனர். இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

சிறைச்சாலை ஆயுதக் களஞ்சியத்தைக் கைதிகள் கைப்பற்றி துப்பாக்கிகளை எடுத்து   விசேட அதிரடிப்படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நவீன ஏ.கே. ரக துப்பாக்கிகளை ஏந்தியபடி கைதிகள் சிறைக்கூரையில் ஏறிநின்றனர்.

இந்த மோதலில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று நள்ளிரவு வரை 13 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டிருந்தன என்று அனில் தெரிவித்தார். அவர்களில் குறைந்தது 11 பேர் கைதிகள். தப்பிச் செல்ல முற்பட்ட போது சில கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்றார்கள் அதிகாரிகள்.
நேற்று மதியம் ஒரு மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனையில் இறங்கினர். இதன் போது கைதிகளின் பெருந்தொகையான கையடக்கத்தொலைபேசிகளை அவர்கள் மீட்டனர். 

வழக்கமாக இத்தகைய தேடுதலில் சிறைக் காவலர்களே ஈடுபடுவர். கைதிகளின் கைகள் விலங்கிடப்பட்டு சோதனையிடப்பட்டதை கைதிகள் எதிர்த்ததாகவும் அதன் பிறகே இந்த முறுகல் நிலை உருவாகியிருக்கின்றது.

ஆத்திரமடைந்த கைதிகள் முதலில் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் மீது கற்களை வீசித் தாக்கத் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையில் சண்டை வெடித்தது.
கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் வெலிக்கடைச் சிறையிலுள்ள ஆயுதக் களஞ்சியத்தைக் கைப்பற்றி அங்கிருந்த பெருமளவான துப்பாக்கிகளைத் தம்வசப்படுத்தினர் என்று பொலிஸார் கூறினர்.
நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுத் தாக்குதலை நடத்தினர். எனினும் கட்டு மீறிய சண்டையால் மேலும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.

கைப்பற்றிய ஆயுதங்கள் சகிதம் சிறைச்சாலை கூரைமீது ஏறிநின்றவாறு கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் அதிரடிப் படையினரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்ததால் வெலிக்கடைப் பகுதி பெரும் சண்டைக்களம் போலாகியது.
கைதிகளில் தொடர் சூட்டை அடுத்து கவச வாகனங்கள் மூலம் அதிரடிப்படையின் சிறையின் சிறையினுள் போனதை சாட்சிகள் கண்டுள்ளனர். ஒரு கட்டத்தில் 4 கைதிகள் கூரையிலிருந்து ஒரே நேரத்தில் சுட்டுள்ளனர். நிலைமை கட்டு மீறியதால் சிறைச்சாலைக்கு எதிரிலும் “பேஸ் லைன்’ பிரதான வீதியில் தெமட்டகொட வரையில் போக்குவரத்து நேற்று நள்ளிரவு வரை தடைப்பட்டிருந்தது.

நிலைமையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்காக விசேட அதிரடிப்படையினருக்கு உதவியாக இராணுவத்தினரும் அழைக்கப்பட்டனர். ஆயுதங்களுடன் கூரையில் நின்ற கைதிகளை சுட்டு வீழ்த்துவதற்காக குறிபார்த்து சுடும் படையினரும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் கலவர நிலையைப் பயன்படுத்தி பல கைதிகள் சிறைச்சாலை மதிலை உடைத்து தப்பியோடியுள்ளனர் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ஓட்டோ ஒன்றில் அவ்வாறு தப்ப முயன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்றிரவு 9.30 மணிவரை சிறைச் சாலையினுள் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன.


9.40 மணிக்கு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டதாகப் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். சண்டையில் காயமடைந்தவர்களில் 14 பேர் விசேட அதிரடிப்படையினர் என்று பொலிஸார் கூறுகின்றனர். படுகாயமடைந்த அதிரடிப்படையினர் ஒருவருக்கு அவசரமாக இரு சத்திரசிகிச்சைகள் செய்யப்பட்டன. படையின் பிரதிப் பொறுப்பதிகாரியான ஆர்.எம். ரணவணவும் சுட்டுக்கு இலக்காகி காயமடைந்தார் .

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...