Wednesday 24 October 2012

இஸ்ரேல் உயர்ந்த உன்னத நண்பனாம் ..! எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேலுக்கு புகழாரம்.



முர்சியால்  இஸ்ரேலுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் ஆங்கில வடிவம் 

இஸ்ரேலின் தலைவர் ஷிமோன் பெரஸையும் இஸ்ரேலையும் உயர்ந்த உன்னத  நண்பன் என்று விழித்து எகிப்தின் தற்போதைய இஸ்லாமியவாத  (?) ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேல் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இன்று மத்திய கிழக்கில் இடம்பெறும் ஆட்சி மாற்றங்களுக்கும், போராட்டங்களுக்கும், எழுச்சிகளுகும் உறுதுணையாக இருப்பது அமெரிக்க நலன் சார்ந்த அரசியலே.

முஹம்மத் முர்ஸியின் இஸ்ரேலை ஆதரிக்கும் கடிதத்திற்கும் இன்று மத்திய கிழக்கில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னணியில் இருப்பது இஸ்லாமிய எழுச்சியல்ல மாறாக அமெரிக்காவின் காலடியில் சரணாகதி அடையும்  இஸ்லாமிய உலகத்தின் வீழ்ச்சியே. இந்தப் பின்னணியைதான் இப்பதிவு அலசுகிறது.

இரத்தக் கறைப்படிந்த இஸ்ரேல் நாட்டையும், அதன் தலைவரையும் உயர்ந்த சிறந்த நண்பன் என்று வர்ணித்திருக்கின்ற  முர்ஸியின் போக்கை பலஸ்தீன் போராட்ட அமைப்புகள் கடுமையாக சாடியுள்ளன.

இஸ்ரேலின் நண்பனாக இருந்த ஹுஸ்னி முபாரக்கை தாகூத் என்று வர்ணித்த இஹ்வானிகள் இன்று தாமே தாகூத்களாக மாறி வருவதைக் கண்டு எகிப்திய மக்கள் ஆச்சரியப்படத்தான் போகின்றார்கள்.

இன்று எகிப்தில் ஆட்சி பீடமேறியிருக்கும் இஹ்வான்கள், அமெரிக்காவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டு அன்வர் சாதாத்தைப் போன்று ஹுஸ்னி முபாரக்கைப் போன்று அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும்  நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட்டு வருவதையே இந்த இஸரேலிய இஹ்வானிய “காதல் கடிதத் தொடர்பு“ வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது.

இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் போக்கு,  பூகோள அரசியலின் மீது ஆதிக்கம் செலுத்தும்  அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகளின் நலன்காக்கின்ற அமைப்பாக மாற்றமடைந்து வருவதையே அவர்களின் நிகழ்கால நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன .

அவர்களின்  இறுக்கமான  இஸ்லாமிய கொள்கை ஏகாதிபத்திய சக்திகளின் திருப்திக்கு ஏற்றவாறு கொஞ்சம் கொஞ்சமாக உதித்ந்து வருகின்றது. தளர்ந்துவருகிறது.

அப்படி இல்லையென்றால்  இஸ்லாத்தின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் திணறிப் போயிருக்கும்  அமெரிக்கா,  எகிப்தில் இக்வான்கள் அடைந்த தேர்தல் வெற்றியை ஒரு போதும் அங்கீகரித்திருக்க மாட்டாது.

அமெர்க்காவின் ஆலோசனைப்படியே  எகிப்தை இஹ்வான்களால் ஆள முடியும். இஸ்ரேலை இனிய நண்பனாக ஏற்றுக்கொள்ளும் இஹ்வான்களின் நிலைக்கு இதுவும் காரணம். எகிப்தில் நடக்கப்போவது அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட இஸ்லாமிய கிலாபத் ஒன்றுதான்.

அதற்கு வெகுமதியாகத்தான் இஹ்வான்களுக்கு எகிப்தின் ஆட்சி கைமாற்றப்பட்டுள்ளது.  இஹ்வான்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அது மட்டுமல்லாமல் அமெரிக்காவின் நண்பர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு  ஆட்சி செய்வதற்க்கு ஒருபோதும் அமெரிககா இடமளிக்கப்போவதில்லை. இதற்க்கு ஹமாஸ் இயக்கம் ஒரு சிறந்த உதாரணம்  2006ம்  ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஹமாஸ் இயக்கம் மக்கள் ஆணையைப் பெற்று அமோக வெற்றி பெற்றது.

 ஆனால் அமெரிக்கா அந்த மக்களின் தீர்ப்பை தனது கால்களின் கீழே போட்டு மிதித்தது.  இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளுமாறு  பலஸ்தீனர்களை வற்புறுத்தியது.

உரிமையையும் தன்மானத்தையும் பாதுகாத்துக் கொண்டு  ஹமாஸ் இயக்கம் அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு மறுப்பு தெரிவித்தது. முடிவ  வெற்றி பெற்ற அரசாங்கத்திற்கு  பாரிய நெருக்குதல்களைக் கொடுத்தது. பொருளாதார தடைகளை விதித்தது.

இன்றும் கூட அமெரிக்காவின் பொருளாதார தடையினால் அந்நாட்டு மக்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு திறந்த சிறை ஒன்றின் வாழ்க்கையை அவர்கள் தனது சொந்த நாட்டிலேயே அனுபவித்து வருகின்றார்கள்.

எகிப்தின் இன்றைய இக்வான்களைப்போன்று, பாலஸ்தீன் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேல்  என்ற சட்ட விரோத ஒரு நாட்டை ஹமாஸ் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.

அமெரிக்காவின் எந்த எஜண்டாவிட்கும் ஹமாஸ் ஒரு போதும் ஏஜென்டாக மாற மாட்டாது என்பதைப் புரிந்துக்கொண்ட அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வேதேச சட்டங்களையும் மீறி பலஸ்தீனை இன்று துன்புறுத்தி வருகின்றது.

இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு எதிராக இருந்த கோட்டைகள்  உள்நாட்டு போர்கள் என்ற போர்வையில் சிதைந்து வருகின்றன .  லிபியாவும், சிரியாவும்  இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாடுகள். இன்று அந்த நாடுகள் பாரிய சிதை வுக்குள் திட்டமிட்டு தள்ளப்பட்டிருக்கின்றன.

அரபுலக எழுச்சியை அமெரிக்காவும் இஸ்ரேலும் தமக்கு சாதகமாக பயன் படுத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கு எதிராக அரணாக எழுந்து நிற்கும் ஹமாஸ் இயக்கத்தையும், ஹிஸ்புல்லாஹ் அமைப் பையும் மக்களிடமிருந்து ஓரம் கட்டும் முயற்சியில் அமெரிக்க சி ஐ ஏ தனது பிரசார உக்திகளை இன்று முடு க்கி விட்டிருக்கிறது.

சி ஐ எ இன் வேலைத்திட்டங்களுக்கு ஏற்ப அமெரிக்காவின்   அரசியல்  சதித் திட்டங்களை ஆதரித்து பத்வவாக வெளியிட கர்ளாவி போன்ற மூட முல்லாக்கள் முண்டியடித்துக் கொண்டு வருகின்றனர்.

அரபு அமெரிக்க பெட்ரோல் டொலர்களால் போஷிக்கப்படுகின்ற  அரச சார்பற்ற நிறுவனங்களாக தம்மை அழைத்துக் கொள்ளும் என்ஜீ ஓ  குஞ்சுகள் தான் வாழும் நாட்டு மக்களிடம் அமெரிக்காவின் அரசியல் நலன் சார்ந்த போராட்டங்களை இஸ்லாமாக போத்திது வருகின்றன.

அமெரிக்காவினால்  ஆயுதம் வழங்கி உயிரூட்டப்படும் உள்நாட்டுப் போர்களை இந்த அமைப்புகள் இஸ்லாமியப் போராட்டமாக, ஜிஹாதாக வர்ணித்து மகிழ்கின்றன.

லிபிய, சிரிய  போராட்டங்களை இதற்கு சிறந்த உதாரணமாக கொள்ளலாம் . தான் வெற்றிபெற்ற நாடுகளில் வளங்களை கொள்ளையிடுவதற்காக  போராட்டக் குழுக்களுக்கிடையிலான பகைமையை வளர்த்து மோத விட்டு தனது சுரண்டல் வியாபாரத்தை அமெரிக்கா அழகாக செய்து வருகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலில் இந்த இஸ்லாமிய (?) போராட்டங்கள் ஒபாமாவினதும் , மிட் ரோம்னி யினதும் வெற்றியை நிர்ணயிக்கும் போராட்டங்களாக மாறியிருக்கின்றன. சிரியா இந்த இஸ்லாமிய (?) போராளிகளின் கைக்கு வந்தால் அமெரிக்காவின் கைக்கு சிரியா வந்தைதைப் போன்று அமெரிக்கர்கள் மகிழ்ச்சி அடைந்து ஒபாமாவிற்கு வாக்களிப்பார்கள் என்று அவர் கனவு காணுகிறார்.

மிட் ரொம்னியோ தான் ஆட்சிக்கு வந்தால் சிரிய போராளிகளுக்கு அதிகமாக அயுதங்களை வழங்கி சிரிய போராட்டத்தை வெல்ல வைப்பதாகக் கூறி அமெரிக்க மக்களின் கரகோஷத்தைப் பெறுகிறார்.

இந்தப் பின்னணியைப் பார்க்கும் போது சிரியாவில் வைட்ஹவுஸ் கிலாபத் ஒன்றுக்கான  விதைகள் தூவப்படுகின்றன என்ற உண்மை புலனாகின்றது.

சிரியாவில்  நடக்கும்  போராட்டம் இதற்கு சிறந்த  உதாரணம்.  சிரியாவை பசார் அல் அசாத்திடமிருந்து மீட்டு எடுப்பது அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமானது மிட் ரொம்னியும், ஒபாமாவும் அடித்துக்கூறி தமது தேர்தல் பிரசாரத்தை சூடு பிடிக்க வைக்கின்றனர் .

அசாத்  இல்லாத உலகம் ஒன்றே அமைதிக்கு வழியென்று இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹூ அறைகூவல் விடுகின்றார். அஸாத் ஒழியட்டும் என்று அரபு நாடுகளும், அவற்றின் ஆஸ்தான முப்தியுமான கர்ளாவி முழங்குகிறார்.

மேற்கூறிய அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள், இக்வானிகள், கர்ளாவிகள் என்ற அத்தனை சக்திகளும் அமெரிக்க அரசியல் நலன் என்ற புதுயுகத்தை உருவாக்க (?) ஒரே தோணியில் வெள்ளை மாளிகையைநோக்கி வெற்றிகரமாகப் பயணிக்கின்றனர்.

ஆன்மீக, அரசியல், கருத்தியல் ரீதியாக அமெரிக்க, இஸ்ரேலிய கொள்ளைக் கூட்டத்தோடு கூத்தாடு போடும் இந்த ஜிஹாத் பேசும் குள்ளநரிக் கூட்டம் லிபியாவிலும், சிரியாவிலும் கிலாபத்திற்கான தளம் அமைப்பதாய்க் கூறிக் குப்ரிய்யத்திற்கு களம் அமைத்து வருகின்றனர்.

வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம் தேசங்களை கபளீகரம் செய்த கைகளோடு  கைக்குலுக்கிக் கொண்டு முஸ்லிம் தேசங்களையோ ஏனைய எந்த தேசத்தையோ  ஆக்கிரமிக்காத  சீனா, ஈரான், சிரியா, லிபியா போன்ற  நாடுகள் முஸ்லிம் உம்மத்தின் எதிரி நாடுகளாக இந்த அமெரிக்க சார்பு முல்லாக்களால் பிரகடனப்படுத்தப் படுகின்றன.

ஒரு இஸ்லாமியப் போராட்டத்தின் வெற்றி எப்படி அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் வெற்றியாக முடியும்?

இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலின் எதிரிகள் ஒருவர் பின் ஒருவராக அமெரிக்காவின் தூண்டுதலினால் இல்லதொழிக்கப்படுகின்றார்கள்.    தூனீசிய  மக்கள் புரட்சி தனது ஆதரவு நாடுகளில் உள்ள தலைவர்களுக்கு பாதகமாக எதுவும் நடந்து விடாமல் அமேரிக்கா மிக சாதுரியமாக பிரச்சினையை வேறுபக்கம் திசை திருப்பியது.

இன்று இஸ்ரேலுக்கு சாதகமான ஒரு நிலையை மத்திய கிழக்கில் அமரிக்கா ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் எழுதப்படாத மாநிலங்களாக இருக்கும் சவூதி அரேபியா , கத்தார் , பஹ்ரைன் , குவைத்  போன்ற நாடுகளில் ஏற்படுகின்ற எந்த மக்கள் எழுச்சியையும் அங்கீகரிக்க அமெரிக்கா தயாரில்லை.  இந்த நாட்டு மன்னர்கள் அமெரிக்கவிற்கு தேவையானவர்கள் . நண்பர்கள் .  ஏற்கனவே சொன்னது போல இஸ்ரேலை நேரடியாகவும் , சிலவேளை மறைமுகமாகவும் ஆதரிப்பவர்கள் . எனவே அரபுலக எழுச்சி மன்னராட்சிக்கு ஆபத்தாக வராமல் அமெரிக்கா தனது எதிரிகளை துவம்சம் செய்ய அதனை வேறுபக்கம் திசை திருப்பியது.

இஹ்வான்கள் ஆடசிபீடம் ஏறுவதற்கு முன்பாகவே இஸ்லாம் தான் அனைத்திற்கும் தீர்வு என்ற அந்த உயரிய வாசகத்தை தனது யாப்பிலிருந்து அகற்றியிருந்தனர். அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாக இஹ்வான்கள் இந்த உயரிய சுலோகத்தை தமது  யாப்பிலிருந்து தணிக்கைச் செய்தனர்.

இஹ்வான்களின் இஸ்லாம் தான் அனைத்திற்கும் தீர்வு என்ற இந்த உயரிய இலக்கிற்காக உயிர் நீத்த இஹ்வானிகளின் கல்லறைக் கூட இன்று கண்ணீர் வடிக்க வேண்டும்.

அன்று பலஸ்தீனுக்கு பைத்துல் முகத்தஸை தருசிப்பதைக் கூட மறைமுகமாக இஸ்ரேல் அங்கீகரிக்கப்படுகின்றது என்பதைக் காரணம் காட்டி பைத்துல் முகத்திஸுக்கு போகக் கூடாது என்று பத்வா வெளியிட்டார் “நவீன கிலாபத்தின் தாத்தா” வும் கத்தாரின் ஆஸ்தான இஸ்லாமிய அறிஞருமான(?)  யூசுப் கர்ளாவி.

இன்று இந்த இஹ்வானிய கர்ளாவியின் நிலை என்ன?

கர்ளாவி வாழும் கத்தார் நாடு இஸ்ரேலுக்கு கேஸ், பெற்றோல் அனைத்தையும் மிக குறைந்த விலையில் வழங்கி உதவி செய்கிறது. அப்படி உதவி செய்யும் கத்தார் மன்னனை போற்றிப் புகழ்ந்து பீற்றித் திரிகின்றார்  யூசுப் கர்ளாவி. ஆனால் இஸ்ரேலுக்கு எப்போதும் எதிராக இருந்த கதாபியை கொல்லுவதற்கு இந்தப் புல்லுருவியான  கர்ளாவி பத்வா வழங்கினார்.

இன்று இஸ்ரேலுக்கு இடையூறாக இருக்கும் சிரியாவை வீழ்த்துவதற்கும் அந்த நாட்டை  அமெரிக்காவின் கைக்கூலிகளின் கைகளில் சிக்க வைப்பதற்கும் தனது பத்வா வேட்டையை ஆரம்பித்திருக்கின்றார்.  அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் ஆதரவான இந்தக் கர்ளாவியின் அடுத்த பத்வா வேட்டைக்கு ஈரான் பாடுபொருளாக மாறப் போகின்றது.

கதாபியும், பஸார் அல் அஸாத்தும் மோசமான தலைவர்களாக இருக்கலாம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.  மத்திய கிழக்கில் உள்ள அத்தனை தலைவர்களும் கதாபிக்கும், அஸாத்திற்கும் நிகரானவர்களே. மோசமானவர்களே. அவர்களைக் கொல்லுமாறு பத்வா வெளியிட இந்தக் கர்ளாவிக்கு ஏன் அறிவு வருவதில்லை.

பஸார் அல் அஸாத்தும், கடாபியும் மக்களை கொலை செய்தார்களாம் அது உண்மைதான். இஸ்ரேல் பலஸ்தீன் முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததே!  அபபோது இஸ்ரேலிய தலைவர்களுக்கு இப்படி பகிரங்க கொலை பத்வா வழங்க கர்ளாவியால் ஏன் முடியாது போனது?
அதை விடுங்கள் கொலைகார இஸ்ரேலுக்கு உதவி வழங்கும் கத்தார் மன்னனுக்கும் கர்ளாவி கொலை பத்வாவை ஏன் வழங்கவில்லை.

லிபியாவிற்கு ஒரு ஷரீஆ, சிரியாவிற்கு ஒரு ஷரீஆ, கத்தாருக்கு ஒரு ஷரீஆவா? இந்த ஒரு பக்கச் சார்பு பத்வாவிற்கு ஆதாரத்தை கர்ளாவி எங்கிருந்து பெற்றார்.

இங்கு அமரிக்காவிற்கு விசுவாசமான மோசமான தலைவர்கள் பாதுகாக்கப்படுகின்றார்கள். அமெரிக்காவிற்கு எதிரான மோசமான தலைவர்கள் தண்டிக்கப்படுகின்றார்கள்.

அமெரிக்காவிற்கு எதிரான மோசமான தலைவர்களை கொலை செய்யுமாறு பத்வா வழங்கும் கர்ளாவி,  அமெரிக்காவிற்கு ஆதரவான மோசமான தலைவர்களை தலையைத் தடவி தட்டிக்கொடுக்கிறார்.

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவான நாடுகளையும், தலைவர்களையும் தனது பத்வா வேட்டையால் பதம் பார்ப்பதற்கு இந்தக் கர்ளாவி எப்போதும் முயற்சித்ததில்லை. ஏன் கத்தார் மன்னர் இஸ்ரேல் நாட்டின் ஆப்த நண்பன். இந்தக் கர்ளாவி அவரை ஒருபோதும் கண்டித்தது கூட கிடையாதே.

இந்தக் கர்ளாவியிடம்  ஏகாதிபத்திய “அமெரிக்க அரசியல் நலன் சார்ந்த கிலாபத்” பால் குடித்து வளர்ந்த முர்ஸியின் இஸரேல் காதலைக் கண்டு அதிர்ச்சியடைவதற்கு அவசியமேயில்லை.

இஸ்லாமியப் போராட்டத்தை ஏகாதிபத்திய அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப வழி நடாத்திய கர்ளாவி போன்ற இஹ்வான்களின் கடந்த கால தலைமைகள் செய்த துரோகத்தனத்தின் இன்னொரு முகமே முர்ஸியின்  இஸ்ரேல் மீதான இந்தக் காதல் கடிதம்.

அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக தனது பலத்தை பிரயோகித்து ஐ.நா சபையை ஆட்டங்காண வைத்த சீனாவையும், ரஷ்யாவையும்  அதனோடு சேர்த்து ஈரானையும் இஸ்லாமிய உம்மத்தின் எதிரி என்று இந்த கர்ளாவி என்ற பல் விழுந்த சிங்கம் கர்ஜித்திருக்கிறது.

நாளை கர்ளாவியின் வாயினால் இப்படியொரு பத்வா வெளிவரலாம்!
முர்ஸியின் வார்த்தையில் பதிக்கிறேன்..

“ இஸ்லாமிய உம்மத்தே இஸ்ரேலும் அமெரிக்காவும் எமது உயர்ந்த உன்னத நண்பர்கள்”

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...