Sunday 3 February 2013

பௌத்த கடும்போக்காளர்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் : முஸ்லிம் கவுன்சில்

ஜெனீவாவில் அடுத்தமாதம் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் நாட்டில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் கலவரத்தை தோற்றுவித்து அதன்மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்வதாக சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக பௌத்த தீவிரப் போக்குடைய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று காலை கொழும்பு ரண்டமுத்து ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சிறீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் அவர் இங்கு கருத்து வெளியிடுகையில்இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அவப் பெயரை ஏற்படுத்தி அதன் மூலம் இலாபம் தேட முனையும் தீய சக்திகள் இன்று பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்க முயற்சிக்கின்றன. இதற்கு நாம்ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரும் சுதந்திரம் கிடைத்த பின்னரும் முஸ்லிம்கள் மிகவும் விசுவாசமாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். பிரிவினையை ஏற்படுத்தவோ முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவோ முஸ்லிம்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை.


இவ்வாறான நிலையில் இன்று முஸ்லிம்கள் இந்த நாட்டைச் சூறையாட வந்தவர்கள் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த ஒரு குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜிஹாத் போராட்டத்தை நடத்த முனைவதாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நாம் ஜிஹாத் செய்ய வேண்டிய எந்தத் தேவையும் இந்த நாட்டில் கிடையாது. இந்த நாட்டு முஸ்லிம்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய சகல உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற்றிருக்கையில் ஏன் ஜிஹாத் செய்ய வேண்டும்? என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.


இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கருத்து வெளியிடுகையில்முஸ்லிம்களாகிய நாம் இலங்கையர்களாக இருப்பதையிட்டு பெருமைப்படுகிறோம். இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களோடும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகிறோம். அவ்வாறே தொடர்ந்தும் வாழ விரும்புகிறோம்.ஆனால் இன்று சில வெளிநாட்டு சக்திகள் ஒரு சிறு குழுவினருக்கு நிதியுதவியளித்து அவர்கள் மூலமாக பிரச்சினைகளை தோற்றுவிக்க முனைகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் முயன்று கொண்டிருக்கையில் மீண்டும் நாட்டை படுகுழியில் தள்ள வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் இங்கு கருத்து வெ ளியிடுகையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஜூலைக் கலவரம் ஏற்பட நாம் இடமளிக்கக் கூடாது. ஜூலைக் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாம் நன்கு அறிந்திருக்கிறோம். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவிக்கவே இவ்வாறான சக்திகள் முனைகின்றன. இதற்கு சமூகத் தலைமைகளும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இடமளிக்கக் கூடாது என்றார்.




நன்றி- நல்ல நண்பன்@att.net

Thursday 31 January 2013

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான இஸ்லாமிய படைப்பாளிகளின் கூட்டறிக்கை


இலங்கை இஸ்லாமியப் பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில், அந்த வீட்டில் இருந்த நான்கு மாதக் குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவ‌ளுக்கு ஜனவரி 9ம்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு (Behead) தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத் தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை, குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான்; குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது.
ஆரம்பகால இஸ்லாமிய சட்டங்கள் அதற்கு முந்தைய பாபிலோனிய, சுமேரிய நாகரீகங்களின் தொடர்ச்சியே. மேலும் முறைப்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் இல்லாத அந்த காலகட்டத்தில் நிச்சயமாக அது அப்போதைய சமூக இயங்கியலாக (Social Dialectics)தான் இருந்திருக்க முடியும். அதனால் தான் உலகின் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் அந்த சட்டங்களை பின்பற்றுவதில்லை. சில அரபு நாடுகள் ஐ.நா மனித உரிமை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளன. சவூதியில் அடிக்கடி இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. அவையெல்லாம் இம்மாதிரி சர்வதேச அரங்குகளில் விவாதப் பொருளாவதில்லை. சில தருணங்களில் மேற்கத்தியவர்கள் குற்றங்களை செய்து விட்டு பணம் செலுத்தி தப்பிய நிகழ்வுகளும் உண்டு. ஜார்ஜ் புஷ் காலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்தது.
மேலும் ரிசானா விஷயத்தில் சவூதிய சட்டம் சரியான முறையில் செயல்படவில்லை. விசாரணை, குற்றத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்படவில்லை. அவளுக்கு மொழிபெயர்ப்பு உதவிகள் மற்றும் வழக்கறிஞர் உதவிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் அவளிடம் ஒப்புதல் வாக்குமூலத்தில் கட்டாய கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. இதை அவளின் கடித வரிகள் தெரிவிக்கின்றன. 'நான் அந்த குழந்தையை கொலை செய்யவில்லை' என்றே கடைசி நிமிடம் வரை தெரிவித்துக் கொண்டிருந்தாள். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது). மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளுக்கு தன் தலைவெட்டப்பட போகிறது என்பது தெரியாது. மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் பணிப்பெண்ணாக அமர்த்த வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படவில்லை. அவளின் வயதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்க‌ வேண்டும். வெறும் பாஸ்போர்ட் வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது தவறு. வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்காக தடயவியல் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் ரிசானா விஷயத்தில் இவை எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மேலும் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதாக சொல்லப்படும் சவூதி அரேபிய அரசு புட்டிப்பால் ஊட்டப்பட்டதற்கான மருத்துவ காரணத்தை தெரிவிக்கவில்லை. குற்றம் நடந்தபோது அவளின் வயது 17. சவூதியில் கொலைவழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு உடனடியாக தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் ரிசானா விஷயத்தில் அது ஏழு வருடங்கள் தள்ளிப்போனது இவ்வழக்கில் மனித நியாயத்தை மேலும் வலுப்படுத்தவதாக உள்ளது. குற்றத்திற்கு ஈடாக ரத்தப்பணம் (Blood money)கொடுக்க அங்கிருந்தவர்கள் தயாராக இருந்தும் இறந்த குழந்தையின் தாய் சம்மதிக்காத காரணத்தால் இது மேலும் தள்ளிப்போனது. சவூதிய சட்டங்கள் சாசுவதமானதன் விளைவு இது.
மேலும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டது இலங்கைப் பெண் என்ற நிலையில் இலங்கை அரசு இதற்கான சரியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் சம்பிரதாய அளவிலே இருந்தது ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகள். ஏற்கனவே போரில் லட்சக்கணக்கான தமிழர்களை குண்டு வீசி கொலை செய்து , சர்வதேச அரங்கில் குற்றவாளியாக இருக்கும் ராஜபக்ஷே எப்படி இதை கவனிப்பார்? மொழிபெயர்ப்பில் தவறு நடந்து விட்டது என்று இலங்கை அரசின் வழக்கறிஞரே குறிப்பிட்டார். ரிசானாவிற்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட தருணத்தில் அது வலுவாக மேல்முறையீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நிராகரிக்கப்படும் போது சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றிருக்க வேண்டும். தன் மீதான குற்றக் கறையைப் போக்க சர்வதேச உதவியை நாடும் ராஜபக்ஷே இதற்கு தேடாமல் இருந்தது மிகப்பெரும் அவலம்.
இந்த தருணத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்த கூட்டறிக்கை தெரிவித்துக் கொள்கிறது. அவளின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. வஹ்ஹாபிய மரபுகளை பின்தொடரும் சவூதிய நிலப்பிரபுத்துவ அரசிற்கும், அவளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காத ராஜபக்ஷேவிற்கும் கடும் கண்டனத்தை இந்த அறிக்கை பதிவு செய்கிறது.
இவண்
தமிழ்நாடு மற்றும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டமைப்பு 
கவிஞர் ரியாஸ் குரானா (இலங்கை) 
கவிஞர் பைசல் (இலங்கை) 
கவிஞர் அஸ்மின் (இலங்கை) 
இம்தாத் (இலங்கை) 
மஜீத் (இலங்கை) 
கவிஞர் ரிஷான் செரீப் (இலங்கை) 
கவிஞர் பஹீமா ஜஹான் (இலங்கை) 
கவிஞர் லறீனா ஹக் (இலங்கை) 
எ.பௌசர் (ஆசிரியர் எதுவரை இணைய இதழ், லண்டன்) 
கவிஞர் ஏ.ஆர். பர்ஸான் - (இலங்கை) 
ஏ.பி.எம். இத்ரீஸ் (இலங்கை) 
அப்துல் ரசாக் (எழுத்தாளர், இலங்கை) 
கவிஞர் சல்மா (சென்னை) 
கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் (தக்கலை) 
பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா (தக்கலை) 
எழுத்தாளர் முஜிபு ரஹ்மான் (தக்கலை) 
நாவலாசிரியர் மீரான் மைதீன் (நாகர்கோவில்) 
இடலாக்குடி ஹசன் (எழுத்தாளர்) 
குளச்சல் மு.யூசுப் (மொழிபெயர்ப்பாளர்) 
அகமது கபீர் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி) 
சம்சுதீன் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி) 
கவிஞர் பைசல் (தக்கலை) 
எச்.பீர்முஹம்மது (எழுத்தாளர், வேலூர்) 
நதீம் (மனித உரிமை ஆர்வலர், வாணியம்பாடி) 
ஆபிதீன் (எழுத்தாளர், நாகூர்) 
சதக்கத்துல்லா ஹசனீ (பதிப்பாசிரியர் அல் ஹிந்த் மாத இதழ், மதுரை) 
அன்வர் பாலசிங்கம் (எழுத்தாளர், புதுக்கோட்டை) 
பீர்முகமது (செய்தியாளர், சென்னை) 
ரபீக் இஸ்மாயில் (திரைப்பட இயக்குநர், சென்னை) 
வழக்கறிஞர் உமர் (இன அழிப்புக்கு எதிரன இஸ்லாமிய இளைஞர் இயக்கம், திருப்பூர்) 
கவிஞர் சாகிப் கிரான் (சேலம்) 
தாஜ் (எழுத்தாளர், சீர்காழி) 
வஹீதா பானு (கரூர்) 
சபீலா தஸ்னீன் (மென்பொருள் பொறியாளர், சென்னை) 
முனைவர் லைலா பானு (நாகர்கோவில்) 
அனுஷ் கான் (பதிப்பாளர், பொள்ளாச்சி) 
பைசல் மசூத் (பத்திரிகையாளர், சென்னை) 
களந்தை பீர்முஹம்மது (எழுத்தாளர், சென்னை) 
கீரனூர் ஜாகிர் ராஜா (எழுத்தாளர், சென்னை) 
சிராஜுதீன் (புத்தகம் பேசுது இதழ், சென்னை) 
அர்ஷியா (எழுத்தாளர், மதுரை) 
மௌலவி முஹம்மது ரபீக் மிஸ்பாஹி (மதுரை) 
முனைவர் அன்வர் பாஷா (திருப்பத்தூர்) 
அனார்கலி (முனைவர் பட்ட ஆய்வாளர், டெல்லி பல்கலைகழகம்) 
அமீர் அப்பாஸ் (திரைப்பட உதவி இயக்குநர், சென்னை) 
பப்பு சிராஜ் (மனித உரிமை ஆர்வலர், தக்கலை) 
அஷ்ரப்தீன் (மானுட விடுதலைக் கழகம், அருப்புக்கோட்டை) 
அமீர் (வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்)
***
சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நஃபீக் எழுதிய கடிதம்!
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.
குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார். அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள்.
கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன். சரியான நினைவு எனக்கில்லை, குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.
அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன், நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை.
ரிஸானா நபீக்.
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
நன்றி - கீற்று

Monday 24 December 2012

புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம் !



கெபாவா துலி யாங் மஹா முலியா பாதுகாசேரி பாகிந்தா சுல்தான் ஹாஜி ஹஸ்ஸனல்போல்கியா அல் முயிஜாதீன் வதாவுல்லா இப்னிஅல்மார்ஹம் சுல்தான் ஓமர் அலி சாய்புதீன்சாஅதுல் காய்ரி வாத்தியன் ஜிசிபி, ஜிசிஎம்ஜி(கொஞ்சம் மூச்சு வாங்கிக்குங்க) என்ற பெயர் படைத்த புருணே சுல்தான் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக திகழ்பவர்.

1946-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்த சுல்தானுக்கு கடைசியாக கிடைத்த தகவல்களின் படி 3 மனைவிகள் மூலம் 5 மகன்கள், 7 மகள்கள் உள்ளனர்.  ராணி அனக் சலேஹா முதல் மனைவியாக செயல்படுகிறார். சுல்தானது இரண்டாவது மனைவி ராணி மரியத்தை 2003-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இப்போதைய இரண்டாவது மனைவி அஸ்ரினாஸ் மஹர் ஹக்கீம் சுல்தானை விட 32 வயது இளையவர்.
சுல்தானின் 5 வது மகள் 32 வயதான ஹபிசா வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றவர். பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் 29 வயதான முகமது ருசானியை அவர் 2012 செப்டம்பர் 20-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்துக்கு 40 மில்லியன் யூரோ (சுமார் ரூ 270 கோடி) செலவாகியிருக்கிறது. 3000 விருந்தினர்கள் கலந்து கொண்ட 4 நாட்கள் திருமணத்தில் வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணைப் பறிக்கும் உடைகளில் மணமக்கள் ஜொலித்தனர்.
திருமண விழாவில் தாய்லாந்து பிரதமர், மலேசிய பிரதமர், கம்போடியா பிரதமர் உள்பட ஏராளமான வெளிநாட்டுத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
புருணே சுல்தானிடம் $15 பில்லியன் யூரோ (சுமார் ரூ 1 லட்சம் கோடி) சொத்து உள்ளது. ஒரு காலத்தில் $20 பில்லியனுக்கும் அதிக சொத்துடன் உலகிலேயே முதல் பணக்காரராக இருந்த சுல்தான் அவற்றை எல்லாம் எப்படி சம்பாதித்தார், எப்படி செலவழிக்கிறார் என்று சில விவரங்களை பார்க்கலாம்.
சுல்தானின் அரண்மனையில் 2 லட்சம் சதுர அடியில் 1788 அறைகளும், 257 குளியலறைகளும் உள்ளன. பெரும்பாலான அறைகளில் தங்கத்தால் இழைக்கப்பட்ட சுவர் மறைப்புகள் தொங்குகின்றன. குளியலறைகளில் தங்கக் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அவரிடம் மொத்தம் 3,000 முதல் 5,000 கார்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கின்னஸ் புத்தகம் அவரிடம் 500 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் உள்ளதாக பதிவு செய்துள்ளது. அதில் முழுக்க வெள்ளி தகடுகளால் செய்யப்பட்ட காரும் உண்டு.
புருணே சுல்தானின் சகோதரர் ஜெப்ரி போல்கையா உலக அளவில் ஒரு பிளேபாயாக புகழ் பெற்றுள்ளார். அவர் புருணே அரசாங்கத்திலிருந்து $10 பில்லியன் டாலர் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு சுல்தானுடன் பல ஆண்டுகள் வழக்கு நடத்தினார்.
புருனே சுல்தான் மகள் திருமணம் நடைபெற்ற அரங்கு
புருணே சுல்தான் மகள் திருமணம் நடைபெற்ற அரங்கு
சுல்தான் தனது தனிப் பயன்பாட்டுக்காக தங்கத்தால் இழைக்கப்பட்ட போயிங் 747-400 விமானம் ஒன்றையும், ஆறு சிறு விமானங்களையும் இரண்டு ஹெலிகாப்டர்களையும் வைத்திருக்கிறார்.  போயிங் விமானத்தில் 400 பேர் பயணம் செய்ய முடியும். மேலும் விமானம் முழுக்க நட்சத்திர விடுதியின் அனைத்து வசதிகளும் இருக்கின்றன.
முடி வெட்டிக் கொள்வதற்காக 15,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் (ரூ 12.7 லட்சம்) செலவழித்து லண்டனை சேர்ந்த ஒரு சிகை திருத்தும் தொழிலாளியை விமானத்தில் அழைத்து வரச் செய்கிறாராம். ஒரு முறை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனி அறை பதிவு செய்து கென் மோடஸ்தோ என்ற சிகை திருத்துபவரை லண்டனிலிருந்து வரவழைத்தாராம். அவருக்கு பல ஆயிரம் டாலர்கள் கட்டணமாக கொடுக்கிறார். லண்டனில் 30 பவுண்டுகள் மட்டுமே வசூலிக்கும் கென் சுல்தானுக்கு 16 ஆண்டுகளாக முடி வெட்டுகிறார்.
மத்தியதரைக் கடலில் மிதக்கும் மாளிகை, உலகின் பல பெரு நகரங்களில் தங்குவதற்காக சொந்த மாளிகைகள் என்று உலகெங்கும் தனது ஜாகைகளை போட்டிருக்கிறார் சுல்தான். லண்டனில் அவருக்கே மட்டுமான மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக சொத்து கொஞ்ச கொஞ்சமாக கரைந்து கொண்டிருக்கிறது. அவ்வளவு சொத்தும் எங்கிருந்து வந்தது, அவற்றை யார் சம்பாதித்து கொடுக்கிறார்கள், சுல்தான் அவற்றை எப்படி பராமரிக்கிறார் என்று பார்க்கலாம்.
சுல்தான் 1959-ம் ஆண்டு புருணேயின் அரசியலமைப்பு சட்டத்தின் படி நாட்டின் தலைமை ஆட்சியாளராகவும் 1962-ம் ஆண்டு எடுத்துக் கொண்ட அவசர நிலை அதிகாரங்களுடனும் ஆட்சி புரிகிறார். அவரே புருணேயின் பிரதம மந்திரியாகவும் பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சராகவும் செயல்படுகிறார்.
புருணேயின் எண்ணெய் வளத்தின் பரிமாணத்தை புரிந்து கொள்வதற்கு ஒரு ஒப்பீட்டை பார்க்கலாம்.
அதாவது உலகின் எண்ணெய் உற்பத்தி மதிப்பு ஒரு நபருக்கு ஆண்டுக்கு ரூ 25 ஆயிரம் மதிப்பில் உள்ளது. புருணேயில் தனி நபர் உற்பத்தியின் மதிப்பு அதை விட சுமார் 30 மடங்கு அதிகமாக ஆண்டுக்கு ஒரு நபருக்கு கிடைக்கும் எண்ணெய் மதிப்பு ரூ 7.45 லட்சமாக இருக்கிறது. ஒப்பீட்டளவில் இந்தியாவில் ஒரு நபருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ 1,500 மதிப்பிலான எண்ணெய் கிடைக்கிறது. புருணேயின் பக்கத்து நாடுகளான மலேசியாவில் ரூ 47 ஆயிரம் மதிப்பு எண்ணெயும், இந்தோனேஷியாவில் ரூ 12 ஆயிரம் மதிப்பிலும் எண்ணெய் ஒரு நபருக்கு ஆண்டுக்கு உற்பத்தியாகிறது.
புருணேயில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.  பெரும்பான்மை மக்கள் அரசுப் பணியில் உள்ளனர். அபரிதமான எண்ணெய் வளத்தின் மூலம் கிடைக்கும் பெரு வருமானத்தில் பெரும்பகுதியை தனக்கு வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார் சுல்தான்.
புருனே சுல்தான் மகள் திருமணக்கோலத்தில்
புருணே சுல்தான் மகள் திருமணக்கோலத்தில்
புருணேயின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனமான ஷெல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எண்ணெய் அகழ்வதற்கான பொறுப்பை ஷெல் புருணே என்ற பெயரில் செய்கிறது.  சுல்தானுக்கு போய்ச் சேர வேண்டிய பங்கை கொண்டு சேர்த்து விடுகிறது. அதன் மூலம் புருணே சுல்தான் தனது சொத்துக்களை சேர்த்திருக்கிறார்.
ஷெல் எண்ணெய் நிறுவனம் புருணேவில் 20,000 மைல்களுக்கும் அதிக நீளமான எண்ணெய் குழாய்களை பராமரிக்கிறது. ஒவ்வொன்றும் 40,000 பேரல் பிடிக்கும் சுமார் 50 அடி விட்டத்திலான டாங்குகளில் எண்ணெய் சேமித்து வைக்கப்படுகின்றது. காடுகளின் நடுவில் ஒரு முழுமையான பெட்ரோ வேதி குழுமத்தை ஷெல் உருவாக்கியிருக்கிறது.
புருணே ஷெல் (பிஎஸ்பி) புருணே அரசாங்கமும், ராயல் டச்/ஷெல் குழுமமும் சம அளவு பங்கு வைத்துள்ள கூட்டு நிறுவனம். அது நாட்டின் ஒரே சுத்திகரிப்பு ஆலையை நடத்துகிறது. பிஎஸ்பியும் அதன் துணை நிறுவனங்களும் நாட்டின் மிகப்பெரிய வேலை தருபவர்களாக இருக்கின்றனர். அரசாங்கத்துக்கு அடுத்தபடியாக. பிஎஸ்பியின் சிறு சுத்திகரிப்பு ஆலை ஒரு நாளைக்கு 10,000  பேரல்களை சுத்திகரிக்கிறது. இதன் மூலம் உள்நாட்டுத் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.
தொழிற்சாலை பகுதியைத் தாண்டி ஷெல் தொழிலாளர்களும் குடும்பத்தினருடன் வசிக்கும் சேரியா என்று நகரீயம் உள்ளது. சேரியா ஒரு கார்ப்பரேட் நகரீயம். ஷெல் விமான நிலையத்தில் சிங்கப்பூர், குவாலாலம்பூர், பாங்காக், பாலி, ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற இடங்களிலிருந்து ஷெல் ஊழியர்கள் வந்து இறங்குகின்றனர். ஆம்ஸ்டர்டாமிலிருந்து கேஎல்எம் விமானத்தில் ஷெல் தொழிலாளர்களின் குடும்பத்தினர் வந்து சேருகின்றனர். ஷெல் மருத்துவமனையில் பிறந்த குழந்தை, ஷெல் ஊழியர்களுக்கான பள்ளிக்குப் போய், ஷெல் கிளப்பில் ஓய்வெடுத்து, ஷெல் பீச்சில் விளையாடி, ஷெல் கடையில் பொருட்கள் வாங்கி வாழலாம். ஷெல் வானொலி நிலையம் கூட இருக்கிறது.
நாடு முழுவதும் மது பானங்கள் தடை செய்யப்பட்டிருந்தாலும் ஷெல் ஆயில் இடங்களில் மது பானங்கள் வழங்கப்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஷெல் நீச்சல் கிளப்பில் நீந்தி விட்டு, ஷெல் டென்னிஸ் கிளப்பில் விளையாடி விட்டு, ஷெல் உணவு கூடத்தில் சாப்பிட்டு விட்டு ஷெல் பேருந்தில் ஏறி ஷெல் விமான நிலையம் போய்ச் சேரலாம்.
புருணேயில் இயற்கை வாயு, 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புருணே லிக்விபைட் நேச்சுரல் கேஸ் தொழிற்சாலையில் திரவமாக்கப்படுகிறது. அது உலகிலேயே மிகப்பெரிய எல்என்ஜி (திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு) ஆலைகளில் ஒன்று. ஒப்பந்தப்படி புருணே ஜப்பானுக்கு ஆண்டுக்கு 5 மில்லியன் டன் எல்என்ஜி வழங்க வேண்டும். ஜப்பானிய நிறுவனம் மிட்சுபிஷி, ஷெல் மற்றும் புருணே அரசாங்கத்துடன் கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 1995 முதல் அந்த நிறுவனம் 7 லட்சம் டன் கொரியா வாயு நிறுவனத்துக்கு சப்ளை செய்துள்ளது.  உள்நாட்டு மின்சார உற்பத்திக்கு சிறிதளவு பயன்படுத்தப்படுகிறது.
புருணேவில் இது வரை உறுதி செய்யப்பட்ட எண்ணெய் வளம் 2015 வரை போதுமானது. ஆழ்கடல் தேடலின் மூலம் கூடுதல் கையிருப்புகள் கிடைக்கலாம் என்று தெரிய வருகிறது. பொருளாதாரத்தை வேறு திசைகளில் வளர்ப்பதற்கான முயற்சிகள் பெருமளவு வெற்றி பெறவில்லை. எண்ணெய் துறையைத் தவிர விவசாயம், காடுகள், மீன் பிடித்தல், வங்கி ஆகியவையும் சிறிதளவு நடைபெறுகின்றன.
புரூனே வரைபடம்புருணேயின் எண்ணெய் உற்பத்தி 1979ல் 2,40,000 பேரல்களாக இருந்தது. அதன் பிறகு வேண்டுமென்றே குறைக்கப்பட்டு இப்போது ஒரு நாளைக்கு சுமார் 1.5 லட்சம் பேரல் அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆசிய பசிபிக் பகுதியில் இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்து புருணே எல்என்ஜி ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது. புருணேயின் எண்ணெய் ஏற்றுமதியில் ஜப்பானின் பங்கு 1982ல் 42 சதவீதத்திலிருந்து 1998ல் 19 சதவீதமாக குறைந்தது. தாய்வான், ஆசியான் நாடுகள், அமெரிக்கா ஆகியவை புருணே நாட்டின் எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளும் மற்ற முக்கிய நாடுகள்.
அரபு நாடுகள், நைஜீரியா, கொலம்பியா, ஈக்வேடர், பர்மா, காஸ்பியன் கடல் என்று எங்கெங்கு நுழைந்தாலும் தனது கறையை படியச் செய்து விடும் பன்னாட்டு எண்ணெய் வியாபரத்தின் இன்னொரு பெருங்கறைதான் புருணே. அந்த எண்ணெய் வளம் உருவாக்கும் வக்கிரமான ஆடம்பரமும், பேராசையும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் பன்னாட்டு அரசியல் கணக்குகளும்தான் புருணே சுல்தான் போன்ற வக்கிரங்கள் உலகில் இருப்பதை சாத்தியமாக்குகின்றன.  புருணே சுல்தானும் அவரது சகோதரரும் உலகின் மிகப் பெரிய ஊதாரிகளாகவும் கேடு கெட்ட மனிதர்களாகவும் உருவெடுத்துள்ளனர்.
புருணே சுல்தானின் அரசுக்கும் அரசியலுக்கும் அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள் குடை பிடித்து நிற்கின்றன. சுல்தானின் பாதுகாப்புக்காக பிரிட்டிஷ் அரசு கூர்க்கா படையணி ஒன்றை கொடுத்துள்ளது. மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் உலகளாவிய எண்ணெய் வழங்கல் சங்கிலியின் ஒரு கண்ணியாக சுல்தான் ஒழுக்கமான முஸ்லீமுக்கு பரலோகத்தில் கிடைப்பதாக வாக்களிக்கப்பட்டுள்ள சொர்க்கத்தை இகலோகத்திலேயே அனுபவிக்கிறார்.
வீடியோ - திருமண வைபவம்

நன்றி- வினவு

Saturday 22 December 2012

கொழும்பில் சிங்களவர்கள சிறுபான்மையாகியும் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நானும் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது . முஸ்லிம் பிரமுகர்களின் சந்திப்பில் கோதாபய !


கொழும்பில்  சிங்களவர்கள சிறுபான்மையாகியும் முஸ்லிம் தமிழ் சமூகங்கள் பெரும்பான்மையாகியுள்ளதை நானும் வலியுறுத்த வேண்டிய நிலை உள்ளது . 
முஸ்லிம் பிரமுகர்களின் சந்திப்பில் கோதாபய !
(ஏ எம் எம் முசம்மில் பதுளை )
 “இன்று இந்தநாட்டில் சிறுபான்மையினருக்கு உரிய உரிமைகளை வழங்கப்படவில்லை எனும்  சர்வதேச அழுத்தங்கள் இந்தநாட்டின் மீது பிரயோகிக்கப்படும் நிலையில் , இந்தநாட்டு சிரும்பான்மையினத்தவர்களின் இனப்பரம்பலை குறிப்பிடும் போது கொழும்பில் பௌத்தர்களை விட முஸ்லிம்களினதும் தமிர்களினதும் விகிதாசாரம் கூடியுள்ளதை பிறநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அதன் மூலமாக இந்தநாட்டில் சிறும்பான்மையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் நான் எடுத்துக்காட்டிஇருக்கின்றேன்.” என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷே அவரது அமைச்சு காரியாலயத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரமுகர்களினுடனான சந்திப்பின் போது தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர் “முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் ஒரு சிறு எண்ணிக்கையை கொண்டவர்கள். அவர்களைப்பற்றி தூக்கிப்பிடித்து நாங்கள் செயற்படுவதால் அவர்களை வீரர்களாக்கும் செயலையே நாங்கள் செய்வதாகி விடும்.

பாதுகாப்பை பற்றி முஸ்லிம்கள் அச்சப்பட தேவையில்லை. இணைய தளங்களில் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு செயல் படுகின்றார்கள். ஜனாதிபதிக்கும் எனக்கும் சேறு பூசுவதற்கே இவ்வாறு திட்டமிட்டு செயபற்டுகின்றார்கள் .வெளிநாடுகளில் இருந்தது செயற்படும் அவர்களின் இணையதளங்களை முடக்குவது முடியாத காரியமாக உள்ளது.
இந்நாட்டிலிருந்து செயற்படும் அவ்வாறான இணையதளங்களை பற்றி தகவல்களை தந்தால் அவற்றிற்கு எதிராக எடுக்கவேண்டிய  நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்து பார்க்கலாம்.

முஸ்லிம்களுக்கு எதிராக ஒட்டப்படும் போஸ்டர்களை உடனடியாக கழட்டுவதட்கு நான் நடவடிக்கை எடுத்துள்ளேன் . அதே வேலை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் ஆர்ப்பாட்ட பேரணிகளையோ ஊர்வலங்களையோ தடுக்க முடியாது. 

அவ்வாறு தடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாக உள்ளதால் அரசாங்கத்தை அது நெருக்கடிக்கு உள்ளாக்கும். முஸ்லிகளாகிய நீங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எம்மிடம் முன் வைப்பது போல் அவர்களும் பலவிடயங்களை சுட்டிக்காட்டி எமக்கு பல அழுத்தங்களை பிரயோகிக்கின்றார்கள். உதாரணமாக வெளிநாடுகளில் முஸ்லிம்களுக்கு பர்தா அணிந்து முகம்மூடி செல்வதற்கு அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் அதற்கு அனுமதி அளித்துள்ளீர்கள் . முன்பு பல்கலைகழகங்களில் முகம் திறந்து பர்தா அணியாமல் வந்தவர்கள் இப்போது அவ்வாறு வருகின்றார்கள்.

ஆகவே அதை தடுங்கள் என்று கூறுகின்றார்கள் . நாங்கள் எப்படி அதை தடுப்பது.? ........? என்றும் கேள்வி எழுப்பிய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், “ பொது பல சேனா” எனும் அமைப்பு பௌத்த மதத்தின் வேறு பல முக்கிய காரணங்களுக்காக தொற்றுவிக்கப்பட்டதொரு  அமைப்பு. இன்று அதை தோற்றுவித்தவர்களின் கட்டுப்பாட்டையும் மீறி அது சென்று கொண்டிருக்கின்றது. பெரும்பான்மையான பௌத்த மக்கள் இதன் போக்கை விரும்பவில்லை. ஆகவே நீங்கள் உங்கள் மக்களுக்கு சொல்லுங்கள் அச்சப்பட தேவையில்லை என்று . இந்தநாட்டின் உளவு துரையின் பிரதான அதிகாரியாக உள்ளவர் ஒரு முஸ்லிம் ஆவார்” என்றும் குறிப்பிட்டார்.

 இந்த நிகழ்வில் ஜம்மியதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ,செயலாளர் முபாரக் மதனி, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என் எம் அமீன், அகில இலங்கை வை. எம். எம். ஏ. தலைவர் டீன், நல்லாட்சிக்கான மக்கள் இயக்க தலைவர் அ ரஹ்மான், யங் ஏசியா டெலிவிசன்   . எம் ஹில்மி, மலையக முஸ்லிம் மாநாட்டின் செயலாளர் ஏ எம் எம் முசம்மில், பதுளை டீன் பென்சி உரிமையாளர் நளீம் டீன் (பாதிக்கப்பட்ட முஸ்லிம் வியாபாரி) கண்டி ஜம்மியத்துல் உலமா உறுப்பினர்கள்  உட்பட முப்பது பேர் அடங்கலான குழு இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.                            

Monday 3 December 2012

“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .


“இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் இனவாத சக்திகளுக்கு வெளிநாட்டு உதவிகள் வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ச என்னிடம் தெரிவித்தார்” .ரவூப் ஹகீம் பதுளையில் தெரிவிப்பு .




எ எம் எம் முஸம்மில்.
 பதுளையில் முஸ்லிகள் தற்போது எதிர் நோக்கி உள்ள இனவாத செயற்பாடுகளுக்கும் இலங்கையில் பிற பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும்  இனவாத செயற்பாடுகளுக்கும் வெளிநாட்டு உதவிகளே காரணம்  என்று இவ் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சராக உள்ள விமல் வீரவன்ச என்னிடம் தெரிவத்தார். இந்நாட்டின் எந்த ஒரு அரசாங்கமும் முஸ்லிம்களை பகைத்துக் கொண்டு ஆட்சி செய்ய முடியாது. ஆகவே அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நோக்கில் இன்று இவ்வாறு சில தீவிரவாத அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இவர்களின் செயற்பாடுகளை அரசாங்கம் வீறுகொண்டு எதிர்க்க மாட்டாது என்றும் இச்செயற்பாடுகளுக்கான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அரசாங்கம் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கநேரிடும் ஆகவேதான் ஒரு அசட்டுத் தனமான தைரியத்தில் தமது தீவிரமான செயற்பாடுகளில் ஈடு பட்டுள்ளனர். எவ்வாறாயினும்  பதுளையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலையை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவேன். முஸ்லிம்களுக்கு எதிரான இவ் அசாதாரண நிலை நாடெங்கிலும் வியாபித்துள்ளது . என்று அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார் .பதுளைக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்தத வேளையில் பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியிலும் பதுளை அல் அதான் மா வி யிலும் பதுள்ளை ஜூம்மாப்பள்ளியிலும் நடைபெட்ட்ற சந்திப்புகளிள் கருத்துகளை தெரிவிக்கும் போது மேற்படி கூறிய அமைச்சர் தொடர்ந்ததும் கருத்து தெரிவிக்கும் போது, பதுளை முஸ்லிம்கள் ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாவிடினும் பல அபிவிருத்தி நிலைகளை எட்டியுள்ளனர். ஏற்பட்டுள்ள இவ் அசாதாரண நிலையை சாமர்த்தியமாக பதுளை முஸ்லிம்கள் கையாண்டுள்ளது பாராட்டுகுரயது. இன்று ஒரு முஸ்லிம் மகளிர் கல்லூரியை பெற்றுக்கொள்ளவும் ஆயிரம் பாடசாலை திட்டத்தில் அல் அதான் மா வி யை சேர்க்கவும் உங்களால் முடிந்துள்ளது. ஆகவே இப்பாடசாலைகளின் எதிர்கால தேவைகளுக்கு நிச்சயமாக என்னாலான முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக உள்ளேன் என்றும் தெரிவித்தார்.
  ஜனாதிபதியவர்களுக்கு எழுத்தப்பட்ட பதுளை முளிம்கள் எதிர்நோக்கயுள்ள பொது பல சேனாவின் நெருக்குதல்கள் பற்றிய எழுத்துமூல முறைப்பாட்டின் பிரதின்றையும் அழ அதான் மா வி யின் கனிஷ்ட பிரிவிற்க்கான காணி யொன்னரின்தேவைப்பாடு அடங்கிய மகஜர் ஒன்ரையும் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.                     


போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...