Friday 31 October 2014

சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசும் சக்தி ஓரம் போகுமா?



சிங்கள பௌத்த பேரினவாதம் கூர்மையடைந்த நிலையில், 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் வரப்போகின்றது. 2004ல் வன்னிமக்களின் வாக்குரிமையை தடுத்து நிறுத்தி, ஒரு சிறிய வாக்கு வித்தியாசத்தில் ஐ.தே.க வை தோற்கடித்து ஆட்சியமைத்த மஹிந்த ராஜபக்ஸ, 2009ல் புலிகளை அடியோடு அழித்த பெருமிதத்தில் சிங்கள மக்களின் விடுதலை வீரராக தன்னை அடையாளப்படுத்தி ஆட்சியைப் பிடித்தார்.
2015 தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு ‘வழி’ வரப்பிரசாதமாக வந்திருக்கின்றது. ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் புலிகள் இயக்கத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கியதால், தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு மையப்புள்ளி மஹிந்தவின் மடிமீதே வந்து வீழ்ந்திருக்கின்றது.
பெரஹர ஊர்வலத்திற்கு முன்னால் கசையடிப்பவன் வந்து செய்தி சொல்வது போல், அரசு அச்சிட்ட ‘புலி’ ரணில் போஸ்டர்கள் முன்னால் வெளிவந்து செய்தியை சொல்லி விட்டது.
எதிர்வரும் 2015 ஜனாதிபதித் தேர்தல் புலி பற்றி ஒரு கிலியை தெற்கின் சிங்கள பிரதேசங்களில் பரப்பும் தேர்தலாகத்தான் தடம்பதிக்கப் போகின்றது. ஐரோப்பிய யூனியன் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கியிருப்பது. மஹிந்தவின் தேர்தல் பிரசாரத்திற்கு உதவப்போகின்றது.
இந்தத் தடை நீக்கத்தை அச்சாணியாக வைத்தே மஹிந்தவின் தேர்தல் பிரசாரக் சக்கரம் சுழலப்போகின்றது. தற்போது ஐரோப்பிய யூனியனின் இந்தத் தடை நீக்கத்திற்கும் ரணில் விக்கிரமசிங்க உதவியுள்ளார் என்று மஹிந்த தரப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஐ.தே.க.வோ இதை ஓர் அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்கின்றது.
புலிகள் மீதான தடை நீக்கம் மஹிந்த அரசாங்கத்திற்கு அனுகூலமாக இருப்பதால், புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கத்தை அரசாங்கம் அறிந்தும், அறியாதது போல் இருந்திருப்பதற்கான சாத்தியங்கள் நிறையவே இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் ஐரோப்பிய யூனியன் நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்கு வருவதை அறியயாமல் இருந்தது கூட பல சந்தேகங்களை எழுப்புகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் மிகவும் பொறுப்புவாய்ந்த இராஜதந்திர ரீதியில் செயற்படவேண்டிய நிலையிலுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த வழக்கு விவகாரத்தில் கோட்டைவிட்டு விட்டதையும், அந்தக் குற்றத்தை எதிர்க்கட்சியின் மீது திணிப்பதையும் சிறுபிள்ளைத்தனமான செயலாகத்தான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போர் குற்ற விவகாரத்தில் மின்சாரக் கதிரையை முத்தமிடவும் தயாரென முழங்கி சிங்கள வாக்குகளை கொள்ளையடித்த ராஜபக்ஸ இம்முறை ஐரோப்பிய யூனியனின் புலி தடை நீக்கத்தை அடிப்படையாக்கி மீண்டுமொருமுறை வாக்குகளை கொள்ளையிட முன்வரலாம்.
இது இப்படியிருக்க, மஹிந்தவின் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே இப்போது குழப்பம் வந்திருக்கின்றது.
மஹிந்த அரசின் தோழமைக் கட்சியான, கடும் போக்கு சிங்கள பௌத்த கட்சியான ஹெல உறுமய மஹிந்த அரசின் அதிகாரத் து’பிரயோகம் மற்றும் சிங்கள மக்களின் உரிமைகள் தொடர்பாக போராடப் போவதாக தருணம் பார்த்து அறிவித்திருக்கின்றது.
ஹெலஉறுமய கட்சியின் பாராளுமன்ற அங்கத்தவர் அத்துரலியே ரத்ன தேரர், அக்டோபர் 14ம் திகதி தமது கட்சி 18வது அரசியல் யாப்பை ஆதரித்ததன் மூலம் தாம் தவறிழைத்து விட்டதாகவும் அறிவித்தார்.
அதுமட்டுமல்லாமல்,
ஹெல உறுமய கட்சி, இந்நாட்டின் அரசியல் யாப்பில் அவசர மாற்றங்கள் வரவேண்டும் என்று கூறி உத்தேச அரசியல் யாப்பு தொடர்பான வரைபொன்றை முன்வைத்திருக்கிறது.
இந்த வரைபில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைப்பது மற்றும் அமைச்சரவையை 20 அல்லது 25 ஆக குறைப்பது போன்ற யோசனைகளை முன்வைத்துள்ளது. தமது கட்சி முன்வைத்துள்ள இந்த வரைபை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக அது அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளால் ஆளும் கட்சியின் அரசியல் தளம் கொஞ்சம் கொஞ்சமாக அதிர்வடைந்து வருவதையே எடுத்துக் காட்டுகின்றது.
பேரம் பேசும் அரசியலின் அடையாளங்களாக இருந்த தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகளின் செயற்பாட்டிற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தலை மாற்றவே தெற்கின் இனவாதசக்திகள் இலக்கு வைத்திருக்கின்றார்கள் என்பதை அவர்களின் செயற்பாடுகளே சொல்லி வருகின்றன.
ஒரு காலத்தில் ‘‘நாட்டின் தலைவர்களை உருவாக்குவது நாம்தான்’’ என்று மார்தட்டி, கூப்பாடு போட்டு தெற்கின் சிங்கள இனவாத சக்திகளை தட்டியெழுப்பிய சிறுபான்மை கட்சிகளின் அரசியல் தலைவர்கள் அதிர்ந்துபோய் நிற்கின்றார்கள்.
தேர்தல்களின் போது சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிங்கள தலைவர்களிடம் மண்டியிட்டு பேரம் பேசி வசந்ததத்தை சுவாசித்து வாழ்ந்தவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்.
இவர்களினால் பேரம் பேசி பெறப்பட்ட எந்த அமைச்சர் பதவிகளாலும் சாதாரண மக்களுக்கு எவ்வித புண்ணியமும் கிடைக்கவில்லை. மாறாக, சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் ஓரம் கட்டப்பட்டதைத் தவிர எதுவுமே நிகழவில்லை.
அண்மைய பேருவளை, அளுத்கம நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சமூகத்திற்கு எவ்வித பலனுமில்லாத இந்த பேரம் பேசிப் பெறப்பட்ட அமைச்சர் பதவிகளை, சோரம் போய் பெறப்பட்ட சொத்தாய்தான் சமூகம் பார்க்கிறது.
ஹெல உறுமய இந்த ‘பேரம்’ பேசும் அரசியலுக்கு ஓர் ஆப்பு வைக்கத்தான் இப்போது அணி திரண்டிருக்கிறது. பேரம் பேசும் அரசியலை ஒரம் கட்டும் ஓர் உபாயத்தைத்தான் மஹிந்தவிற்கு முன் வைத்திருக்கிறது.
ஹெல உறுமய கட்சி, அரசியல் யாப்பில் மாற்றங்கள் வரவேண்டும் என்று கூறி உத்தேச அரசியல் யாப்பு தொடர்பாக முன்வைத்துள்ள வரைபில், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையின் அதிகாரங்களைக் குறைப்பது மற்றும் அமைச்சரவையை 20 அல்லது 25 ஆக குறைப்பது போன்ற யோசனைகளை முன்வைத்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய அமைச்சரவையைக் கொண்ட நாடாக வர்ணிக்கப்படுகின்ற இலங்கையின் இந்த ‘மெகா’ அமைச்சரவை நாட்டிற்கே ஒரு சாபக்கேடாகத்தான் அனைத்து மக்களாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஆனால், அமைச்சரவையை 20-25 ஆக குறைப்பது என்ற ஹெலஉறுமயவின் யோசனையால் சிறுபான்மைக் கட்சித்தலைவர்கள் கதிகலங்கிப் போயிருக்கின்றார்கள். அமைச்சரவை மட்டுப்படுத்தப் படுவதால் தமது கட்சிகளுக்குள்ளும் பிரச்சினைகள் உருவாக வாய்ப்பிருப்தால் காய் நகர்த்தல்களை எப்படி சமாளிப்பதென்று கற்பனை செய்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சரவை குறைப்பு, சிறுபான்மை கட்சிகளுக்கும், எதிர்க்கட்சி அங்கத்தவர்களுக்கும் ஏலம் போட்டு அமைச்சர் பதவிகளை விற்பனை செய்ய மஹிந்த அரசிற்கு முடியாமல் போகலாம்.
எதிர்க் கட்சினரை அமைச்சர் பதவிகளைக் காட்டி தம்பக்கம் இழுத்தெடுக்கும் அரசியல் தந்திரத்தை ஒருவகையில் இது பாதித்தாலும், இந்த மிகப்பெரிய கபினட் அமைப்பின் மூலம் சிறுபான்மைக் கட்சிகள் ஏதும் அடைந்துவிடக் கூடாது என்பதில் ஹெல உறுமய அவதானமாக இருக்கின்றது.
ஹெல உருமய 2004, 2009 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்களில் போது மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றிக்கு தெற்கில் இனவாதத்தை விதைத்து வெற்றி பெறுவதற்காக சூழலை உருவாக்கியதற்கான பெருமை தனக்குரியதாக கூறிவருகின்றது.
தேர்தல் காலங்களில இலங்கையின் இரண்டு தேசிய கட்சிகளும் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களின் உரிமைகளை பலியிடுவதாக ஹெலஉறுமய கட்சி குற்றம் சுமத்தி வந்தது.
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையின் சிறுபான்மை சமூகங்களை கருவறுக்கும் சிங்கள பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இனிவரும் ஜனாதிபதியை உருவாக்கும் செயற்திட்டத்தில் சிங்கள கடும்போக்காளர்களிடையே பெரும் போட்டி நிலவுகின்றது.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவும், அதிகார துஷ்பிரயோகம், ஊழல், மோசடி, அடாவடித்தனங்களால் அரசின் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், மக்களை திசை திருப்பி வாக்குகளைப் பெறுவதற்கு இனவாதம் ஒன்றே இலக்காக அமைய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
ஹெல உறுமயவின் ஏழு அம்சத்தில் இருக்கும் அமைச்சரவை குறைப்பு, சிறுபான்மை கட்சிகளின் பேரம் பேசி ‘அமைச்சர் பதவி’ பிச்சைவாங்கும் அரசியலுக்கு ஒரு அடியையே கொடுத்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய மந்திரி சபையைக் கொண்ட இலங்கைத் திருநாட்டின் மந்திரி சபையால் சிறுபான்மை உரிமைகள் சிறை வைக்கப்பட்டது என்பது வேறு விடயம்.
அதிகமானோருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி சிறுபான்மைக் கட்சித் தலைவர்களை சிறைவைக்கும் இந்த நிறைவேற்று அதிகாரத்தால் அந்த அமைச்சரைத் தவிர, அவர் சார்ந்த சமூகத்திற்கு எவ்வித பலனுமில்லை என்று மக்கள் உணர்ந்திருந்தாலும், இனவாதிகள் என்னவோ இந்த அமைச்சுப் பதவிகள் சிறுபான்மை சமூகத்திற்கு கிடைத்திருக்கின்ற பாதுகாப்புக் கவசங்களாகவும், கிரீடங்களாகவுமே பார்க்கின்றார்கள்.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் சமூக நலன்சார்ந்த, கல்வி, பொருளாதார, வாழ்வுரிமை, பாதுகாப்பு உட்பட்ட விடயங்களை அடிப்படையாக வைத்து பேரம் பேசப்படாத அரசியலில், சிறுபான்மை சமூகங்கள் அன்றுபோல் இன்றும் தனிமைப்பட்டு அநாதரவாகவே இருக்கின்றன.
(26.10.2014 தமிழ்த்தந்தி பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...