Tuesday 15 September 2009

எழுந்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும் விழுந்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்




பள்ளிவாசல்கள் பளிங்குக் கற்களால் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றன. பலமாடிக்கட்டிடங்களாய் விண்ணை எட்ட வளர்ந்துக்கொண்டிருக்கின்றன. பள்ளிவாசல்களின் வளர்ச்சி முஸ்லிம்கள் மனதில் ஆனந்தத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருக்கின்றது.தனவந்தர்கள் பள்ளிவாசல்கள் கட்ட வாரி வாரி வழங்குகிறார்கள்.

பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு வெளிநாட்டு பணம் கூட கோடிக்கணக்கில் வந்து குவிந்துக்கொண்டிருக்கிறது. தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அல்லது மூன்று பள்ளிவாசல்கள் என்றும் முளைத்துக்கொண்டிருக்கின்றன். இது நகரத்தின் நிலை. கிராமமப் புறங்களிலும் தொழுகைக்கு ஆள் இல்லாவிட்டாலும் பள்ளிவாசல்கள் மட்டும் பெரிதாக கட்டப்படுகின்றன. காலாலகாலமாய் ஒரு பள்ளிவாசலின் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்க்ள் பல பள்ளிவாசல்களாய் பிரிந்தும் நிற்கிறார்கள். கொள்கை ரீதியலான் பிரிவினை கொடிகட்டிப் பறந்துக்கொண்டிருக்கிறது.

பள்ளிவாசல்கள் இப்படி எழுந்து வரும்போது முஸ்லிம் பாடசாலைகள் பின்தங்கியே நிற்கின்றன. கல்வி தொடர்பான முஸ்லிம்களின் வரலாறு கசப்பானதாகவே இருந்து வருகிறது. காலா காலமாய் முஸ்லிம்கள் கல்வியில் மிகவும் பின் தங்கியவர்களாகவே இருக்கின்றார்கள்.

பாடசாலைகள் கீழே விழுந்துக்கொண்டிருக்கின்றன.

பள்ளிவாசல்கள் மேலே மேலே எழுந்துக்கொண்டிருக்கின்றன.

பள்ளிவாசல்கள் சமுதாயத்தின் மத்திய நிலையங்கள் என்று மார் தட்டுவோர் கூட அதை ஒரு சுலோகமாகவே சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். பாடசாலைகளையும் பள்ளிவாசல்களையும் ஒரே கண்ணால் பார்க்காமல் ஓரவஞ்சனையோடு பார்க்கவே பழகிவிட்டார்கள்.

முஸ்லிம் சமூகத்தில் பள்ளிவாசலும், பாடசாலையும் இரண்டு துருவங்களாக இருந்து வருகின்றன. இந்த முரண்பாடான நிலை சமூகத்தில் அறிவில்லாதோர் ஆள்பலத்தை அதிகரிக்கச் செய்கிறது. அறிவீனத்தை தமக்கு சாதகமாக்கும் இந்த முயற்சி திட்டமிட்டு அரங்கேற்றப்படும் சர்வதேச சதியாகும். அந்தச் சதிக்கு வெளிநாட்டுப்பணம் இஸ்லாமிய இயக்கங்களினூடாக இரைக்கப்படுகிறது என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.

அறிவின்றி வளரும் ஆன்மிகம் சமூகத்தில் பிரச்சினைகளையும், பிளவுகளையும் தோற்றுவித்து வருகிறது. இது எங்களுக்கு வேதனையைத் தந்தாலும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் கல்வி ரீதியில் கடுமையான பின்னடைவை சந்தித்து வருகின்றனர். சனத்தொகைக்கு ஏற்ப பாடசாலைகள் அதிகரிக்கப்படாதது பாரிய குறையாக இருக்கிறது. முஸ்லிம் பாடசாலைகளின் பற்றாக்குறையால் அல்லது பௌதிக வளப்பற்றாக்குறையால் கல்வி பெற மாற்று மத பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

மாற்று மத பாடசாலைகளில் முஸ்லிம் மாணவ மாணவிகள் கலாசார ரீதியிலான பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். சில மாற்று மத பாடசாலைகள் முஸ்லிம் மாணவர்களை முற்றாக நிராகரித்தும் வருகின்றன.

குறிப்பாக கொழும்பு நகரத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் கல்வியில் பாரிய பின்னடைவை எதிர்நோக்குகின்றார்கள். மிக நெரிசலான வாழ்க்கையும் வறுமையும் கல்வியிலிருந்து அவர்களை தூரமாக்கி வருகிறது.

நெரிசலான தோட்டங்களில் வாழ்கின்ற கொழும்பு மாணவர்கள் தாம் வசிக்கும் பகுதிகளில் ஒழுங்கான மலசல கூட வசதியில்லாத காரணத்தால் பாடசாலைக் கல்வியில் ஆர்வமில்லாமல் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது.

நெரிசலான தோட்டங்களில் வாழும் இவர்களுக்கு போதிய மலசல கூட வசதியில்லாததால் (இருபது அல்லது அதற்கு மேற்பட்ட வீடுகளுக்கு இரண்டு அல்லது மூன்று மலசல கூடங்களே இருப்பதால்) காலை வேளையில் ஏற்படும் நெருக்கடி இவர்களை பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு செல்ல வாய்ப்பளிப்பதில்லை. நேரம் தாழ்த்தி பாடசாலைக்கு செல்லுவதில் உள்ள தயக்கம் காலப்போக்கில் இவர்களை பாடசாலைக் கல்வியிலிருந்து தூரமாக்கிவிடுவதாக அதிர்ச்சி தரும் தகவலை அந்த ஆய்வு வெளியிட்டுள்ளது.

மறுபுறம் அதிகரிக்கும் சனத்தொகைக்கு ஏற்ப பாடசாலைகள் அபிவிருத்தியடையாத நிலையும், இருக்கின்ற பாடசாலைகள் குறைந்த பௌதிக வளங்களை கொண்டிருப்பதுவும் இந்த பின்னடைவிற்கான முக்கிய காரணங்களாகும்.

சமூகத்தின் இரண்டு கண்களாக பள்ளிவாசல்களும், பாடசாலைகளும் கணிக்கப்பட வேண்டியுள்ளன. ஆனால் இலங்கை சமுதாயம் பள்ளிவாசல்களை மட்டும் கட்டிப்போட்டு அழகு பார்க்கின்ற கைங்கரியத்தையே கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறது.

இரண்டு கண்களில் ஒன்று மிளிர்ந்துக்கொண்டும் ஒன்று குருடாகிக் கொண்டும் செல்கிறது. வெளிநாட்டுப் பணம் கூட பள்ளிவாசல்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணத்தை கொண்டு வந்து கொட்டும் தஃவா இயங்கங்கள் கல்விப் பிரச்சினைகளை, பாடசாலை பிரச்சினைகளை அவர்கள் முன்வைக்கும் போது கல்வியை உயிர்ப்பிப்பது என்னவோ மாற்று மத விவகாரம் போல் நினைத்து முகம் சுளித்து நழுவி வருகின்றன.


“பிள்ளைகளுக்கு ஒழுங்காக படிக்க வகுப்பறைகள் இல்லை உதவி செய்யுங்கள்” என்று இந்த இயக்கங்களிடம் கேட்டால்,

“தொழுகை அறை ஒன்று கட்டித்தரட்டுமா?” என்று மூடனைப்போல் பதில் தருகிறார்கள். பசிக்கு உணவு கேட்கும் போது உங்கள் தலைக்கு அணிய ஒரு தொப்பி தரட்டுமா? என்று கேட்பது போல் இவர்களின் பதில் இருக்கிறது.

“உங்கள் பாடசாலை பிரச்சினையை நாங்கள் பலருக்கு அறிவித்திருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்” என்று

உம்மத்தின் பிரச்சினையை அவர்கள் பொறுப்பேற்காது, கல்விப் பிரச்சினை என்ன பெரிய பிரச்சினையா என்பது போல் அதை எங்களது பிரச்சினையாக்கி காலத்தை மெதுவாக கடத்துகிறார்கள்.

முஸலிம் உம்மத்தின் உண்மையான பிரச்சினைகளை ஓரம்தள்ளிவிட்டு வேறு ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு வேலை பார்க்கும் இவர்கள் ஒரு விபரீதத்தோடு விளையாடுகிறார்கள்.


இதை வாசிக்கும் உங்களுக்கு பொறுப்புள்ளவர்களாய் காட்டிக்கொள்ளும் இவர்கள் “ மூடர்களைப் போல் பதில தருகிறார்களா? என்று நீங்களே யோசிக்கலாம். மூடனைப்போல் பதில் தருவதற்கு உண்மையில் அவர்கள் மூடர்கள் அல்லர்.

கல்வி, பொருளாதார பிரச்சினைகளில் சிக்கி விழி பிதுங்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்களே முஸ்லிம்கள் ! உண்மையில் அவர்கள்தான் மூடர்க்ள.

இந்த இயக்கவாதிகள் படு புத்திசாலிகள் !

காரணம் கொழும்பில் உள்ள முஸ்லிம் சமுதாயம் கல்வி கற்றால், கல்வியில் முன்னேற்றம் கண்டால், பொருளாதார வளர்ச்சி கண்டால்...

இஸ்லாத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடாத்தும் இவர்களின் போலி தத்துவங்கள் தவிடுபொடியாகும்.

இவர்களது தலைமையகங்கள் பெட்டிப் படுக்கைகளோடு தத்தமது நாட்டுப் புறங்களுக்கு நாடு கடத்தப்படும் என்று யதார்த்தத்தைப் புரிந்துதான் இவர்க்ள முஸ்லிம்களின் பிரச்சினைகளை புரம்தள்ளி, கல்விக்கு கரம் கொடுக்காத இந்த ஈனச் செயலை செய்து வருகிறார்கள்.

இந்த இயக்கங்களுக்காக அந்நிய சக்திகளின் ஆசிர்வாதத்தோடு அரபுகளின் கோடிக்கணக்கான கருப்புப் பணம் ( வங்கிகள் ஊடாக மட்டுமல்ல) கொழும்பில் வந்து கொட்டப்படுகிறது. இவற்றால் கொழும்பு மக்களுக்கு ஒரு துரும்பும் கிடைப்பதில்லை. தத்தமது இயக்கம் ஆதிக்கஞ் செலுத்தும் ஊர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டுமே இது செலவிடப்படுவதாக குற்றம் சாட்டவும் படுகிறது. கொழும்பு முஸ்லிம்கள் கல்வி, பொருளாதார பிரச்சினைகளுக்காக கையேந்தி நிற்கிறார்கள். அவர்களைக் கவனிக்க யாருமே இல்லை.

பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் அல்லல் படுகின்றார்கள். முஸ்லிம் பாடசாலைகளின் குறைபாட்டால் அந்நிய மத பாடசாலைகளுக்கு செல்லும் பிள்ளைகளும், பெற்றோரும் முஸ்லிம் ஆடை அணிந்து வரக் கூடாது என்று அச்சுறுத்தப்படுகிறார்கள்.

கொழும்பு 15 சென் அந்தனீஸ் மேரி மாக்ரட் பாடசாலை பாலர் பிரிவில் கல்வி கற்ற 14 முஸ்லிம் மாணவிகள் உயர் பிரிவிற்கு சேர்க்கப்படவி்ல்லை காரணம் உயர்பிரிவிற்கு அவர்கள் நீண்ட காற் சட்டை அணிந்து செல்வதை ஏற்றுக்கொள்ளாத பாடசாலை நிர்வாகம் கடந்த ஒன்பது மாதங்களாக அவர்களின் கல்விக்கு தடை விதித்துள்ளது. இந்தப் பிள்ளைகளின் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராடுவதற்கு விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே இணைந்துள்ளனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிழலில் குர்ஆனின் ஆட்சியை நிலை நிறுத்த கனவு காணும் கொள்கைவாதிகளோ, விரல் ஆட்டும் சுன்னத்தைக் கூட விடமாட்டோம் போராடி மரணிப்போம் என்று வீராப்பு பேசுகின்ற புரட்சிவாதிகளோ ஷரீஆ உடைக்காக தனது கல்வி உரிமை பறிக்கப்பட்டு முலையில் முடங்கிக் கிடக்கும் பிஞ்சு உள்ளங்களுக்காக பேச முன்வரவில்லை.

இப்படி பல சம்பவங்கள் நாளுக்கு நாள் உருவாகி வருகின்றது.

முஸ்லிம் என்றே ஒரே காரணத்திற்காக கல்வி மறுக்கப்பட்டு அவர்கள் வீடுகளிலே முடங்கி கிடக்கின்றார்கள் என்றால் அதற்கு யார் பொறுப்பு? இஸ்லாமிய அகீதாவையும், ஆட்சியையும், சமூக அமைப்பையும் பற்றி கதறிக்கொண்டிருப்பவர்களால் ஏன் இவற்றை கண்டுகொள்ள முடியாமல் இருக்கிறது. ஷிர்க்கையும், பித்அத்தையும் வேரறுக்க வந்தோரால் இதனை எப்படி பார்த்தக்கொண்டிருக்க முடிகிறது.

முஸ்லிம்களுக்கு ஒழுங்கான பாடசாலைகள் இருந்தால் அந்நிய மத பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காதே! அந்நிய பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளை பலத்த உளவியல் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவது இப்போது அதிகரித்து வருகிறது.

முஸ்லிம் பாடசாலைகளின் தரத்தையும் வளங்களையும் அதிகரிக்க இந்த இயக்கங்கள் எதுவுமே செய்யத் தயாராக இல்லை. முஸ்லிம் சமூகத்தின் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வராமல் இந்த இயக்கங்கள் முரண்டு பிடிக்கின்றன. பள்ளிவாசல்கள் கட்டுவதும், கிணறு வெட்டுவதும், உழ்ஹிய்யா கொடுப்பதும் மட்டும் தான் உயரிய பணிகள் என்ற மனப்பாங்கை இவை மெது மெதுவாக மக்கள் மனங்களில் பதித்தும் வருகின்றன.

இஸ்லாம் வேண்டி நிற்கும் அடிப்படை கல்வி, பொருளாதார செயற்பாடுகளிலிருந்து முஸ்லிம் உம்மத்தை வேறுபக்கம் திசை திருப்பும் இந்த வெளிநாட்டு பணத்தில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?

பாடசாலைகளை முற்றாக நிராகரித்து விட்டு பள்ளிவாசல்களை கட்டும், மாடுகளை வெட்டும், கிணறுகளை வெட்டும் இந்த இயக்கங்களின் செயற்பாடுகளின் அந்தரங்கம் என்ன?

சிந்தித்துப்பாருங்கள்!

உண்மையில் கல்வியின் எழுச்சி ஒரு சமுதாயத்தின் எழுச்சியாகும், அந்த எழுச்சியின் ஆணி வேர் தான் பாடசாலைகள், கல்விக் கூடங்கள். ஒரு சமுதாயத்தின் எழுச்சியை தடுக்க வேண்டும் என்றால் இந்த சமுதாயத்தின் கல்வி சார்ந்த செயற்பாடுகளை பாடசாலைகளை செயலிழக்கச் செய்ய வேண்டும் பலமிழக்கச் செய்ய வேண்டும்.

கல்விக் கூடங்கள், பாடசாலைகள் அறிவை வளர்க்க துணை செய்கின்றதன. பள்ளிவாசல்கள் ஆன்மிகத்தை வளர்க்க துணை செய்கின்றன. இவை இரண்டும் சரி சமமாக செயற்பட்டால்தான் சமுதாயத்தால் தலைநிமிர்ந்து நிற்க முடியும்.

பள்ளிவாசலினதும் பாடசாலையினதும் இந்த சமநிலையை சீர் குலைக்கும் சதியாகத் தான் இந்த இயக்கங்களின் செயற்பாடுகளை பார்க்க முடிகிறது.

“பள்ளிவாசல்களை மட்டும் கட்டுவோம்” அல்லது “ உழ்ஹிய்யா மட்டும் தான் கொடுப்போம் பாடசாலைக்கு தருவதற்கு எம்மிடம் பணம் இல்லை” என்ற செயற்பாடுகளைப் பார்க்க முடிகிறது.

கொழுமபில் அதிகமாக பள்ளிவாசல்கள் கட்டப்பட்டிருந்த போதும், ஆன்மீக ரீதியிலான வழிகாட்டல் சமூகத்திற்கு கிடைக்கவில்லை. இன்று முஸ்லிம் இளைஞர்கள் அதிகமானோர் பல குற்றச்செயல்களுக்காக அகப்பட்டு சிறையில் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒழுங்கான கல்வியறிவு இவர்களுக்கு கிடைக்காததே இதற்குரிய காரணமாகும். கொழும்பில் குற்றச் செயல்களுக்கு பெயர்போன ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறியிருக்கிறது.

இந்த பயங்கர நிலையிலிருந்து சமூகத்தை மீட்டெடுக்க வேண்டுமாக இருந்தால் கல்வி ரீதியிலான ஒரு எழுச்சி அவசியமாகின்றது. கல்வி ரீதியிலான பிரச்சினைகள் ஆராயப்பட்டு துரித பரிகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த அழிவில் நின்றும் மீட்டெடுக்க துரித வேலைத்திட்டம் அவசியமாகிறது.

ஆனால் இது நடைபெறுகிறதா? சமுதாயத்தின் பின்னடைவை கருத்தரங்குகளின் தலைப்புகளாக வைத்து வெளிநாடடு காசு பறிக்கும் கைங்கரியங்களாக மடடும்தானே நாம் இதனைப் பார்க்கிறோம்?

பள்ளிவாசல்கள் அதிகரிக்க அதிகரிக்க சிறைச்சாலைகளுக்கு செல்வோர் தொகை எப்படி அதிகரிக்கிறது? சிறை செல்வோர் தொகை குறைய வேண்டுமே?

வைத்தியர்களும், வைத்திய சேவைகளும் அதிகரிக்க அதிகரிக்க நோயாளர்களும் அதிகரிக்கின்றார்கள் நோய்களும் அதிகரிக்கின்றன.
இதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஒரு தொழில் நுட்ப கோளாரே இந்த சமூகத்தில் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது.

பள்ளிவாசல்கள் கட்டிய அதேயளவு பாடசாலைகள், கல்விக் கூடங்கள் கட்டியிருந்தால் நிச்சயம் இதில் மாற்றம் நிகழ்நதே இருக்கும். ஆன்மீக, அறிவியல் வழிகாட்டல் சமமாக கிடைத்திருக்கும்.

பள்ளிவாசல் மட்டுமே கட்டும் இந்த கலாசாரம் விபரீதத்தைத் தான் விதைத்து வருகிறது. அதனால்தான் பள்ளிவாசல் எழுகின்ற அதேவேளை பாடசாலை விழுந்துக்கொண்டிருக்கிறது. கல்வித்தரம் விழுகிறது. வெறுமனே பள்ளிவாசல்கள் அதிகரிக்கப்படுவதால் மட்டும் சமுதாயம் சீர்பெறுவதில்லை என்ற உண்மையை இதிலிருந்து விளங்க முடிகிறது.

ஒருவன் மனிதனாக வாழ்வதற்கு அவனுக்கு அறிவும் ஆன்மீகமும் அவசியம். அவனுக்குரிய அறிவிற்கான , கல்விக்கான அத்தனை வாசல்களையும் அடைத்து விட்டு வெறுமனே பள்ளிவாசல்களை மட்டும் கட்டிப்போடுவதால் ஓர் ஒப்பற்ற சமுதாயம் எப்படி உருவாகும்?

இநத உண்மையை இஸ்லாத்தின் எதிரிகள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். இந்த எதிரிகளின் மறைமுக வழிகாட்டலிலும், பண உதவியிலும் இயங்கும் இந்த இயக்கங்கள் முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சிக்கு வித்திடும் வேலைத்திட்டங்களுக்கு ஒரு போதும் உதவப்போவதுமில்லை.

கல்விஅபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள், வறுமை ஒழிப்பு, வீடமைப்பு, தொழில் வாய்ப்பு, அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுத்தல் போன்ற அத்தியாவசிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதை மறுத்தும், இருட்டடிப்பு செய்தும் வருவதிலிருந்து இவை தெளிவாக தெரிகின்றன.

மாறாக, இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை வேறுபக்கம் திசைதிருப்பிவிட்டு பள்ளிவாசல்கள் கட்டுவதிலும், உழ்ஹிய்யா பகிர்வதிலும் உள்ள மர்மம் ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஒரு தளத்தை இலங்கையில் உருவாக்குதைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

அறிவு இல்லாத ஆன்மீகம் மிகவும் பயங்கரமானது. அது நஞ்சை விடக் கொடியது. அறிவில்லாத வாழ்க்கை விஷத்தோடு விளையாடுவதற்கு ஒப்பானதாகும். இன்றைய ஆப்கானிஸ்தான் அதற்கு சிறந்த உதாரணம். அறிவில்லாத ஆன்மிக வாதிகளை எந்த நாசகார சக்தியாலும் இலகுவாக இயக்க முடியும். ஆப்கான் தாலிபான்களை போஷித்து வளர்த்த அமெரிக்கா அதன் ஆக்கிரமிப்பு நிகழ்ச்சி நிரலுக்கு இந்த அறிவில்லாத ஆன்மிகத்தை ஆயுதமாக பாவித்தது. இன்று அமெரிக்கா முஸ்லிம் நாடுகள் மீது நடாத்தும் அனைத்து கொடுமைகளுக்கும் ஆப்கான் காரணமானது. அடிப்படையானது.

அமெரிக்காவிற்கும் அதன் அரபு நட்பு நாடுகளுக்கும் தேவை நான் மேலே கூறிய அறிவில்லாத ஆன்மீகம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும், அரபு மன்னராட்சி்ககும் தம் அரசியலை சீராக கொண்டு செல்ல இந்த அறிவில்லாத ஆன்மீகம் உறுதுணையாய் இருக்கிறது. எனவேதான் கல்வி நிராகரிக்கப்பட்டு பள்ளிவாசல்கள் மட்டும் உயிராக்கப்படுகின்றன. அறிவில்லாத ஆன்மீகத்திற்கு உரமூட்டப்படுகின்றது. தஃவா என்ற போர்வையில் கல்விக்கு எதிராக ஒரு மௌனமான சதி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

எனவே அறிவில்லாத சமுதாயம் ஒன்றை நிர்மாணிக்கும் செயல்திட்டத்தை இஸ்லாத்தின் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலுக்காக இந்த இயக்கங்கள் செய்து வருகின்றன. அதற்காகவே பள்ளிவாசல் மட்டும் கட்ட பணம் வருகிறது. மாடு அறுக்க மட்டும் பணம் வருகிறது. ஸக்காத் பெயரளவில் நிறைவேற்றப்படுகிறது. பாடசாலைகள் முற்றாக நிராகரிக்கப்படுகின்றன. இந்த கசப்பான உண்மையை புத்திஜீவிகளால்(?) புரிந்துக் கொள்ளமுடியாமல் இருப்பதுவும் ஒரு புதிராகத்தான் இருக்கிறது.

சிலவேளை ... வயிற்றுப் பசியை அடக்கிக் கொண்டு இவர்கள் இஸ்லாத்திற்காக எழுந்து நின்றால்,

சொந்த உழைப்பில் உண்டு அல்லாஹ்வின் தீனை என் சொந்த உழைப்பில், சொந்த பணத்தில் மேலோங்கச் செய்வேன் என்று எழுந்து நின்றால்...

வெளிநாட்டுப் பணத்த வீசியெறிந்து விட்டு அல்லாஹ்வினதும், அவன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசத்தை மட்டும் வைத்தே தஃவா செய்வோம் என்று எழுந்து நின்றால்... முஸ்லிம் உம்மத்தின் பிரச்சினைகனை ஒழுங்காக புரியும் பாக்கியத்ததை அல்லாஹ் நிச்சயம் இவர்களுக்குக் கொடுப்பான்.

நான் மேலே பதித்தவை சமுதாயம் எதிர் நோக்கிக்கொண்டிருக்கும் சவால்கள். இந்த இயக்கங்கள் பள்ளிவாசல்களோடு சேர்த்து பாடசாலைகளையும் கட்ட வேண்டும் ! பாடசாலை மற்றும் முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்க அரபுகளின் சதகா ஸக்காத பணத்தை இவர்கள் கொண்டு வந்து கொட்ட வேண்டும். மாடு அறுக்க கோடிக்கணக்காய் கொடுக்கும் அரபுகள் பாடசாலைக் கட்டுவதற்கு ஏன் கொடுக்க மறுக்கிறார்கள்?

இதில் ஒரு மர்மம் மறைந்திருப்பது உங்களுக்குப் புரிகிறதா?அந்தப் பணம் உண்மையில் முஸ்லிம்களின் பணமல்ல. முஸ்லிம்களின் பணம் என்ற் போர்வையில் முஸ்லிம்களை திசை திருப்ப இலங்கைக்கு வரும் எதிரிகளின் பணம் என்பதை மட்டும் புரிந்துக்கொள்ள முடியும். இந்த எதிரிகளின் வேலைத்திட்டத்திற்கு செயல்திட்டம் வகுக்கும் தரகர்களாக தான் இந்த இயக்கங்கள் செயல்படுகின்றன.

இந்த இயக்கங்களுக்கு பணம் வழங்கும் அரபு உளவு நிறுவன எஜமானர்கள் அமெரிக்காவின் நண்பர்களான இருக்கின்றார்கள். அமெரிக்கா முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்து முஸ்லிம்களை கொலை செய்வதற்கு அமெரிக்காவிற்கு பக்கபலமாக இந்த அரபு எஜமானர்கள் இருக்கின்றார்கள்.

இந்த அரபுகளுக்கு முஸ்லிம்கள் மீதும் இஸ்லாத்தின் மீதும் இரக்கம் இருக்கிறதா? அப்படியிருந்திருந்தால் முஸ்லிம்களை கொல்லும் அமெரிக்க விமானங்களை தமது அரபு பூமியில் தரையிறக்கி அவற்றிற்கு இலவசமாக எண்ணெய் வழங்கியிருப்பார்களா?

இஸ்ரேலோடு கைகுலுக்கும் அமெரிக்க கைகளை இந்த அரபுகளால் பற்றத்தான் முடியுமா?

ஈராக்கில் பள்ளிவாசல்களை குண்டு போட்டு தகர்க்கும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளிக்கும் அரபுகள் இலங்கையில் பள்ளிவாசல் கட்டுவதற்கு உதவி புரிகிறார்கள்.

ஒரு இடத்தில் அல்லாஹ்வின் இல்லங்களை உடைக்க உதவி புரிகிறார்கள்.

இன்னுமொரு இடத்தில் அல்லாஹ்வின் இல்லங்களை அமைக்க உதவி புரிகிறார்கள்.

இது வேடிக்கையாக இல்லையா? இது முரண்பாடாக இல்லையா?

எத்தியோபியா சோமாலியாவில் பட்டினியில் முஸ்லிம்கள் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் இறக்கும் போது பார்த்துக்கொண்டு சுவர்க்க வாழ்வை அனுபவிக்கும் அரபு எஜமானர்கள் உழ்ஹிய்யா இறைச்சிக்கான மாடுகளுக்கான பணத்தை எத்தியோபியா சோமாலியாவிற்கு அனுப்பாமல் இலங்கைக்கு அனுப்புகிறார்கள். (இது இலங்கையில் பௌத்த முஸ்லிம் உறவில் ஒரு விரிசலை ஏற்படுத்த அமெரிக்க அரபு உளவு நிறுவனங்கள் வகுத்துள்ள ஒரு வியூகம் )

அது அமெரிக்க நிற வெறியால் பாதிக்கப்பட்டு மரணத்தருவாயில் இருக்கும் கறுப்பு மனிதனுக்கு உதவக்கூடாது என்ற அமெரிக்க கொள்கைக்கு ஆதரவான அரபு நிலைப்பாட்டை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
எனவே அரபு உளவு நிறுவனங்களின் பணத்தால் இந்த இயக்கங்கள் பெறும் உதவியால் எழுந்து வரும் பள்ளிவாசல்களின் பின்னணியில் ஒரு சமுதாயத்தின் எதிர்காலம் புதைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

எங்கள் பிள்ளைகள் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக கடந்த ஒன்பது மாதங்களாக கல்வி மறுக்கப்பட்டு ( இந்த ஜனநாயக நாட்டில்) மூலையில் முடங்கிக் கிடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியாமல் போயுள்ளது..

ஹிஜாப் அணிந்து பாடசாலை வரக் கூடாது என்ற தடையால் பாதையில் வைத்து தனது ஹிஜாபை கழற்றி பைக்குள் திணித்து , நீண்ட காற்சட்டையை முழங்கால் தெரிய மடிக்கும் அவலம் வருவதை தடுக்க முடியாமல் உள்ளது.

பாடசாலைக்கு பக்கத்தில் வசித்தும் மாற்று மத பாடசாலை என்ற காரணத்திற்காக வாசல் மூடப்பட்டு அவமானப்படும் அவலத்தைப் போக்க முடியாமல் உள்ளது.

இந்த அவலம் பற்றி, இஸ்லாத்தைக் காப்பதற்காகவே செயற்படுகிறோம் என்று சொல்லிக் கொள்ளும் இயக்கங்களை நிலை என்ன?

இஸ்லாத்தை மறந்து விட்டு, இயக்கத்தை வளர்க்கும் சிந்தனையில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இந்த இயக்கங்கள் பணம் வழங்கும் எஜமானர்களை திருப்திப் படுத்தும் நயவஞ்சகத்தனத்திலிருந்து மீண்டு... இஸ்லாத்தை வளர்த்து அல்லாஹ்வை மட்டும் திருப்தி படுத்தும் உயரிய பணிக்காக எழுந்து வரவேண்டும்.

அவகாசம் நிறையவே இருக்கிறது....!


(காணொளி - இலங்கை) ஹிஜாப் ஆடை தடைசெய்யப்பட்ட மாற்று மத பாடசாலையொன்றுக்கு செல்லும் முஸ்லிம் மாணவிகள் படும் அவஸ்த்தை)


இப்பதிவு தொடர்பாக உங்கள் கருத்தை ஓரிரு வரிகளாவது ( ஆங்கிலத்தில் அல்லது தமிழில்) பதியுங்கள். நன்றி!

22 comments:

  1. மிகவும் வருந்தத்தக்க வ‌கையில் ஒரு ப‌திவு.

    யாரும் இதுவரை கண்டு கொள்ளாத,அதிகம் அலட்டி கொள்ளாத ஒரு விஷயத்தை உங்கள்
    எழுத்தின் மூலம் வெளி கொணர்நதிருக்கிறீர்கள்.

    நிச்சயம் இந்த பதிவு,உலக முஸ்லிம்களை சென்றடைய வேண்டும் !! இன்ஷா அல்லாஹ்..

    கொழும்பில் மட்டுமில்லை இந்த அவலம்.இந்தியா முழுவதும் பள்ளிவாசல்களும் மதரஸாக்களும்
    அதிகமிருந்தாலும்,முழுமையான மார்க்க கல்வி முஸ்லிம்களை சென்றடையாமல் இருக்கிறது.

    இன்னும் சென்னையிலும் அத‌ன் சுற்றுப்புற‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ளிலும் ஜூம் ஆ தொழுகைக்கு பின்
    ம‌த‌ர‌ஸா க‌ட்டுவ‌த‌ற்கு வாச‌லில் துண்டை விரித்து கையேந்தும் ஹ‌ழ்ர‌த்துக‌ள் இருந்து கொண்டே தான்
    இருக்கிறார்க‌ள்.

    ReplyDelete
  2. //மிகவும் வருந்தத்தக்க வ‌கையில் ஒரு ப‌திவு.

    யாரும் இதுவரை கண்டு கொள்ளாத,அதிகம் அலட்டி கொள்ளாத ஒரு விஷயத்தை உங்கள்
    எழுத்தின் மூலம் வெளி கொணர்நதிருக்கிறீர்கள்.

    நிச்சயம் இந்த பதிவு,உலக முஸ்லிம்களை சென்றடைய வேண்டும் !! இன்ஷா அல்லாஹ்..//

    சகோதரர் அ.மு.செய்யது
    உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வான கட்டுரையை எழுதி இருக்கிறீர்கள்....இது எழுத்தளவில் நின்றிடாமல் செயல்வடிவம் கொடுக்கப்படவேண்டும்...
    பணத்திற்காக கொள்கைகளை அடகு வைக்கும் கூட்டத்தை இஸ்லாமிய சமுதாயம் அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும்...
    அதற்கு உங்களைப்போன்ற எழுத்தாளர்களும் செயல்படுபவர்களும் அதிகம்தேவை....
    உங்களின் விழிப்புணர்ச்சி கட்டுரைக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. Dear Brother Azeez Nizardeen,

    Its heart breaking news and analysis but its very clear argument.
    The 'Great' Jamiah Naleemiah Institute in Beruwala, Sri Lanka should solve this problem. they have a capability to do so. Why they also not acting even not talking this issues ? As you said these people also Arab Benificiaries ?

    ReplyDelete
  5. Salam alaikkum

    Its really a very sad news and we have to come forward to do something soon immediately.

    May we all blessed by Allah.

    Sheik Mukthar

    ReplyDelete
  6. We need to develop islamic political thinking to gain political power. our muslim kufr leaders cannot resolve our problems.

    M. R. Mohamed - London UK

    ReplyDelete
  7. உங்கள் கருத்துக்கள் பலவற்றில் என்க்கு உடன்பாடில்லாதபடியால் அதுதொடர்பாக ஒரு கருத்து பகிர்வொன்றை இப்பின்னூட்டமூடாக நடாத்தலாம் என்று நினைக்கிறேன்.

    பள்ளிவாசல்களுக்கு அரபுக்கள் உட்பட தனவந்தர்கள் வாரிவழங்குகிறார்கள் என்கிறீர்கள். பள்ளிவாசல்களின் அவசியத்தை நீங்கள் முஸ்லிமாக இருப்பதன் காரணமாக விளக்கவேண்டியதில்லை. இது ஒரு நிலையான தர்மமாகும். மரணத்தின் பின்னும் நன்மைகளை தேடித்தரும் விடயமாகும். பள்ளிவாசல்களில் என்ன நடக்கிறது என்றும் உங்களுக்கு தெரிந்திருக்கும். தொழுகை மட்டுமல்லாது பல விடயங்களில் அது தாக்கம் செலுத்துகிறது. மக்கள் கூடும் இடம் என்பதால் அங்கேயே மார்க்கப்பிரசங்கமும் நடக்கிறது. இதன் மூலம் ஈருலக வாழ்வுக்கும் தேவையான அறிவை தருமிடமாக அது அமையவில்லயா?

    தெருவிற்கு இரண்டு பள்ளிவாசல் அமைவதை சாடுகிறீர்கள். நாம் எல்லாம் 5 நேரம் தொழுகிறோம். 7 வயது முதல் பிள்ளைகளும் தள்ளாத வயது முதியவரும் பள்ளிக்கு சென்று தொழுவது அவசியம் என்பதும் உங்களுக்கு தெரியும். அதுவும் நேரத்ட்துக்கு தொழுவது அவசியமல்லவா? பள்ளிவாசல்கள் அருகில் அமைந்தால் இவர்கள் அனைவரும் இலகுவாக நேரத்துக்கு தொழமுடியும். அலுவலகங்கள் வியாபார ஸ்த்தானங்களில் இருப்பவர்களும் 10 நிமிட இடைவெளியில் தொழுது வரமுடியும். பள்ளிவாசல் 10 நிமிட தோரத்தில் இருந்தால் கூட 30 நிமிடம் செலவாகும். எந்த அலுவலகத்திலாவது 30 நிமிடம் தொழுகைக்கு கொடுப்பார்களா? பள்ளிவாசல் அருகில் இருந்தால் தொழுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமல்லவா? நீங்கள் கொழும்பை முதன்மைப்படுத்தி பேசுகிறீர்கள். கொழும்பின் சனத்தொகை எவ்வளவு மடங்கு அதிகரித்திருக்கிறது? அதே அளவுக்கு பள்ளிவாசல்களை பெருப்பிக்க வசதி இருக்கிறதா? ஒரு பள்ளிதான் அவசியம் என்று வீண் வாதம் ஏன்? மற்றும் கொள்கை அடிப்படையிலான பிரிவுகள் வாதங்கள் மார்க்கம் பற்றிய அறிவு வளரும்போதே ஏற்படுகிறது. முன்னோர் செய்தது சரி என்று வாதிடப்போகிறீர்களா அல்லது கொள்கைகளை விளக்குவது தவறாகுமா? அது சரியாயின் மட்டுமல்லவா நீங்கள் ஏற்க வேண்டும்?

    //அறிவின்றி வளரும் ஆன்மிகம் சமூகத்தில் பிரச்சினைகளையும், பிளவுகளையும் தோற்றுவித்து வருகிறது. இது எங்களுக்கு வேதனையைத் தந்தாலும், எதிரிகளுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.//

    உலகாயத கல்வியைத்தான் நீங்கள் நோக்குகிறீர்கள். மார்க்கத்தை படித்து விளங்கி ஒழுகுவதை விட சிறந்த கல்வி உண்டா.. கல்வியின் இலட்சியமான ஒழுக்கமுள்ள பிரஜையை உருவாக்குவதை இஸ்லாம் தன் மார்க்க போதனைகள் மூலம் செய்யவில்லயா?

    கொழும்பு முஸ்லிம் சமூகத்தின் கல்வியில் பின் தங்கி காணப்படும் நிலமைக்கு முக்கிய காரணம் பொதீக ஆசிரிய வளப்பிரச்சினையல்ல. தோட்டங்களாக வாழும் இட நெருக்கடியே காரணம். வசதிகள் அற்ற முஸ்லிம் கிராமப்புறங்களில் கல்வித்துறை பாரிய அளவில் முன்னேறுவது தெரியவில்லயா?

    மற்றும் நீங்கள் இயக்கங்களையும் இஸ்லாத்துக்காக செலவிடப்படும் வெளிநாட்டு பணம் பற்றி நீங்கள் அடிக்கடி சாடுகிறீர்கள்.

    முதலில் இப்பணம் கறுப்பு பணம் அல்ல.. வரி ஏய்ப்பு செய்த பணமே கறுப்பு பணம். மத்திய கிழக்கு நாடுகளில் ஏறத்தாள வரி இல்லையல்லவா?

    ஒரு அரபு தனவந்தர் உழ்கியா கொடுக்க நினைக்கிறார். ஏழைகளுக்கு சேரவேண்டிய அதை சேர்ப்பிக்க ஏழைகளை தேடி எங்கு செல்வார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் இலங்கையில் உள்ள முஸ்லிம் ஏழைகளுக்கு அதை கொடுப்பதற்காக இஸ்லாமியப்பணி செய்யும் இயக்கங்களின் உதவியை நாடுகிறார். அதற்கு வேண்டிய கால்நடையை வாங்குவதற்கு பணம் அனுப்புகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது?

    மற்றும் நீங்கள் ஒரு காரியத்தை செய்வதற்கு பணத்தைடை என்னிடம் தந்தால் நான் அக்காரியத்திற்கு மட்டுமல்லவா அப்பணத்தை செலவிட வேண்டும்? இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி பள்ளிவாசல் கட்ட நினைக்கும் ஒரு அரபி அனுப்பிய பணத்தை இன்னொரு தேவைக்ககாக (அதி நியாயமானதாக இருந்தாலும் கூட) எப்படி கொடுக்க முடியும்?

    நீங்கள் கேட்கக்கூடும் ஒரு கிராமத்துக்கு 3 மாடிப்பள்ளிக்கான திட்டம் இடப்படுகின்றது என்று. ஒரு 30 வருடத்தின் பின் சனத்தொகை அதிகரிக்கும்போது சிறிதாக கட்டிய பள்ளியை உடைத்தா பெரிதாக்குவார்கள்? புரிந்ததா?

    பல விடையங்களில் உங்களுக்கு விளக்கம் தரவேண்டியிருக்கிறது. இருந்தாலும் அவ்வளவு நேரம் என்னிடம் இல்லாமலும் இருக்கிறது. எனவே உங்கள் சந்தேகங்களை சம்பந்தப்பட்ட இயக்கங்களிடம் கேட்டாலே தெழிவு பிறக்குமல்லவா? அதை நீங்கள் ஏன் முயற்சிக்கக்கூடாது? இயக்கங்கள் வேண்டாம் என்றால் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைமைப்பீடத்துக்கு சென்று விளக்கம் கேட்கலாமே..

    என்னுடைய கருத்தில் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும். அல்லாஹ் நம் இருவருக்கும் நேர்வழி காட்டுவானாக..

    (கருத்து பகிர்வை ஊக்குவிக்க கூகிள் அக்கவுன்ட் இல்லாதவர்களும் பதிலளிக்க அனைவரும் கருத்துரைக்க பின்னூட்டமிட வாய்ப்பளிக்கவும். Please make necessary change in Commenting option}

    ReplyDelete
  8. //உலகாயத கல்வியைத்தான் நீங்கள் நோக்குகிறீர்கள். மார்க்கத்தை படித்து விளங்கி ஒழுகுவதை விட சிறந்த கல்வி உண்டா.. கல்வியின் இலட்சியமான ஒழுக்கமுள்ள பிரஜையை உருவாக்குவதை இஸ்லாம் தன் மார்க்க போதனைகள் மூலம் செய்யவில்லயா?//

    சகோதரர் இர்ஷாத்! பாடசாலைகளை நிராகரித்து விட்டு பள்ளிவாசல்களைக் கட்டுவதைத்தான் நான் விமர்சித்திருக்கிறேன்.

    பாடசாலைக் கல்வி தொடர்பாக அதன் பின்னடைவு தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? பாடசாலைகள் தேவையில்லை என்றா கூறுகிறீர்கள்? மார்க்கக் கல்வி உலகக் கல்வி என்று கல்வியை இரண்டாக பிளக்கின்றீர்கள்?

    30 வருடங்களுக்கு பிறகு பள்ளிவாசல்களில் இடநெருக்கடி வருமென்றா இப்போது பள்ளிவாசல் கட்டுகிறீர்கள்?

    கல்வி கற்க பாடசாலைகள் இல்லாமல் பிள்ளைகள் கஷ்டப்படுகிறார்களே அவர்களைப் பற்றி ஏன் வாய்திறக்க உங்களால் முடிவதில்லை.

    //உங்கள் சந்தேகங்களை சம்பந்தப்பட்ட இயக்கங்களிடம் கேட்டாலே தெளிவு பிறக்குமல்லவா? //

    இயக்கங்களிடம் கேட்டு நான் தெளிவு பெற்றதைத்தான் எழுதியுள்ளேன். மீண்டும் ஒருமுறை எனது பதிவை வரிக்கு வரி ஆறுதலாக வாசித்துப் பாருங்கள். உங்களுக்கு தெளிவு கிடைக்க நான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு.

    ReplyDelete
  9. வரிக்கு வரி ஆறுதலாக வாசித்துப்பார்த்தாலும் உங்கள் பதிவின் தொனி பொருளாக தெரிவது இயக்கங்களை சாடுவது. அதற்கான விளக்கமே நான் அளித்தது. அத்துடன் இதுவரை இருந்த பித்னாக்களை ஒழிப்பதில் பாடுபடும் இயக்கங்களை சாடுவதிலிருந்து சரியோ பிழையோ சீர்தூக்கிப்பார்க்காமல் எதிர்ப்பதையும் நோக்காக கொண்டிருப்பதாக தெரிகிறது. பழைய பதிவுகள் சாட்சி.

    எனது பதிலில் பள்ளி வாசல்கள் அதிகரிப்பதன் அவசியம் பற்றியும், ஏன் இந்த தக்வா இயக்கங்களால் பாடசாலை கட்ட நிதி வழங்க முடியாது என்றும் எதற்காக அரபுக்களின் பணம் வருகிறது என்றும் தெளிவாக விளக்கியுள்ளேன்.

    (பிஜேயின் அமைப்பு வெளிநாட்டுப்பணம் பெறுவதில்லை என்பதை அறிவீர்களா?)

    அத்துடன் கொழும்பு முஸ்லிம்களின் கல்வி ரீதியான பின்னடைவுக்கு பௌதீக வளம் அல்ல பிரச்சினை, வீட்டு நெருக்கடிகள்தான் பிரச்சினை என்பதையும் விளக்கியுள்ளேன்.

    மற்றும் குற்றச்செயல்களுக்கும் காரணம் இந்த இடப்பிரச்சினையே.. பள்ளிவாசல்கள் இயக்கங்களின் பணி காரணமாகத்தான் இதுவரை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இஸ்லாத்தை விளங்கியவின் குற்றச்செயலகளில் ஈடுபடுவானா?

    இதன் மூலம் பள்ளி வாசல்களின் அதிகரிப்பயும் இயக்கங்களின் போக்குகளையும் கல்வி சீர்கேட்டையும் முடிச்சுபோடுவது தவறு என்று விளக்கியுள்ளேன்.

    முஸ்லிம் நாடான சவூதியால் வழங்கப்பட்டு தனி முஸ்லிம் பிரதேசமான அக்கரைப்பற்றில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு பற்றிய இனத்துவேச நடவடிக்கைகள் பற்றியும் அறிந்திருப்பீர்கள். இந்நிலையில் யாராவது அப்படியான பௌதீக அபிவிருத்தி திட்டங்களுக்கு நிதி உதவி செய்வார்களா?

    மற்றும் சுகாதாரத்துறை பௌதீக வள அபிவிருத்தி தொடர்பாக வேறு முஸ்லிம் இயக்கங்கள் செயற்படுகின்றன. ஒவ்வொரு இயக்கமும் அதன் நோக்கத்தின் அடிப்படையில் அல்லவா செயற்படும்? சரியான நிறுவனத்தை அணுகுங்கள்.

    //இயக்கங்களிடம் கேட்டு நான் தெளிவு பெற்றதைத்தான் எழுதியுள்ளேன்.//
    ஏன் இந்த தக்வா இயக்கங்களால் பாடசாலை கட்ட நிதி வழங்க முடியாது என்றும் தெளிவாக விளக்கியுள்ளேன்.

    எல்லாவற்றையும் போட்டு குழப்பாமல் ஒவ்வொரு தலைப்பாக அதாவது கல்வி, பள்ளிவாசல், இயக்கங்கள் என தனித்தனியாக விளக்குவதுதான் தெளிவு பிறப்பதற்கான வழி. உங்கள் மின்னஞ்சல் முகவரி தந்தால் ஒவ்வொன்றாக விளக்கமுடியும்.

    உங்கள் துவாவுக்கு நன்றி. தொடர்ந்து உங்கள் துவாவில் என்னை சேர்த்துக்கொள்ளுங்கள். நானும் உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  10. சகோதரர் இர்ஷாத்,

    முஸ்லிமின் பணி நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது. அது கூட்டாகவோ, தனிநபராகவோ, இயக்கமாகவோ நடைபெறலாம். அந்தப் பணியை நான் மனதார ஏற்கிறேன்.

    இந்த நல்ல பணிக்காக உருவான இயக்கங்கள் காலப்போக்கில் வெளிநாட்டுப் பணத்திற்கு விலைபோவது தான் வேதனைக்குரியது. சில இயக்கங்கங்கள் ஊழல்களின் கூடாரமாக மாறியிருப்பதன் இரகசியம் சிலவேளை நீங்கள் அறியாமல் இருக்கலாம். இவர்களுக்கு வருகின்ற பணம் உண்மையில் முஸ்லிம்களின் பணமல்ல, இஸ்லாத்தின் எதிரிகளால் வழி நடாத்தப்படும்
    அரபு உளவு நிறுவனங்களின் பணம். அந்த பின்னணியைத் தான் நான் தொடர்ந்து விளக்கி வருகிறேன்.

    மாற்றுக் கருத்தை ஆதரிப்பவன் என்ற ரீதியில் உங்களோடு கருத்து பறிமாற இன்னும் ஆவலாய் உள்ளேன்.

    வெளிநாட்டுப்பணம் இவர்களை முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளிலிருந்து வேறு பக்கம் திசை திருப்பி வரும் யதார்த்தத்தை என்னால் நிரூபிக்க முடியும் அதற்கான ஒரு முயற்சியே இந்தப் பதிவு.

    பீ.ஜே யின் சில கருத்துகளோடு உடன்படாத நான் அவர் வெளிநாட்டுப்பணம் தொடர்பாக கொண்டுள்ள கருத்தை ஆதரிக்கிறேன்.

    என்னுடைய பழைய பதிவுகளை பார்த்ததாக குறிப்பிட்டீர்கள். அத்தனை பதிவுகளிலும் நான் வெளிநாட்டுப்பணத்தை மையமாக வைத்து சுழலும் இயக்கங்கள் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்த நிகழ்வுகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் நான் விளக்கியுள்ளேன்.

    இந்த வலைத்தளம் ஊடாக கருத்துப்பறிமாற்றம் செய்வது போதாதென்று நீங்கள் கருதினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத்தாருங்கள் அதற்கு நான் எனது தொலைபேசி இலக்கத்தைத் தருகிறேன். அல்லது உங்கள் தொலைபேசி இலக்கத்தை எனது மின் அஞ்சலுக்கு அனுப்புங்கள். கருத்துப் பறிமாறுவோம். இன்ஷா அல்லாஹ்.

    azeeznizardeen@gmail.com

    ReplyDelete
  11. There is truth in regard to negligence of Muslim schools as well as misconception of Arab funds drained into Muslims for various religious rituals.I too agree that the vicious divisions amongst Muslim today is purely generated by lack of general knowledge and common sense which can be gained only at schools.In brief, the spiritual knowledge without a secular knowledge is the base for diffrences among Muslims today.No use of building Masjidhs if we cannot make Muslims aware of the importance of 5 time prayers.Building Masjidhs to accommodate only Friday prayers makes no sense.Those who perform only Friday prayers are not a Muslims.
    So,equal priority should be focused on Masjidhs as well as Muslim Schools.

    ReplyDelete
  12. //No use of building Masjidhs if we cannot make Muslims aware of the importance of 5 time prayers.Building Masjidhs to accommodate only Friday prayers makes no sense.Those who perform only Friday prayers are not a Muslims.
    So,equal priority should be focused on Masjidhs as well as Muslim Schools.//

    brother, thanks for your comment

    ReplyDelete
  13. Dear Br.Azeez Nizardeen,Salamun Alaikum.
    Your analysis of the prevailing situation of the Muslims of Sri Lanka,particularly the Muslims of Colombo are timely, accurate and informative.About proliferation of Mosques have already been foretold by our Prophet (SAW):On the authority of Anas : the Prophet (may Allah bless him and his Household and grant them peace)said, “Among the portents of the Hour is that people will compete with one another in [building and decorating] mosques.” [Nasa’i]
    Ziad,Akurana,Sri Lanka

    ReplyDelete
  14. Dear br. Ungal karuththukkal ennudaya kankalai mattumalla. Idanai vasiththa anaivarin kankalaiyum sinthanaiyaiyum thiranthirukkum enbathil doubt illai. Br. Irshathin vaadam avar innum ulaga kalvi, maarkka kalvi enru piriththu parppadai than vilakkukinradu. Inru doctor ikku padippathai avar markka kalviyaga paarkkavillai polum. Vinnaiyum mannaiyum research pannuvathai avar non muslimin kalvi enru ninaikkirar polum. Pallivasalil koorum bayanai vilanguvathatkum school kalvi avasiyam brother. Zakkath 2-1/2% enru bayanai kaettavnukku, 2-1/2% kanikka theriyavittal antha bayanilum arthmillai, adanai kaettavanukkum pirayosanamillai. Pallivasalgal avasiyam enbathil Br. Nazardeen muranpadavillai. Aanal pallivasalgal valarum athey neram pallikkodangal aliginrathu enruthan avar koorukinrar. Aanal Br. Nazardeen sonnathu ponru, pirayosanmatra udavigalai than inda arabu nadugal seiginrathu.Ulhiyya koduppadal anraya saappadodu athu mudinthuvidum. School kattinal athuvum sadakathul Jariya enbathanai puryada sila muttalgalukku br Nizardeen ungal karuththu puriyadu. Neengal thodarnthu unmaiyai koorungal. Thoppi sariyanavargal poattuk kollattum. - Ippadikku - ibnumashoor

    ReplyDelete
  15. பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுவது போல் பள்ளிவாசல்களையும் கொழும்பு முஸ்லிம்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதையும்தான் எதிர்க்கிறேன். இதுதான் என் வாதம். அதை தவிர்த்து சிலர் வேறு விடயங்களில் நான் வாதிடுவதாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல.

    நிசார் நீங்கள் சில விடயங்களுக்கு ஆம் அல்லது இல்லை என தெளிவாக பதில் தரவேண்டும்.

    குறிப்பிட்ட நோக்கத்துக்காக அனுப்பபட்ட பணத்தை அந்நோக்கத்துக்காகவே செலவிட அதன் பரிபாலகர்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்வீர்களா?

    வீட்டில் நிம்மதியாக படுக்கமுடியாத படிக்க முடியாத பிள்ளை எப்படி பாடசாலையில் படிக்கும்? கொழும்பு முஸ்லிம்களின் கல்வி பின்னடைவுக்கு காரணம் இடம் போதாத நெரிசலான வீடுகள் என்பதை மறுக்கிறீர்களா?

    மற்றும் இயக்கங்களை சாடும் அரபுக்களை சாடும் உங்கள் கருத்துக்கு ஆதாரங்களை தந்தால் (வேறு ஒரு பதிவாக) நம்ப இலகுவாக இருக்கும். சும்மா நீங்கள் திட்டுவதை எப்படி நாங்கள் நம்புவது?

    மற்றும் இயக்கங்களின் பெயர் குறிப்பிட்டு அவர்கள் சொன்ன காரணத்தையும் சேர்த்து ஏன் அக்காரணங்களை நீங்கள் மறுக்கிறீர்கள் என்று தனிப்பதிவாக விளக்கினால் எங்களுக்கு நம்பமுடியும்.

    உலகக் கல்வி என்று நான் பிரிப்பது நோக்கத்தைக்கொண்டே.. காசு உழைப்பதற்காக வைத்தியத்தை படிப்பவர் மார்க்க அறிவைப்படிப்பதாக நினைக்கலாமா? அப்படியானால் காபிரான வைத்தியருக்கும் சுவர்க்கம் கிடைக்குமா?

    On the authority of Anas : the Prophet (may Allah bless him and his Household and grant them peace)said, “Among the portents of the Hour is that people will compete with one another in [building and decorating] mosques.” [Nasa’i]

    நாயகத்தின் வாக்குப்பலிக்கிறது. அதை நாம் தடுக்க முடியுமா?
    பேருவளையில் தாக்கப்பட்ட பள்ளிவாசல் அமையாதிருந்தால் அந்நிகழ்வு இடம்பெறாமல் இருந்திருக்கும் என்று இன்னொரு பதிவில் எழுதியிருந்தீர்கள். ஆனால் இஸ்லாத்தின் பெயரால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித்தராத விடயங்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. இங்குதான் உங்கள் நோக்கம் பற்றிய சந்தேகம் எழுகிறது.

    பாடசாலை பௌதீக அபிவிருத்திக்கு பணம் தந்தால் அதை முழுமையாக அந்நோக்கத்துக்காக பாவிக்கும் திட்டமோ அல்லது பாதுகாக்கும் திட்டமோ எம்மிடையே இருக்கிறதா? சவூதி அரசாங்க நிதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு நடந்த கதி நேராது என்பது என்ன நிச்சயம்?

    ReplyDelete
  16. Br.Irshath, Ungal vina "Veettil Nimmadiyaga Padukka mudiyatha, Padikka mudiyatha pillai eppdi paadasalaiyil Padikkum. Kalvi pinnadaivukku karanam idap pirachchanai...?" Nallathoru vina. Aalamaga sinthikka vendiya vina. Ithaiththan br. Nazarum kooruginrar. Vaala olungana veedillai, toilet vasathi illai, ippadi makkal, adaavathu emadu muslim makkal vaaluginrargal. Appadiyirukka, ivargalukku vasadi seithu koduppathai vittu vittu, Ulhiyya Maattu Irachchi koduththal adu arivaaguma? Ullhiyya koduppathakkaga oru Iyakkam (Pala Iyakkam), Adakku Ilachchakanakkil Sambalamum Veedum Vaganum petru ulaikka pala perr. Ivargal, anda Arabiglidam namadu colombo muslimgalin vaalkkai nilaiyai vibariththu athakku udavi kekka mudiyatha? PJ velinaattu panaththil Dahwa seivdillai enru koorugireergal. Adan arththam matra ella iyakkangalum arabigalin panaththil than dahwa(?) seigirargal. Dahwa seiyavillai. Avar avargal sambalmum, veedu, vaganam petruk kondu Ulhiyya velaiyum, avar avargal sarnda oorgalil sila velaigaliyum seiginrargal. Oruvelai neengalum appadi oru nabar polum!!!! Oru niyyathil koduththadai veru noakkaththukku payanpaduththuwadu koodathu enbathu unmai. Aanal koduppavargalukku intha kalvi pirachchanai, vaalkkai pirachchanaiyai eduththu kooralam thaaney? Ulaga kalvi Markka Kalvi enru piriththu parththadanal thaan inru namadu ulamaakkalukku Quran Hadeed thavira onrum thriyadu. Elutha Vasikka katrukkondal thaan Islaththinai mulumaiyaga vilanga mudiyum. Eluda vasikka thrindu kolla school sella vendum. Ungal parvaiyil adu Ulaga Kalvi. Appadith thaane? Sindiyungal pidivatham pidikkaamal...

    ReplyDelete
  17. From: Abdul Jaleel

    Sent: Sat, October 10, 2009 7:19:21 AM
    Subject: Re: Fw: எழுந்துக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்களும் விழுந்துக்கொண்டிருக்கும் பள்ளிக்கூடங்களும்

    Asslaamu Alaikum,

    Thank you so much. The latest version was clear and nice.

    1) I accept the concept of the article, except 2 points: Some people do not realize
    that the majority of Americans are good people; They voted for a change; even they
    elected a black president.Those who live in the United states have much better
    opportunity to practice Islam, compare to any other Muslim country.

    2) We should not divide the 'school' and the ''entrance as separate entity.!!
    (.'Palli and 'Vaasal' are inseparable.) We could have Islamic schools combined with
    masjid.The human aspiration should be for Dunaya and Ahira.It can be taught in one
    place.The schools can be a training ground for both the physical and spiritual need for the
    students. There are so many Islamic schools in USA that cater both aspects.

    This article reminded me the era of our 'Board of Education' -'kalvi chafai in Akurana.
    Forty years ago we published notices( 4-16 pages) insisting the importance of education.
    When i was writing those notices there were lot of short comings in Muslim schools.
    We did not have laboratories or proper science English teachers in our schools.
    'The haves' were able to send their children to missionary schools. Even today this is the
    exact situation.Lot of them probably thinking,'The poor do not need better education.'

    Rather than blaming St. Peters or St.Anthony's schools for not giving admission we
    should have own Anthony's colleges. The amount spent for building masjids could be
    utilized to have building combined with schools.We can learn from the missionary schools
    what they adopted during the colonial era. In fact this is what our Islamic schools are
    following in our area in the U.S.For example Al-Minhal Islamic school, Annoor academy,
    Noorul Iman School. All of them are backed by different masjids.
    A would be medical student or computer scientist can learn his field as well as some
    Quranic knowledge and pray on time if both are combined.Most importantly fear of Allah
    Subahanahu watala could make him the best student who has all the good qualities.
    It will prevent them going in a wrong way. We won't see any criminals if they are pious.

    Thank you and Best regards: Abdul Jaleel

    ReplyDelete
  18. Br.Nizardeen,
    Salamun Alaikum,

    This is from my uncle Prof.Muhammad Ma'ruf, living in the states.
    I'm forwarding this for your information.

    Wassalam,
    Ziad Mohamed

    Assalaamu `aleykum brother Ziyad.

    I liked this article more than many of the other articles I have received from you .
    It has some progressive ideas, regarding the need to emphasize and improve
    education among the Muslims of Sri Lanka.

    I also like the author's use of "Palli Vaasal" as the equivalent of mosque. That is
    the traditional word. However, I have heard some Tamil educated Muslims
    consistently use "Palli" instead of "Palli Vaasal". They may have ulterior motives.
    The article also has other interesting words and phrases with
    deeper meaning connotations for those who can understand.

    However, I disagree with pointing the finger at "Arabs" as the cause of the problem.
    If some Arabs are involved in promoting this fitna, they are aided and abetted in it
    by Sri Lankan Muslims who accept that point of view and leadership.

    There is also some anti USA ism and anti Westism in the article, which in my humble
    opinion is foolish. People who are critical of the West should travel in the Western
    lands and find out for themselves, instead of repeating false Islamist propaganda.
    They should consider the fate of their neighbors and relatives who are ardently seeking
    refugee status in Western lands. Are any so-called "Muslim" countries willing to
    take them in?

    In regard to the severe religion problem of the Muslims of Sri Lanka, our first
    responsibility is to educate those Muslims who are our own people, kith, and kin.
    The level of ignorance among some of them is higher than the tallest tree you
    can imagine. I know this from my own life and experience.

    I also wondered why this is written and published in Tamil. Is it written by a Thableegh
    Jamaa`ath person? In my travels I have found that they are very devoted
    to the discourse of Islaam in Tamil. It would be a good idea to encourage them
    to learn to preach in Singhala.

    I would like to see a translation of this article into English so that,
    for instance, my children can read it. They don't know any Tamil.
    If that is possible please let me know.

    With my best wishes to you and your family,

    A Muhammad Ma`ruf
    Swedesboro, NJ.

    ReplyDelete
  19. irsaath.........
    YOU ARE SAYING PALLIVAASAL must be needed to PRAY..
    WHY U NEED SOMANY PALLIKAL in one streeet to pray??
    who commanded to build many pallivaasalakal to pray ?
    first of all we must think about our ummath situations.. NO PROBLEMS THEY CAN PRAY AT HOME if they are faar from masjidh AND its enough for them to come to JUMMA only......
    DONT WASTE MONEY TO BUILD MASJIDS when many more muslims are suffering even for a day meal....

    ReplyDelete
  20. Irshad is an idiot. He also belongs to one of these fanatic groups who has forgotten about Islam and very serious only to build up their sect. Just ignore this kind of ignorant and good for nothing people.

    ReplyDelete
  21. ஹிஜாப் ஆடை தடைசெய்யப்பட்ட மாற்று மத பாடசாலையொன்றுக்கு செல்லும் முஸ்லிம் மாணவிகள் படும் அவஸ்த்தை மிகவும் மனவருத்தத்தை தருகின்றது. இது ஒரு கஷப்பான உண்மை.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...