Thursday 14 February 2013

சீறிப்பாயும் அஸாத் சாலி ! நேர்காணல் (ஓடியோ)

பலியாடுகளையே ஜ. உலமா அனுப்பியது : பொதுபல சேனா!


நேற்றைய தினம் டி.என்.எல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடலை அடுத்து ஜம் இயத்துல் உலமா ஏன் இந்நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவில்லை எனும் கேள்வி ஒவ்வொரு இலங்கை முஸ்லிமின் மனதிலும் எழுந்துள்ளது. இன்றைய நிலையில் வெறும் பொதுபல சேனா எனும் அமைப்பின் ஹலால் எதிர்ப்பு எனும் நிலை மாறி பல சிங்கள பெளத்தவாத இயக்கங்களின் முஸ்லிம் எதிர்ப்பாக விஸ்வரூபம் எடுத்து வரும் சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதும் உண்மைகளை வெளிக்கொண்டுவருவதும் கூட ஊடகங்களின் கடமையாகும். அந்த வகையில் இது தொடர்பாக நாம் பொதுபல சேனாவை இன்று (13-12-2013 , இலங்கை நேரம் 17.30 ) தொடர்பு கொண்டு  நேர்காணல் ஒன்றை நேரடியாக அதன் முகவரியாக விளங்கும் அத்தேஞான சேர தேரரிடமே மேற்கொண்டிருந்தோம். அதன் போது நாம் கேட்ட கேள்விகளும் அவர் தந்த பதில்களையும் இங்கே பிரசுரிக்கிறோம்.
இது தொடர்பாக நாம் ஜம் இயத்துல் உலமாவிற்கும் அறிவித்திருப்பதோடு அவர்கள் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டிற்கான விளக்கத்தையும் தரும்படி தொடர்பு கொண்டிருக்கிறோம். எனினும், இப்பதிவு மேற்கொள்ளப்படும் வரை எமக்கு எந்தப் பதிலும் கிடைக்காத நிலையில் இதனைப் பிரசுரிக்கிறோம்.  ஜம் இயத்துல் உலமாவின் பதில் கிடைக்குமிடத்து அதனை வாசகர்களுக்காக இணைத்துக்கொள்வோம்.
நேர்காணல் :
“முதலில் எமக்காக நேரம் ஒதுக்கி இணைந்து கொண்டமைக்கு நன்றி உங்களுக்கு, இன்றைய நிலையில் நம் நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான பதட்ட சூழ்நிலை மற்றும் நேற்றைய தினம் டி.என்.எல் தொலைக்காட்சியில் உங்கள் கலந்துரையாடல் சம்பந்தமாகவும் நேரடியாக சில விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம்”.
கேள்வி: பொது பல சேனா முஸ்லிம்களையும் ஹலாலையும் எதிர்க்கிறது என்பது இன்று வெளிப்படையாக எங்களுக்கு இருக்கும் கவலை, இதை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள் என்பது தொடர்பாக பல விளக்கங்கள் தருகிறீர்கள், எனினும் அது குழப்பகரமாகவே இருக்கிறது. நீங்கள் உண்மையில் முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பதை எதிர்க்கிறீர்களா அல்லது ஜம் இயத்துல் உலமா இதில் ஈடுபட்டதனால் அதனை எதிர்க்கிறீர்களா?
தேரர்: முதலில் எம்மோடு தொடர்பு கொண்டு இதைப்பற்றிப் பேசவும்  உரையாடவும் வந்தமைக்கு உங்கள் ஊடகத்திற்கு நன்றி. நான் நேரடியாகவே சொல்வதானால் ஜம் இயத்துல் உலமா எனும் அமைப்பு கிட்டத்தட்ட “பிரபாகரனின்” எல்.டி.டி.ஈ போன்றது. அதன் கொள்கைகளும் செயற்பாடுகளும் இந்த நாட்டினைப் பிளவு படுத்தும் வகையிலும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைக் குழப்பும் வகையிலும் இருக்கிறது என்பதே எமது ஆதங்கம். மற்றும் படி முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்பது அவர்களது உரிமை அதை நாங்கள் நிராகரிக்கவில்லை.
கேள்வி: ஹலால் உணவை உண்பது முஸ்லிம்களின் உரிமையென்றால் அதனை நெறிப்படுத்த ஒரு அமைப்பு இருப்பது அவசியம் தானே? அதைத்தானே ஜம் இயத்துல் உலமா செய்கிறது? அப்படியானால் நீங்கள் அவர்களை எதிர்ப்பதாக முஸ்லிம்களின் உரிமையை மீறுவது போன்றல்லவா இது இருக்கிறது?
தேரர்: இல்லை, நீங்கள் தவறான தகவலை வெளியிடக்கூடாது. ஜம் இயத்துல் உலமா சபை 3000 பேரை வேலைக்கமர்த்தி ஹலால் எனும் ஒரு விடயத்தைப் புகுத்தி நாட்டில் இருக்கும் சமூகங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டின் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது, அப்படியிருக்க ஜம் இயத்துல் உலமா எப்படி ஹலால் உணவுகள் தான் சுத்தமானது என்று அறிவித்து அதனை சிங்கள மக்கள் மத்தியில் பலவந்தமாகப் புகுத்த முடியும்? ஒரு பேச்சுக்காகக் கேட்கிறேன், நீங்கள் பன்றி இறைச்சி உண்பதில்லை, ஆனால் அதை உண்ண விருப்பம் உள்ளவர்கள் இருப்பார்கள், அதே போன்று மாட்டிறைச்சி உண்ணும் முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து எங்களுக்கு ஹலால் இல்லை எனும் சான்றிதழ் வேண்டும் என ஒரு அமைப்பை ஆரம்பித்தால் என்ன நடக்கும்? இந்துக்கள் எல்லோரும் சேர்ந்து மாட்டிறைச்சியை இந்த நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று கேட்டால் என்ன நடக்கும்? நாட்டிற்குள் இப்படி ஒவ்வொருவரும் தத்தமது சமய முறைகளுக்கேற்ப சட்டங்களைக் கொண்டுவர விட முடியுமா? சொல்லுங்கள் பார்க்கலாம்.
கேள்வி: நாட்டின் சட்டதிட்டங்களைப் பாதுகாக்க அரசு இருக்கிறது, இப்போது நீங்கள் நம்பும் இந்த விவகாரம் தொடர்பாக அரசிடம் முறையிட்டீர்களா? அதற்கு அவர்கள் என்ன பதில் தந்தார்கள்?
தேரர்: ஆம், நான் நேரடியாகவே இந்த விடயத்தினை ஜனாதிபதியிடம் தெரிவித்தேன், அதற்கு அவர் இதை ஜம் இயத்துல் உலமாவிடமும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். நாங்களும் இதைப்பற்றி அவர்களிடம் எத்தனையோ தடவை பேச முனைந்து விட்டோம் ஆனால் அவர்கள் ஓடி ஒளிக்கிறார்கள் .அதற்கான காரணம் எமக்கும் தெரியவில்லை.
கேள்வி: அப்படியானால் இது அரசு சம்பந்தப்பட்ட விடயம் தானே? அரசு ஏன் இந்த விடயத்தைக் கையாளக்கூடாது? அதை ஏன் நீங்கள் கையிலெடுத்திருக்கிறீர்கள்?
தேரர்: நாங்கள் சுட்டிக்காட்டுகிறோம், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறுகிறது, இது குறித்து மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் நாங்கள் சேர்த்துக் கொடுக்கிறோம்.
கேள்வி: ஹலால் சான்றிதழை யாருக்கும் பலவந்தமாக ஜம் இயத்துல் கொடுக்கவில்லை, மாறாக நாடிவருவோருக்குத்தான் அது வழங்கப்படுவதாக ஜம் இயத்துல் உலமா தெளிவாகக் கூறுகிறதே?
தேரர்: இது சுத்தமான பொய்! நான் ஏற்கனவே கூறியது போன்று 3000 பேர் கொண்ட குழுவொன்று இதில் இயங்குகிறது, அவர்கள் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் சென்று ஹலாலின் மகத்துவம் என்று மார்க்கெட்டிங் (சந்தைப்படுத்தல்) செய்கிறார்கள், அவ்வாறுதான் எல்லா நிறுவனங்களும் இதில் மாட்டிக்கொள்கின்றன. சிங்கள மக்களை இப்படி மாட்டிக்கொள்ள இனியும் அனுமதிக்க முடியாது.
கேள்வி: முஸ்லிம்கள் ஹலால் பொருட்களை விரும்பி வாங்குவார்கள், மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் ஹலால் சான்றிதழ் தேவைப்படுகிறது. எனவே, நாடி வருவோருக்கு மாத்திரம் தான் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது என்று ஜம் இயத்துல் உலமா கூறுகிறதே?
தேரர்: இதுவெல்லாம் நம்பத்தகுந்த கதையல்ல, இந்த நாட்டில் இருக்கும் உணவுப் பண்டங்களுக்கு ஹலால் சான்றிதழ் கொடுக்க ஜம் இயத்துல் உலமா யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
கேள்வி: அதாவது உங்கள் கருத்துப்படி ஜம் இயத்துல் உலமா எந்தவித அரச அனுமதியுமில்லாமல் இதைச் செய்கிறதா?
தேரர்: அதைத்தானே நாங்கள் சொல்கிறோம், ஜம் இயத்துல் உலமா தன்னிச்சையாக இதைச் செய்கிறது, அதன் மூலம் சமூகங்களுக்குள் பிளவும் நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்காக புதிய சட்டமுமாக இருப்பதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? முஸ்லிம்கள் எம்மோடு எப்போதும் சகோதரத்துவத்துடன் தான் வாழ்கிறார்கள் ஆனால் இந்த ஜம் இயத்துல் உலமா தான் அதைப் பிரிக்கிறது. எமக்கு முஸ்லிம்களது சமய வழிமுறைகளில் எந்தக் குரோதமும் இல்லை. அப்படித்தானே இவ்வளவு காலம் வாழ்ந்திருக்கிறோம். இப்போது திடீர் என முளைத்த ஜம் இயத்துல் உலமா எவ்வாறு இந்த நாட்டை ஒரு சமயத்துக்கு ஆதரவான சட்டங்களுக்கு அடிபணிய வைக்க முடியும்? அண்மைக்காலங்களில் ஜம் இயத்துல் உலமா பொருளாதார ரீதியாக வேகமாக முன்னேறியிருக்கிறது, அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? இது ஒரு சிங்கள பெளத்த நாடு, இந்த நாட்டில் சகல இனங்களும் வாழ்வதற்கு சமமான சட்டதிட்டங்கள் இருக்கிறதே தவிர ஒரு இனத்தின் தேவைக்காக நாட்டின் வளங்களை சுரண்ட அனுமதிக்க முடியாது.
கேள்வி: சரி, நேற்றைய பகிரங்க விவாதம் குறித்து நீங்கள் ஜம் இயத்துல் உலமாவுக்கு அறிவித்தீர்களா? அல்லது அவர்களை அழைத்திருந்தீர்களா?
தேரர்: ஜம் இயத்துல் உலமா சபை ஒளித்துப் பிடித்து விளையாடியதே தவிர ஒழுங்கான பதில் தரவில்லை. நேற்றைய தினம் நிகழ்ச்சி நடைபெற இருக்கும் வரை நாங்கள் முயன்றோம். நிகழ்ச்சியை நடத்திய சுகத் முடியாமல் போன கட்டத்தில் தான் வேறு மூவரை அணுகினார். அந்த மூவரையும் பலியாடுகளாகத்தான் அனுப்பியது ஜம் இயத்துல் உலமா.
கேள்வி: அவர்கள் மூவரையும் அனுப்பியது யார்? ஜம் இயத்துல் உலமாவா?
தேரர்: இல்லை, ஆனால் இப்போது பதில் சொல்கிறோம், அப்போது பதில் சொல்கிறோம் என்று காலத்தை இழுத்தடித்து விட்டு இறுதி வரை ஜம் இயத்துல் உலமா பதில் சொல்லாததால் சுகத் மூலம் தான் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். என்னைப் பொறுத்தவரை அவர்கள் வெறும் பலியாடுகள்.அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லும் திறனோ தகவலோ அவர்களிடம் இருக்கவில்லை. ஜம் இயத்துல் உலமா திரை மறைவில் இருந்து வேடிக்கை பார்க்கிறது, ஆனால் அவர்களால் இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையில் பிளவு ஏற்படுகிறது, அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
கேள்வி: நல்லது, உங்கள் பேட்டிகள் மற்றும் அறிக்கைகளில் கூட நீங்கள் அடிக்கடி “சம்பிரதாய முஸ்லிம்கள்” என்று ஒரு பிரிவினர் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் அவர்கள் யார்?
தேரர்: நாங்கள் சம்பிரதாய முஸ்லிம்கள் என்று குறிப்பிடுவது இந்த நாட்டில் சமத்துவத்துடன் காலகாலமாக வாழும் முஸ்லிம்களை ஆனால் ஜம் இயத்துல் உலமா இறக்குமதி செய்யும் வஹாபிஸமும், ஸலபிசமும் தான் அவர்களையும் எம்மிடமிருந்து பிரிக்கிறது.
கேள்வி: நல்லது, உங்களிடம் இறுதியாக ஒரு கேள்வி, இப்போது நாங்கள் விபரம் அறியும் நோக்கிலேயே உங்களைத் தொடர்பு கொண்டோம். எனினும், முஸ்லிம் மக்களுக்கு உங்களிடம் கேட்பதற்கு ஏராளமான கேள்விகள் இருக்கிறது. அவற்றை எமது வாசகர்களிடமிருந்து பெற்றுத்தந்தால் அவற்றுக்கு நீங்கள் பதிலளிப்பீர்களா?
தேரர்: நிச்சயமாக பதிலளிப்பேன், நீங்கள் கேள்விகளைக் கொண்டு வாருங்கள், அதற்கான பதில்களை எனது குரலிலேயே ஒலிபரப்புங்கள் அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. முஸ்லிம் மக்கள் எம் சகோதரர்களே அவர்களை நாங்கள் பிழையாக நினைக்கவில்லை அவர்களுக்கு எங்களிடம் கேள்வியிருந்தால் அதற்கான பதிலை எந்நேரத்திலும் தரத் தயாராக இருக்கிறோம்.
நேர்காணலின் போது தேரர் நிதானமாகக் காணப்பட்டாலும் ஒரு சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்டதுடன் ஜம் இயத்துல் உலமா சார்ந்த  இடங்களில் ஜம் இயத்துல் உலமாவை சாடும் போது “சங்கடத்துக்கரிய” வார்த்தைகளையும் பிரயோகித்ததனால் அதன் ஒலி வடிவம் இங்கு தவிர்க்கப்படுகிறது. எனினும், எமது கேள்விகளுக்கு பதில் தர அவர் இணங்கியிருப்பதனால் வாசகர்கள் உங்கள் கேள்விகளை ஆங்கிலத்திலோ, தமிழிலோ, சிங்களத்திலோ இங்கே பின்னூட்டம் மூலம் அல்லது எமது பிரதான மின்னஞ்சலுக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம்.
பொதுபல சேன அமைப்பினுள் மும்மொழிகளிலும் தேர்ச்சிபெற்றவர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஞாயிறன்று தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இது குறித்த கலந்துரையாடல் ஒன்றிலும் அவர்கள் பங்கெடுக்கவிருப்பதாகவும் அறிய முடிகிறது.
எவ்வாறாயினும், பொதுபல சேனாவின் கையில் நாட்டின் சட்டத்தைக் கையளிக்க சமாதானத்தை விரும்பும் எந்த இலங்கையரும் விரும்பப் போவதில்லை. பொதுபல சேனா ஒரு அமைப்புத்தானே ஒழிய அது நாட்டின் காவலர்களில்லையே என்று நாம் சுட்டிக்காட்டிய போது நாம் பெளத்த மதத்தின் காவலர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள், அதே நேரம் அவர்களின் முழு நேர வேலையே ஜம் இயத்துல் உலமாவை எதிர்ப்பதாகவும் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது இலங்கையின் முஸ்லிம் சமூகத்தைப் பெருமளவு பாதிக்கிறது ! முஸ்லிம்களின் மனது புண்பட்டிருக்கிறது ! அதைப் பார்த்து அரசும் மெளனமாக இருக்கிறது எனும் உண்மையையும் மறுக்க முடியாது.
நன்றி - சோனகர் டொட் கொம்    http://www.sonakar.com/2013/02/

Monday 11 February 2013

அப்சல் குரு அநீதியின் அடையாளம்?



எனக்கு எனது குடும்பம் உயிருடன் வேண்டுமானால், நான் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டாக வேண்டும்'' - அப்சல் குரு

அமெரிக்காவின் ‘ரேடியோ பசிபிகா நெட்வொர்க்' செய்தியாளர் வினோத் கே. ஜோஸ், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அப்சல் குருவை, உயர் பாதுகாப்பு நிறைந்த தில்லி திகார் சிறையில் சந்தித்து எடுத்த சிறப்பு நேர்காணலை ‘தெகல்கா' ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ளது. அதிலிருந்து...

சிறிய சிறிய அறைகளாகத் தடுக்கப்பட்ட ஓர் அறைக்குள் நான் நுழைகிறேன். சிறைவாசிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே ஒரு தடிமனான கண்ணாடிச் சுவரும், இரும்பு சன்னலும் இருக்கிறது. இருபுறமும் சுவரில் ஒலிவாங்கியும் ஒலி பெருக்கியும் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன் மூலமாகவே உரையாடல் நடக்கிறது. அப்சல் எனக்காக காத்திருந்தார். அவர், நினைத்துப் பார்க்க இயலாத அளவிற்கு கம்பீரமாகவும் அமைதியாகவும் இருந்தார். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசினோம். பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. பேட்டியை நிறைவு செய்ய வேண்டுமென்பதில் இருவருமே அவசரம் காட்டினோம். என்னுடைய சிறிய குறிப்பேட்டில் நான் குறிப்பெடுத்தேன். அப்சலுக்கு சொல்வதற்கு நிறைய செய்திகள் இருந்தன. தனிமைச் சிறையில் இருந்ததால், உலகத்தோடு தொடர்பு கொள்ள இயலாத நிலையை குறித்தே அவர் மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார்.



அப்சல் குறித்து பல்வேறு மாறுபட்ட பிம்பங்கள் உள்ளனவே. நான் எந்த அப்சலை இப்போது சந்தித்திருக்கிறேன்?
அப்படியா? என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு அப்சல்தான். அது நான்தான்.
அப்படியெனில் அந்த அப்சல் யார்?


அப்சல் இளமையான, துடிப்புமிக்க, அறிவாளியான, குறிக்கோளுடைய இளைஞன். 1990களின் முன்பகுதிகளில் மாறிய அரசியல் சூழல்களால் பாதிக்கப்பட்ட பலரைப் போல நானும் பாதிக்கப்பட்ட ஒரு காஷ்மீரி. ‘ஜம்மு காஷ்மீர் விடுதலஇயக்க'த்தில் உறுப்பினராக இருந்தேன். அந்த அடிப்படையில் எல்லை தாண்டியவர்களில் நானும் ஒருவன். ஆனால், ஒரு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த மாயையிலிருந்து விடுபட்டு இங்கு திரும்பி வந்து, ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ முயன்றேன். ஆனால், நான் ஒருபோதும் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்புப் படையினர் என்னை கூட்டிச் சென்று, உச்சகட்ட சித்திர வதைகளை செய்தனர். உடம்பில் மின்சாரம் பாய்ச்சுவது, குளிர்ந்த நீரில் உறைய வைப்பது, பெட்ரோலில் முக்கி எடுப்பது, மிளகாய் புகையில் நிற்க வைப்பது என... வதைகளில் எத்தனை வகை உண்டோ, அத்தனையையும் நான் அனுபவித்திருக்கிறேன். பிறகு, ஒரு வழக்கில் பொய்யாக நான் இணைக்கப்பட்டேன். வழக்கறிஞர் இன்றி, நேர்மையான விசாரணையின்றி, இறுதியாக எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. காவல் துறையினர் கூறிய பொய்கள், ஊடகங்களில் பரப்பப்பட்டன.


அதுதான் ஒருவேளை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது போல, "தேசத்தின் ஒட்டுமொத்த மனசாட்சியாக உருவெடுத்தது. அந்த ‘கூட்டு மனசாட்சி'யை திருப்திப்படுத்த, எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த முகமது அப்சலைத் தான் நீங்கள் சந்திக்கிறீர்கள்.


வெளி உலகத்திற்கு இந்த அப்சலைப் பற்றி ஏதேனும் தெரியுமா என நான் வியக்கிறேன். நீங்களே சொல்லுங்கள்... எனது கதையை சொல்லும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டதா? எனக்கு நியாயம் வழங்கப்பட்டதாக நீங்கள் கருதுகிறீர்களா? ஒருவருக்கு வாதாட வழக்கறிஞரே வழங்கப்படாமல், நேர்மையான விசாரணையின்றி, அவன் தன் வாழ்க்கையில் சந்தித்தவற்றை கேட்காமல், அவனைத் தூக்கிலிடுவது சரியென கருதுகிறீர்களா? ஜனநாயகம் என்பது இதுவல்ல - இல்லையா?


உங்கள் வாழ்க்கையிலிருந்து தொடங்கலாமா? வழக்கிற்கு முந்தைய உங்கள் வாழ்க்கையிலிருந்து...


நான் வளரும் காலத்தில், காஷ்மீரில் ஓர் உணர்வெழுச்சிக்கான அரசியல் சூழல் நிலவியது. மக்பூர் பட் தூக்கிலிடப்பட்டார். அமைதியான வழியில் காஷ்மீர் சிக்கலுக்கு தீர்வு காண மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதென காஷ்மீர் மக்கள் முடிவெடுத்தனர். காஷ்மீர் சிக்கலின் இறுதித் தீர்வில் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘முஸ்லிம் அய்க்கிய முன்னணி' உருவாக்கப்பட்டது. முன்னணிக்கு கிடைத்த ஆதரவு, தில்லி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை மணி அடிப்பதாக இருந்தது. இதன் விளைவாக, தேர்தலில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்தன. தேர்தலில் பங்கெடுத்த மற்றும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதன் பிறகே, அதே தலைவர்கள் ஆயுதப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர். நான் அப்போது சிறீநகரில் ஜீலம் பள்ளத்தாக்கு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருந்தேன். எனது படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்க'த்தில் இணைந்தேன். அதன் உறுப்பினராக, காஷ்மீரின் அந்தப் பக்கத்திற்குச் சென்ற பலரில் நானும் ஒருவன். ஆனால், காஷ்மீர் சிக்கலில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் செயல்பாடு, எந்த வகையிலும் இந்திய அரசியல்வாதிகளின் செயல்பாட்டிலிருந்து மாறுபடாமல் இருப்பது கண்ட பிறகு, மாயை தெளிந்த மனதோடு சில வாரங்களிலேயே நான் இங்கு திரும்பிவிட்டேன். பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தேன். உங்களுக்குத் தெரியுமா? எல்லை பாதுகாப்புப் படையினர் எனக்கு ‘சரணடைந்த போராளி' என்று சான்றிதழ்கூட அளித்தனர். நான் புத்தம் புதிய வாழ்க்கையைத் தொடங்கினேன். என்னால் ஒரு மருத்துவராக முடியவில்லை என்ற போதும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விற்பனையாளராக ஆகிவிட்டேன்.


எனக்கு கிடைத்த சொற்ப வருமானத்தில் ஒரு ஸ்கூட்டர்கூட வாங்கி விட்டேன். திருமணம் செய்து கொண்டேன். ஆனால், ராஷ்டிரிய ரைபிள் படையினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரின் துன்புறுத்தல் இல்லாமல் ஒரு நாள்கூட செல்லவில்லை. காஷ்மீரில் எங்கேயாவது போராளிகளின் தாக்குதல் நடந்தால், பொது மக்களை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துவிடுவார்கள். 


என்னைப் போன்ற சரணடைந்த போராளிகளின் நிலை இன்னமும் மோசம். எங்களைப் பல நாட்கள் பாதுகாப்பில் வைத்திருந்து, பொய் வழக்கில் இணைத்துவிடுவதாக மிரட்டினர். 22 ராஷ்டிரிய ரைபிள் படையணியைச் சார்ந்த மேஜர் ராம் மோகன் ராய், என்னுடைய பிறப்பு உறுப்பில் மின்சாரத்தைப் பாய்ச்சினார். பலமுறை அவர்களின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய வைக்கப்பட்டேன். அவர்களின் முகாம்களை பெருக்க வைத்தனர். ஒரு முறை ஹம்ஹமா அதிரடிப்படை வதை முகாமிலிருந்து தப்பிக்க, பாதுகாப்புப் படையினருக்கு என்னிடம் இருந்த அனைத்தையும் லஞ்சமாக கொடுக்க வேண்டியிருந்தது. துணை கண்காணிப்பாளர் வினய் குப்தாவும், துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங்கும் சித்திரவதைகளை மேற்பார்வையிட்டனர். வதை செய்வதில் தேர்ந்தவர்களில் ஒருவரான ஆய்வாளர் ஷண்டி சிங், நான் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்ளும் வரையில், மூன்று மணி நேரம் என் மீது மின்சாரத்தைப் பாய்ச்சினார். எனது மனைவி தன் நகைகளை விற்றார். மீதி பணத்திற்கு அவர்கள் எனது ஸ்கூட்டரை விற்று விட்டனர்.


நான் பொருளாதார ரீதியாகவும், மனதளவிலும் உடைந்து போனவனாக முகாமிலிருந்து திரும்பினேன். 6 மாதங்களுக்கு என்னால் எனது வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. எனது உடல் நிலை அத்தனை மோசமாக இருந்தது. எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதால், என்னால் எனது மனைவியுடன் இல்லற வாழ்வில் ஈடுபட முடியவில்லை. அதற்காக நான் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள நேர்ந்தது.
வழக்கிற்கு வருவோம்... நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தங்களை சிக்க வைத்த நிகழ்வுகள் எவை?


சிறப்பு அதிரடிப்படை முகாம்களில் நான் கற்றுக் கொண்ட பாடங்களின் விளைவாக, துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், அவருக்காக ஒரு சின்ன வேலை செய்யச் சொன்னபோது, அதை மறுக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவர் அப்படித்தான் கூறினார்: ‘ஒரு சின்ன வேலை.' நான் ஒருவரை தில்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். அந்த மனிதருக்காக நான் தில்லியில் ஒரு வாடகை வீட்டை ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். நான் அந்த மனிதரை முதல் முறையாகப் பார்க்கிறேன். அவர் காஷ்மீரி மொழி பேசவில்லை என்பதால், அவர் வெளியாள் என சந்தேகித்தேன். அவர் தனது பெயர் முகமது என்று கூறினார் (நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய அய்வர் குழுவிற்கு முகமதுதான் தலைவர் என காவல் துறை குற்றம் சாட்டியது. அவர்கள் அனைவருமே பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்).


நாங்கள் தில்லியில் இருந்தபோது, எனக்கும் முகமதுவிற்கும் தவீந்தர் சிங்கிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் வரும். அதோடு முகமது தில்லியில் நிறைய பேரை சந்தித்ததையும் நான் கவனித்தேன். அவர் ஒரு கார் வாங்கிய பிறகு என்னை திரும்பிச் செல்லுமாறு கூறினார். பரிசாக அளிப்பதாகக் கூறி அவர் எனக்கு 35,000 ரூபாய் அளித்தார். நான் ஈத்தை முன்னிட்டு காஷ்மீர் திரும்பினேன். சிறீநகர் பேருந்து நிலையத்திலிருந்து சோபூர் செல்ல முற்படும்போது, நான் கைது செய்யப்பட்டு, பரிம்போரா காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன். அவர்கள் என்னை சித்ரவதை செய்து, பின்னர் சிறப்பு அதிரடிப்படை தலைமையகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து தில்லிக்கு கொண்டு வந்தனர். தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவின் வதை முகாமில் முகமதை பற்றி எனக்குத் தெரிந்த அனைத்தையும் கூறினேன்.


ஆனால், அவர்கள், நானும் எனது உறவினர் ஷவுகத், அவரது மனைவி நவ்ஜோத், சர் கிலானி ஆகியோர்தான் நடாளுமன்றத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் என்றுதான் நான் சொல்ல வேண்டும் என வற்புறுத்தினர். ஊடகங்களுக்கு முன் இதை நான் நம்பத்தகுந்த வகையில் சொல்ல வேண்டும் என கூறினர். நான் மறுத்தேன். ஆனால், என் குடும்பம் அவர்கள் கைப்பிடியில் இருப்பதாகவும், நான் ஒப்புக் கொள்ளாவிட்டால், அவர்களை கொன்று விடுவதாகவும் மிரட்டினர். பல வெற்றுத் தாள்களில் கையெழுத்திட வைக்கப்பட்டேன். காவல் துறையினர் சொன்னதை ஊடகங்களிடம் சொல்லி, தாக்குதலுக்கும் பொறுப்பேற்குமாறு வற்புறுத்தப்பட்டேன். சர் கிலானி அவர்களின் பங்கு குறித்து ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது, கிலானி குற்றமற்றவர் என்று நான் கூறினேன். சொல்லிக் கொடுத்ததை தாண்டி நான் பேசியதற்காக, உதவி கமிஷனர் ராஜ்பீர் சிங், ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே என்னிடம் கத்தினார்.
மறுநாள் ராஜ்பீர் சிங், எனது மனைவியிடம் நான் பேச அனுமதித்தார். அதன் பிறகு, அவர்களை நான் உயிருடன் பார்க்க வேண்டுமெனில், நான் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார். எனது குடும்பத்தை நான் உயிருடன் பார்க்க வேண்டுமானால், குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழியாக இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு நான் விடுதலையாகிவிடும் வகையில் எனது வழக்கை பலவீனமாக அமைப்பதாக சிறப்புப் பிரிவு அதிகாரிகள் உறுதி அளித்தனர். என்னை அவர்கள் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, முகமது பலவிதப் பொருட்களை வாங்கிய கடைகளை காட்டினர். இதன் மூலம் வழக்கிற்கு என்னை சாட்சியாக மாற்றினர். நாடாளுமன்றத் தாக்குதலின் பின்னிருந்த மூளையை கண்டுபிடிக்க இயலாத தங்கள் தோல்வியை மறைக்க, காவல் துறையினர் என்னை பலிகடா ஆக்கிவிட்டனர். மக்களை அவர்கள் முட்டாள்களாக்கிவிட்டனர். நாடாளுமன்றத் தாக்குதல் யாருடைய திட்டம் என்பது, இன்னமும் மக்களுக்குத் தெரியாது. காவல் துறை அதிகாரிகள் பதக்கங்கள் பெற்றனர். எனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.


உங்களுக்கு ஏன் சட்டப்பூர்வமான உதவிகள் கிடைக்கவில்லை?


எனக்காக முறையிட யாருமே இல்லை. நீதிமன்ற விசாரணை தொடங்கி ஆறு மாதங்கள் வரையில் எனது குடும்பத்தைக்கூட நான் சந்திக்கவில்லை. பாட்டியாலா இல்ல நீதிமன்றத்தில் அவர்களை சந்தித்தபோது, அது மிகக் குறைவான நேரமே நீடித்தது. எனக்காக வழக்கறிஞரை ஏற்பாடு செய்ய யாரும் இருக்கவில்லை. சட்ட உதவி இந்நாட்டில் அடிப்படை உரிமையாக இருந்த காரணத்தினால், எனக்காக வாதாட நான்கு வழக்கறிஞர்களை நான் பரிந்துரை செய்தேன். ஆனால், அவர்கள் நால்வருமே என் வழக்கை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டதாக நீதிபதி எஸ். என். திங்கரா கூறினார். நீதிமன்றம் எனக்காக தேர்ந்தெடுத்த வழக்கறிஞர், மிக முக்கிய ஆவணங்களை எல்லாம் ஒப்புக் கொள்ளத் தொடங்கினார். உண்மை என்னவென்று அவர் என்னிடம் கேட்கவே இல்லை. பின்னர் நீதிமன்றம் ஒரு நடுநிலையாளரை நியமித்தது. எனக்காக வாதாட அல்ல; நீதிமன்றத்திற்கு உதவி செய்ய. அவர் என்னை சந்திக்கவே இல்லை. மேலும், அவர் எனக்கு மிகவும் எதிரானவராகவும், மதவாதியாகவும் இருந்தார். அதுதான் எனது வழக்கு. மிக முக்கிய விசாரணைக் காலத்தில் எந்த விதத்திலும் எடுத்துரைக்கப்படாதது. என்னைக் கொல்வதுதான் உங்கள் நோக்கம் என்றால், எதற்காக இத்தனை நீளமான சட்ட வழிமுறைகள்? எனக்கு அவை அனைத்துமே மிகவும் அர்த்தமற்றவையாக இருக்கின்றன. நான் சொல்வதெல்லாம் இதுதான்: கண்மூடித்தனமான தேசிய உணர்வும், தவறான புரிதல்களும், சக குடிமக்களின் அடிப்படை உரிமைகளைக்கூட மறுக்குமாறு செய்ய விட்டுவிடாதீர்கள்.

சிறையில் என்ன நிலையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்?

உயர் பாதுகாப்பு தொகுதியில் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளேன். பகலில் மிகக் குறைவான நேரம் மட்டுமே நான் எனது அறையிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகிறேன். வானொலியோ, தொலைக்காட்சியோ கிடையாது. நான் சந்தா கட்டியுள்ள நாளேடுகள்கூட பல பகுதிகள் கிழிக்கப்பட்டே என்னை வந்தடைகின்றன. என்னைப் பற்றி ஏதேனும் செய்தி வந்திருந்தால், அதைக் கிழித்துவிட்டு எஞ்சிய பகுதிகளை மட்டுமே எனக்கு அளிக்கின்றனர்.


தங்கள் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையைத் தவிர, தாங்கள் மிக அதிகமாக அக்கறை கொள்ளும் விஷயங்கள் என்ன?


பல விஷயங்கள் மீது எனக்கு அக்கறை உள்ளது. நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் பல சிறைகளில், வழக்கறிஞர்கள் இன்றி, விசாரணையின்றி, எந்தவித உரிமையும் இன்றி வாடுகின்றனர். காஷ்மீரின் தெருக்களில் நடமாடும் பொது மக்களின் நிலை இதிலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கே ஒரு திறந்த வெளி சிறைதான். அண்மைக் காலங்களில் பொய்யான மோதல் சாவுகள் குறித்த செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இது பனிப்பாறையின் சிறுமுனை மட்டுமே. ஒரு நாகரீக நாட்டில் நீங்கள் பார்க்க விரும்பாத அத்தனையும் காஷ்மீரில் இருக்கின்றன. உங்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் நடக்கிறது...
எனக்கு அநீதி இழைக்கப்பட்டதென சொல்ல முன் வந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். வழக்கறிஞர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அவர்கள் அனைவரும், அநீதிக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதன் மூலம் ஒரு மகத்தான செயலை செய்கிறார்கள். தொடக்கக் காலங்களில், 2001இல் வழக்கு விசாரணையின் தொடக்க நாட்களில், நீதியை நியாயத்தை விரும்புபவர்கள் வெளிப்படையாகப் பேசுவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. உயர் நீதிமன்றம் சர் கிலானியை குற்றமற்றவர் என விடுவித்தபோது, காவல் துறையின் முடிவை மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். மேலும் அதிகமாக மக்கள் வழக்கின் விவரங்களையும், உண்மைகளையும் அறிந்து, பொய்களைத் தாண்டியும் பார்க்கத் தொடங்கிய பிறகு, பேசவும் தொடங்கினர். நீதியை நியாயத்தை விரும்புபவர்கள், அப்சலுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என சொல்ல முன்வருவது இயற்கையானது, ஏனெனில், அதுதான் உண்மை.

தங்கள் மனைவி தபஸ்சும், மகன் காலிப் இவர்களைப் பற்றி நினைக்கும்போது தங்கள் மனதில் என்ன தோன்றுகிறது?

எங்களுக்கு திருமணமான பத்தாவது ஆண்டு இது. அதில் பாதியை நான் சிறையில் கழித்திருக்கிறேன். அதற்கு முன்னால், காஷ்மீரில் உள்ள இந்திய பாதுகாப்புப் படையினரால் நான் பலமுறை கைது செய்யப்பட்டு வதை செய்யப்பட்டுள்ளேன். தபசும் எனது உடல் மற்றும் மனப்புண்களுக்கு சாட்சியாக இருந்துள்ளார். பலமுறை நிற்கக்கூட இயலாதவனாக நான் வதை முகாமிலிருந்து திரும்பியுள்ளேன். எனது பிறப்பு உறுப்பில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது உட்பட, பல வகையான கொடுமைகளை அனுபவித்துள்ளேன். அவர்தான் எனக்கு வாழ்வதற்கான நம்பிக்கையை அளித்தார். ஒரு நாள்கூட நாங்கள் நிம்மதியான வாழ்க்கை வாழவில்லை. இதுதான் பல காஷ்மீரி இணையர்களின் கதையாக இருக்கிறது. காஷ்மீர் இல்லங்கள் அனைத்திலும் அச்சமே முக்கிய உணர்வாக உள்ளது.


தங்கள் மகன் என்னவாக வளர வேண்டும் என விரும்புகிறீர்கள்?


தொழில் ரீதியாக என்றால், மருத்துவராக வேண்டும். அது என்னுடைய நிறைவேறாத கனவு. ஆனால், அதைவிட முக்கியமாக, அவன் அச்சமின்றி வளர வேண்டும் என நான் விரும்புகிறேன். அவன் அநீதிக்கு எதிராகப் பேச வேண்டும் என விரும்புகிறேன். அநீதியின் கதையை என் மனைவியையும் மகனையும் விட, வேறு யார் அதிகமாக அறிவார்கள்?


நாடாளுமன்றத் தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் குடும்பங்கள் உள்ளன...
உண்மையில், தாக்குதலில் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வேதனையை நானும் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால், என்னைப் போன்ற ஓர் அப்பாவியை தூக்கிலிடுவது, அவர்களை திருப்திப் படுத்தும் என அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர். தேசியவாதத்தின் மிக சிதைக்கப்பட்ட நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களை செய்திகளின் ஊடாகப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


உங்கள் வாழ்க்கையின் சாதனையாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?


ஒரு வேளை எனது மிகப் பெரிய சாதனை என்பது, எனது வழக்கின் ஊடாகவும், எனக்கு நடந்த அநீதிக்கு எதிரான பிரச்சாரத்தின் காரணமாகவும், சிறப்பு அதிரடிப்படையினரின் கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பாதுகாப்புப் படையினர் மக்களுக்கு எதிராக நடத்திய அட்டூழியங்கள், மோதல் கொலைகள், காணாமல் போனவர்கள், வதை முகாம்கள் போன்றவற்றைப் பற்றி மக்கள் இன்று விவாதிப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இவைதான் ஒரு காஷ்மீரி நேரடியாக கண்டு வளரும் சூழல். இந்திய பாதுகாப்புப் படையினர் காஷ்மீரில் என்ன செய்கின்றனர் என்பது குறித்து காஷ்மீருக்கு வெளியிலிருக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாது.


காதை கிழிக்கும் மின்சார மணி அடிக்கிறது. இதுதான் நான் அப்சலிடம் கேட்ட இறுதிக் கேள்வி)
நீங்கள் என்னவாக அறியப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்?


அப்சலாக... முகமது அப்சலாக... நான் காஷ்மீரிகளுக்கு அப்சல்... இந்தியர்களுக்கும் நான் அப்சல்தான். ஆனால், இந்த இரு பிரிவினருக்கும் என்னைப் பற்றி முற்றிலும் முரண்பாடான புரிதல்கள் உள்ளன. நான் இயல்பாக காஷ்மீரி மக்களின் முடிவையே நம்புவேன். நான் அவர்களில் ஒருவன் என்பதால் மட்டுமல்ல; நான் சந்தித்த எதார்த்தங்களை அவர்கள் நன்கு அறிவர் என்பதாலும்! எந்தவித சிதைக்கப்பட்ட வடிவமும் அவர்களை தவறாக வழிநடத்த முடியாது. அது வரலாறாக இருந்தாலும் ஒரு நிகழ்வாக இருந்தாலும்.

பூங்குழலி - தலித் முரசு மார்ச் 2007 இதழில் வெளிவந்த தமிழாக்கம

Sunday 3 February 2013

பௌத்த கடும்போக்காளர்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் : முஸ்லிம் கவுன்சில்

ஜெனீவாவில் அடுத்தமாதம் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் நாட்டில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் கலவரத்தை தோற்றுவித்து அதன்மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்வதாக சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக பௌத்த தீவிரப் போக்குடைய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் பிரசாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று காலை கொழும்பு ரண்டமுத்து ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே சிறீ லங்கா முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன் இவ்வாறு தெரிவித்தார்.


தொடர்ந்தும் அவர் இங்கு கருத்து வெளியிடுகையில்இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் அவப் பெயரை ஏற்படுத்தி அதன் மூலம் இலாபம் தேட முனையும் தீய சக்திகள் இன்று பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் மோதலை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்க முயற்சிக்கின்றன. இதற்கு நாம்ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரும் சுதந்திரம் கிடைத்த பின்னரும் முஸ்லிம்கள் மிகவும் விசுவாசமாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள். பிரிவினையை ஏற்படுத்தவோ முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவோ முஸ்லிம்கள் ஒருபோதும் முயற்சி செய்ததில்லை.


இவ்வாறான நிலையில் இன்று முஸ்லிம்கள் இந்த நாட்டைச் சூறையாட வந்தவர்கள் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த ஒரு குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். இது தொடர்பில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜிஹாத் போராட்டத்தை நடத்த முனைவதாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நாம் ஜிஹாத் செய்ய வேண்டிய எந்தத் தேவையும் இந்த நாட்டில் கிடையாது. இந்த நாட்டு முஸ்லிம்கள் தமக்குக் கிடைக்க வேண்டிய சகல உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பெற்றிருக்கையில் ஏன் ஜிஹாத் செய்ய வேண்டும்? என்றும் அவர் இதன்போது கேள்வியெழுப்பினார்.


இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கருத்து வெளியிடுகையில்முஸ்லிம்களாகிய நாம் இலங்கையர்களாக இருப்பதையிட்டு பெருமைப்படுகிறோம். இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களோடும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகிறோம். அவ்வாறே தொடர்ந்தும் வாழ விரும்புகிறோம்.ஆனால் இன்று சில வெளிநாட்டு சக்திகள் ஒரு சிறு குழுவினருக்கு நிதியுதவியளித்து அவர்கள் மூலமாக பிரச்சினைகளை தோற்றுவிக்க முனைகின்றனர். போர் முடிவுக்கு வந்த பின் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் முயன்று கொண்டிருக்கையில் மீண்டும் நாட்டை படுகுழியில் தள்ள வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது என்றார்.


முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் இங்கு கருத்து வெ ளியிடுகையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஜூலைக் கலவரம் ஏற்பட நாம் இடமளிக்கக் கூடாது. ஜூலைக் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாம் நன்கு அறிந்திருக்கிறோம். மீண்டும் அவ்வாறானதொரு நிலைமையைத் தோற்றுவிக்கவே இவ்வாறான சக்திகள் முனைகின்றன. இதற்கு சமூகத் தலைமைகளும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இடமளிக்கக் கூடாது என்றார்.




நன்றி- நல்ல நண்பன்@att.net

Thursday 31 January 2013

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான இஸ்லாமிய படைப்பாளிகளின் கூட்டறிக்கை


இலங்கை இஸ்லாமியப் பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில், அந்த வீட்டில் இருந்த நான்கு மாதக் குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு, அவ‌ளுக்கு ஜனவரி 9ம்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு (Behead) தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத் தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை, குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான்; குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது.
ஆரம்பகால இஸ்லாமிய சட்டங்கள் அதற்கு முந்தைய பாபிலோனிய, சுமேரிய நாகரீகங்களின் தொடர்ச்சியே. மேலும் முறைப்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் இல்லாத அந்த காலகட்டத்தில் நிச்சயமாக அது அப்போதைய சமூக இயங்கியலாக (Social Dialectics)தான் இருந்திருக்க முடியும். அதனால் தான் உலகின் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் அந்த சட்டங்களை பின்பற்றுவதில்லை. சில அரபு நாடுகள் ஐ.நா மனித உரிமை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளன. சவூதியில் அடிக்கடி இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. அவையெல்லாம் இம்மாதிரி சர்வதேச அரங்குகளில் விவாதப் பொருளாவதில்லை. சில தருணங்களில் மேற்கத்தியவர்கள் குற்றங்களை செய்து விட்டு பணம் செலுத்தி தப்பிய நிகழ்வுகளும் உண்டு. ஜார்ஜ் புஷ் காலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்தது.
மேலும் ரிசானா விஷயத்தில் சவூதிய சட்டம் சரியான முறையில் செயல்படவில்லை. விசாரணை, குற்றத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்படவில்லை. அவளுக்கு மொழிபெயர்ப்பு உதவிகள் மற்றும் வழக்கறிஞர் உதவிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் அவளிடம் ஒப்புதல் வாக்குமூலத்தில் கட்டாய கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. இதை அவளின் கடித வரிகள் தெரிவிக்கின்றன. 'நான் அந்த குழந்தையை கொலை செய்யவில்லை' என்றே கடைசி நிமிடம் வரை தெரிவித்துக் கொண்டிருந்தாள். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது). மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளுக்கு தன் தலைவெட்டப்பட போகிறது என்பது தெரியாது. மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களைத் தான் பணிப்பெண்ணாக அமர்த்த வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படவில்லை. அவளின் வயதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்க‌ வேண்டும். வெறும் பாஸ்போர்ட் வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது தவறு. வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் வயது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதற்காக தடயவியல் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் ரிசானா விஷயத்தில் இவை எதுவும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.
மேலும் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதாக சொல்லப்படும் சவூதி அரேபிய அரசு புட்டிப்பால் ஊட்டப்பட்டதற்கான மருத்துவ காரணத்தை தெரிவிக்கவில்லை. குற்றம் நடந்தபோது அவளின் வயது 17. சவூதியில் கொலைவழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு உடனடியாக தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் ரிசானா விஷயத்தில் அது ஏழு வருடங்கள் தள்ளிப்போனது இவ்வழக்கில் மனித நியாயத்தை மேலும் வலுப்படுத்தவதாக உள்ளது. குற்றத்திற்கு ஈடாக ரத்தப்பணம் (Blood money)கொடுக்க அங்கிருந்தவர்கள் தயாராக இருந்தும் இறந்த குழந்தையின் தாய் சம்மதிக்காத காரணத்தால் இது மேலும் தள்ளிப்போனது. சவூதிய சட்டங்கள் சாசுவதமானதன் விளைவு இது.
மேலும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டது இலங்கைப் பெண் என்ற நிலையில் இலங்கை அரசு இதற்கான சரியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் சம்பிரதாய அளவிலே இருந்தது ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகள். ஏற்கனவே போரில் லட்சக்கணக்கான தமிழர்களை குண்டு வீசி கொலை செய்து , சர்வதேச அரங்கில் குற்றவாளியாக இருக்கும் ராஜபக்ஷே எப்படி இதை கவனிப்பார்? மொழிபெயர்ப்பில் தவறு நடந்து விட்டது என்று இலங்கை அரசின் வழக்கறிஞரே குறிப்பிட்டார். ரிசானாவிற்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட தருணத்தில் அது வலுவாக மேல்முறையீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நிராகரிக்கப்படும் போது சர்வதேச அளவில் இந்தப் பிரச்சினையை கொண்டு சென்றிருக்க வேண்டும். தன் மீதான குற்றக் கறையைப் போக்க சர்வதேச உதவியை நாடும் ராஜபக்ஷே இதற்கு தேடாமல் இருந்தது மிகப்பெரும் அவலம்.
இந்த தருணத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்த கூட்டறிக்கை தெரிவித்துக் கொள்கிறது. அவளின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறது. வஹ்ஹாபிய மரபுகளை பின்தொடரும் சவூதிய நிலப்பிரபுத்துவ அரசிற்கும், அவளைக் காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காத ராஜபக்ஷேவிற்கும் கடும் கண்டனத்தை இந்த அறிக்கை பதிவு செய்கிறது.
இவண்
தமிழ்நாடு மற்றும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டமைப்பு 
கவிஞர் ரியாஸ் குரானா (இலங்கை) 
கவிஞர் பைசல் (இலங்கை) 
கவிஞர் அஸ்மின் (இலங்கை) 
இம்தாத் (இலங்கை) 
மஜீத் (இலங்கை) 
கவிஞர் ரிஷான் செரீப் (இலங்கை) 
கவிஞர் பஹீமா ஜஹான் (இலங்கை) 
கவிஞர் லறீனா ஹக் (இலங்கை) 
எ.பௌசர் (ஆசிரியர் எதுவரை இணைய இதழ், லண்டன்) 
கவிஞர் ஏ.ஆர். பர்ஸான் - (இலங்கை) 
ஏ.பி.எம். இத்ரீஸ் (இலங்கை) 
அப்துல் ரசாக் (எழுத்தாளர், இலங்கை) 
கவிஞர் சல்மா (சென்னை) 
கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் (தக்கலை) 
பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா (தக்கலை) 
எழுத்தாளர் முஜிபு ரஹ்மான் (தக்கலை) 
நாவலாசிரியர் மீரான் மைதீன் (நாகர்கோவில்) 
இடலாக்குடி ஹசன் (எழுத்தாளர்) 
குளச்சல் மு.யூசுப் (மொழிபெயர்ப்பாளர்) 
அகமது கபீர் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி) 
சம்சுதீன் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி) 
கவிஞர் பைசல் (தக்கலை) 
எச்.பீர்முஹம்மது (எழுத்தாளர், வேலூர்) 
நதீம் (மனித உரிமை ஆர்வலர், வாணியம்பாடி) 
ஆபிதீன் (எழுத்தாளர், நாகூர்) 
சதக்கத்துல்லா ஹசனீ (பதிப்பாசிரியர் அல் ஹிந்த் மாத இதழ், மதுரை) 
அன்வர் பாலசிங்கம் (எழுத்தாளர், புதுக்கோட்டை) 
பீர்முகமது (செய்தியாளர், சென்னை) 
ரபீக் இஸ்மாயில் (திரைப்பட இயக்குநர், சென்னை) 
வழக்கறிஞர் உமர் (இன அழிப்புக்கு எதிரன இஸ்லாமிய இளைஞர் இயக்கம், திருப்பூர்) 
கவிஞர் சாகிப் கிரான் (சேலம்) 
தாஜ் (எழுத்தாளர், சீர்காழி) 
வஹீதா பானு (கரூர்) 
சபீலா தஸ்னீன் (மென்பொருள் பொறியாளர், சென்னை) 
முனைவர் லைலா பானு (நாகர்கோவில்) 
அனுஷ் கான் (பதிப்பாளர், பொள்ளாச்சி) 
பைசல் மசூத் (பத்திரிகையாளர், சென்னை) 
களந்தை பீர்முஹம்மது (எழுத்தாளர், சென்னை) 
கீரனூர் ஜாகிர் ராஜா (எழுத்தாளர், சென்னை) 
சிராஜுதீன் (புத்தகம் பேசுது இதழ், சென்னை) 
அர்ஷியா (எழுத்தாளர், மதுரை) 
மௌலவி முஹம்மது ரபீக் மிஸ்பாஹி (மதுரை) 
முனைவர் அன்வர் பாஷா (திருப்பத்தூர்) 
அனார்கலி (முனைவர் பட்ட ஆய்வாளர், டெல்லி பல்கலைகழகம்) 
அமீர் அப்பாஸ் (திரைப்பட உதவி இயக்குநர், சென்னை) 
பப்பு சிராஜ் (மனித உரிமை ஆர்வலர், தக்கலை) 
அஷ்ரப்தீன் (மானுட விடுதலைக் கழகம், அருப்புக்கோட்டை) 
அமீர் (வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்)
***
சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நஃபீக் எழுதிய கடிதம்!
எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களைக் கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.
குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை, பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.
குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார். அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள்.
கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன். சரியான நினைவு எனக்கில்லை, குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.
அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன், நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை.
ரிஸானா நபீக்.
அல் த்வாத்மி சிறைச்சாலை,
அல் தவாத்மி, சவுதி அரேபியா.
நன்றி - கீற்று

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...