Friday 2 March 2012

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!


ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் சொந்தக்காரரான உலக ஊடக சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.
ஊடக சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவைகளின் இலக்கணத்தைப் படைத்து மனித குலத்துக்கு வழங்கியதாக பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் அதிர்ச்சியில் வீழ்ந்திருப்பது போன்றதொரு போலித் தோற்றத்தைக் காட்டுகின்றன. நடக்கக் கூடாததும், நடக்கவே முடியாததும் நடந்து விட்டதைப் போன்ற ஒரு பாசாங்கு!
ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. ராஜ குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று போட்டி சாம்ராஜ்ஜியங்களைச் சேர்ந்த ஊடகங்கள் சாமியாடிக் கொண்டிருக்கின்றன.
இங்கிலாந்தில் ருபர்ட் முர்டோச்சின் மேல் நடந்து வரும் விசாரணைகளைப் போலவே, அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் தங்கள் நாட்டில் முர்டோச்சின் ஊடகங்கள் பின்பற்றிய முறைகேடான விவகாரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறது.
முதலாளித்துவ தனிநபர் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதல் போன்று தோற்றமளிக்கும் இந்த நிகழ்வுகள் உண்மையில் எம்.ஜி.ஆர். – நம்பியார் கத்திச் சண்டை ரகத்தைச் சேர்ந்தவையே. புலனாய்வு என்ற பெயரில் மஞ்சள் மசாலாக்களை கடைவிரிக்கும் இதழியலுடன் இவை நேரடித்தொடர்பு கொண்டவை.
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனைச் சேர்ந்த மில்லி டோலர் என்கிற 13 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போகிறார். முர்டோச்சிற்கு சொந்தமான ‘நியூஸ் ஆப் தெ வோர்ல்ட்’ பத்திரிகையின் சார்பாக களமிறங்கும் தனியார் துப்பறியும் நிபுணர் க்ளென் முல்கெய்ர், மில்லியின் தொலைபேசியை கள்ளத்தனமாக இயக்கி,  மில்லி எங்கோ இருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மில்லியின் குடும்பமும் இதை நம்புகிறது. போலீசாரும், இதையே ஆதாரமாக வைத்து தமது புலனாய்வை தவறான திசையில் தொடருகிறார்கள். கடைசியில் அதே ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மில்லியின் சிதைந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அதுவரை அக்குடும்பம் மில்லி உயிரோடு இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. போலீசாரும் அதே கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இக்கொலைச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் பற்றியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை பரபரப்பாக எழுதுகிறது.
அடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின் மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள். ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை தொலைபேசிகளை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிய வந்தாலும், அது நிரூபிக்கப் படவில்லை. 2002ல் இப்பத்திரிகை இழைத்த குற்றம் 2011 ஜூலையில்தான் ஆதாரபூர்வமாக பிடிபடுகிறது.
முர்டோச்சின் பத்திரிகை பல்வேறு தருணங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும் செய்திகளைத் திரட்டியுள்ளது என்பது இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. லண்டன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடைய தொலைபேசிகளும், 9/11 இரட்டை கோபுரத் தகர்ப்பில் கொல்லப்பட்ட பிரிடிஷ் பிரஜைகளின் உறவினர்களின் தொலைபேசி உரையாடல்களும் கூட ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் லஞ்சம் கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் அம்பலமாகிறது. அதாவது, இங்கிலாந்தின் குடிமக்கள் யார் எப்போது எந்த வழக்கில் சிக்கியிருந்தாலும், அந்த விவரம் இப்போது முர்டோச்சினுடைய பத்திரிகையின் கைக்கு வந்துவிட்டது.
1969 இல் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை விலைக்கு வாங்கிய முர்டோச், அதனை டேப்லாய்ட் வகையைச் சார்ந்த ஒரு பத்திரிகையாக மாற்றினார். வேறு விதமாகச் சொன்னால் அது ஒரு மஞ்சள் பத்திரிகை. முர்டோச்சுக்கே சொந்தமான இன்னொரு வாரப்பத்திரிகையான ‘தி சன்’ என்ற மஞ்சள் பத்திரிகையைக் காட்டிலும் கேவலமான பத்திரிகை இது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் படுக்கையறைச் செய்திகள், கள்ள உறவு பற்றிய கிசுகிசுக்கள் ஆகியவைதான் இப்பத்திரிகையின் மூலதனம்.
இன்றைக்கு விவகாரம் அம்பலமானவுடன் மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் காட்டும் ஆச்சர்யம்தான் உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கது. ஏதோ ரூபர்ட் முர்டோச் இத்தனை காலமாக யோக்கியமாகத் தொழில் செய்து வந்தவர் போலவும், இப்போதுதான் அவரது ஊழல்கள் வெளியாகியுள்ளது போலவும் இந்தப் பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன. ஆனால், ரூபர்ட் முர்டோச் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியதிலாகட்டும், தனது கிளைகளான ஒவ்வொரு ஊடகங்களையும் வெற்றிகரமாக நடத்தியதாகட்டும் – அனைத்திலும் அவர் பின்பற்றியது பச்சை அயோக்கியத்தனமான வழிமுறைகள் தானென்பது அனைவருமே அறிந்து வைத்திருந்த ‘ரகசியம்’தான்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!
முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி - கார்டியன் (படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)
ஐந்து கண்டங்களையும் தழுவி பல்வேறு நாடுகளில் 175க்கும் மேற்பட்ட செய்தித் தாள்கள், நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள், உலகெங்கும் செயற்கைக்கோள் தொலைகாட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் என்று பரந்து விரிந்து கிடக்கும் ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் நமது கற்பனைகளை விஞ்சிய ஒன்று. 1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் ரூபர்ட் முர்டோச், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஒரு மீடியா மன்னனாகிறார்.
பின்னர், மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் பங்குகளை வாங்குவதன் மூலம் அப்பத்திரிகையைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட பத்திரிகையாக மாற்றுகிறார்.
செய்திப் பத்திரிகை என்பதன் கடமை செய்திகளைச் சொல்வது எனும் இலக்கணத்தை உடைத்து, செய்திகளினூடாக மசாலாத் தூவப்பட்ட மலினமான கிசுகிசுக்களை விற்பனை செய்ததே முர்டோச்சின் பிரம்மாண்ட வளர்ச்சியின் அடிநாதமாக இருந்தது. இது துவக்கம். காலம் செல்லச் செல்ல, வெறும் கிசுகிசுக்கள் மற்றும் வலதுசாரி அரசியலின் வெறிகொண்ட துவேசப் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திப் பத்திரிகையின் முதன்மைச் செய்திகளாயின. சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் போன்ற மேட்டுக்குடியினரின் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் பற்றிய கிசுகிசுக்களைத் தேடி அவரது பத்திரிகையாளர்கள் அலையும் தேவை இருக்கவில்லை. திரைப்பட, தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்களையும் முர்டோச்சே நடத்தி வந்ததால், பிரபலங்கள் தேடி வந்தனர்.
முர்டோச் தொடங்கி வைத்த வழிமுறைகளைப் பிற போட்டி பத்திரிகைகளும் பின்பற்றத் துவங்கியதால், ஆபாசத்தை விற்பதில் அவர்களுக்குள்ளேயே கழுத்தறுப்புப் போட்டிகள் துவங்கின. ‘கதைகள்’ கிடைக்காத சந்தர்பங்களில் எதேச்சையாக நடந்து விடும் குற்றச் சம்பவங்களை இட்டுக் கட்டி மசாலாத் தடவி வெளியிடுவது, நடந்தேயிராத செய்திகளை உருவாக்குவது, பிரபலங்களின் படுக்கையறை விவகாரங்கள், கள்ள உறவுகள் ஆகியவற்றைத் தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் துப்பறிந்து வெளியிடுவது, அதி நவீன புகைப்படக் கருவிகள் மூலம் அவர்களது அந்தரங்கங்களைப் படம் பிடித்துப்போடுவது போன்ற கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டனர். இத்தகைய புகைப்பட நிருபர்கள் ‘பாப்பராஸி’ என்றழைக்கப்பட்டனர். பிரபலங்களின் அரை அம்மண, அம்மணப் படங்கள், கள்ளக் காதல்கள் ஆகியவற்றை படமெடுத்து பத்திரிகைகளுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில், ஒரு மாபெரும் ‘சுயதொழிலாக’ உலகமெங்கும் பரவத்தொடங்கியது. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் காதல் விவகாரத்தை படம் பிடிப்பதற்காக பாப்பராஸிகள் அவரைக் காரில் துரத்த, அவர்களிடமிருந்து தப்புவதற்காக விரைந்த டயானாவின் கார் கவிழ்ந்து டயானா இறந்ததும், உடனே பாப்பராஸிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றிய விவாதத்தில் பத்திரிகை உலகம் இறங்கியிதும் 90களின் செய்திகள்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!தரத்தில் காமக் கிளுகிளுப்புக்கு இணையானதும் அதே அளவுக்கு சந்தையில் விலை போகக் கூடியதுமான பண்டம் – அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டும் துவேசப் பிரச்சாரம். ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வையும் அச்சத்தையும் விசிறி விட்டதில் முர்டோச்சின் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
முர்டோச்சின் ஊடக நிறுவங்கள் தாம் இயங்கிய நாடுகள் அனைத்திலும், அங்கிருந்த வலதுசாரி பாசிஸ்டு கட்சிகளையும் அதன் தலைவர்களையுமே உயர்த்திப் பிடித்தன. இசுலாமியர்கள், இசுலாமிய நாடுகளின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதில் முர்டோச்சின் ஊடகங்கள் தலைமைப் பாத்திரம் ஆற்றின. இந்த அச்சமும் வெறுப்புணர்வும்தான் இன்று வரையில் ஈராக்கில் சிதறும் உடல்கள் மேற்குலக மக்களின் மனசாட்சியை உலுக்காமல் இருப்பதற்கான உளவியல் ரீதியிலான அடிப்படை ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.
இங்கே தலித்துகள், இசுலாமியர்கள், தமிழ் உணர்வாளர்கள், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்புணர்வை ‘தினமலர்’ திட்டமிட்டே எப்படி தோற்றுவிக்கிறதோ, அதேபோல் மேற்கில் இசுலாமிய வெறுப்பை விதைத்ததில் முர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.
இரண்டாயிரமாவது ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே தனது பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளில், ‘இதோ சதாம் அணு ஆயுதம் தயாரிக்க அவரது விஞ்ஞானிகளிடம் சொல்லி விட்டார்’, ‘இதோ ஈராக்கில் அணு குண்டு பரிசோதனை நடந்து விட்டது’ என்பது போன்ற பச்சை புளுகுகளை அவிழ்த்து விடத் துவங்கினார் முர்டோச். சதாம் உசேனால் இந்த பூமிக்கே ஆபத்து என்பது போலெல்லாம் விரிந்த அந்தக் கதைகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த சாதாரண மக்களின் மனங்களில் அவரை சாத்தானின் அவதாரம் என்று பதிய வைத்தது. சதாம் அழிக்கப் படவேண்டியவர் என்றும், இந்தப் போரினால் நாகரீக உலகத்து மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.
ஈராக்கின் மேலான யுத்தம் துவங்கியதும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும், டோனி பிளேருக்கும் தனது முழுமையான ஆதரவைத முர்டோச் வெளிப்படையாகத் தெரிவித்தார். அமெரிக்கா இதுகாறும் நடத்தியுள்ள போர்களைப் பற்றிய செய்திகளை சாகசகக் கதைகள் போல் விவரித்து, போர் என்பது மனிதர்கள் கொல்லப்படும் கொடூர நிகழ்வு என்பதாக இல்லாமல் ஒரு சாகச விளையாட்டு என்பதாகப் பொதுபுத்தியில் பதியச் செய்தார். சர்வதேச அளவிலான பிற முதலாளித்துவ பத்திரிகைகளும் இதே பாணியில்தான் இயங்கின என்றாலும், முர்டோச்சின் பத்திரிகைகளே இதில் முன்னணியில் நின்றன.
போரின் முடிவில் அணு ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஆனால், முர்டோச்சின் பத்திரிகைகள் உள்ளிட்டு அந்தக் கதைகளைப் பரப்பிய எந்த முதலாளித்துவ ஊடகமும், இத்தகையதொரு பொய்யான பொதுக்கருத்தை உருவாக்கியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்களோ மேற்குலக ஜனநாயகவாதிகளோ கருதவில்லை. போரில் கொல்லப்பட்ட  ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். இன்று அந்த நாடே வாழ்க்கையிழந்து நிற்கிறது. எனினும் முர்டோச் வெளியிட்ட செய்திகளுக்கு என்ன ஆதாரம் என்றோ, அதன் விளைவுக்கு என்ன பதில் என்றோ யாரும் கேட்கவில்லை.
பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் முர்டோச் கொண்டிருந்த உறவும், செல்வாக்கும், அவரது மீடியா சாம்ராஜ்ஜியத்தின் அபரிமிதமான வீச்சும் அவருக்கு வரம்பற்ற பலத்தையும் திமிரையும் அளித்திருந்தன. ஈராக் மட்டுமல்லாமல், சிரியா, லிபியா, பாலஸ்தீனம் என்று அமெரிக்காவுக்கு அடங்காத இசுலாமிய நாடுகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் விஷத்தைக் கக்கி, உலகெங்கும் மக்கள் மத்தியில் இசுலாமிய விரோதத்தை ஊட்டி வளர்க்கும் முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி இளவரசர் அல்லாவி பின் தலால். (மதமா – வர்க்கமா என்கிற முரண்பாடுகள் எழும் போது முதலாளித்துவவாதிகள் எப்போதும் சரியான நிலையையே எடுக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு).
தற்போது முர்டோச்சின் வழிமுறைகள் அம்பலமாகியிருப்பினும் இதெல்லாம் முதலாளித்துவ உலகத்திற்கு புதிய செய்தியில்லை. இன்றைக்கு முர்டோச்சைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பிற முதலாளித்துவ ஊடகங்கள் பின்பற்றுவதும் இதே வழிமுறைகளைத்தான். ஆயினும், தற்போது எழுந்திருக்கும் சலசலப்புகளால் 168 வருடங்களாக வெளியாகி வந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு முர்டோக் ஆளாகியுள்ளார். விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு கைகட்டி நிற்கிறார்.
எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் அந்தத் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைப் போன்றும், மேற்கு நாடுகளில் நிலவும் தனிமனித உரிமை போன்ற ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் செத்துப் போகாமல் இருப்பதன் ஒரு சமகால சாட்சிதான் முர்டோச் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது என்பது போலவும் சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவ்வாறே நம்பவைக்கப் படுகிறார்கள். உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். படம் முடிந்தது. ரசிகர்கள் வீட்டுக்குக் கிளம்பலாம என்று முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு ஒரு ‘சுபம்’ போட்டு முடிக்கப் பார்க்கின்றன.
ஆனால், இது அத்தனை சுலபத்தில் கடந்து போகும் ஒரு பிரச்சினையல்ல. முர்டோச்சின் பாணியும் வழிமுறைகளும் அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்றைக்கு ‘குற்றங்கள்’ என்று அவர்மேல் சுமத்துப்பட்டுள்ள செயல்கள் எதுவுமே அவர் புரிந்துள்ள உண்மையான குற்றங்களின் நிழலைக் கூட தொடவில்லை என்பதே உண்மை.
அரச குடும்பத்தையே ஒட்டுக்கேட்டது, ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தனிமனித உரிமையில் கைவைத்தது, போன்ற சில்லரை அத்துமீறல்கள்தான் இன்று இங்கிலாந்திலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் அதிர்ச்சியையும் சத்தியாவேசத்தையும் தூண்டியுள்ளது. ஈராக் பற்றி வெளியிட்ட புளுகுச் செய்திகளுக்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எவரும் கோராததற்குக் காரணம், அது ஏகாதிபத்தியங்களின் விருப்பம் மற்றும் நலன் சார்ந்தது. இந்த அடிப்படையில் இருந்துதான் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களுடைய உயிர்களை விட அரச குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் ‘ப்ரைவசி’ மற்றும் தனிநபர் உரிமைகளை மேன்மையானதாகச் சித்தரிக்கும் அவர்களின் விசாரணைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!நியூஸ் கார்பொரேஷன் நிறுவனத்தின் தலைமையை இன்னமும் முர்டோச் குடும்பத்தினரே ஆக்கிரமித்துள்ளனர். மேற்கத்திய கார்ப்பரேட் நிர்வாக முறையின் பார்வையில் மிகவும் பின்தங்கியதான இந்தக் குடும்ப ஆதிக்கமும், முர்டோச்சை நோக்கி எழும் விமர்சனங்களுக்கு ஒரு கூடுதல் காரணமாக இருக்கிறது. கூக்குரல்கள் அனைத்தும் இந்தத் ‘தலையை’ மட்டுமே குறிவைக்கின்றன. நியூஸ் கார்பொரேஷன் எனும் மொத்த உடலையும் இயக்கி அதன் நாளங்களில் இரத்தமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நலன் குறித்த விவாதங்களே எழவில்லை என்பதிலிருந்து நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
மீளாத போர் வெறியில் மூழ்கிக் கிடக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு ரூபர்ட் முர்டோச்களின் தேவை தீர்ந்து விடவில்லை. சதாம் உசேனும், பின்லேடனும் ஒழிந்து விட்டார்கள். ஆனால், நாளையே வேறு ஒரு மூன்றாம் உலக நாட்டின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் துவக்குவதற்கு முன் மக்களின் பொதுபுத்தியைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். இசுலாமியர்கள் மேல் கருத்துக்களத்தில் தாக்குதல் தொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு ரூபர்ட் முர்டோச் கட்டாயம் தேவைப்படுவார்.
அவர் தயாரித்து வழங்கிய பாசிச பிரச்சார ஆயுதத்தின் பணி இன்னமும் நிறைவுறவில்லை. இறுகும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை ஏகாதிபத்தியங்கள் போர்களினூடேதான் தேடிச் செல்லும். அப்போது பொறுத்தமான கதைகள் விதைக்கப்பட வேண்டும்; வில்லன்கள் குறித்த அச்சமூட்டும் வர்ணனைகள் செய்யப்பட வேண்டும்; மக்களின் பொதுக்கருத்தை நெம்பி வளைக்க வேண்டும் – அதற்கு நியூஸ் கார்ப்பொரேஷன் போன்ற பிரச்சார ஆயுதங்கள் வேண்டும். எனவேதான், படுக்கையறையை எட்டிப்பார்த்த ரூபர்ட் முர்டோச்சின் அநாகரீகங்கள் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு அவரின் கொலைப் பாதகங்கள் பேசப்படுகிறதில்லை.
ரூபர்ட் முர்டோச் ஊடகத் துறையில் துவக்கி வைத்துள்ள போக்குகள் மேற்குலகம் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அதன் பாதிப்புகளும், பிரதி பிம்பங்களும் உலகெங்கும் உள்ள முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் தனியார் தொலைகாட்சி சேனல்கள் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தேதியில் சுமார் 600 தொலைக்காட்சி சேனல்களுக்கான லைசென்சுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வழங்கியிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளைப் போல் செய்திகளுக்கு மசாலா சேர்ப்பது, பரபரப்புக் கூட்டும் ‘Breaking News’ மற்றும் ‘Exclusive News’ போன்ற கழிசடைக் கலாச்சாரங்கள் தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஸ்டார் குழுமத்தால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ரக உயர் நடுத்தரவர்க்கத்தினரின் நொறுக்குத் தீனிகளுக்கு இந்த பரபரப்பு பாணி செய்திகள் சுவை கூட்டின.
செய்தியையும் அதன் கண்ணோட்டத்தையும் பகுத்தறிய முடியாத வண்ணம், ரூபர்ட் முர்டோச்சின் பாணியை நகலெடுத்து ‘டைம்ஸ் நௌ’, ‘என்.டி.டி.வி.’, ‘ஐ.பி.என்.’, ‘டி.வி.9′, ‘ஹெட்லைன்ஸ் டுடே’ என்று புற்றீசல் போல ஊடக கார்பரேட்டுகள் தோன்றின. இவர்களின் செய்திச் சந்தையின் இயக்கத்திற்கான அச்சாணி, மலிவான முறையில் உணர்ச்சியையும் பரபரப்பையும் தூண்டுவது மட்டுமே என்றான பின்னால், இதுகாறும் போலியாகவாவது தூக்கிப் பிடிக்கப்பட்டு வந்த நேர்மை, புனிதம் போன்ற பழைய விஷயங்கள் தேவையற்றதாகின.
லண்டனைச் சேர்ந்த மாணவியான மில்லி டோலரின் மரணத்தில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் தில்லியைச் சேர்ந்த ஆருஷி என்கிற பள்ளி மாணவியின் மரணத்திலும் இந்திய ஊடகங்கள் பின்பற்றின. ரூபர்ட் முர்டோச்சின் ஊடகங்கள் உலகளவில் இசுலாமியர்கள் மீதும் இசுலாமிய நாடுகள் மீதும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன என்றால், இந்திய முதலாளித்துவ ஊடகங்களோ இசுலாமியர்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒவ்வொரு முறை இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதும், செய்திச் சேனல்கள் விசாரணையேதுமின்றி இசுலாமியர்களை நோக்கியும் பாகிஸ்தானை நோக்கியும் விரலைச் சுட்டுகின்றன.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!முர்டோச்சின் ஊடகங்கள் சொன்ன பேரழிவு ஆயுதங்கள் பற்றிய புளுகுகள் அம்பலமானதைப் போன்றே இந்திய ஊடகங்கள் இசுலாமியர்களைக் குற்றவாளிகளாக்கிய எத்தனையோ குண்டு வெடிப்புகளின் உண்மையான காரணம் இந்துத்துவ கும்பல்தான் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கிறது. தனது பொய்கள் அம்பலமான போது ரூபர்ட் முர்டோச் கடைபிடித்த அதே விதமான கள்ள மௌனத்தைத்தான் இந்திய ஊடகங்களும் கடைபிடிக்கின்றன.
மேற்கில் அன்றாட வாழ்வின் குரல்வளை மேல் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார யதார்த்தத்தை பயங்கரவாத பீதியூட்டி மடைமாற்ற முடிகிறது. இங்கே தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள், ஆதிவாசி மக்களின் போராட்டங்களைப் பின்தள்ளுவதற்கு பயங்கரவாதம்  மட்டுமல்ல காந்தியவாதமும் ஊடகங்களுக்குப் பயன்படுகிறது.
நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதிலும், திசை திருப்புவதிலும், அரசியல் தலைவர்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும், ஊடகங்களின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ரசனை, சிந்தனை முறை உள்ளிட்ட அனைத்தையும், அதாவது நமது ஆளுமையை அடக்கி ஆள்வதில், அல்லது வளைந்து உருவாக்குவதில் ஊடக முதலாளிகளின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
ரூபர்ட் முர்டோச் எனும் கிழவன் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.
அவனைக் கூண்டில் ஏற்றிவிட்டதாகவும் தண்டிக்கப்போவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள் பத்திரிகை சுதந்திரத்தின் காவலர்கள்.
____________________________________________________________________
- புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011 

Thursday 19 January 2012

காணொளி - லிபியாவில் இடம்பெற்ற அமெரிக்க ஜிஹாதின் அக்கிரமம்!


இஸ்லாம் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கமாகும்.  அல்லாஹ்வின் இறுதித் தூதை சுமந்து வந்த றசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை அல்குர்ஆன் அகிலத்திற்கான ஓர் அருட்கொடை என வர்ணிக்கின்றது.

போரின் போதும் சமாதான சூழ்நிலையிலும் ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும்? அவனது செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும்? என்று நபி (ஸல்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

போர் ஒன்றின் பின்னர் கைதிகள் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என இஸ்லாம் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.  நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு தளபதியாக நின்று போரியல் விதி முறைகளை எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

பத்ர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளை, அவர்களை வைத்து முஸ்லிம் சிறார்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுகொடுத்ததன் பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.  உலகத்திற்கு ஓர் அருட்கொடையாக  அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் சகல துறைகளுக்கும் முன்மாதிரி என்று நாங்கள் உரத்து கோஷமிடும் அளவிற்கு  எங்களில் அந்த முன்மாதிரி இல்லை என்பதை எமது சமகால செயற்பாடுகள் சாட்சிகளாக இருக்கின்றன.

இங்கே நீங்கள் காண்பது 2011 செப்டம்பர் மாதம் 20ம் திகதி லிபியாவின் சிர்த் நகரத்தில் புனித இஸ்லாத்தின் பெயரில் ஜிஹாதின் பெயரில் இடம் பெற்ற காட்டுமிராண்டித்தனம் ஒன்றை எடுத்துக் காட்டும் ஒரு காணொளி.

லிபியாவின் தலைவர் கதாபியின் கடைசி நிமிடங்களில் அவரோடு இறுதிவரை நின்று அமெரிக்க நேட்டோ படைகளோடும், பல அரபு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அல்கைதா கூலிப்படைகளோடும் போராடிய மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ் அவர்களின் உடலத்திற்கு, அமெரிக்காவினாலும் அதன் அடிவருடி புததிஜீவி யூசுப் அல் கர்ளாவி போன்ற கைக்கூலிகளினாலும் வடிவமைக்கப்பட்ட ஜிஹாதிய வாதிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளை இந்தக் காணொளியில் பார்க்கமுடியும்.

அல்லாஹு அக்பர் என்ற வீர முழக்கத்துடன் அரங்கேறும் இந்த அக்கிரமங்களை,  அல்லாஹ்வையும் அவனது துாதர் (ஸல்) அவர்களையும் எற்றுக்கொண்ட ஒருவனால் அங்கீகரிக்க முடியாது.

இறந்த மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ் அவர்களின் முகத்திற்கு நீல நிற சாயத்தை பூசி அவரது உடலத்தை வதைப்படுத்தும் அவரின் உடமைகளை கொள்ளையிடும் “அமெரிக்க ஜிஹாதிய” வாதிகளை அவர்களின் அநாகரிகமான செயல்களை இந்தக்காணொளி தெளிவாகக் காட்டுகிறது.


                             லிபிய இராணுவ மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ்

நாம் ஜாஹிலிய்யா என்று வர்ணிக்கின்ற மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் கூட போர் ஒன்றின் பின்னர் நடக்கும் இத்தகைய அட்டுழியங்களை அனுமதிப்பதில்லை. ஜெனீவா சாசனம் கூட இதனைத் தடுக்கின்றது.

அல்லாஹ்வின் திருப்திக்காக அநீதிக்கு எதிராக போராடுதல் என்ற கருத்தை வழங்கும் ஜிஹாத் என்ற சொல்லாடல் இன்று அநீதியாளர்களின், அநியாயக் காரர்களின் தேவைக்காக அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப் படுகின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.

ஜிஹாத் தொடர்பாக முழு முஸ்லிம் உம்மத்தும் முழுமனதாக ஏற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீன் மீட்பை அதற்கான போராட்டத்தை எதிரிகள் திசை திருப்பி விட்டார்கள். பலஸ்தீன் போராட்டம் அநாதையாக்கப் பட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களை தனது சொந்த பூமியில் அநாதைகளாக்கிய இஸ்ரேலிய அக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக முஸ்லிம் உம்மத்தில் ஊற்றெடுத்து வந்த ஜிஹாதிய போர்க்குணம் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டிருக்கிறது.

எதிரிகளை விட்டு விட்டு எங்களுக்குள்ளே மோதுகின்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்குள் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் எதிரிகள் என்று நாங்கள் காலம் காலமாய் நம்பி வந்தவர்களே இப்போது எங்களுக்கு கட்டளை இடுகின்றார்கள்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் தனது எதிரிகளை இனம் கண்டு எங்களுக்குக் காட்டித்தருகின்றன. அதற்கு ஜிஹாதிய பத்வா வழங்கி ஆன்மிக உரமிட்டு உணர்வுகளை தட்டிக்கொடுக்க கைக்கூலிகள் பல பேர் காத்துக்கிடக்கின்றார்கள்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு இருந்த அச்சுறுத்தல்கள் கட்டம் கட்டமாக அழிக்கப்படுகின்றன. தடைகள் தகர்க்கப்படுகின்றன. தேசங்கள் சிதைக்கப்படகின்றன.

ஆப்கானைப் போன்று, ஈராக்கைப் போன்று அமெரிக்காவின் அதிகாரத்திற்குக் கீழ் லிபியாவை கொண்டு வந்த திருப்தியில் அடுத்த இலக்கை நோக்கி இந்த ஆன்மீக அட்டகாசம் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

இப்போது,  ஐநாவை  சிரியா விவகாரத்தில் தலையிடுமாறு வேண்டி  ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியும், அமெரிக்க ஆதரவு ஜிஹாதின் “கோட் பாதரு'' மான யூசுப் அல் கர்ளாவி கோரிக்கை விட்டிருக்கிறார்.

பலஸ்தீன போராட்டத்திற்கு இன்றுவரை உறுதுணையாக இருக்கும், பலஸ்தீன போராளிகளுக்கு தனது நாட்டில் அலுவலகங்களை அமைத்துக் கொடுத்து, சகல ஒத்தாசைகளையும் வழங்கி சுதந்திரமாக அவர்களை செயல்பட அனுமதித்திருந்த சிரியாவின் நிலையும் நாளை லிபியாவைப் போன்று மாற்றமடையலாம்.

இந்த ஏகாதிபத்திய அரசியல் நலன்காக்கும் இஸ்லாமிய (?) ஏஜன்ட்களின் அடுத்த எஜன்டா எதுவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்!



Wednesday 18 January 2012

கத்தார் மன்னரின் இரகசிய இஸ்ரேல் விஜயம்


கத்தார் மன்னர் செய்க் ஹமாத் பின் கலீபா இஸ்ரேல் நாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேண்கொண்டு இஸ்ரேலிய கதிமா கட்சியின் தலைவி ஸிபி லிவினியை சந்தித்துள்ளார்.

இந்த இரகசிய பயணத்தில் கத்தாரின் பிரதமர் செய்க் ஹமாத் பின் ஜாஸிம் அல்தானியும் பங்குகொண்டுள்ளார்.

இந்த இரகசிய பயணத்தின் போது இஸ்ரேலிய அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருப்பதாக அறிய வருகின்றது.

இஸ்ரேலுடனான எரிவாயு ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட கத்தார் மன்னர், கத்தாரின் நடைமுறையிலுள்ள பாடநூல்களை மறுசீரமைப்பது பற்றிஅந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் அறிய வருகின்றது.

கத்தாரின் இஸ்ரேலுடனான இந்த உறவு அந்நாட்டிலுள்ள மற்றும் அந்த நாட்டை அதரிக்கின்ற இஸ்லாமியவாதிகளிடம் எவ்வித எதிர்ப்பு உணர்வுகளையும் ஏற்படுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மற்றும் இது தொடர்பாக அரச குடும்பத்தோடு மிகவும் நெருங்கிய உறவு வைத்திருக்கும் யூசுப் அல் கர்ளாவி ஆழ்ந்த மௌனம் சாதித்து வருகின்றார்.

Tuesday 17 January 2012

கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!


அவை மிகக் கலங்கலான வீடியோக் காட்சிகள். கடந்த வாரம் வெளியான அந்தக் காட்சிகளைக் கண்டு உலகெங்கும் மனிதாபிமானம் கொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். முதல் வீடியோவில் அந்த வயதான மனிதர் காரிலிருந்து தரதரவென்று இழுத்துச் செல்லப் படுகிறார். அவரது உடலெங்கும் இரத்தக்கறை படிந்துள்ளது. தலை கலைந்துள்ளது. அங்குமிங்கும் அலைபாயும் கண்களில் இன்னதென்று விளக்கவியலாத ஒரு உணர்ச்சி உறைந்து போயிருக்கிறது. வாயிலிருந்து ஏதோ புரியாத வார்த்தைகள் வெளிப்படுகிறது. அந்த மனிதரைக் கீழே தள்ளும் வெறி பிடித்த கூட்டம் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைக்கிறது. தொடர்ந்து சில துப்பாக்கி முழக்கங்கள் கேட்கிறது. வேதனை அலறலும் மரண ஓலமும் வெறிக்கூச்சலும் எழுகிறது. இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் கைபேசிக் காமெரா அங்குமிங்குமாய் அலைபாய்கிறது. சிறுது நேரத்திலேயே அனைத்தும் ஒரு முடிவுக்கு வருகிறது. தொடரும் காட்சிகளில் உயிரற்ற அந்த மனிதரின் பிணம் தரையோடு தேய்த்து இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறார்கள். சுற்றி நிற்கும் துப்பாக்கியேந்திய ‘வீரர்கள்’ வெற்றி முழக்கமிடுகிறார்கள்.


———————————————————


இது இரண்டாவது வீடியோக் காட்சி. ஒரு அடைசலான அறை. அதன் ஒரு மூலையில் இரத்தம் தோய்ந்த உள்ளாடைகளோடு இளைஞனொருவன் சுவரில் சாய்ந்து அமர்ந்துள்ளான். உறுதியான பார்வை. தன் உடலில் உண்டாயிருக்கும் காயங்களை அசிரத்தையாகப் பார்வையிடுகிறான்.  ‘உன் காயங்களுக்கு நாங்கள் மருந்து போடுவோம்’ என்று துப்பாக்கியேந்திய ‘வீரன்’ ஒருவன் உறுதியளிக்கிறான். ‘இது காயங்களல்ல. என் மார்பில் பதிக்கப்பட்ட பதக்கங்கள்’ என்கிறான் அந்த இளைஞன். மெல்லிய ஆனால் உறுதியான குரல். அவன் பார்வையில் அச்சமில்லை. தண்ணீர் குடிக்கிறான். தனது கடைசி சிகரெட்டை இரசித்துப் புகைக்கிறான். சில நொடிகளிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்த முடிவு அவன் எதிர்பாராத ஒன்றல்ல.
அந்த வயதான மனிதர் முவாம்மர் அல் கடாஃபி. அந்த இளைஞன் கடாஃபின் மகன் முட்டெஸிம் அல் கடாஃபி. கடந்த 20-ம் தேதி லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியும் அவரது மகன் முட்டெஸிம் அல் கடாஃபியும் சிர்ட்டே நகரக்கு வெளியே நேட்டோ கூலிப்படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளோடு நேட்டோ படைகளின் ‘மனிதாபிமானம்’ ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. சிர்ட்டே தான் கடாஃபியின் பூர்வீகம். இதே மண்ணில் தான் எழுபதாண்டுகளுக்கு முன் கடாஃபி பிறந்திருந்தார்.
கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி! -
கடாஃபி - மூட்டெஸிம்
அரபுலகில் நடந்த ‘வண்ணப் புரட்சிகளைத்’ தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதத்துடன் லிபியாவின் பெங்காஸி பகுதியை நேட்டோ ஆதரவு பெற்ற கூலிப்படை ஒன்று கைபற்றுகிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கும், கத்தார் போன்ற கைக்கூலி நாடுகளுக்கும் லிபிய மக்களின் மேல் திடீர் ‘பாசம்’ பொத்துக் கொண்டது. இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி நேட்டோ படைகள் தரைவழியே முன்னேறி வந்த கூலிப்படைக்கு ஆதரவாக வான்வழித் தாக்குதல் தொடுத்து வந்தது.
இந்த விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை லிபியர்கள் மேல் வீசியிருக்கிறார்கள். லிபியாவின் மேலான கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆரம்பித்தது. தாக்குதல் துவங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக B-52 ரக போர் விமானம் மூலம் 45 டன் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதந்த நாசகாரிக் கப்பல்களில் இருந்து சிறிய ரக அணு ஏவுகணைகளை (Uranium Depleted missiles) வீசியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான அப்பாவி லிபியர்களின் பிணத்தின் மேல் நேட்டோ நடத்திய ‘மனிதாபிமான’ வெற்றிப் பேரணியின் விளைவாய் ஆகஸ்ட் 23-ம் தேதி லிபிய தலைநகர் திரிபோலி கூலிப்பட்டாளத்தின் கையில் விழுகிறது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவுப் படைகளோடு திரிபோலியிலிருந்து பின்வாங்கும் கடாஃபி, தனது சொந்த ஊரான சிர்டே பகுதிக்குத் தப்பிச் செல்கிறார். இதற்கிடையே கடந்த ஒரு மாத காலமாக சிர்டே நகரத்தை தரை மார்க்கமாக சுற்றி வளைக்கும் கூலிப்படை, அதைக் கைப்பற்றவும் கடாஃபியைத் தீர்த்துக் கட்டவும் கடும் பிரயத்தனங்கள் செய்து வந்தது. இதற்கு ஆதரவாக நேட்டோ படைகள் வான் மார்க்கமாக தாக்குதல் தொடுத்து வந்தது. பல்லாயிரம் அப்பாவி மக்கள் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
கடாஃபி கொல்லப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. கடந்த 18-ம் தேதி த்ரிபோலிக்கு ஒரு இரகசிய பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளிண்டன், அங்கே கூலிப்படையின் ஆதரவாளர்கள் மத்தியில் ‘கூடிய விரையில் கடாஃபி கொல்லப்படுவார்’ என்று உறுதியளித்துள்ளார். கடாஃபியைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்பது அவர்கள் நோக்கமாக இல்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அமெரிக்காவோடு கடந்த பத்தாண்டுகளாக கடாஃபி கொண்டிருந்த நெருக்கமும், லிபிய மண்ணில் அமெரிக்கா நடத்தி வந்த இரகசிய சித்திரவதை மைய்யங்கள், கடாஃபியோடு போட்டுக் கொண்டி இரகசிய இராணுவ ஒப்பந்தங்கள் போன்றவை பற்றி அவர் வாய் திறக்கும் சாத்தியம் இருந்தது. அப்படியொன்று நடந்து, தனது மனிதாபிமான இமேஜுக்கு இழுக்கு நேர்வதை அமெரிக்கா விரும்பவில்லை.
இந்நிலையில், கடந்த இருபதாம் தேதி கடாஃபி தனது நெருக்கமான ஆதரவாளர்களோடு சிர்ட்டே நகரை விட்டு தப்பிச் செல்வதை அறிந்த நேட்டோ, தனது போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அவர் நகர முடியாமல் செய்கிறது. இந்தத் தகவலை தரையிலிருந்து இயங்கும் கூலிப்படைக்குத் தெரிவித்து, கடாஃபியும் அவரது மகனும் கொல்லப்படுவதை உறுதி செய்து கொள்கிறது.
மரணம் நெருங்கி வந்த அந்த இறுதி நிமிடங்களில் கடாஃபியின் கண்களில் தெரிந்த அந்த உணர்ச்சியின் பொருளென்ன? சகல சௌபாக்கியங்களுடனும் வசதிகளுடனும் சுகித்திருந்த அந்த இளைஞனை எள் அளவும் மரணபயமின்றி அவ்வாறு பேச வைத்த உணர்ச்சி என்னவாக இருக்கும்? அது என்னவாயிருக்குமென்று இவர்களின் மரணச் செய்தி கேட்டதும் ‘வாவ்’ என்று குதூகலித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ஹிலாரி கிளிண்டனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், அவரது சொந்த நாட்டில் ஒவ்வொரு நகரமாய் ஆக்கிரமித்துச் சூழ்ந்து வரும் 99% அமெரிக்கர்களுக்கு அது சர்வ நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்.
ஒபாமாவுடன் கடாஃபி
ஒபாமாவுடன் கடாஃபி
முவாம்மர் அல் கடாஃபி ஒரு முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்று சொல்லி விட முடியாது. அறுபதுகளின் இறுதியில் உலகெங்கும் உண்டான ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையின் லிபிய பிரதிநிதி தான் முவாம்மர் அல் கடாஃபி. 1969-ல் திடீர் புரட்சி மூலம் இத்ரீஸின் மன்னராட்சிக்கு முடிவுகட்டி அதிகாரத்திற்கு வரும் கடாஃபி, அதற்கு முன் லிபிய மண்ணில் மேற்கத்திய நாடுகள் நிறுவியிருந்த எண்ணை நிறுவனங்களை அரசுடமையாக்கினார். அமெரிக்காவுக்கு லிபியாவில் இருந்த வீலஸ் விமான தளத்தை இழுத்து மூடினார். அது தான் அன்றைய தேதியில் ஆப்ரிக்க கண்டத்திலேயே அமெரிக்காவுக்கு இருந்த மிகப் பெரிய இராணுவ செயல்தளம். ஆனால், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின் கடாஃபி இதற்கெல்லாம் நேரெதிரான நிலையை எடுக்கிறார்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தியதாகட்டும், இந்த நூற்றாண்டின் துவக்க பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் ‘தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு’ வால் பிடித்ததாகட்டும், ஐரோப்பிய அமெரிக்க எண்ணை நிறுவனங்களுடன் எண்ணை ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்களை போட்டதாகட்டும் – அவர் ஏகாதிபத்தியங்கள் மனங்கோணாதவாறு நடந்து கொள்வதில் எச்சரிக்கையாகவே இருந்தார். இப்படி ஒருபக்கத்தில் மக்கள் விரோத பொருளாதார நடவடிக்கைகள் எடுத்தும், தனது குடும்ப சர்வாதிகார ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியும் மிருக பலத்துடன் லிபிய மக்களை அடக்கியாண்ட அதே காடாஃபி தான் தனது மக்களுக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைந்தபட்ச அளவுக்காவது உறுதிப் படுத்தியிருந்தார்.
லிபியாவை ஆப்ரிக்காவின் ஸ்விட்சர்லாந்து என்பார்கள். இந்தப் புதிய நூற்றாண்டுக்குள் லிபியா நுழைந்த போது அது ஒப்பீட்டளவில் பிற ஆப்ரிக்க நாடுகளை விட சிறப்பான மனித வளக் குறியீடுகளைக் கொண்டிருந்ததை மேற்கத்திய நாடுகளே மறுப்பதில்லை. எண்ணை வர்த்தகத்தை கடாஃபி குடும்பம் நேரிடையாகக் கட்டுப்படுத்தி அடித்த கொள்ளையில் ஊதாரித்தனமான சுகபோகத்தில் திளைத்திருந்த போதிலும் அதன் லாபத்தில் ஒரு பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினார். மேற்கத்திய நாடுகளின் கார்ப்பொரேட் கம்பெனிகளோடு எண்ணை துரப்பண ஒப்பந்தங்களைப் போட்டிருந்தாலும், எண்ணை வர்த்தகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் முழுமையாக ஒப்படைக்காமலே வைத்திருந்தார்.
________________________________________________________
இப்போது லிபியா ‘விடுவிக்கப்பட்டிருக்கும்’ நிலையில், அதன் எண்ணை வளங்களும் தங்கம், யுரேனியம் உள்ளிட்ட அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்களும் முழுமையாக பன்னாட்டுக் கம்பெனிகளின் கரங்களில் வந்து விழுந்துள்ளது. ஈராக்கில் விட்டதை லிபியாவில் பிடிக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேலும், லிபிய அரசாங்கத்தோடு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் செய்திருந்த சீனா, ரசியா, பிரேஸில் போன்ற நாடுகளையும் போட்டியிலிருந்து விலக்கியாகி விட்டது. கலகக்காரர்கள் பெங்காஸி பகுதியைக் கட்டுப்படுத்தியிருந்த ஆரம்ப காலத்திலேயே அவர்களின் அதிகாரத்தை அங்கீகரிக்கும் மேற்குலக நாடுகள், அவர்களோடு எண்ணை வர்த்தகம் பற்றிய பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து விட்டனர். மேலும், சீனாவோடும் ரசியாவோடும் முந்தைய லிபிய அரசாங்கம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
ஆப்ரிக்க கண்டம் முழுவதையும் தனது சுரண்டலுக்கான பின்னிலமாக வைத்திருப்பது, இதில் போட்டிக்கு வரும் சீனா ரசியா போன்ற நாடுகளை ஓரங்கட்டுவது போன்ற ஏகாதிபத்திய நலனில் இருந்து பிறந்தது தான் அமெரிக்காவின் ‘மனிதாபிமான’த்திற்கும்’ ஜனநாயகத்தை நிலை நாட்ட அவர்களுக்கு புதிதாய் பிறந்திருக்கும் இந்த அக்கறைக்கும் அடிப்படையான காரணம். ஏற்கனவே அரபுலக மன்னர்களெல்லாம் அமெரிக்கப் பாத நக்கிகளாக இருக்கும் நிலையில், எண்ணை வளத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பிராந்தியத்தில் இரண்டாம் இடத்திலிருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளையும் வளைத்துக் கொண்டால், உலக எண்ணை ரிசர்வில் 60 சதவீத அளவுக்கு அமெரிக்காவின் பிடியில் சிக்கும்.
தற்போது ஏகாதியபத்திய உலக ஒழுங்கைக் கவ்விப் பிடித்திருக்கும் பொருளாதாரப் பெருமந்தத்திற்கான தீர்வை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டுவது, இதற்கான தடைகளைப் போர்களின் மூலம் அகற்றுவது என்கிற பாதையில் மேற்குலகம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே புழுத்து நாறும் கட்டமைப்புச் சீர்கேடுகள் இந்த மீள முடியாத போர்களால் ஒரு முடிவுக்கு வந்து விடப் போவதில்லை என்பதையே அமெரிக்கா தொடங்கி மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரையில் பற்றிப் பரவும் ‘ஆக்கிரமிப்புப்’ போராட்டங்கள் காட்டுகின்றன.
உலகை ஆக்கிரமிக்கக் கிளம்பியிருக்கும் அமெரிக்காவின் காலடியிலேயே அதன் ஆன்மாவை ஆக்கிரமிக்கும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கத் தெருக்களில் திரண்டிருக்கும் 99 சதவீத மக்களின் முழக்கங்களில் அடங்கியிருக்கிறது லிபிய மக்களின் ஒப்பாரிச் சத்தம். உலகை மேலாதிக்கம் செய்யது துடிக்கும் அமெரிக்காவின் கனவுகளின் பொருளாதார அடித்தளத்தின் மீது அதன் சொந்த மக்களே தொடுத்திருக்கும் இந்தப் போர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களின் வெற்றியை கொண்டாட முடியாதபடி வைத்திருக்கிறது. தற்போது வலுவிழந்து மரணக் குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய கட்டமைப்பை குழியில் தள்ளி மண்ணை மூடி நிரப்ப வேண்டிய கடமை உலக மக்கள் அனைவருக்கும் உள்ளது. வாழ்க்கையிழந்த அமெரிக்கர்கள் ஏகாதிபத்திய அழிவின் அறிமுக உரையை எழுதத் துவங்கி விட்டனர் – இதன் முடிவுரையை எழுதும் கடமை நமக்கிருக்கிறது.
நன்றி-வினவு http://www.vinavu.com
______________________________________________________

Sunday 15 January 2012

காணொளி - லிபியா ! அமெரிக்காவின் கைக்கு மாறும் ஓர் அரபு தேசம்


பலஸ்தீன போராளி - ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash)


பலஸ்தீன் !
ஆக்கிரமிப்பின் குறியீடு
மனித உரிமை மீறலின் அடையாளம்
உயிர் வாழும் அக்கிரமம்,
அநீதியின் அச்சு
சொந்த நாட்டுக்குள் சிறைப்பட்ட
கண்ணீர் கதையின் கரு!

இந்த மக்களின் போராட்டத்தை முஸ்லிம்களின் போராட்டம் என்று மட்டும் பார்க்காமல் மனித இனத்தின் போராட்டமாக பார்க்க வேண்டும்.

உலக ஊடகங்கள் பலஸ்தீன் விவகாரத்தில் ஊமையாக நிற்கின்றன.  வெறுமனே மதச்சாயம் பூசி அந்தப் போராட்டத்தை மலினப்படுத்தியும் வருகின்றன.

சொந்த நாட்டை மீட்கப் போராடும் அவர்களை பயங்கரவாதிகளாக மேற்கின் ஊடகங்கள் பார்க்கின்றன.  கதைகளைப் பரப்புகின்றன.

இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அல்லாத நிறைய பேர் அங்கம் வகித்திருக்கின்றார்கள். அங்கம் வகித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உரிமைப்போராட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பை ஊடகங்கள் எப்போதும் மறைத்தே வந்திருக்கின்றன.

காரணம் பலஸ்தீன் போராட்டம் தனியாக முஸ்லிம்களின் போராட்டம் என்று காட்டுவதன் மூலம் அவர்களுக்கு அரசியல் ரீதியாக நிறைய ஆதாயம் கிடைக்கின்றது.

அந்தப் போராட்டத்தை முஸ்லிம் போராட்டம் என்று தனிமைப்படுத்தி முத்திரைக் குத்துவதன் மூலம் உலக அளவில் பலஸ்தீனத்திற்குக் கிடைக்கும் ஆதரவிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

பலஸ்தீன் போராட்டத்தில் அப்படி மூடிமறைக்கப்பட்ட ஒருவர்தான் இந்த ஜோர்ஜ் ஹபாஷ் .

பலஸ்தீன விடுதலைக்காக தனது வாழ்க்கையை முழுதாக அர்ப்பணித்த ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash), பலஸ்தீனத்தி்ல் லைடா Lydda என்ற நகரத்தில் ஒரு பணக்கார கிறிஸ்தவ ஒத்தொடொக்ஸ் குடும்பத்தில் 1925 ஆகஸ்ட் 1ம் திகதி பிறந்தார்.  

1948 ல், பெய்ரூத்திலுள்ள அமெரிக்க மருத்துவ கல்லூரியில் மாணவராக இருந்த காலத்தில் இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவதற்காக வேண்டி போராட்ட அணியொன்றை உருவாக்கினார்.

அவரும் அவரது முழு குடும்பமும், தனது சொந்த நகரமான லைடா மக்களில் 95 சதவீதமானோரும் இட்சாக் ரபின் தலைமையில்  இயங்கிய சியோனிச குழுவின்  துப்பாக்கி முனையில் அடித்து விரட்டப்பட்டனர். சட்டவிரோத  இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம் பலஸ்தீன் மக்கள் மீது கொடும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது.

"அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஆயிரக்கணக்கான பலஸ்தீன் மக்கள் அழுது புலம்பியவாறு ஆனாதரவாக  தங்கள் வீடுகளில் இருந்து அடித்து உதை்து வெளியேற்றப்பட்டார்கள். இந்தக் காட்சிகளை பார்த்த ஒருவனால் போராட்டக் காரனாக மாறாமல் இருக்கவும் முடியாது. "

ஜோர்ஜ் ஹபாஷ் பிற்காலத்தில் ஸியோனிஸ கொடுமைக்கு எதிரான தனது போராட்டத்திற்கான காரணத்தை மேற்கண்டவாறு விபரித்தார்.

1951 இல், தனது மருத்துவ மேல் படிப்பை முடித்துக்கொண்ட ஜோர்ஜ் ஹபாஷ், துணை மருத்துவராக தொழில் புரிய ஆரம்பித்தார். அரசியல் காரணங்களுக்காக ஒரு வருடத்தின் பின்னர் தனது பதவியை இராஜிநாமா செய்து விட்டு  ஜோர்தான் நோக்கி புறப்பட்டார்.  ஜோர்தான் தலைநகர் அம்மானில் ஒரு மருத்துவமனையை திறந்து அங்கு தனது வைத்திய தொழிலை ஆரம்பித்தார். 1952 இல் அவர் எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாஸரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையினால் ஈர்க்கப்பட்டு, அரபு தேசிய இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராக பலஸ்தின் போராட்ட களத்தில் முன்னணிக்கு வந்தார்.

ஜோர்ஜ் ஹபாஷ் மத்திய கிழக்கின் அரபுகளின் ஒற்றுமை தொடர்பாக தனது கவலையை அடிக்கடி வெளியிட்டு வந்தார். தனது இனத்தை இஸ்ரேலுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு எகாதிபத்தியத்திற்கு அடிமையாக மாறி வருகின்ற வெட்கம் கூச்சமற்ற அரபு ஆட்சியாளர்களை ஜோர்ஜ் ஹபாஷ் கடுமையாக விமர்சித்து வந்தார். அரபு ஆட்சியாளர்கள் மீதான அவரது கபடமற்ற விமர்சனம் அரபு நாடுகளில் அவருக்கு நெருக்குதல்களை உருவாக்கின. இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாடின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. 1967 வரை பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அங்கத்தவராக இருந்த ஜோர்ஜ் ஹபாஷ், 1967ல் இடம் பெற்ற இஸ்ரேலுடனான யுத்தத்தில் அரபு நாடுகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இயக்கத்திலிருந்து வெளியேறினார்.

அதே ஆண்டு டிஸம்பர் மாதம் Popular Front for the Liberation of Palestine (PFLP)  பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் எதிராக இவரின் (PFLP) இயக்கம் பிரசார வேளைகளை அரபு நாடுகளில் முடுக்கிவிட்டது.  சிரியா டமஸ்கஸ்ஸில் ஒரு பிரசார கூட்டத்தில் ஜோர்ஜ் ஹபாஷ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார். ஒரு மாத கால சிறைவாசத்தின் பின்னர் எகிப்துக்கு சென்றார். எகிப்தில் ஜனாதிபதி அப்துல் நாஸரோடு கலந்துரையாடி இஸரேலுக்கு எதிரான தனது ஆயுதப் போராட்டத்திற்கு அனுசரணையைப் பெற்றுக்கொள்கின்றார்.

1970ம் ஆண்டு நான்கு விமானங்களைக் கடத்தி வந்து அவற்றில் இருந்த அனைவரையும் விடுதலை செய்து விட்டு மூன்று விமானங்களை ஜோர்தான் பாலைவனத்திலும், ஒன்றை கெய்ரோவிலும் வைத்து வெடிக்க வைத்ததன் மூலம் ஜோர்ஜ் ஹபாஷின் பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணி (PFLP)  உலகளாவிய ரீதியில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த விமானக் கடத்தலைக் கண்டித்த ஜோர்தான் மன்னர் ஹுஸைன் தனது நாட்டிலிருந்த பலஸ்தீன் போராட்டக் குழுக்களை உடனடியாக வெளியேற்றினார். பலஸ்தீன் போராட்ட வரலாற்றில் இந்நிகழ்வு கறுப்பு செப்டம்பர்  "Black September". என வர்ணிக்கப்படுகின்றது.

1974களில் ஜோர்ஜ் ஹபாஷ் விடுதலைப் போராட்டத்தில் யாஸிர் அரபாத்தோடும் அவரது இஸ்ரேலை அங்கீகரிக்கின்ற போக்குகளோடும் முரண்பட்டார். யாஸிர் அரபாத் சொந்த நலனுக்காக விடுதலைப் போராட்டத்தை விற்று விட்டதாக ஜோர்ஜ் ஹபாஷ் குற்றம் சாட்டினார்.

ஜோர்ஜ் ஹபாஷ் பலஸ்தீன் போராட்டத்தில் இருக்கின்ற ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் போன்ற அமைப்புகளோடு தனது பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டார். 1993ல் இடம் பெற்ற ஒஸ்லோ உடன்படிக்கையை இந்த மூன்று தரப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். யாஸிர் அரபாத்தை தனது கைகளுக்குள் போட்டுக்கொண்ட அமெரிக்கவும், இஸ்ரேலும் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தை யாஸிர் அரபாத் என்ற கைக்கூலியை வைத்து கொச்சைப் படுத்தின.

ஒஸ்லோ ஒப்பந்தம் பலஸ்தீன் மக்கள் மீது திணித்த தன்னாட்சிப் பிரதேசம் autonomous territories என்று குறிக்கப்பட்ட பலஸ்தீன் அதிகார சபையை (Palestinian Authority) தீர்வை ஜோர்ஜ் ஹபாஷ், ஹமாஸைப் போன்று இஸ்லாமிக் ஜிஹாதைப் போன்று கடுமையாக எதிர்த்தார். சர்வதேச விதிகளின் படி பலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களுக்கு தனது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை இந்த பலஸ்தீன் அதிகார சபை மறுப்பதாக இவர் குற்றம் சாட்டினார்.

2000ம் ஆண்டு ஜோர்ஜ் ஹபாஷ் பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தலைமைப் பதவியிலிருந்து விலகினாலும்  இறுதிவரை தனது அமைப்போடு சேர்ந்து பாடுபட்டார். மரணிக்கும் வரை பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமைப் பதவியை தலைமைத்துவத்தின் பயிற்சியை ஏனையோரும் பெற வேண்டுமென்று மற்ற ஒருவருக்கு வழங்கிவிட்டு சாதராரன அங்கத்தவராக செயற்பட்டார்.  அவரது வாழ்க்கையின் இறுதி நேரத்தில் காஸா மக்களின் கஷ்டங்களை நினைத்து மிகவும் கவலை கொண்டார். இன மத பேதமின்றி பலஸ்தீன் பூமியில் பிறந்தவர்கள்  அத்தனைப் பேரும் அந்த மண்ணின் மைந்தர்களே அவர்களின் உரிமைக்காக தொடர்ந்தது குரல் கொடுப்பது பலஸ்தீன் பிரஜை ஒவ்வொருவரினதும் பிறப்புரிமையாகும் என்ற கருத்தை ஜோர்ஜ் ஹபாஷ் தனது போராட்ட வாழ்க்கையில் நிலைநாட்டினார்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி ஜோர்ஜ் ஹபாஷ் அம்மானில் காலம் சென்றார். பாலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவரது மரணத்தைத் தொடர்ந்து மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்தார்.

“பலஸ்தீன் மக்களின்  மறுமலர்ச்சியை அவர்களின் எழுச்சியை துடைத்து அழிக்கக் காத்துக் கிடக்கும் அரபு தேசங்கள் அவற்றின் சரிவை வெகு விரைவில் சந்திக்கப் போகின்றன.”  ஜோர்ஜ் ஹபாஷ் ஒரு போது கருத்து தொிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...