Sunday 23 January 2011

தூனீசியா - புரட்சியின் கருவறையான ஒரு பட்டதாரியின் கல்லறை!



(தப்பியோடிய தூனிசிய ஜனாதிபதி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் முஹம்மத் போஅஸிஸியை மருத்துவ மனையில் பார்வையிடுகிறார்)

இருபத்தேழு வயது முஹம்மத் போஅஸீஸி ஒரு பட்டதாரி இளைஞன்.  வேலையில்லா பிரச்சினைக்கு ஈடுகொடுக்க அவன் பாதைக்கு இறங்கினான். போராடுவதற்கு அல்ல  பழத்தை மரக்கறியை விற்று தனது பசியை போக்கிக் கொள்வதற்கு. அந்த நடைபாதை வியாபார விவகாரம் உலக ஊடகங்களில் இப்படி இடம்பிடிக்கும் என்று இந்த பட்டதாரி இளைஞன் எண்ணியிருக்கவே மாட்டான்.


தூனிசியா என்ற தனது நாட்டை ஆண்ட ஊழல், மோசடி மிகுந்த அதிகார வர்க்கம் இந்தப் பிரச்சினையால் அதிர்ந்து உடைந்து விழும் என்று உணர்ந்திருக்கவும் மாட்டான்.

Wednesday 19 January 2011

சினிமா! சிந்திக்க வேண்டிய சில கருத்துக்கள்!

சினிமா பற்றி ஆளூர் ஷாநவாஸ் எழுதிய கட்டுரை


சினிமா பற்றி சிந்திக்க வேண்டிய சில கருத்துக்களை சமநிலைச் சமுதாயம் ஜனவரி இதழில் ஆளுர் ஷாநவாஸ் எழுதியிருந்தார். அதன் பிரயோசனம் கருதி பத்ர் களத்தில் பதிவிடுகின்றேன்.



ண்மையில் அம்பேத்கர் திரைப்படத்தைப் பார்த்தேன்.


ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்த புரட்சியாளர் அம்பேத்கர்,
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் சந்தித்த நெருக்கடிகள், அவமானங்கள், இழப்புகள் ஆகியவற்றையும்,
எல்லா இடர்களையும் எதிர் கொண்டு அவர் எழுந்து நின்ற வீர வரலாற்றையும் துல்லியமாகப் பதிவு செய்திருந்தனர்.


இந்தியாவின் தலைசிறந்த திரைக்கலைஞரான 'மம்முட்டி' அம்பேத்கராகவே உருமாறியிருந்தார்.
அம்பேத்கரின் சாயலை ஒத்திருந்த அவரது முகத் தோற்றமும், உடல் மொழியும் அச்சு அசலாக அம்பேத்கரைப் பார்ப்பது போலவே இருந்தது.
ஒரு காட்சியில் கூட மம்முட்டி என்ற நடிகர் நம் நினைவுக்கு வராத அளவுக்கு, அம்பேத்கரை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்திய அவரது கடும் உழைப்பும், நடிப்புத் திறனும் மகத்தானது; போற்றுதலுக்குரியது.


ஆனால், படத்தின் காட்சியமைப்பில் குறிப்பாக,அதன் தமிழ் மொழியாக்கத்தில் முஸ்லிம் வெறுப்பு அப்பட்டமாகவே வெளிப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் அது திட்டமிட்டே திணிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.


வட்டமேசை மாநாட்டில் பேசும் போதும், காந்தியடிகளுடன் வாதம் செய்யும் போதும், பிரிவினை கோரும் ஜின்னாவை சந்திக்கும் போதும் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அம்பேத்கர் பதிவு செய்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Friday 14 January 2011

நிர்க்கதியான மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம்!

வெள்ள நிவாரண உதவி



இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்காக  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்  அனுசரணையில் அல் அமான் நுஸ்ரத் அமைப்பும், வட கொழும்பு பள்ளிவாசல் சம்மேளனமும்  இணைந்து  நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளன.

நிர்க்கதியான மக்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை அள்ளி வழங்குங்கள்!

Al Aman Nusrath Organization

Alhaj Amanullah Sharief +94 727 362075, Alhaj Faiq Makeen +94 777 703388
Alhaj Badrul Muneer +94 714 045933  F. Imraz +94 777 723733

Friday 7 January 2011

வர்த்தக மயமான ஹஜ்ஜும் வலிகளோடு மீண்டுவந்த ஹாஜிகளும்!!

இலங்கையிலிருந்து மக்கா சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை முறைப்பாடுகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதன் பணிப்பாளர் ஹாஜிகளை வேண்டியிருந்தார். அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்படொன்றின் பிரதியொன்று நவமணி பத்திரிகைக்கும், பத்ர்களத்திற்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.


இலங்கையில் வர்த்தகயமமாக மாறிக்கொண்டிருக்கும் ஹஜ் பிரயாணம், பணத்தை குறியாக வைத்து இயங்குகின்ற ஒருசில ஹஜ் முகவர்கள், ஊடகங்களில் ஹஜ் உம்ராவிற்கு கிடைக்கின்ற அதீத விளம்பரம் போன்றவை ஹஜ்ஜின் மகத்துவத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது என்பதனை இந்த ஹாஜியின் முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.சில மோசடி ஹஜ் முகவர்கள் ஊடகங்களில் சிறப்பான வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக பொய் வாக்குறுதிகளை விளம்பரப்படுத்தி ஹாஜிகளிடமிருருந்து பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.இவ்வருடம் பல இலட்சம் பணத்தை கொடுத்து ஹஜ் கடமைக்காக சென்ற ஹாஜிகள் பட்ட இன்னல்களை இங்கு இணைக்கப்பட்டுள்ள கடிதமும், காணொளியும் (வீடியோ) சாட்சி பகர்கின்றன.




28.12.2010.
அல்ஹாஜ் வை. எல் எம் நவவி,
பணிப்பாளர்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்; திணைக்களம்,
180, டீ.பீ ஜாயா மாவத்தை,
கொழும்பு.10

அஸ்ஸலாமு அலைக்கும்

இவ்வருட ஹஜ் பிரயாணத்தின் போது இடம் பெற்ற குறைபாடுகள் பற்றிய முறைப்பாடு

நான்  ஏற்கனவே இரு முறை ஹஜ்ஜூக்கு சென்ற அனுபவத்தையும் இம்முறை குடும்பம் சகிதம் அங்கு சென்று அனுபவித்த சில கசப்பான நிகழ்வுகளையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

இம்முறை மினாவில் ஹாஜிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியமும், இன்னல்களும், அவலங்களும் இதற்கு முன்னைய ஹஜ் பிரயாணங்களில் எப்போதுமே இடம்பெறவில்லை என்பதை உறுதியுடன் கூறுகின்றேன்.

சென்ற வருடங்களில் ஹஜ் முகவர்களே நேரடியாக “முதவ்வாக்”களை ஏற்பாடு செய்யும் நடைமுறை இருந்து வந்துள்ளது. அதன் போது இலங்கையிலிருந்து செல்லும் ஹாஜிகள் பல் வேறு “முதவ்வாக்க”ளின் கீழ் பொறுப்புக் கொடுக்கப் படுவார்கள்.

ஆனால் இம்முறை இலங்கை ஹஜ் கமிட்டியினரே இந்த ஏற்பாட்டை செய்யப் பொறுப்பேற்றிருந்தனர். வழமைக்கு மாற்றமாக ஹஜ் கமிட்டி இலங்கையிலிருந்து சென்ற அத்தனை ஹாஜிகளையும் ஒரே முதவ்வாவிடம் ஒப்படைத்திருந்தனர்.

இம்முறை ஹாஜிகள் சந்தித்த அத்தனை பிரச்சினைகளுக்கும் ஹஜ் கமிட்டியினர் செய்த இந்தத் தவறேமூல காரணமாய் மாறியது என தங்களை இனம் காட்டிக் கொள்ள விரும்பாத 80 வீதமான ஹஜ் முகவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

26.12.2010 அன்று ஞாயிறு வீரகேசரி பத்திரிகையில் ஹஜ் கமியிட்டடியினர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் இதை மறைமாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

இம்முறை ஹஜ் பிரயாண ஏற்பாடு தொடர்பாக குற்றச்சாட்டுகள் பல இருக்கின்றன அவற்றில் சிலவற்றை மாத்திரம் தொட்டுக் காட்ட விரும்புறேன்.

நாம் 41ம் இலக்க முதவ்வா அலுவலகத்தினரால் வழி நடாத்தப் பட்டோம்.

• சுமார் 4000 பேர் தங்கியிருக்க வசதியுள்ள கூடாரங்களில் (வநவெ) 5800 பேரை திணித்தார்கள். இதனால் பலர் பகல் நேரங்களில் மாத்திரம் கூடாரத்துக்குள் இருந்து விட்டு இரவு நேரங்களில் பாதைகளில் தூங்கியதையும் காண நேர்ந்தது.


• இந்த 5800 பேருக்கும் சமைப்பதற்கு ஒரு சமையலறை தான் ஒதுக்கப்பட்டிருந்தது. மேலும் தண்ணீர் வசதியுட்பட மலசல கூட வசதிகளும் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தது. சில சந்தர்ப்பங்களில் கழிவு நீர் கூட கூடாரங்களுக்குள்ளேயே வழிந்தோடியது. பிரிதொரு சந்தர்ப்பத்தில் அந்த அசுத்தமான (நஜீஸ்) தண்ணீர் சுமார் அரையடி வரை சமையலறைக்குள் தேங்கி நின்றது. மேற் பார்வை செய்ய வந்த சவுதி ஹஜ் கமியிட்டியினர் கூட அங்கு வைக்கப் பட்டிருந்த முறைப்பாட்டுப் புத்தகத்தில் ஏற்பாடுகள் மிகவும் மோசமான நிலையிலுள்ளதாகவே குறிப்பொன்றை எழுதிவிட்டுச்சென்றார்கள்

Wednesday 29 December 2010

காஸா! அக்கிரமம் அரங்கேறி இரண்டு ஆண்டுகள் பூர்த்தி!

“எனது பிள்ளைகள்  இரவில் நித்திரையில் இருக்கும் போது யாராவது எனது வீட்டுக்குள் எறிகணை (ரொக்கட்) களை  அனுப்பினால் அதனை தடுப்பதற்கு என்னால் ஆன அத்தனையையும் செய்வேன். அதைத்தான் இஸ்ரேல் செய்திருக்கிறது.”

மேலே குறிப்பிடப்பட்டது  எனது கருத்தல்ல 2008 டிஸம்பர்27ம் திகதி காஸா மீது தொடுக்கப்பட்ட மிருகத்தனமான தாக்குதலின் பின்னர் தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு விஜயம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஹுஸைன் பராக் ஒபாமாவின் கூற்று.

சட்ட விரோத இஸ்ரேல் நாட்டின் தென்பகுதி நகரான செதரத் நகருக்கு விஜயம் செய்த ஒபாமா இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான படுகொலைகளை இந்த வார்த்தைகளைக் கொண்டுதான் ஆசிர்வதித்தார்.

சுமார் பதினைந்து லட்சம் மக்கள் வாழுகின்ற காஸா பிரதேசம், மனித உரிமைகள் மறுக்கப்படுகின்ற அக்கிரமம் நிகழ்த்தப்படுகின்ற  ஒரு திறந்த வெளிச் சிறை. அங்கு நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க யாரும் இந்த உலகில் இல்லை. காரணம் அங்கு வாழ்பவர்கள் முஸ்லிம்கள்.




தனது வீட்டுக்கு எறிகணை அனுப்புபவர்களைப் பற்றி கதைக்கும் ஒபாமா, 60 வருடங்களுக்கு மேலாக தனது நாடும், வீடும், உரிமைகளும்  அபகரிக்ப்பட்டு, தனது சொந்த நாட்டிலேயே அவர்கள் அகதியாக்கப்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? எப்படியெல்லாம் போராட நிர்ப்பந்திக்கப்படுவார்கள்  என்ற யதார்த்தத்தை மறந்து சிறு பிள்ளைத்தனமாக பேசி இருந்தார்.

தனது வீட்டுக்கு வருகின்ற எறிகணையை தடுக்க ஒபாமாவிற்கு இருக்கும் அதிகாரம் மற்றவர்களுக்கும் இருக்கிறது என்ற உண்மையைதான் பலஸ்தீன, லெபனானிய, ஈராக்கிய போராளிகள் இன்று நிகழ்த்திக்கொண்டிருக்கின்றார்கள்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பலஸ்தீன் மீது தொடுக்கப்படுகின்ற எறிகணைத் தாக்குதல்கள்  தனது தாய் மண் மீது தொடுக்கப்படுகின்ற தாக்குதல்களாக, தனது பிள்ளைகள் உறங்கும் போது வந்து விழுகின்ற எறிகணைகளாக தான் பலஸ்தீனர்கள் பார்க்கின்றார்கள்.

ஒபாமாவின் கருத்துப்படி பார்த்தால்.... பலஸ்தீனை அபகரித்து இன்று அந்த ம்களை, அந்த மண்ணின் மைந்தர்களை அகதி முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கின்ற, அந்த மக்கள் மீது அநியாயம் புரிகின்ற  இஸ்ரேலை தாக்குகின்ற, அழிக்கின்ற  தார்மீக உரிமை பலஸ்தீனர்களுக்குத் தான் இருக்கிறது.

இந்த ஒபாமாவின் தத்துவப் படி...

எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட ஈராக்கிற்குள் புகுந்திருக்கும்  அமெரிக்கப் படைகளை தாக்குகின்ற, அழிக்கின்ற தார்மீக உரிமை உரிமை ஈராக்கியர்களுக்கு இருக்கிறது.

தனது பிராந்திய அரசியல் நலனை ஸ்த்திரப்படுத்த ஆப்கானை ஆக்கிரமித்த அமெரிக்க கூலிப்படையான நேட்டோ படைகளை அழிக்கின்ற ஒழிக்கின்ற உரிமை ஆப்கானியருக்கு இருக்கிறது.

சுருக்கமாக சொல்லப்போனால் ஒற்றை ஏகாதிபத்தியம் ஒன்றுக்குள் உலகை சிக்க வைக்கும் அமெரிக்க அரசியலுக்கும், அதன் நலன் சார்ந்த கொள்கைகளுக்கு எதிராக எழுகின்ற உரிமை அனைவருக்கும் இருக்கிறது.

மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் என்ற நாட்டை சட்டவிரோதமாக உருவாக்கி சகல ஆயுத வல்லமைகளுடனும், அதிகாரத்துடனும் செயற்படுகின்ற ஒரு நாடாக அதனை உருவாக்கி தனது ஏகாதிபத்திய ஏஜன்ட் ஆக இஸ்ரேலை அந்த பிராந்தியத்தில் நிலை நிறுத்தியிருக்கிறது அமெரிக்கா.

மத்திய கிழக்கில் இஸ்ரேலை நேசக்கரங்களோடு அணைத்து போஷித்து வரும் அமெரிக்கா, அதே நேசக்கரங்களோடு அரபு நாடுகளையும் அரவணைத்து நிற்கிறது.

150 கோடி முஸ்லிம்களைக் கொண்ட இந்த சர்வதேசிய சமூகம். சுமார் 150   இலட்சம் (ஒன்றரை கோடி) யூதர்களின் கட்டுப்பாட்டில் சிக்கிக் கிடக்கிறது.  விகிதாசாரத்தில் 100 க்கு ஒன்று. சனத்தொகை 100 முஸ்லிம்களுக்கு ஒரு யூதர்.

ஏன் இந்த நிலை?  எங்களை நாங்களே கேட்டுக்கொள்வோம்.

இதை காஸா படுகொலையின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி தந்த செய்தியாக மனதில் பதித்து வைத்துக் கொள்வோம்.

Sunday 26 December 2010

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி

விக்கிலீக்ஸ் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டின் ஹ்ரப்ன்சனுடன் ஒரு பேட்டி
இதுகாறும் மறைக்கப்பட்டிருந்த போர்ச் சித்திரத்தை ஈராக் ஆவணங்கள் கொடுக்கின்றன.
By Jerry White 

அக்டோபர் 22ம் திகதி, தவறுகளை வெளிப்படுத்தும் வலைத்தள அமைப்பாக விக்கிலீக்ஸ் கிட்டத்தட்ட 400,000 அமெரிக்க இராணுவ உள்ளறிக்கைகளை வெளியிட்டது. இவை ஈராக் மக்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் செய்த போர்க்குற்றங்கள் பற்றி கண்டனத்திற்கு ஆளாகின்ற சான்றுகளை அளிக்கின்றன.

வரலாற்றிலேயே இராணுவ இரகசியத் தகவல்களின் மிகப் பெரிய கசிவானஈராக்கியப் போர்க் குறிப்புக்கள்உள்ளடக்கியுள்ள SIGACT அல்லது முக்கியமான நடவடிக்கை அறிக்கைகள் அமெரிக்க இராணுவத்தினர் ஜனவரி 2004 ல் இருந்து டிசம்பர் 2009 வரை பதிவு செய்தவற்றைக் கொண்டுள்ளன. இவை ஈராக்கியப் போர்க் களத்தில் அமெரிக்க இராணுவத் துருப்புக்கள் பார்த்து, கேட்ட விரிவான நிகழ்ச்சிகளை கொண்டுள்ளன, அமெரிக்க அரசாங்கம் மட்டுமே இதுவரை அறிந்திருந்த இரகசிய வரலாறு பற்றி உண்மையான பார்வை இப்பொழுது முதல் முதலாகக் கிடைக்கிறது.என விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

ஆவணங்களில் வெளிப்பட்டுள்ள முக்கிய தகவல்களில் இதுவரை வெளியிடப்படாத 15,000 சாதாரணக் குடிமக்கள் இறப்புக்கள் மற்றும் அமெரிக்க துருப்புக்கள் இராணுவச் சோதனை சாவடிகளில் குறைந்தது 834 பேர்களில் 30 குழந்தைகள் உட்பட 681 பொதுமக்களை கொன்றதும் அடங்கும். இந்த ஆவணங்கள் ஈராக்கிய கையாட்களின் படையும் பொலிசும் கைதிகளைச் சித்திரவதை செய்ததில் அமெரிக்க உடந்தை பற்றியும் விவரிக்கின்றன. பார்க்கவும்: “The WikiLeaks documents and the rape of Iraq ”)

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...