Thursday, 12 April 2018

யதார்த்தம் றோனியோ கவிதை இதழ்


1984ம் ஆண்டு என்னால் 'றோனியோ' அச்சில் வெளியிடப்பட்ட கவிதைக்கான இதழே யதார்த்தம். 

இன்று போல் கணனி வசதிகள் இல்லாத காலத்தில் இது வெளிவந்தது.

கைகளால் எழுதப்பட்ட கோட்டோவியங்களை மட்டுமே றோனியோவில் பதிப்பிக்க முடியுமான காலத்தில் யதார்த்தம் வித்தியாசமான முறையில் பதிப்பிக்கப்பட்டது. 

அனித்தா' என்ற பெயரில் சிங்கள வாராந்த பத்திரிகை

அனித்தா' என்ற பெயரில் சிங்கள வாராந்த பத்திரிகை ஒன்று வெளிவரவிருக்கிறது. ராவய வாராந்த பத்திரிகையில் கடமையாற்றிய சிறந்த ஐந்து ஊடகவியலாளர்கள்; அடங்கிய ஆசிரிய பீடத்தைக் கொண்டுள்ள இந்த வாராந்த பத்திரிகை எதிர்வரும் 29ம் திகதி முதல் வெளிவரவுள்ளது.
'அனித்தா' பத்திரிகையின் பிரதம ஆசிரியராக லசன்த றுகுணகே பொறுப்பேற்றிருக்கிறார். அண்மையில் ராஜபக்ஷவின் ஊழல் தொடர்பாக வெளியிட்ட இவரது நூல் மிகவும் பிரசித்தமானது. லசன்த றுகுணகே துப்பறிந்து அரசியல் கட்டுரைகளை வழங்குவதில் மிகவும் திறமையானவர். பல விருதுகளை பெற்றவர். இவரோடு ராவய பத்திரிகையில் நீண்ட காலம் சேவையாற்றிய கே.டப்லியூ. ஜனரஞ்சன, கே.சன்ஜீவ, தரிந்து உடுவரகெதர, ரேகா நிலுக்ஷி ஹேரத் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
'அனித்தா' பத்திரிகையை வெளியிடும் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக சட்டத்தரணி லால் விஜயநாயக்க, பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் சரத் விஜேசூரிய, திரு காமினி வியன்கொட, சட்டத்தரணி உபுல் குமரப்பெரும, வை. ரஞ்சித் செனரத் பத்திரன ஆகியோர் பதவி வகிக்கின்றனர்.

Monday, 9 April 2018

மைத்திரி ஒரு விலாங்கு மீன்!


மைத்திரி ஒரு விலாங்கு மீன். பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டும் அரசியல் தந்திரத்தை நன்றாக செயற்படுத்துபவர் தான் நமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
சிங்கள இனவாதிகள் மற்றும் முஸ்லிம்களுடனான இவரின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரியோடு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் சென்றுள்ளனர். தனது வெளிநாட்டு விஜயங்களின் போது குறிப்பாக முஸ்லிம் நாடுகளுக்கான விஜயங்களின் போது கறிவேப்பிலையாக இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் பயன்படுத்தப் படுகின்றார்கள்.

வருவாய் அழகிய மரணமே ! -கலீல் ஜிப்ரான்-















வருவாய் அழகிய மரணமே !
வாஞ்சை யோடு
ஏங்கிடும் உன்னைத்தான்
என் ஆத்மா !
வா என்னை நெருங்கி !
வந்தென் வாழ்க்கையின்
இரும்புத்
தளைகளை அவிழ்த்திடு !
களைத்துப் போனேன்
அவற்றின்
கனத்தைச் சுமந்து !
வருவாய் இனிய மரணமே !
வந்தென்னை விடுவிப்பாய்
வழிப் போக்கனாய்
என்னை நோக்கிடும்
பக்கத்துச் சொந்த
பந்தங்களிருந்து !
என்னெனில் நான் அவருக்கு
விளக்கிச் சொல்வேன்
தேவதை களின் வாசகத்தை !
வருவாய் மௌன மரணமே !
இருட்டு மூலை
மறதியில்
விட்டுச் சென்ற என்னை கடத்திச் செல்
இந்தக் கும்பலிட மிருந்து !
எனெனில்
எளியவர் குருதியை நான்
அவரைப் போல்
பிழிந்திட மாட்டேன் !
வருவாய் சாந்த மரணமே !
இழுத்துக் கொள்
என்னை
உந்தன் வெள்ளை
இறக்கைக் குள்ளே !
ஏனெனில்
என்னாட்டு மாந்தருக்கு
இனி நான்
தேவை யில்லாதவன் !
தழுவிடு என்னை மரணமே !
முழுப் பரிவோடு அன்பு
கொண்டு !
உன் உதடுகள் தொடட்டும்
என் உதடுகளை !
அன்னையின் முத்தங்கள்
சுவைக் காதவை !
தங்கையின் கன்னத்தைத்
தடவா தவை !
அருமைக் காதலியின்
விரல் நுனிகளை
வருடா தவை !
வா வந்தென்னை
ஏற்றுக் கொள்
என்னினிய மரணக் காதலி !
-கலீல் ஜிப்ரான்-

Sunday, 30 October 2016

1990 ஒக்டோபர் மாதம் 30ம் திகதி நினைவில் நின்றும் அகலாத நாள்.


1990 ஒக்டோபர் மாதம் 30ம் திகதி அந்த நாள் என்றும் என் நினைவில் நின்று அகலாத நாள்.
வட மாகாண முஸ்லிம்கள் தனது சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்ட நாள். அன்று மன்னாரிலிருந்து அகதிகளால் நிரம்பிய லொரி ஒன்று கொழும்புக்கு நகர்ந்துக்கொண்டிருந்தது. அது பிரேமதாஸ ஜனாதிபதியின் ஆட்சிக்காலம்.
கொழும்புக்கு அகதிகள் வந்துவிடக் கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் கடுமையான தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அதையும் மீறி இந்த வாகனம் வந்துக்கொண்டிருந்தது. நவீன தொடர்பாடல் வசதிகள் அறவே இல்லாத அந்தக்காலத்தில் வாகனம் வருகின்ற ஒவ்வொரு ஊர்களையும் மிகவும்சிரமத்தோடு எமக்கு 'அப்டேட்' செய்துகொண்ருந்தார்கள்.
இரவு 9.00 மணியைத் தாண்டியது. வாகனம் பேலியாகொடை பகுதியை கடந்து கொழும்பு நகர எல்லைக்குள் வர வர எமக்கு பதற்றம் அதிகரித்தது. நானும் இதற்காக காலை முதல் உழைத்துக்கொண்டிருந்த சில நண்பர்களும் மருதானை ஸாஹிரா பள்ளிவாசலுக்கு போனோம். பள்ளிவாசல் வாயிற்கதவு 10 மணிக்கு மூடிவிடுவார்கள். அதற்குள் இந்த வாகனத்தை பள்ளிவாசல் முன்றலுக்குள் எடுக்க வேண்டும். என்னோடு வந்தவரில் மிகவும் வயதில் கூடியவர் ஷாஹுல் ஹமீத் நானா, இடது சாரி அரசியலில் பரிச்சயமானவர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பாசறையில் வளர்ந்து பிற்காலத்தில் கொழும்பு நகர சபைக்கு ஜேவிபியில் போட்டியிட்டவர். வயதில் முதிர்ச்சியிருந்தாலும் இளைஞர்களின் உணர்வுகளோடு ஒன்றித்துப் போகிறவர்.
வாயிற்கதவை மூடுவதற்கு மருதானை பள்ளிவாசல் காவலாளி தயாராகிக்கொண்டிருந்தார். இந்தக் காவலாளி ஷாஹுல் ஹமீத் நானாவுக்கு மிகவும் அறிமுகமானவர். பள்ளிவாசல் வாயில் கதவடியில் எங்களைக் கண்டதும் அவர் மூடுவதை நிறுத்திக்கொண்டு ஷாஹுல் ஹமீத் நானாவோடு மிகவும் நேசமாக பேச்சுக்கொடுத்தார். இந்த உறவை வைத்து இந்தக் காரியத்தை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை என் உள்ளத்தில் உறுதியாகியது.
அவருக்கு இந்த அகதிகள் பிரச்சினை தொடர்பாக அவ்வளவு பெரிதாக ஒன்றும் தெரியாது. இன்னும் சிறிது நேரத்தில் அகதிகளை சுமந்து வந்துக்கொண்டிருக்கும் வாகனம் மருதானைக்கு வந்துவிடும். அதற்குள் இவர் வாயிற்கதவை மூடாமல் இருக்கவேண்டும். ஷாஹுல் ஹமீத் நானா ஒரு வியூகத்தை வகுத்தார்.
''கடைக்குப் போய் தேநீர் ஒன்று குடிப்போம் வாரீயா? என்று காவலாளியிடம் கேட்டார். கதவை மூட வேண்டுமே! நேரம் சரியாகி விட்டது. மூடிவிட்டு வருகிறேன் என்றார் காவலாளி. இல்லை தேனீர் குடித்து வந்து மூடுவோம். ஒரு நண்பர் வரும்வரை இவர் இங்கே இருப்பார் என்று என்னைக்காட்டிச் சொன்னார் ஷாஹுல் ஹமீத் நானா. நானும் தலையசைத்தேன். வாயிற் கதவை மெதுவாக சாத்திவிட்டு இருவரும் ஹோட்டலை நோக்கி நகர்ந்தார்கள்.
நொடிப்பொழுதில் மருதானை பொலிஸ் நிலையத்;திற்கு முன்பாக வலது பக்கம் சிக்கனல் இட்டவாறு புகாரி ஹோட்டல் பக்கத்திலிருந்து லொறியொன்று வந்துக்கொண்டிருந்தது. பொரளை பக்கம் செல்லும் வாகனம் மருதானை பொலிஸுக்கு முன்னால் பள்ளிவாசல் பக்கம் திரும்ப முடியாது. என்றாலும் நான் வாயிற் கதவை திறந்தவாறு பள்ளிவாசல் வளவுக்குள் வண்டியை வருமாறு சைகை செய்தேன். மிகவும் வேகமாக வாகனத்தைத் திருப்பிய சாரதி பள்ளிவாசலுக்கு முன் இருந்த மைதானத்தில்; வந்து நிறுத்தினார்.
அழுகையும் கண்ணீரும் கதறல்களோடும் லொரியில் இருந்து இறங்கிய பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என் இதயத்தை உருகச்செய்தனர். சுமார் பத்து மணித்தியாலங்களுக்கு மேலாக இவர்கள் வாகனத்தில் அடைக்கப்பட்டு பயணம் செய்ததாக அறிய வந்த போது என் கண்கள் குளமாகின.
விடிந்தால் வெள்ளிக்கிழமை நாளைய ஜும்ஆ நிகழ்வு அசம்பாவிதங்கள் உள்ள ஒரு நாளாக கொழும்பை மாற்றிவிடுமோ என்ற அச்சத்தில் பாதுகாப்புத் தரப்பும், அரசாங்க உளவு அமைப்புகளும் உசாராகின. வடமாகாணத்திலிருந்து கொழும்புக்கு வந்த முதலாவது அகதிகள் குழு இதுவாகத்தான் இருக்கும் என்பதே எனது அபிப்பிராயம்.
அடுத்த நாள் எனக்கு எதிராக மருதானை பொலிஸில் ஸாஹிரா வளாகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்ததாக முறைப்பாடோன்றை பள்ளிவாசல் நிர்வாகம் இட்டிருந்தது. அதற்கும் தைரியமாக முகம் கொடுத்தேன்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில், கண்ணீரால் எழுதப்பட்டுள்ள வடமாகாண வெளியேற்றத்தின்; கதைகளின்; பக்கங்களில்... துயரமும் துக்கமும் மிகுந்த இந்த நினைவுகளில்... என் கண்ணீரும் கலந்திருக்கிறது.
அந்த வலிகளை வைத்து 2006ம் ஆண்டு நான் ஒரு பாடலை உருவாக்கினேன. அபாபீல் என்ற இறுவட்டில் வரும் அந்தப் பாடல் வடமாகாண முஸ்லிம்களின் வலியை சொல்லும் விரல்விட்டு எண்ணக் கூடிய டிஜிட்டல் ஆவணங்களில் ஒன்றாக என்றும் இருக்கும் என்றே நம்புகிறேன்.

இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

  குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது. ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில்,...