Sunday 10 January 2010

காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!



காஸா - பிரச்சினையும் பிராந்திய அரசியலும்!

பலஸ்தீன் பிரச்சினை சமகாலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா .

பல தசாப்தங்கள் உலகில் மாற்றமடையாமல் இருக்கும் ஒரே தலைப்பு “ மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடி ” என்றார் நோம் சொம்ஸ்கி.

பலஸ்தீன் மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை அடையாளப்படுத்த இதனைத் தவிர வேறு ஒரு வார்த்தைகள் அவசியமில்லை.

காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு ஒரு வருடம் நிறைவாகிறது. சுமார் 15 லட்சம் மக்கள் அடிப்படை வசதிகள் முற்றாக மறுக்கப்பட்டு ஒரு திறந்த வெளி சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

உணவு, மருந்து, தண்ணீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படை தேவைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு அந்த மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

2006ம் ஆண்டு பலஸ்தீன் அதிகார சபைக்கான தேர்தலில் ஹமாஸ் இயக்கம் போட்டியிடடு வெற்றியீட்டியதைத் தொடர்ந்து மேற்குலகம் கடுமையான தடைகளையும் நெருக்குதல்களையும் கொடுத்து ஹமாஸ் அரசை செயலிழக்கச் செய்தது.

ஹமாஸ் பாராளுமன்ற அமைச்சர்கள், அங்கத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் இன்றும் சிறையில் வாடுகிறார்கள்.

ஜனநாயத்திற்காக குரல் கொடுப்பவர்கள், மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் யாரும் இதற்காக ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனிகளாக இருக்கின்றார்கள்.

அடிப்படை வசதிகளும், அத்தியாவசிய பொருட்களும் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் பலஸ்தீன் உலகிலிருந்து ஒதுக்கப்பட்டிருக்கிறது. தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஹமாஸ் மீதான மேற்குலகின் இந்த நெருக்குதல்களுக்கு பின்னணியில் மத்திய கிழக்கின் அரசியல் மறைந்திருக்கின்றது. பலஸ்தீனில் இஸ்லாமிய ஆட்சியமைப்பைக் கொண்ட ஜனநாயக ரீதியாக ஏற்படும் பாராளுமன்ற அரசியல் கட்டமைப்பு தமது மன்னராட்சியின் மகுடங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை அரபு நாடுகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன.

பலஸ்தீனில் உருவாகும் பாராளுமன்ற அரசியலின் கவர்ச்சி தனது நாட்டு மக்களின் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்கும் என்ற அச்சம் அரபு நாடுகளுக்கு இருக்கவே செய்கின்றது.

பலஸ்தீனில் உருவாகும் இஸ்லாமிய அடிப்படையிலான பாராளுமன்ற கட்டமைப்பு அமெரிக்க இஸ்ரேல் நாடுகளுக்கு எப்படி அச்சுறுத்தலோ அதே போன்று அந்த பிராந்தியத்திலுள்ள அரபு நாடுகளுக்கும் அச்சுறுத்தலாகும்.

இந்த ஜனநாயக அரசியல் கட்டமைப்பை விரும்பாத அரபு நாடுகள் தமது மன்னர் ஆட்சி கட்டமைப்பைக் காத்துக்கொள்வதற்காக வேண்டி, பலஸ்தீன் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் திணித்த பொருளாதார தடைகளை மௌனமாக இருந்தது அங்கீகரித்து வருகின்றன.

காணொளி
"அரபிகளே! பலஸ்தீனத்தை பாதுகாக்க எழுந்து வாருங்கள்!!" - பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் George Galloway.




உலக சனத்தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் நூற்று ஐம்பது கோடியாகும். யூதர்களின் சனத்தொகை வெறுமனே ஒன்றரைக் கோடிதான். உலகமுஸ்லிம் சனத்தொகையோடு ஒப்பிடும் போது யூதர்களின் சனத்தொகை நூற்றுக்கு ஒரு வீதமே இந்த ஒரு வீத சமூகம் முழு முஸ்லிம் உம்மத்தையும் ஆட்டிப்படைக்கின்ற அவலமான நிலைக்கு உலக அரசியல் ஆதிக்கம் மாற்றியிருக்கிறது .



பலஸ்தீன் மீது திணிக்கப்பட்டுள்ள தடைகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தட்டிக்கேட்க தலைமைத்துவம் ஒன்று இல்லாமல் அந்த மக்கள் இன்றுஅனாதைகளாக்கப் பட்டிருக்கின்றார்கள்.


ஏகாதிபத்திய காலனித்துவ சக்திகளின் இந்த கொடுரமான அடக்குமுறையை ஊடகங்கள் இன்று வரை மூடி மறைத்தும் வருகின்றன.

ஸியோனிஸ வாதிகளால் நசுக்கப்பட்டிருக்கும் அந்த தேசத்தின் குரலை செவியேற்காத செவிடர்களாய் அரபு நாடுகள் உட்பட முழு முஸ்லிம் உம்ம்த்தும் மாறியிருக்கிறது. ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கிறது.



2005ல் இஸ்ரேலும் பலஸ்தீனும் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் படி தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதும், எல்லைகள் திறக்கப்பட்டு காஸா, மேற்குக் கரைக்கு இடையில் போக்குவரத்திற்காக பாதைகளை திறந்து பாதகாப்பை உத்தரவாதப்படுத்துவதும் முக்கியமாக கொள்ளப்பட்டிருந்தது.

2006ல் ஹமாஸ் ஆட்சியைக் கைப்பற்றியதும், அல் பத்தாஹ் தோல்வியடைந்ததும் அரபு நாடுகளுக்கும், அமெரிக்காவிற்கும், இஸ்ரேலுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது. உடனடியாக இஸ்ரேல் ஒப்பந்தத்தை இரத்துச் செய்தது. தேர்தலுக்கு முன்னேயே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஹமாஸ் தனது அமைதி வழியை உலகிற்கு ஒப்புவித்திருந்தது.

காஸா மீது இஸ்ரேல் விதித்திருக்கும் தடையால் பதினைந்து இலட்சம் பலஸ்தீனர்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். காஸா எகிப்திற்கான பாதை இஸ்ரேல், அமெரிக்கா அழுத்தத்தின் காரணமாக மூடப்பட்டடிருக்கிறது.

சுரங்கப் பாதைகள் ஊடாக எகிப்திற்குள் நுழையும் பலஸ்தீனர்கள் இந்தப் பொருளாதார தடைக்கு வேறு விதமாக முகம் கொடுத்து வருவதை உணர்ந்த இஸ்ரேல் அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில் காஸா எகிப்து எல்லையில் இரும்புச் சுவர் (Steel Wall) ஒன்றை அமைக்கும் பணியில் இறங்கியிருக்கிறது.

இந்த அட்டுழிய செயற்பாட்டிற்கு இஸ்ரேலும் எகிப்தும் கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியிருக்கிறது.

காஸாவின் வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்துகள் மற்றாக இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மனித உரிமைகளை மீறும் எதிரிகளின் இந்த முற்றுகை உலக வரலாற்றில் இடம்பெற்ற இடம் பெற்றுக் கொண்டிருக்கும் மோசமான நிகழ்வுகளில் முன்னணியில் நிற்கிறது.

இந்த அடக்கு முறைக்குள் அவதியுறும் சகோதர சமூகத்தையும், முஸலிம்களின் முதல் கிப்லாவையும் மீட்டு எடுக்க முடியாதளவு அரபுலகின் பிராந்திய அரசியலால் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் பின்னடைந்து வருகிறது.

அரபு நாடுகளோடு சிறந்த நண்பனாக ஒட்டி உறவாடும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இராணுவ நிதி உதவிகளை அளித்து வருகிறது. அமெரிக்காவின் அதிகபட்ச நிதியுதவியை பெறும் நாடுகளில் இஸரேல் முதலிடம் வகிக்கின்றது.

காஸாவிலும் மேற்குக் கரையிலும் யூதக் குடியிருப்புகளை அமைப்பதற்கு அமெரிக்க நிதியே பயன்படுகிறது. இது விடயத்தில் எவ்வித எதிர்ப்பையும் காட்டாத அரபு நாடுகள் போலியாக பலஸ்தீன் விடுதலை தொடர்பாக மறு பக்கம் பேசிக்கொண்டும் இருக்கின்றன.

அல்லது தனது பணத்தினால் போஷிக்கப்படும் பிற நாடுகளில் இயங்கும் தமது இயக்கங்களை வைத்து பேச வைக்கின்றன. அரபுலகத்திற்கு உண்மையான ஒரு தேவையிருந்தால் காஸாவிற்கு எதிரான இந்த அடக்கு முறையை இலகுவாக தீர்க்கலாம் .

இஸ்ரேலின் நண்பனாகவும் பாதுகாவலனாகவும் அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவின் நண்பர்களாக அரபு நாடுகள் இருக்கின்றன.

இந்த நட்பை பிரயோகித்து இந்த அடக்கு முறைக்கு ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அரபுலகம் அதற்கு முன் வராததன் காரணம் என்ன? என்று சிந்திப்பது எமது கடமையாகின்றது.

பலஸ்தீன் விடயத்தில் உருப்படியாக எதுவும் செய்யாத இந்த அரபு நாடுகள்
இலங்கையிலும், பிற நாடுகளில் தமது “ ஏஜன்ட் ” களான இயக்கங்களை வைத்து இஸ்ரேலுக்கு எதிராக பெயரளவில் குரல் கொடுக்க துாண்டியும் வருகின்றன.

முஸ்லிம் சமூகத்தில் தமது இருப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவே ஊடகங்கள் மூலம் பெயரளவிலான பலஸ்தீன் மீதான அனுதாபத்தை இந்த இயக்கங்கள் பதித்து வருகின்றன.

தமது அரபு எஜமானர்களுக்கும் எதிரிகளுக்கும் உள்ள நட்பை மூடி மறைக்கும் ஓர் அரசியலாகவே இந்த பலஸ்தீன் அனுதாப பிரசாரம் இந்த இயக்கங்களால் ஊடகங்களில் முடுக்கிவிடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அண்மையில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் இத்தகைய அரபு பணத்தில் செயற்படும் இயக்கமொன்றின் பிரதிதிதி ஒருவர் பலஸ்தீன் மக்களின் பரிதாபத்தை சொல்லி அழுது வடித்துக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சி முடிய அவரோடு தொடர்பு கொண்டு அவரோடு கதைத்தேன்.

நான் அவரிடம் “ இந்த பலஸ்தீன் பிரச்சினையை இலகுவாக தீர்க்க ஒரு வழி இருக்கிறது. இஸ்ரேலின் அக்கிரமத்தை வானொலியில் சொல்ல உங்களுக்கு பணம் தரும் அரபு நாடுகள் அமெரிக்காவோடு மிகவும் நட்பாக இருக்கின்றன. அமெரிக்கா இஸ்ரேலோடு நட்பாக இருக்கிறது. ஆக, இஸ்ரேல், அமெரிக்கா, அரபு நாடுகள் என்ற மூன்று தரப்பும் நட்பு என்ற வகையில் ஓரணியில் நிற்கின்றன. இந்த நட்பை பயன்படுத்தி பலஸ்தீன் பிரச்சினையை இலகுவாக தீர்க்க முடியுமே?” என்று நான் கேட்டேன்.

அதற்கு அவர் திக்கித் திக்கி “ஆம் அதுவும் சரிதான் ” என்று எனக்கு பதில் தந்தார்.

பிரச்சினையின் உண்மையான பக்கத்தைக் புரிந்து கொள்ளாமல் ஏகாதிபத்தியத்திற்கு துணைபோகும் மத்திய கிழக்கின் அரசியலை இஸ்லாம் என்ற போர்வையில் பற்றிக்கொண்டிருக்கும் இந்த இயக்கங்கள், வேறு ஒரு சக்தியின் நிகழ்ச்சி நிரலுக்கும், பணத்திற்கும் தொழிற் படும் பாமரத்தனத்தையே இது படம் பிடித்துக்காட்டுகிறது.

இவர்களால் எந்த இலக்கையும், வெற்றியையும் அடைய முடியாமல் போனதற்கு அடிப்படைக் காரணம் இதுவாகத்தான் இருக்கிறது.

இன்று, அனைத்து கதவுகளும் அடைக்கப்பட்டு காஸா மக்கள் சிறைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

பட்டினியால் வாடும் ஒரு பலஸ்தீன் சகோதரனுக்கு பலாத்காரமாக உள்நுழைந்து ஒரு பாண் துண்டை கொடுப்பதற்கு தைரிமில்லாத கோழைகளாக நாங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றோம்.

2009 ஜனவரியில் முடிவடையவிருந்த மஹ்மூத் அப்பாஸின் ஜனாதிபதி பதவியை நீடித்து வைக்கும் மறைமுக செயற்பாடாகவும் , ஹமாஸின் அரவணைப்பிலிருந்து பலஸ்தீனை பிரித்தெடுக்கும் சூழ்ச்சியின் ஒரு வடிவமாகவே காஸா ஆக்கிரமிப்பு போர் 2008 டிஸம்பர் 27ம் திகதி தொடுக்கப்பட்டது.

பலஸ்தீன் மக்களை யூதர்கள் கொத்து கொத்தாய் கொன்று குவிப்பது எப்படி அநியாயமோ அதே போல் அந்த கொலைகளைப் பார்த்து அரபு நாடுகள் அமைதியாய் இருப்பது அதைவிட அநியாயமாகும்.

இன்று இராணுவ ரீதியாக இஸ்ரேலை வெல்வதை விட முஸ்லிம் உம்மத்திற்கெதிராக எதிரிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கும் சதியின் இரகசியத்தை அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.

சுமார் 1500 பேரை பலியெடுத்த அந்த ஆக்கிரமிப்பின் காயங்களிலிருந்து இன்றும் இரத்தம் கசிந்துக்கொண்டிருக்கிறது.

கண்ணீர் வடிந்துக் கொண்டிருக்கிறது.



No comments:

Post a Comment

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...