Tuesday 25 March 2014

அஸ்ஸாம் இனக்கலவரம் - 2012 குறித்த ஆவணப்படம் ‘THE WOLVES'


கற்பனைகளை காட்சியாக்குவதுதான் சினிமா. சற்றே மாறுபட்டு நிகழ்வுகளை, காட்சித் தொகுப்பாக்குவதை “ஆவணப்படம்” என்கிறோம்.

ஆய்வுகள், வரலாறு, வன்முறை நிகழ்வுகளின் பதிவுகள் என ஆவணப்படங்கள் பல்வேறு தளத்தில் எடுக்கப்படுகின்றன. உண்மைச் சம்பவங்கள் சினிமாக்களாக எடுக்கும்போது பாதிப்புகள் வர்ணிக்கப்பட்டாலும், வலிதனை உணரச் செய்வது ஆவணப்படங்கள் மட்டுமே. நாயகர்களின் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் இரத்தத்தின் சாட்சியல்லவா?
அந்த வரிசையில் அஸ்ஸாமின் இருள் முகத்தினை விவரிக்கும் படமாய் வெளிவந்திருக்கிறது “ஓநாய்கள்” (The Wolves).

அஸ்ஸாமின் அவலம்
ஜூலை 20, 2012… அந்தி  மாலைப்பொழுதில் அனைவரின்  கவனமும் ரமழான் முதல் பிறை பார்த்திடும் ஆவலில் இருக்கையில், திடீர் சப்தம் திடுக்கத்திற்கு உள்ளாக்கியது ஜோய்பூர் கிராம (கோக்ரஜார் மாவட்ட) மக்களை!
பீதிக்குள்ளான மக்கள் ஒன்று கூடினர். இராணுவ சீருடையில் வானை நோக்கி துப்பாக்கியால்  சுட்டுக் கொண்டே சென்ற நால்வர்தான் வெடி சப்தத்திற்கு காரணம் என்றறிந்த மக்கள், அவர்களை மடக்கி பிடித்து நையப்புடைத்தனர். பின்னர் அவர்கள் போடோ லிபரேஷன் டைகர் (BLT ) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தெரிந்து கொண்டனர்.
இது அம்மக்களுக்கு புதிதல்ல. அவ்வப்போது வன்முறை குழுக்களை எதிர்கொள்வதும், அவர்களால் உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையே என அஸ்ஸாம் கிராமத்தின் பாதுகாப்பற்ற சூழலை விளக்கியவாறு துவங்குகிறது படம்.

போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் அவர்களுக்கு அரசின் எந்தவொரு பாதுகாப்பு உறுதியையும் பெற்றுத் தந்திடவில்லை. மாறாக போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களின் உயிரையே பறித்தது.

கலவரத்தின் பின்னணி
பதட்ட சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய பொறுப்பிலிருக்கும் அரசியல்வாதிகள் (?), தங்களின் சுய இலாபத்திற்காக மூட்டிய “தீ”தான்  அஸ்ஸாம்-2012 இனப்படுகொலையின் பின்னணி என காட்சிகள் விரிகின்றன.
இவர்களது வெறுப்புப் பேச்சால் 90 நபர்கள் பலி கொடுக்கப்பட்டும்,  244 கிராமங்களில் சுமார் 5000 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டும், 4.5 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்தும் தவிக்கின்றனர் என்பதும்தான் பெருத்த சோகம்.

திசை திருப்பும் பாஜக
போடோ இனத்தவருக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்குமான பிரச்னையை, பாஜக அரசியலாக்க முனைவதையும் படம் பிடிக்கிறார் இயக்குனர். சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஆங்கிலேயர்களால் இங்கு கொண்டு வரப்பட்ட வங்கதேச முஸ்லிம்கள், சுதந்திரத்திற்குப் பின் இந்தியர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களை ஊடுருவல்காரர்களாக சித்தரித்து, அவர்களால் நாடு மீண்டும் ஒரு பிரிவினைக்கு உள்ளாகும் எனும் துவேஷ கருத்தினை பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான (லாஹூரில் பிறந்து சுதந்திரத்திற்கு பிறகு இந்தியா வந்த) வந்தேறி எல்.கே. அத்வானி பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துகிறார்.

தேசம் முழுவதுமுள்ள முஸ்லிம்களுக்கு தங்கள் தேசப்பற்றை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்றால்,  அஸ்ஸாமிய முஸ்லிம்களுக்கு தங்கள் குடியுரிமையையே நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அந்தோ பரிதாபம்!
முஸ்லிம்களின் அடர்த்திமிக்க மாநிலமாக அஸ்ஸாம் இருப்பதும், அவர்களின் மக்கள்தொகை (1991-2001 கணக்கின்படி) 4 சதவிகித அளவில் சற்றே உயர்ந்திருப்பதும் காவி அரசியலின் கண்களுக்கு அஸ்ஸாமை இலக்காய் ஆக்கியிருக்கிறது. ஆனால் மேகாலயா பிரிக்கப்படும்போது மற்ற சமூகத்தித்தினர் அம்மாநிலத்திற்கு  சென்றதே முஸ்லிம்களின் சதவிகித உயர்வுக்கு காரணம் என விளக்குகிறார் இயக்குனர்.

போராட்டம் தொடர்கிறது
கலவரங்களில்  வாக்காளர் அட்டை உட்பட, தங்களிடமிருந்த   அனைத்து ஆவணங்களையும் இழந்து அகதி முகாம்களில் வாடும் அஸ்ஸாமிகள், தங்களை இந்தியர்களாய் நிரூபிக்கும் போராட்டம் தொடர்கிறது.
அம்மக்களின் நிலையை ஆவணப்படுத்தி நியூ இந்தியா தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இதனை மிகுந்த சிரமங்களுக்கிடையில் உருவாக்கிய இஸ்மாஈல் பின் ஸக்கரிய்யா, அஹமத் இக்பால் தன்வீர் ஆகியோரை எத்தனை பாராட்டினாலும் தகும்.

அவர்கள் இதே போன்று பல படங்களை வெளியிட்டு உறங்கிக் கிடக்கும் உண்மைகளையும், மண்டிக் கிடக்கும் மர்மங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிட வேண்டும் என்பதே எம் அவா!

வீடியோவை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்
http://www.newindia.tv/tn/review/2676-the-wolves-a-documentary-on-assam-riots-2012
நன்றி : http://www.thoothuonline.com

Friday 21 March 2014

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்தலை வன்மையாக கண்டிப்போம்!

alt
'இன்போம்" நிறுவனத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு ருகி பர்ணாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டமைப்பு சம்பந்தமான நிலையத்தின் முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கடந்த 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முன்னிலை சோஷலிஸக் கட்சியின் ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை வருமாறு
 
' ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களுக்கு எதிராக குரலெழுப்பும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குரல்வளையை நசுக்குவதற்காக எடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மார்ச் 16ம் திகதி இரவு பாதுகாப்புப் படையினரால் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களான 'இன்போம்" நிறுவனத்தின் ருகீ பர்னாந்து மற்றும் சமாதானம் மற்றும் மீள் கூட்டபை்பு சம்பந்தமான முக்கியஸ்தர் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இந்த கைது இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலுக்கு சிறந்த உதாரணமாகும். 16ம் திகதி இரவு அவர்கள் இருவரும் கிளிநொச்சியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ம் திகதி கிளிநொச்சி தர்மபுறம் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டோடு சம்பந்தப்பட்டவர்கள் எனக்கூறி தாயும் மகளும் கைது செய்யப்பட்டமை தொடர்பில் விசாரிப்பதற்காகச் சென்றபோது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
கிளிநொச்சி, தர்மபுறம் பகுதியைச் சேர்ந்த ஜெயகுமாரி பாலச்சந்திரன் என்பவரின் வீட்டுப்பக்கமாக வெடிச்சத்தம் கேட்டதாக கூறி அவரும் அவருடை 13 வயது மகள் விபுஷிகாவும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர். ஜெயகுமாரி பாலச்சந்திரனின் மூன்று ஆண்மக்கள் காலஞ்சென்றிருப்பதோடு ஒருவர் காணாமல் போயுள்ளார். அவருடைய மகள் காணாமல் போனவர்கள் தேடுவதற்காக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றி வருகின்றனர். அவர்கள் கைது செய்யப்பட்டது காணாமல் போனவர்கள் தொடர்பான ஆர்ப்பாட்டங்களை செயலிழக்கச் செய்வதற்காவே என்பது தௌிவு. 
 
இப்போது அது குறித்து குரலெழுப்பிய மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
ருகீ பர்ணாந்து மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த ஒரு வழக்குரைஞர் கிளிநொச்சி பொலிஸில் விசாரித்தபோது கைது செய்யப்பட்டதை நிராகரித்தமை பாரதூரமான நிலையாகுமென்பதே எமது கருத்தாகும். 
 
இப்படியான நிலைமையின் கீழ் அவர்கள் உயிராபத்தான நிலையில் இருப்பது தௌிவாகிறது. ருகீ பர்ணாந்து மற்றும் அருட்தந்தை பிரவீன் ஆகியோர் இந்நாட்டின் முதல்நிலை மனித உரிமை செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது இவ்வாறான அச்சுறுத்தல் தொடுக்கப்பட்டிருப்பதன் மூலம், மனித உரிமைகளுக்காக தோற்றி நிற்பவர்களுக்கு இலங்கை ஆபத்தான நாடாக மாறுவது தெரிகிறது.
ஜெனீவா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கையில மனித உரிமைகள் சம்பந்தமான பிரேரணை குறித்து பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமல்போனவர்களின் உறவினர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருப்பதன் மூலம், எப்படியான அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் சர்வாதிகார் மற்றும் ஜனநாய விரோத பயணத்தை கைவிட அரசாங்கம் தயாரில்லை என்பது தெரிய வருகிறது. இந்த நிலைமையின் கீழ் இலங்கை மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்காக பரவலான மக்கள் செயற்பாடொன்று தேவைப்படுகிறது. 
 
அதற்காக ஏதாவதொரு வெளிச்சக்தியின் மீது நம்பிக்கை வைப்பதில் பலனில்லை. மக்களின் பரவலான தலையீட்டின் ஊடாகவே ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க முடியும். மனித உரிமைகளுக்காக போராடுபவர்களுக்கு எதிராக தொடுக்கப்படும் அனைத்து வித அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்துமாறு ஆட்சியாளர்களை வற்புறுத்தும் நாம்,  தமது உரிமைகளுக்காக நிறுவனப்படுமாறும், அணிதிரளுமாறும், செயற்படுமாறும் இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
 
-முன்னிலை சோஷலிஸக் கட்சி-

Thursday 20 March 2014

ஆயிரக்கணக்கான தாய்மாரின் குரலாயிருந்தோர் பழிவாங்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் கிளிநொச்சி தருமபுரத்தில் பாலேந்திரா ஜெயகுமாரியும் அவரது மகள் சிறுமி விபூசிக்காவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரால் வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். தற்போது தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்களான ருக்கி பெர்ணான்டோவும் மத குருவான பிரணவீனும் அதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த வருடம் செப்ரம்பர் மாதத்தில் விஞ்ஞான பாட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் காணாமல் போனார். 

அண்மையில் மாங்குளத்தில் அவரது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. அதனை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு வடக்கில் தொடரும் மனித உரிமை மீறல்கள்களையும் அரசாங்கத்தின் இராணுவ முனைப்புடனான போரினவாத ஒடுக்குமுறையினையும் எமது புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. 


அதேவேளை கைது செய்யப்பட்டோர் உடன் விடுவிக்கப்படுவதையும், காணாமல் போய் எலும்புக் கூடாகக்கப்பட்ட ஆசிரியர் நிரூபன் பற்றி உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்பட வேண்டும் என்பதையும் கட்சி வற்புறுத்துகின்றது.

இலங்கையில் கைதுகளும் தடுத்து வைப்புகளும் காணாமல் போதல்களும் எலும்புக்கூடாக்குதல்களும் புதிய விடயங்கள் அல்ல. அவை வடக்குக் கிழக்கில் மட்டுமன்றித் தெற்கிலும் தாராளமாக இடம்பெற்று வந்தவையாகும். அதன் தொடர்ச்சியே அண்மைய கிளிநொச்சி மாங்குளச் சம்பவங்களாக வெளிப்பட்டு நிற்கின்றது. அவற்றின் எதிரொலிகளே இன்று ஜெனிவாவிலும் உரத்துக் கேட்கின்றன. இத்தனைக்கு நடுவிலும் மகிந்த சிந்தனை அரசாங்கம் தனது பேரினவாத ஒடுக்குமுறை அகங்காரத்தைக் கைவிடத் தயாராக இல்லை. அதனாலேயே திட்டமிட்டுப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது.

தனது மகன் காணாமல் போனோர் பட்டியலில் இருந்துவருவதை எந்தவொரு தாயாலும் பொறுத்துக் கொள்ளவியலாது. அவ்வாறே ஒரு கணவனையோ சகோதரனையோ சகோதரியையோ இழந்து நிற்பவர்களால் எவ்வாறு நிம்மதியாக வாழ முடியும்? அவ்வாறான பல ஆயிரக் கணக்கானோரில் ஒருவராகவே பாலேந்திரா ஜெயக்குமாரியும் அவரது மகளான சிறுமி விபூக்காவும் இருக்கின்றனர்.

தனது மகனுக்காகவும் சகோதரனுக்காகவும் நீதி நியாயம் கோரி வந்தமையை எவ்வகையிலும் தவறானது எனக் கொள்ள முடியாது. பல ஆயிரக்கணக்கான தாய்மார்களின் குரலாகச் செயற்பட்டமைக்காகப் பழிவாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும். எனவே கைது செய்யப்பட்டவர்கள் உடன் விடுவிக்கப்படல் வேண்டும் என்பதுடன் கடத்தப்பட்டு எச்சமாக மீட்கப்பட்ட ஆசிரியர் கார்த்திகேசு நிரூபன் தொடர்பில் உடன் விசாரணை வேண்டும் என எமதுக் கட்சி வற்புறுத்துகின்றது.

18.03.2014

 சி.கா. செந்திவேல்  
பொதுச் செயலாளர்  
புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி

Thursday 13 March 2014

மலேசிய விமானம் தொடர்பாக செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டது சீனா


சீன அரச இணையதளம் ஒன்று காணாமல் போன மலேசிய விமானத்தின் சேதமடைந்த பாகங்கள் தென்படும் செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளதாக சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹூவா தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- 

வியட்நாமின் தெற்கு முனை மற்றும் மலேசியாவின் கிழக்கு பகுதிக்கு இடையில் கடந்த மார்ச் 9ம் தேதி காலையில் செயற்கைக்கோள் எடுத்த படங்களில் "மூன்று சந்தேகத்திற்குரிய மிதக்கும் பொருட்கள்" மாறுபட்ட அளவுகளில் தென்பட்டுள்ளன. காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் விமானத்தின் பாகங்கள் அதிகபட்சம் 22-24 மீட்டருக்குள் இருக்கும் என அளவிடப்பட்டுள்ளது. 

Wednesday 12 March 2014

சிங்கள ராவணா பலய ஆர்ப்பாட்டத்திக்கு தடை





சிங்கள பௌத்த இனவாத அமைப்பான ராவணா பலய  இன்று (12.03.2014 )ஒழுங்கு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை நேற்று கொழும்பு கோட்டை நீதிமன்றம் தடைசெய்தள்ளது.

ராவணா பலய அமைப்பும், சட்டக் கல்லூரிக்கு தோற்றிய  மாணவர்கள் சிலரும் இதை ஒழுங்கு படுத்தியிருந்ததாக அறிய வருகிறது.

கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய இடங்களில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற விருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



மலேசிய விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை: விமானப்படை அதிகாரி



தென் சீனக் கடலில் மாயமான மலேசிய விமானம் எந்த திசையில் சென்றிருக்கும் என்பது தெரியவில்லை என மலேசிய விமானப் படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமானத்தை தேடும் பணி தொடர்ந்தது நடைபெற்றுவருகிறது. 

தேடுதல் எல்லை விரிவாக்கப்பட்டு ஆயிரம் கடல்மைல் பரப்பில் 10 நாடுகளைச் சேர்ந்த 36 போர் விமானங்கள், 40 போர்க்கப்பல் கள், நூற்றுக்கணக்கான படகுகள் விமானத்தை தேடி வருகின்றன.

இந்நிலையில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், ரேடர் தொடர்பில் இருந்து விலகுவதற்கு முன்னர் மீண்டும் மலேசியாவுக்கே திரும்ப முயற்சித்திருக்கலாம் என அந்நாட்டு விமானப்படை அதிகாரி தெரிவித்துள்ளார் இருப்பினும் விமானம் சென்ற திசை உறுதியாக தெரியவில்லை என கூறினார்.

கோட்டா பாரு என்ற பகுதியில் இருந்து விமானம் திசை மாறி மலாகா ஜலசந்தி பகுதியில் மிகவும் தாழ்வாகப் பறந்திருப்பது ரேடார் பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளதாக வெளியான செய்திகளை அந்த அதிகாரி மறுத்துள்ளார்.

நன்றி - தி இந்து 

மலேசிய விமானத்தின் மர்மம் தொடர்கிறது...!


தென் சீனக் கடலில் பறந்தபோது கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் என்னவானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதா, கடலில் மூழ்கியதா, தீவிரவாதிகள் குண்டுவைத்து தகர்த்தனரா அல்லது கடத்திச் சென்றனரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. 3 நாள்களாகியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.

தேடுதல் பணியில் 10 நாடுகள்
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் சனிக்கிழமை அதிகாலை 12.41 மணிக்குப் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 1.30 மணி அளவில் கட்டுப்பாட்டு அறை ரேடாரில் இருந்து மாயமாக மறைந்தது.
இதைத் தொடர்ந்து மலேசியா முதல் வியட்நாம் வரையிலான கடல் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை 3-வது நாளாக தேடுதல் பணி நீடித்தது. 40-க்கும் மேற்பட்ட கப்பல்கள், 36-க்கும் மேற்பட்ட விமானங்கள் தென் சீனக் கடல் பகுதியில் சல்லடை போட்டு தேடுகின்றன.

மலேசியா மட்டுமன்றி சீனா, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், அமெரிக்கா, நியூஸிலாந்து ஆகிய 10 நாடுகளின் போர்க்கப்பல்கள், அதிநவீன போர் விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மீனவர்கள் கூட்டு முயற்சி
பன்னாட்டு கடற்படை, விமானப் படை இணைந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியாததால் உள்ளூர் மீனவர்கள் தற்போது தேடுதல் பணியில் களம் இறங்கியுள்ளனர். மலேசியா மற்றும் தாய்லாந்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குள் சென்றுள்ளனர்.
வியட்நாம் எல்லைப் பகுதியில் இதுவரை எதுவும் கிடைக்காததால் தாய்லாந்தை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் தாய்லாந்து கடற்படை தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளது.

காத்திருக்கும் உறவினர்கள்
காணாமல் போன மலேசிய விமானத்தில் 152 சீனர்கள் பயணம் செய்தனர். அவர்களின் குடும்பத்தினர் பெய்ஜிங்கில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
விமானத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் உள்பட 5 இந்தியர்கள் மற்றும் கனடாவைச் சேர்ந்த இந்தியர் ஆகியோரும் பயணம் செய்தனர். அவர்களது குடும்பத்தினரும் தவிப்புடன் காத்திருக்கின்றனர்.

வியட்நாம் எல்லையில் இரண்டு இடங்களில் பெட்ரோல் படலங்கள் மிதப்பதை அந்த நாட்டு ராணுவத்தினர் கண்டுபிடித்தனர். அந்தப் படலம் சேகரிக்கப்பட்டு கோலாலம்பூர் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. இதில், கடலில் பரவியிருந்த பெட்ரோல் படலம் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் எரிபொருள் அல்ல என்பது தெரியவந்தது.

போலி பாஸ்போர்ட் பயணி அடையாளம் தெரிந்தது
மலேசிய விமானத்தில் 4 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின. அவர்களில் 2 பேர் மட்டுமே சந்தேகத்துக்கு உரியவர்கள் என்று மலேசிய போலீஸார் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மலேசிய காவல் துறை தலைவர் காலித் அபுபக்கர் நிருபர்களிடம் பேசியபோது, 2 பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்துள்ளனர். அவர்களில் ஒருவரின் அடையாளத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அவர் மலேசியாவைச் சேர்ந்தவர் அல்ல என்றார்.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் டிக்கெட் எடுத்த 5 பேரின் உடமைகள் கோலாலம்பூர் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் விமானத்தில் ஏறவில்லை.

நன்றி - தி இந்து

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...