Saturday, 4 October 2025

ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்


 🔴"பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்."

இது வெறும் வார்த்தைகளாக எனக்குப் படவில்லை. ஊழலுக்கு எதிரான ஒரு உறுதிமொழியாகவே இந்த வார்த்தைகள் எனக்கு தோன்றியது. இதை மொழிந்தவா் வேறு யாருமல்ல, முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க தான் இவ்வாறு கூறியிருந்தார். இன்று ரங்க திசாநாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம்.

இரு தசாப்தங்களாக மஜிஸ்ட்ரேட் நீதவானாகவும், மேல் நீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றிய இவர், 2025 ஜனவரி 8 முதல் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளா் நாயகமாக பொறுப்பேற்றுள்ளார்.

இன்று, கோடிக்கணக்கில் ஊழல் செய்து வயிறு வளர்த்த அரசியல்வாதிகளுக்கு, இவரது பெயர் சிம்மசொப்பனம் தான். ஏனெனில், இவர் வந்ததும், கிடப்பில் போடப்பட்டிருந்த ஊழல் ஃபைல்கள் தூசு தட்டி வெளியே எடுக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் குடும்பத்துடன் சிறைகளில் நுழைகின்றனர். அதைப் பார்த்து, “வைட் கொலர்” திருடர்களின் வயிற்றில் புளி கரைக்கப்படுகிறது.
இந்த நேரத்தில், “கீரி-பாம்பு கூட்டணி” அதாவது ரணில், ராஜபஷக்களின் அரசியல் தலைமையில் உருவாகியுள்ள புதிய கூட்டு முன்னணி கதிகலங்கிப் போயுள்ளது. அவர்கள் இப்போது ரங்க திசாநாயக்கவுக்கு எதிராகத் தங்கள் கத்திகளை இருட்டில் குந்திக்கொண்டு கூராக்கி வருகின்றனர்.

எனக்கு நீதிபதி ரங்க திசாயநாயக்க மீது மரியாதையும் மதிப்பும் இருக்கிறது.

தீர்ப்பு வழங்குவதில் பாகுபாடு காட்டாமல் நீதி, நோ்மையின் பக்கம் அவா் எப்போதும் நின்றிருக்கிறார். இவர் தீா்ப்பு வழங்கிய வழக்குகளை தேடிப் படிப்பவா்களுக்கு இதன் உண்மைகளை புாிந்து கொள்ள முடியும்.

இலங்கையின் முக்கியமான பல வழக்குகளுக்கு பேசப்படுகின்ற தீர்ப்புகளை வழங்கிய ஒரு நீதியரசராக அவரை நான் அறிந்து வைத்திருந்தேன். ரங்க திசாநாயக்க அவா்கள் தொடர்பாக எனக்கேற்பட்ட ஒரு நீதிமன்ற அனுபவத்தையும் இங்கு எழுதுவது பொருத்தம் என நினைக்கிறேன்.

2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், எங்களோடு இனவாத மோதல் ஒன்றை திட்டமிட்டு ஏற்படுத்திய டேன் பிரியசாத் என்ற இனவாதியுடன் தொடர்புபட்ட வழக்கு அது.

டேன் பிரியசாத் என்ற அந்த இனவாதிக்கு சாதகமாகவும், எங்களுக்கு பாதகமாகவும் வெல்லம்பிட்டிய பொலிஸார் அந்த வழக்கை நன்றாக திட்டமிட்டு வடிவமைத்திருந்தனா்.

நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கெதிராக திட்டமிட்டு இனவாதம் பரப்பப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கொடுமையான காலம் அது.
பாலில் கருத்தடை மருந்து கலந்து சிங்கள மக்களை மலடாக்குவதற்கு சதியொன்றை திட்டமிட்டு செய்வதாக, பொய்யாக ஜோடிக்கப்பட்ட அந்த வழக்கு நீதிபதி ரங்க திசாநாயக்க அவா்களின் முன் கொழும்பு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அது ரணில் - மைத்திரியின் நல்லாட்சி(?) காலம். இனவாதிகளுடன் இணைந்து, அரச காவல்துறை வடிவமைத்த அந்த சதி நிறைந்த துரோகத் தனத்தையும், நீதிமன்றில் நின்றுக் கொண்டிருந்த அந்த திக் திக் நிமிடங்களையும் எங்களால் ஒரு போதும் மறக்கவே முடியாது.
நீதிபதி ரங்க திசாநாயக்க ஒரு நொடியில் சதியை உணர்ந்தார். பொலிஸாரிடம் கேள்விகள் மேல் கேள்விகளைத் தொடுத்தார். பொலிஸாரையும், இனவாதி டேன் பிரியசாதையும் கண்டித்தார்.
வழக்கை முதல் தடவையிலேயே தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்பு, ஒரு இனவாத சதியிலிருந்து எங்களையும், முஸ்லிம் சமூகத்தையும் காப்பாற்றியது.

ராஜபக்ஷக்கள் சட்டத்தின் ஆட்சியை தனது கைகளுக்குள் வைத்துக் கொண்டு சுழற்றிக் கொண்டிருந்த காலத்தில், பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்காவை பலாத்காரமாக பதவி நீக்கம் செய்த போது, நீதிபதிகள் சார்பாக அதற்கு எதிராக குரல்எழுப்பியதன் காரணமாக ராஜபக்ஷா்களின் எதிரியாக கூட அடையாளம் காணப்பட்டவா்தான் இந்த ரங்க திசாநாயக்க.

ஷிராணி பண்டாரநாயக்கவின் கணவருக்கு எதிராக ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவருக்கு எதிராக ஒரு தீா்ப்பையும் இவா் வழங்கியுள்ளார்.

கோத்தாபயவின் ஆட்சிக்காலத்தில், கோத்தாபய ராஜபக்ஷவோடு மிக் விமான ஊழலில் சம்பந்தப்பட்டவராக கருதப்படும் ராஜபக்ஷக்களின் நெருங்கிய உறவினரான உதயங்க வீரதுங்கவின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய ஜனாதிபதியாகிய கோத்தாபயவின் நெருங்கிய உறவினா் என்றும் பார்க்காமல் சிறையில் அடைக்கும் உத்தரவை வழங்கியவா்தான் இந்த ரங்க திசாநாயக்க.

அதே போல, ஹோமாகமை நீதிமன்றில் ஊடகவியலாளா் பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்ட வழக்கை விசாரித்தவரும் இந்த ரங்க திசாநாயக்க தான். அந்த வழக்கு விசாரணையின் போது, இனவாத பௌத்த பிக்குகள் ஹோமாகமை நீதிமன்றில் புகுந்து அதனை கலவர பூமியாக மாற்றினார்கள். அப்போது நீதிபதியாக கடமையாற்றியவரும் இந்த ரங்க திசாநாயக்க தான்.
இந்த சம்பவத்திற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இனி விடயத்திற்கு வருவோம்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தற்போதைய பணிப்பாளர் ரங்க திசாநாயக்க அவர்கள் ஜேவிபி கட்சியில் ஒரு செயற்பாட்டளாராக இருந்ததாகவும், அவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நியமித்திருப்பது சட்டவிரோதமானது என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஜேவிபியின் முன்னாள் அங்கத்தவரும் தற்போது ஐதேக கட்சியின் அங்கத்தவருமான நந்தன குணதிலக்க இத்தகைய கருத்தை வெளியிட்டு ஒரு புரளியை கிளப்பியிருக்கிறார்.

நந்தன குணதிலக்க முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று என்ற தகவலும் இப்போது வெளியே கசிந்தள்ளது.
நண்பன் முஜீபுா் றஹ்மானும் நந்தன குணதிலக்கவின் இந்தக் கருத்தை காவிக்கொண்டு போய் பாராளுமன்றத்தில் கொட்டியதால், பாராளுமன்ற அமர்வும் அன்று சூடு பிடித்தது. நேற்று முஜீபுா் றஹ்மானோடு இது தொடா்பாக விவாதித்தேன்.
ரங்க திசாநாயக்கவை தாக்குவதற்கு களமிறங்கியிருக்கும் “திருட்டு அரசியல் கும்பலால்” முஜீபுா் றஹ்மான் ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறார் என்ற எனது கணிப்பை நேற்று நான் அவரிடமே சொல்லி விட்டேன்.

சஜித்தின் அணியிலுள்ளவர்களுக்கும் ஏனைய எதிா்க்கட்சியினருக்கும் “ஆத்தல்” எடுக்கும் ஒரு நிகழ்வாக இந்த ரங்க திசாநாயக்க விவகாரம் இப்போது மாறியிருக்கிறது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் நகர்வுகளை முடக்குவதன் மூலம் தண்டனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்று தப்புக்கணக்கு போடுபவா்கள் ரங்க திசாநாயக்கவக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள் என்பதை அறிவதற்கு ஏழாம் அறிவு ஒன்றும் அவசியமில்லை.
* இந்தப் பதிவு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக எழுதப்பட்ட பதிவல்ல என்பதை தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்.

அஸீஸ் நிஸாருத்தீன்
28.09.2025
7.00pm

Saturday, 13 September 2025

எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் !


 

🇱🇰 எளியவனுக்கு ஒரு சட்டம், வலியவனுக்கு ஒரு சட்டம் என்ற தாரகமந்திரத்தில் சளைக்காமல் சுழன்றுக் கொண்டிருக்கும் நாடு இலங்கை.

ரணில் கைது செய்யப்பட்டதன் காரணமாக, இந்நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாகவும், அதற்கு எதிராக தாம் வீதிக்கு இறங்கி போராடப் போவதாகவும் எதிர்க்கட்சிகள் ஊளையிடத் தொடங்கியிருக்கின்றன.

ஊழல்களால் மாசுபட்ட மனிதர்களின் ஒரு கோர்வையாகவே, ரணிலுக்காக கொதித்துக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தை மக்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

“ரணில் ஒரு கொலைகாரன், கொள்ளைக்காரன்” என்று தேர்தல் மேடைகளில் அவரை எதிர்த்து பேசிக் கொண்டு, தீப்பொறி கக்கி தமது அரசியல் அடிமைகளின் இரத்தத்தை சூடாக்கிய அரசியல்வாதிகள், இன்று ரணிலை பாதுகாக்க ஒரே அணியில் திரண்டிருப்பது மிகப் பெரிய வேடிக்கையாகவும், வெட்கக்கேடாகமவும் இருக்கிறது.

தோழர் அனுரகுமாரவின் அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் குறித்து அதிருப்திகள், முரண்பாடுகள் இருந்த போதிலும், ஊழல் மோசடிகளால் வயிறு உப்பிய, இந்த நாட்டின் பொதுமக்களின் வரிப்பணத்தை சுரண்டி கொள்ளையடித்த “ஊழல் பெருச்சாளிகள்” தக்க தண்டனை பெறவேண்டும் என்ற கருத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் எனக்கில்லை.

இந்த ஆட்சியில் இவர்களுக்கு தண்டனை கிடைக்காவிட்டால், இனி ஒருபோதும் தண்டனை கிடைக்கவே கிடைக்காது. காரணம், இதுவரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த திருட்டுக் கூட்டணிகள், ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொள்வதில் மிகவும் கவனமாக இருந்து வந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்த போதும் இருட்டில் கைகுலுக்கிக் கொண்டு, ஒருவரை ஒருவர் காப்பாற்றிக் கொண்டு தமது அரசியல் காய்களை நகர்த்தி வந்துள்ளனர்.

இந்த நாட்டை ஆண்ட ஜே.ஆர்., பிரேமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த, ரணில், மைத்திரி, கோத்தா ஆகியோர் அனைவரும் சட்டத்தை துச்சமாக மதித்து, தமது இழிவான அரசியலை அரங்கேற்றியவர்களே. சதி அரசியலில் சதுரங்கம் ஆடியவர்களே. மக்களின் வியர்வையையும் இரத்தத்தையும் உறிஞ்சிக் குடித்தவர்களே. மக்களின் உரிமைகளை மழுங்கடிக்கச் செய்தவர்களே.

கடந்த காலங்களில், இந்த ஆட்சியாளர்கள் சட்டம் என்ற சாட்டையை தமக்கேற்றவாறு சுழற்றி வந்துள்ளனர். நீதித்துறையை அச்சுறுத்தி வந்துள்ளனர். இதன் மூலம் தமது அரசியல் எதிராளிகளை காயப்படுத்தி இன்பம் கண்டுள்ளனர். வலிமையற்றவர்களை, குரலற்றவர்களை சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

“அரகலய” போராட்டத்தின் போது, பொலிஸாரால் வடிவமைக்கப்பட்ட போலிக் குற்றச்சாட்டுகளின் பேரில் எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் “பொதுச் சொத்து சேதப்படுத்தல் சட்டத்தின் கீழ்” கைது செய்யப்பட்டு பிணையின்றி தடுத்து வைக்கப்பட்டார்கள்? அப்போது வாய் மூடி மௌனிகளாக இருந்தவர்கள், இன்று தமது “வர்க்கத் தலைவனுக்குக்” கிடைத்த தீர்ப்பை மட்டும் எதிர்க்க முன்வந்துள்ளனர்.

இன்று ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள், கடந்த காலங்களில் நீதித்துறையை அதிகாரத்தின் மூலம் அச்சுறுத்தியவர்களோடு சேர்ந்து கும்மியடித்த குற்றவாளிகளே என மக்கள் கருதுகின்றனர். இவர்கள் இன்று ரணிலுக்கு ஆதரவாக வீதிக்கு இறங்குவது, எதிர்காலத்தில் தமக்கெதிராக வரவிருக்கும் நீதிமன்றச் செயற்பாடுகளில் இருந்து தப்புவதற்கே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

இன்று ஜனநாயகம் குறித்து குரலெழுப்பும் சந்திரிக்கா அம்மையார், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்குள்ளான சரத் என். சில்வாவை, பிரதம நீதியரசராக நியமித்து நீதித்துறைக்கே தலைமை தாங்கும் உயரிய பொறுப்பை வழங்கினார். அப்போது சந்திரிக்காவின் இந்த நிதித்துறையை மாசுபடுத்திய எதேச்சதிகார செயற்பாட்டை யாரும் எதிர்க்கவுமமில்லை, அதற்கெதிராக மக்களை அணிதிரட்ட முன்வரவுமில்லை.

இன்று பொதுச் சொத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ரணிலை பாதுகாக்க வீதிகளுக்கு வாருங்கள் என்று மக்களுக்கு அழைப்பு விடுக்கும் அரசியல்வாதிகள், அப்போது தமது நவத்துவாரங்களையும் பொத்திக் கொண்டு மௌன விரதம் பூண்டிருந்தனர். சந்திரிக்காவின் அந்த கேவலமான அரசியலை, தனியாக நின்று கடுமையாக எதிர்த்தவர் விக்டர் ஐவன் மட்டுமே.
இலங்கையின் 41வது பிரதம நீதியரசராக இருந்த சரத் என். சில்வா, மஹிந்தவின் “ஹெல்ப்பின் ஹம்பாந்தோட்டை” மோசடி வழக்கில் மஹிந்தவுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததாக பகிரங்கமாகவே அறிவித்தார். “அந்தத் தீர்ப்பை நான் வழங்காவிட்டால் மஹிந்த இன்று சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்” என்று பெருமையாகப் பேசியிருந்தார். வேலியே பயிரை மேய்ந்த கதையிது. நீதித்துறையில் தான் செய்த அதிகாரத் துஷ்பிரயோகத்தை பெருமையாக சொல்வதை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளும் அறிவு சூன்யங்கள் நிறைந்த நாடுதான் இலங்கை.

இலங்கையின் நீதித்துறைக்கே தலைமை தாங்கிய சரத் சில்வா, நீதித்துறையை களங்கப்படுத்திய அந்த செயற்பாடு இந்நாட்டின் எந்த அரசியல்வாதியையும் கொதிக்க வைக்கவில்லை. ஏனெனில், தமது அரசியல் வர்க்கத்தை சேர்ந்த ஒருவருக்கு பாதுகாப்பு கிடைத்ததால் எதிர்க்கட்சிகள் மௌனமாக இருந்தன.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில், தனது காட்டுத்தர்பார் ஆட்சிக்கு இடையூறாக இருந்த பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் காதைப் பிடித்து வெளியே வீசும் அளவிற்கு, இலங்கையின் நீதித்துறை களங்கப்பட்டிருந்தது. இன்று ரணிலின் கைது தீர்ப்பை விமர்சிக்கும் இக்கூட்டம், அப்போது மஹிந்தவின் அந்த இழிச் செயலுக்கு எதிராக உருப்படியாக எதையும் செய்யவில்லை.
இதேவேளை, நீதிமன்றத்தில் தமது நியாயத்தை முன்வைத்து குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவதற்கான உரிமை ரணிலுக்குக் கிடைக்க வேண்டியது அவசியம். அதை யாராலும் மறுக்க முடியாது. 

அவர் மீது பட்டலந்த படுகொலைகள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான குற்றச்சாட்டுகள் இருக்கவே இருக்கின்றன.
எது எப்படியோ, ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டதே. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதன் பின்னணியில், நீதித்துறையை தமது கைகளுக்குள் வைத்து களங்கப்படுத்தியே பழக்கப்பட்ட அராஜக அரசியலின் நிகழ்ச்சி நிரல் நிழலாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
மறுபுறம், ரணிலுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து முன்னெடுக்கும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகள், நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக அமையாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அஸீஸ் நிஸாருத்தீன்
26.08.2025
9.15am

நெல்சன் மண்டேலாவின் பேரன் – பாலஸ்தீன மக்களுக்காக களத்தில்....!


 

🌍✊ நெல்சன் மண்டேலாவின் பேரன் – பாலஸ்தீன மக்களுக்காக களத்தில்....!

“சுதந்திரம் என்பது எனது மக்களுக்கு மட்டுமல்ல, உலகில் அடக்குமுறையில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் அது உரியது” என்று தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக விளங்கிய நெல்சன் மண்டேலா ஒருமுறை கூறியிருந்தார்.

“நிறவெறியிலிருந்து தென்னாபிரிக்கா விடுதலை பெற்று விட்டது. என்றாலும், பாலஸ்தீன் விடுதலை பெறும் தினத்தில் தான் எமது இந்த விடுதலைப் போராட்டம் நிறைவு பெறும்” என்று அவா் சொன்னார்.
நெல்சன் மண்டேலாவின் பாலஸ்தீன் தொடர்பான அந்தச் சிந்தனையை, இன்று அவரது பேரன் மண்ட்லா மண்டேலா தன் செயலால் உயிர்ப்பிக்க களம் இறங்கியிருக்கின்றார்.

பாலஸ்தீனின் காஸா பகுதியில் வாழும் அந்த மண்ணின் மைந்தர்கள் இன்று கடும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனா்.
வேறு நாடுகளில் இருந்து நாடோடிகளாக அடைக்கலம் தேடி வந்து பாலஸ்தீன் என்ற அரபு பூமிக்குள் குடியேறியவா்கள் தான் இந்த ஸியோனிஸ யூதா்கள். பிறகு பலாத்காரமாக அந்த பூமியில் உருவாக்கபட்டதுதான் இஸ்ரேல் என்ற சட்டவிரோத நாடு.

இன்று, இஸ்ரேலின் காட்டமிராண்டித்தனமான முற்றுகையில் சிக்கி பாலஸ்தீன் மக்கள் கடும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேலிய கொலைகார அரசு தடுத்து வருகிறது.
தனது சொந்த உறவுகள் கொடுமைக்குள்ளாகி, பசியிலும் பட்டினியிலும் மரணத்தின் விளிம்பில் தத்தளிக்கும் வேளையில்...

உலக ஆசாபாசங்களில் மூழ்கி ஸியோனிஸ எதிரிகளோடு கைகோர்த்துக் கொண்டு, உணர்வுகள் மறத்துப்போன நிலையில் மத்திய கிழக்கின் மௌட்டீக மன்னர்கா்கள் வாழ்கிறார்கள்.
உலகளாவிய ரீதியில் மதம், மொழி, இனம் என்ற எல்லைகளைக் கடந்து மனித நேயம் கொண்ட மக்கள் அனைவரும் பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுப்பதில் இன்று முன்னணியில் நிற்கின்றார்கள், போராடுகிறார்கள்.

உலகம் முழுவதும் இலட்சக்கணக்கில் மக்கள் வீதிகளில் இறங்கி காஸா மக்களுக்காக போராடும் போது, பாலஸ்தீனத்தை சுற்றியிருக்கின்ற ஸியோனிஸ சார்பு அரபு ஆட்சியாளா்கள் இந்த கொடுமைகளைப் பார்த்து உணர்வுகள் மறத்துப்போன ஜடங்களாக இருக்கின்றனா். இது மிக மிக துா்ப்பாக்கிய நிகழ்வாகும்.
அதுமட்டுமல்லாமல், மறைமுகமாகவும், நேரடியாகவும் இஸ்ரேலிய கொடுமைக்கார நாட்டுக்கு எண்ணெய், எரிவாயு, உணவுப்பொருட்கள் என்பனவற்றை வழங்கி உதவி புரிந்தும் வருகின்றனர்.

அண்மையில், ஜொ்மன் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு 🇮🇱 கொண்டு செல்வதற்காக, நாசகார ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு இத்தாலி துறைமுகத்திற்கு வந்த சவுதி அரேபியாவின்🇸🇦 “பஹ்ரி யன்பு” Bahri Yanbu என்ற கப்பலை இத்தாலிய துறைமுக ஊழியா்கள் ‘துரத்தியடித்த’ செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

காஸாவில் சுமார் 65 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். பாலஸ்தீனில் குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் கடும் பட்டினியில் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இந்த மனித அவலத்தை ஸியோனிஸ சார்பு முஸ்லிம் நாடுகளின் தலைவா்களும், அவா்களின் எஜமானா்களும் நயவஞ்கத் தனத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனா்.

இந்தச் சூழலில் குரலற்ற பாலஸ்தீன் மக்களுக்காக களம் இறங்கியுள்ளார் மண்ட்லா மண்டேலா.
“Global Sumud Flotilla” எனப்படும் இந்த மிகப்பெரிய மனிதநேயப் பேரணியில் அவரும் பங்கேற்றுள்ளார். 44 நாடுகளில் இருந்து புறப்பட்டு வரும் 50 கப்பல்களை கொண்ட இந்தக் கப்பற்படை, காஸா மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் நோக்கத்துடன் பயணமாகியுள்ளது.

இது இஸ்ரேலின் முற்றுகையைத் தகா்த்துக் கொண்டு சென்று, காஸாவில் அல்லல்படும் மக்களுக்கு உணவுப் பொருட்கள், தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் ஒரு போராட்ட நடவடிக்கையாகும்.
பாலஸ்தீன ஆதரவு, இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்வலர்களின் கப்பல் படையில் சேர்வதற்காக டியூனிசியாவிற்கு விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக 51 வயதான மண்ட்லா மண்டேலா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

“நாங்கள் தென்னாப்பிரிக்காவில் அனுபவித்த நிறவெறி கொடுமையை விட, பாலஸ்தீனர்கள் இன்று அனுபவிக்கும்கொடுமை, துயரம் நிறைந்ததாகும்” என்று அவா் உருக்கமாகச் சொல்லி இருக்கிறார்.

நெல்சன் மண்டேலா தனது வாழ்நாளையே இனவெறி எதிர்ப்புக்கு அர்ப்பணித்தவா், அதில் வெற்றி கண்டவா். இன்று அவரது பேரன், அதே பாதையில் நடந்து, இஸ்ரேலிய அடக்குமுறைக்கு எதிராக பாலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார்.

உலக மக்களின் ஆதரவு பாலஸ்தீன் மக்களின் மீது திரும்புவதைக் கண்டு கலங்கிப்போயிருக்கும் இஸ்ரேலும், அதன் ஸியோனிஸ அடிவருடிகளும் பாலஸ்தீன் போராட்டத்திற்கு அதரவளிப்பவா்களை தீவிரவாதத்திற்கு துணை போகின்றவா்களாக முத்திரைக் குத்த காத்துக் கொண்டிருக்கின்றன.

அஸீஸ் நிஸாருத்தீன்
05.09.2025
8.25am

ரங்க திசாநாயக்கவை கண்டு நடுங்கும் எதிர்க்கட்சிகள்

  "பாண் ஒன்றைத் திருடினாலும், 'மிக்' விமானத்திலிருந்து திருடினாலும் இரண்டும் ஒரே திருட்டுதான்." இது வெறும் வார்த்தைகளாக எ...