Saturday, 24 May 2025

உணா்வுகள் மரத்துப் போன முஸ்லிம் உம்மத்..!

 

கேட்டானே ஒரு கேள்வி!

நேற்று வெள்ளிக்கிழமை, கொழும்பு ஐ.நா. சபை அலுவலகத்தின் முன்னால் இது நிகழ்ந்தது.

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஅழிப்புப் போருக்கு எதிராக சிங்கள சகோதரர்களின் 'சேஞ்ச்' அமைப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஜே.வி.பி.யில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த சமத்துவ முன்னிலைக் கட்சியின் ஒரு கிளையாக இயங்கும் இந்த அமைப்பில், சகோதர சிங்கள இனத்தைச் சேர்ந்த பலா் ஆண், பெண் பாகுபாடின்றி உற்சாகமாகக் கலந்துகொண்டிருந்தார்கள்.

ஆர்ப்பாட்டம் முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வேளையில், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எதிராக மிகவும் உணர்வுபூர்வமாக கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞனை அணுகி உரையாடினேன்.

எங்கள் இளைஞர்கள் தொழில், படிப்பு, பொழுதுபோக்கு என்று நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில், இந்த இளைஞன் காஸா மக்கள் மீது கொண்டிருந்த பரிவு என்னை ஆழமாக கவர்ந்தது.

அந்த இளைஞன் அந்த 'சேஞ்ச்' அமைப்பைச் சேர்ந்தவர் என்பதை அவரது உரையாடலில் இருந்து புாிந்து கொண்டேன்.
உண்மையைச் சொல்லவேண்டுமானால், இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே கலந்துகொண்டோம்.

அதுவும் வழக்கமாக இத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்கும் அதே “முஸல்மான்” முகங்கள்தான்.
அந்த இளைஞனிடம் புவியரசியல் பற்றி ஆழமான பாா்வை இருந்தது எனக்கு புாிந்தது.

"மத்திய கிழக்கின் பெட்ரோல் வளங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசியலுக்காகவே அமெரிக்கா அரபு மண்ணில் இஸ்ரேலை உருவாக்கியது."

"அமொிக்கா இன்று வரை அதன் கொடுமைகளை ஆதரித்து வருகிறது. அது இழைக்கும் மனித உாிமை மீறல்களுக்கு முட்டுக் கொடுத்து வருகிறது. அப்படியிருந்தும், அரபு நாடுகள் வெளிப்படையாக அமெரிக்காவை ஆதரித்து வருகின்றன."

"அமொிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள் ஒற்றுமையாகவே மத்திய கிழக்கில் அரசியல் காய்களை நகா்த்தி வருகின்றன."
"இந்த கொடூரமான முக்கோண நட்புஅரசியலை முஸ்லிம்கள் ஏன் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்? "

முஸ்லிம்களின் உணர்வுகள் ஏன் மரத்துப்போய் இருக்கின்றன?
"பலஸ்தீனில் காஸாவில் நடக்கும் கொடுமைகளுக்காக இனமத பேதமின்றி உலகம் முழுவதும் அலையலையாக மக்கள் வீதிகளுக்கு இறங்கி போராடுவதை பார்த்தும் முஸ்லிம்கள் ஏன் அமைதியாக இருக்கிறாா்கள்.? " என்று கேட்டான்.

அந்த இளைஞனின் நேர்மையான கேள்வி என்னை சிலிா்க்க வைத்தது. ஒரு சிங்கள இளைஞன் காட்டும் அக்கறையும் அரசியல் விழிப்புணர்வும், நம் சமுதாயத்தின் அமைதியான மௌனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது.

அவனது கேள்வி இன்னும் என் காதுகளில் அலைகளாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நாம் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம்?
நமது பொறுப்பு என்ன?

நமது உணா்வுகள் மரத்துப் போவதற்கு காரணம் என்ன?




இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

  குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது. ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில்,...