Wednesday 28 May 2014

யார் இந்த நஜ்மா ஹெப்துல்லாஹ்..?


மோடியின் அசை்சரவையில் ஒரு சிறுபான்மை நலத்துறை அமைச்சரா?

ஆச்சரியமாக இருக்கிறதா? மோடியின் ஆட்சியில் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் கேள்விக்குறியாக மாறும் என்று அச்சத்தில் இருக்கும் போது சிறுபான்மை நலத்துறைக்கு அமைச்சரொருவரை மோடி அரசு நியமித்திருக்கிறது.

அந்த அமைச்சர்தான் நஜ்மா ஹெப்துல்லாஹ்!

மோடி அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் நஜ்மா ஹெப்துல்லா இந்தியாவின் புகழ்பெற்ற ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் பேரப்பிள்ளையாகும்.

இவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சராக இருந்த மௌலானா அபுல் கலாம் ஆஸாத்தின் பேத்தியாகும்.

தனது பாட்டன் வழி காங்கிரஸில் 2004 ம் ஆண்டு வரை பல முக்கிய பதவிகளை வகித்த நஜ்மா கட்சியின் தலைமைப்பீடத்தோடு ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் கட்சியிலிருந்து வெளியேறி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியில் 1986ம் ஆண்டு பொதுச் செயலாளராக கடமையாற்றியுள்ளார். ராஜ்ய சபை அங்கத்தவராக 1980, 1986, 1992, 1998 நான்கு முறை தெரிவாகியுள்ளார்.

தற்போது பாரதீய ஜனதா கட்சியின் உப தலைவராகவும் செயற்பட்டு வருகின்றார்.  தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பா.ஜ.க வினர் கூறி வந்தனர்.  மோடிக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என்று கூட பா.ஜ.க வின் ஒரு மாநிலத் தலைவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் நஜ்மாவின் கருத்துக்கள் கூட முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையப்போவதில்லை என்பதை உணரக் கூடியதாக இருக்கிறது.

நஜ்மா இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு சேவை எதையும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீங்கு செய்யாமல் இருந்தாலே போதும்.

Sunday 18 May 2014

இராணுவ பங்கருக்குள் இசைப்பிரியா! புகைப்படம் ?

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா , இராணுவ பங்கருக்குள் உயிருடன் இருக்கும் புகைப்பட ஆதாரம் வெளியாகியுள்ளதாக  தமிழ்வின் மற்றும் கொழும்பு டெலிகிராப் இணையதளங்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மிக முக்கியமான ஊடகப் போராளியாக இருந்தவர் இசைப்பிரியா. இவர் தொலைக்காட்சி, சினிமா மற்றும கலைத்துறை பங்களிப்புகள் நிறைய செய்தவர்.
இந்நிலையில் இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். இராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அவர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்ததாகவும் தமிழ்வின்  செய்தி வெளியிட்டிருக்கிறது.

எனினும் ஏற்கனவே வெளிவந்த படங்களை இலங்கை இராணுவம்  மறுத்திருந்தது. போலியான ஆவணங்களைக் கொண்டு இராணுவத்தரப்பை அபகீர்த்திக்குள்ளாக்கும் நடவடிக்கை என்று அதனை வன்மையாகக் கண்டிருத்திருந்தது.
இந்நிலையில் மேற்குறித்த இரண்டு ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் இசைப்பிரியா இராணுவ முகாமுக்குள் உயிருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்கம் யுத்தவெற்றியின் ஐந்தாம் ஆண்டை விமர்சையாக கொண்டாடும் நாளில் இப்புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் தேடு பொறியில் இந்தப்படத்தை தேடிப்பார்த்தேன். எனது கைக்கு அது கிட்டவில்லை.  மாறாக எனக்கு கிடைத்தது இருவரும் இறந்து கிடக்கும் இந்தப்படம்தான்.

அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Friday 16 May 2014

(ஷர்மிளா!....) இந்திய மனசாட்சிக்கு ஒரு கேள்வி


ஒரு குரலை இந்தியாவின் ஜனநாயகம் தவிர்க்கவே முடியாது. அந்தக் குரலின்றி இந்தியாவின் வண்ணங்கள் தொடரும் முழுமை பெறாது... ஐரோம் ஷர்மிளா. நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராளி அவர்; நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராட்டம் அவருடையது.

மணிப்பூர் சிக்கல்கள்
ஒரு மாநிலம் எவ்வளவு அழகாக இருக்க முடியும்; எவ்வளவு போதாமைகளோடு இருக்க முடியும்; எவ்வளவு சிக்கல்களோடு இருக்க முடியும்… அவ்வளவுக்கும் உதாரணமாக இந்தியாவில் இரு மாநிலங்களைக் குறிப்பிடலாம். ஒன்று காஷ்மீர். இன்னொன்று மணிப்பூர். மணிப்பூரிகளில் மூன்றில் ஒருவர் ஏதேனும் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். மீத்தேய் என்று ஓரினம். அதில் மட்டும் ஐந்து பிரிவுகள். மீத்தேய் சனமாஹி, மீத்தேய் இந்துக்கள், மீத்தேய் பிராமணர்கள், மீத்தேய் கிறிஸ்தவர்கள், மீத்தேய் முஸ்லிம்கள். இப்படி ஒவ்வொரு இனத்திலும் பல்வேறு பிரிவுகள், குழுக்கள். அவர்களுக்குள் எண்ணற்ற பிணக்குகள், சிக்கல்கள்.

இந்திய ஒன்றியத்துடன் 1949-ல் மணிப்பூர் இணைக்கப்பட்ட போது அது பெரும்பான்மை மணிப்பூரிகளின் சம்மதத்துடன் நடக்கவில்லை. அப்போது தொடங்கிய சுதந்திர மணிப்பூர் கோஷங்கள் பத்தாண்டுகளில் கலகங்களாக உருமாறின. 1958-ல் இங்கு ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்திய அரசு அமலாக்கியது. ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, மணிப்பூர் மக்கள் விடுதலைப் படை என்று வரிசையாகத் தொடங்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் வன்செயல்களில் இறங்கியபோது, இங்கு குவிக்கப்படும் ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை அரசு அதிகரித்தது.

இரு தரப்பிலும் மாறி மாறி நடத்தப்பட்ட வன்முறைகளின் விளைவு இன்று மணிப்பூரில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் தொடங்கி மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் வரை ஆயுதப் படையினர் நிற்கிறார்கள். குண்டுவெடிப்புகள், துப்பாக்கிச்சூடுகள், மர்மச் சாவுகள், போராட்டங்கள், ஊரடங்கு உத்தரவுகள், ரோந்துகள், பரிசோதனைகள் இவை எல்லாம் மணிப்பூர் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கங்கள் என்கிறார்கள் மணிப்பூரிகள்.

மலோம் படுகொலை
ராணுவத்தினர் மீதான ஒரு வெடிகுண்டுத் தாக்குதலுக்குப் பழி தீர்க்கும் வகையில், தலைநகர் இம்பால் அருகேயுள்ள மலோமில் 2000 நவ. 1 அன்று இந்திய ராணுவத்தின் அசாம் துப்பாக்கிப் படைப் பிரிவினரால் நடத்தப்பட்ட படுகொலையே ஷர்மிளாவின் போராட்டத்துக்கு அடிகோலியது. பொதுமக்கள் மீதான அந்தத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்; 34 பேர் படுகாயமுற்றனர். இறந்தவர்களில் இருவருடைய மரணம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஒருவர் லிஷன்பம் கிபிடோபி - 62 வயது மூதாட்டி; மற்றொருவர் சினம் சந்திரமணி - 1988-ல் சிறார்களுக்கான இந்திய அரசின் வீரதீரச் செயல்களுக்கான விருதை வென்றவர். நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம் என்பது எவ்வளவு பெரிய அநீதி? இந்த அநீதியை எப்படி ஓர் அரசு சட்டத்தின் பெயரால் நீதியாக்க முடியும்? மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி போராட்டங்கள் தொடங்கின. ராணுவமோ ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி மக்களின் போராட்டங்களை ஒடுக்கியதோடு, மக்களின் கோரிக்கையையும் நிராகரித்தது.

இந்தச் சம்பவம்தான் கனவுகள் நிரம்பிய 28 வயது இளம் கவிஞரான ஷர்மிளாவை மக்களை ஒடுக்கும் அடக்குமுறைக்கு எதிரான எல்லையற்ற போராட்டத்தை முன்னெடுக்கும் போராளியாக உருமாற்றியது. மலோம் படுகொலை நடந்த மறுநாள் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் ஷர்மிளா. இந்த 14 ஆண்டு போராட்டக் காலத்தில் ஒரு துளி தண்ணீரைக்கூட அவர் அருந்தவில்லை. அரசின் அத்தனை சதிகளையும் மீறி தன்னுடைய சத்யாகிரகப் போராட்டத்தை அவர் தொடர்கிறார். உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்ட சூழலிலும், அரசாலோ ராணுவத்தாலோ அவரைப் பணியவைக்க முடியவில்லை. அவர் மீது தற்கொலை குற்றச்சாட்டைச் சுமத்தி அவரைக் கைதுசெய்தது காவல் துறை.

அவர் இறந்தால் மணிப்பூர் கொந்தளித்துப்போகும் என்று பயந்து மூக்கு வழியே வலுக்கட்டாயமாக திரவ உணவைச் செலுத்தியது. இந்த 14 ஆண்டுகளாக ஒவ்வோர் ஆண்டும் அவர் மீது தற்கொலை வழக்கு மீண்டும் மீண்டும் பதிவுசெய்யப்படுகிறது. திரவ உணவு வலுக்கட்டாயமாக மூக்கின் வழியே செலுத்தப்படுகிறது. இந்திய மக்களுக்கு எதிரான - ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிரான தன் போராட்டத்தை உறுதியாகத் தொடர்கிறார் ஷர்மிளா.

மருத்துவச் சிறைச்சாலை
இம்பாலின் கிழக்குப் பகுதியில், அவர் வீட்டுக்குக் கொஞ்சம் தூரத்திலேயே இருக்கும் ஜவாஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் மைய மருத்துவமனையில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்ற விசாரணைக்கு அழைத்துவரப்படும்போதுதான் அவரைப் பார்க்க முடிகிறது. போராட்டத்தைப் பலவீனப்படுத்தக்கூடும் என்று தனது தாயைக்கூட அவர் பெரும்பாலும் சந்திப்பதில்லை. அவருடைய தாய் ஷாகி சொல்கிறார்: “ஷர்மிளாவைக் கடுமையான வலியும் மன வேதனையும் சூழ்ந்திருக்கின்றன. அவள் என்னைச் சந்தித்தால் அழக்கூடும். அது அவளைப் பலவீனப்படுத்தக்கூடும். வேண்டாம். வன்முறைக்கு எதிரான அவளுடைய இந்தப் போராட்டம் மிக முக்கியமானது. அதுவெற்றி அடைய வேண்டும்.”

ஐரோம் பிரிவினைவாதத்தை நியாயப்படுத்துபவரல்லர். “நாம் போராடும் இந்த எல்லைகள் எல்லாம் செயற்கையானவை. மாறக் கூடியவை; நீடிக்க முடியாதவை. பூமி மட்டுமே நீடிக்கக் கூடியது. பிரிவினைவாதிகள் மக்களைச் சலிப்படையவைத்துவிடுகிறார்கள்” என்பவர் அவர். அவர் வன்முறையை ஆதரிப்பவரும் அல்லர். “நம்மால் எதையும் உருவாக்க முடியாதபோது, நாம் எதையும் அழிக்கக் கூடாது” என்பவர் அவர். ஆனால், பிரிவினைவாதத்துக்கும் வன்முறைக்கும் எதிராகப் பேசும் இந்திய அரசோ அவரை முடக்கி வன்முறையைப் பிரயோகிக்கிறது. ஏன்?
ஏனென்றால், வன்முறையற்ற உலகுக்கும் உண்மையான ஜனநாயகத்துக்குமான முகம் அவர். 

ஒடுக்கப்பட்ட இந்தியர்களின் குரல் அவர். இந்தியர்களுக்குத் தெரியாத இன்னொரு இந்தியாவை இந்தியர்களுக்கும் இந்திய அரசின் குரூரமான இன்னொரு முகத்தை உலகுக்கும் அவருடைய போராட்டம் அம்பலப்படுத்துகிறது. காந்தி தன் உடலையே ஆயுதமாக்கினார்; தன் வாழ்க்கை ஒரு முடிவில்லாத பரிசோதனை என்றார். ஐரோம் ஷர்மிளாவுக்கும் இது பொருந்தும்.
தன்னுடைய 14 ஆண்டுகள் போராட்டம்பற்றி ஐரோம் ஷர்மிளா என்ன நினைக்கிறார்? “நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் கழித்தார். அதில் பாதியைத்தான் நான் கடந்திருக்கிறேன்.”
இந்த 14 ஆண்டுகளில் அவர் எதைச் சாதித்திருக்கிறார்? “எங்கள் போராட்டம் குறைந்தது இந்த நாட்டு மக்களுக்குத் தெரியவாவது ஆரம்பித்திருக்கிறது. ராணுவத்தினர் மனம் கொஞ்சமேனும் இளக ஆரம்பித்திருக்கிறது.”

இந்தியாவின் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? “இந்நாட்டின் ஜனநாயகத்தின் மீது எனக்கு இருந்த அவ நம்பிக்கையால் இதுவரை வாக்களிக்க விரும்பியது இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடுகள் உருவாக்கிய நம்பிக்கை இந்த முறை என்னை வாக்களிக்கத் தூண்டியது. ஆனால், சிறை விதிகளைக் காரணம் காட்டி என்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.”

ஷர்மிளாவின் கைகளில் கத்தை கத்தையாகக் கடிதங்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவர், பிரதமரில் தொடங்கி எல்லாத் தலைவர்களுக்கும் அனுப்பிய கடிதங்கள். “காங்கிரஸிலிருந்து ஷர்மிளாவுக்கு அழைப்பு வந்தது. முதல்வர் இபோபியே நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை தெரிவித்தார். ஆனால், ஷர்மிளா புறக்கணித்துவிட்டார். ஆம் ஆத்மி கட்சியிடமிருந்தும் அழைப்பு வந்தது. அவர்கள் மீது நல்லெண்ணம் இருந்தாலும் அவருக்கு அரசியலில் நாட்டம் இல்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ராகுல் காந்தி மணிப்பூர் பிரச்சினைபற்றிப் பேசும்போது, ‘காந்திய வழியையே நான் நம்புகிறேன். அன்பு, சமாதானம், உரையாடல்களின் வழியே எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியும் என்று நான் நம்புகிறேன்' என்று பேசினார். ஷர்மிளாவின் சாத்வீக உரையாடலைவிடவும் நீண்ட உரையாடல் எதுவாக இருக்க முடியும்?” என்கிறார்கள் மணிப்பூரிகள்.

ஜனநாயகத்தின் கரும்புள்ளி
ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் என்பது ஒருபுறம் உலகப் போராலும் மறுபுறம் சுதந்திரப் போராட்டத்தாலும் நிலைகுலைந்த ஆங்கிலேய அரசு, இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்கொள்ள 1942-ல் கொண்டுவந்த கருப்புச் சட்டத்தின் நீட்சி. தேசத்தின் எந்தவொரு பகுதியில் இந்தச் சட்டம் அமலாக்கப்படுகிறதோ, அந்தப் பகுதி கலவரப் பகுதியாகக் கருதப்பட்டு, அந்தப் பகுதியின் எந்தவோர் இடத்திலும் அனுமதியின்றி நுழையவும் சோதனையிடவும் எங்கு வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தவும் எவரை வேண்டுமானாலும் பிடியாணையின்றிக் கைதுசெய்யவும் தேவைப்பட்டால் சுட்டுக் கொல்லவும் ஆயுதப் படைகளுக்கு இந்தச் சட்டம் அனுமதி அளிக்கிறது.

இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு கருப்புச் சட்டம் இருப்பது நம்முடைய அரசுக்கும் மக்களுக்கும் மிகப் பெரிய இழுக்கு. சம காலத்தில் ஜனநாயகத்தைப் பேணும் எந்தவொரு நாட்டிலும் இப்படியொரு சட்டம் இல்லை. இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாநிலத்திலும் இன்றைக்கு ராணுவத்தால் கொல்லப்பட்ட ஆயிரக் கணக்கானோரின் பட்டியலோடு இச்சட்டத்தை எதிர்த்துப் போராடிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.

மணிப்பூரில் 2004-ல் தங்கஜம் மனோரமா என்ற இளம்பெண் ராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டபோது வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து, இந்திய அரசு இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதுகுறித்து பரிசீலிக்க அமைத்த நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான ஆணைய அறிக்கையும் பின்னாளில் வர்மா ஆணையம் அளித்த பரிந்துரையும் இந்தச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரச் சொல்கின்றன. அரசோ ராணுவத்தின் நிர்ப்பந்தத்துக்கு அஞ்சி இன்னமும் இந்தக் கருப்புச் சட்டம் அப்படியே தொடர அனுமதித்துவருகிறது.

ஆனால், ஷர்மிளா அசரக் கூடியவர் இல்லை. ஏனெனில், அவருடைய முன்னோடியான காந்தியை வழிநடத்திய அதே ஆன்மபலம்தான் ஷர்மிளாவையும் வழிநடத்துகிறது. ஷர்மிளாவின் பார்வையில், “ஒரு பெரிய போராட்டத்துக்கான தேவை தீவிரம், உறுதி, சுயநலமற்ற நீடிப்புத்தன்மை, நேர்மையான தொலைநோக்கு. இவை இருந்தால் நிச்சயம் அந்தப் போராட்டம் தன் இலக்கை அடையும்.” இவை எல்லாமும் அவரிடம் நிறையவே இருக்கின்றன. அவர் போராட்டத்தைத் தொடர்கிறார்.

இன்றைக்கு காஷ்மீரில் தொடங்கி இந்தியாவின் எந்தவொரு பகுதியில் நடக்கும் மக்கள் போராட்டத்தையும் அடக்குமுறையால் எதிர்கொள்ளும் அரசு, போராட்டத்தை வன்முறை என்றும் போராடுபவர்களை வன்முறையாளர்கள் என்றும் சொல்ல நமக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. நாமும் அப்படியே சொல்லப் பழகியிருக்கிறோம். சரி, ஷர்மிளாவையும் அவரைப் போன்றவர்களையும் அவர்களுடைய போராட்டங்களையும் நாம் என்ன பெயரிட்டு அழைக்கப்போகிறோம்?
-சமஸ், 
நன்றி - தி இந்து

Monday 31 March 2014

துருக்கி தேர்தல்: பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி


துருக்கி நாட்டில் இன்று நடந்த தேர்தலில் பிரதமர் தயிப் எர்டோகனின் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி வெற்றி பெற்றுள்ளது.
60 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி 47 சதவீத வாக்குகள் பெற்றுள்ளது, முக்கிய எதிர்கட்சி 27 சதவீத வாக்குகள் மற்றுமே பெற்றுள்ளதாக பி.பி.சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து பிரதமர் தயிப் எர்டோகன் தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அண்மையில் சமூக வலைதளங்களுடாக எர்டோகனுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக துருக்கிய  அரசு குற்றம் சாட்டியிருந்தது. அவற்றிலிருந்து மீளும் வகையில் அவரது தற்போதைய வெற்றி அமைந்திருப்பதாக  அறிய வருகிறது..

Friday 28 March 2014

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கை!


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதன் பிள்ளை, இலங்கை தொடர்பான தன்னுடைய அறிக்கையினை நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தில் சமர்பித்தார். அவருயைடய அறிக்கையின் உள்ளடக்கம் பின்வருமாறு;

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஆகிய நான் இலங்கையின் மனித உரிமைகள் மற்aறும் நல்லினக்க செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையினை (A/HRC/25/23) இச்சபையில் சமர்பிக்கின்றேன்.

இவ்வறிக்கையானது இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உள்நாட்டினுள் நடைமுறைப்படுத்துவதற்காக அதாவது 2013ம் ஆண்டு ஆணைக்குழு கூட்டத்தொடரின் பின்னரான காலம் முதல் ஆவணி 2013 என்னுடைய இலங்கையிற்கான விஐயம் வரையிலான காலப்பகுதியில் முன்னெடுத்த செயற்பாடுகள் தொடர்பில் ஆய்வு செய்கின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 24ம் கூட்டத்தொடரின் பொழுது இலங்கையில் மீள்கட்டமைப்பு வசதிகள், உள்ளக அளவில் இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியமர்தல், வடமாகாண சபைக்காக தேர்தல்களை நடாத்துதல், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துதல் அதாவது மும்மொழிக் கொள்கையினை அமுல்படுத்துதல் என்பன தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

ஆணைக்குழு 22/1 தீர்மானத்தின் அடிப்படையில் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் என்பன கடந்த காலத்தில் இடம்பெற்ற சர்வதேச மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் சுதந்திரமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்ற போதிலும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் சிறு அளவிலேனும் முன்னேற்றங்கள் ஏற்படவில்லை என்பதனை நாம் இங்கே வருத்தத்துடன் அறிவிக்கின்றோம்.

மனித உரிமைகள் தலைமையகத்தினால் இலங்கையிற்கு தொடர்ச்சியாக வழங்கப்பட்ட தொழில்நுட்ப உதவிகள் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் சரியான முறையில் பதிலுரைக்க தவறிவிட்டது. இவ்வாறான உதவிகள் நாட்டினுள் நல்லிணக்க செயற்பாடுகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்க உதவும்.

மேலும் உள்ளக ரீதியில் இடம்பெயர்ந்தோரிற்கான கல்வி மற்றும் குடியேற்றம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட திட்டத்திணை அமுல்படுத்துவதை வரவேற்கின்றோம். இவ்வாறான நடவடிக்கைகளிற்காக ஏனையோரும் ஊக்கமளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கையில் தொடர்ச்சியாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகள் தொடர்பில் மனம் வருந்துகின்றோம்.

இக்கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியிலும் அரசசார்பற்ற நிறுவனமொன்றில் சேவையாற்றும் இரு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்களுடைய விடுதலையை வரவேற்கின்றோம். செயற்பாட்டாளர்கள் மீதான தொடர்ச்சியான கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்துகின்றோம்.

யுத்தம் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கழிந்துவிட்டன. யுத்த காலப்பகுதியில் அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அதன் கடமையாகும்.

இவ் வன்முறைகளின் பொழுது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காயமுற்றனர், இறந்தனர் மற்றும் காணமற்போயினர். இவ் வன்முறைகளிலிருந்து உயிர்பிழைத்தோர் மற்றும் பாதிப்புற்றோரிற்கு நாட்டிலுள்ள நல்லிணக்க செயற்பாடுகள் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்றது.

அதேவேளை புதிய சாட்சிகள் சர்வதேச பொறிமுறையின் முன்னர் தங்களிற்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தொடர்பில் எடுத்துரைக்க முன்வருகின்றனர். இதன் மூலமாக தங்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமென நம்பிக்கை கொள்கின்றார்கள்.

இச்செயற்பாடு சர்வதேச விசாரணையினை மாத்திரம் கூறவில்லை மாறாக புதிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான வழிமுறையாகவும், ஜனநாயக செயன்முறை தோல்வியடைந்த ஓர் இடத்திலிருந்து பல உண்மைகளை வெளிக்கொணரவும் வழிகோலும்.

ஜனநாயக செயற்பாட்டினை தொடர்ச்சியாக அவதானிப்பதற்காகவும், சர்வதேச மனித உரிமைகள் மீறல்களை தடுப்பதற்காகவும் சுதந்திரமான சர்வதேச விசாரணையினை இலங்கை மீது மேற்கொள்ள வேண்டுமென இவ்வாணைக்குழுவை கேட்டுக்கொள்கின்றோம்.

இப்பொறிமுறை புதைந்து போயுள்ள மேலதிக உண்மைகளை வெளிக்கொணரவும், நீதியை நிலைநாட்டுவதற்கு இலங்கையர்களுக்கு மேலுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக நீங்கள் இறுதி தீர்மானத்திற்கு வருவதற்கு முன்னர் உங்கள் அவதானத்தை அண்மையில் மனித உரிமைகள் தொடர்பில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றம் அதாவது சிறுபான்மையினரின் மத தலங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்குள்ள தடங்கல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என ஆணையாளர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்தார்.

Thursday 27 March 2014

மனித உடல் உறுப்புகளின் சந்தை!

மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, ஏழை நாடுகளின் மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது The Red Market.



நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market”  புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி.  அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market”  ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு. உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது “”The Red Market”  .
மாற்று உறுப்புகளை யார் விற்பார்கள்? ஏழைகள் தான். ’அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர் தன் பழுதடைந்த உறுப்புக்கு மாற்று வேண்டும் என்று விளம்பரம் செய்தால் அமெரிக்காவில் இருக்கும் ஒரு ஏழையிடம் இருந்தா அது கிடைத்து விடப் போகிறது? மிக எளிதாகவும், சட்டப்படியும் தெரியும் இந்த வியாபாரத்தின் “சிவப்புப் பக்கங்களை (இது உடல் உறுப்பு சார்ந்த ரத்தமும், தசையுமான கதை என்பதால் சிவப்புச் சந்தை என்று புத்தகத்திற்கு பெயரிடப்பட்டிருக்கிறது) தோலுரித்துக் காட்டுகிறார் அமெரிக்கப் பத்திரிகையாளாரான ஸ்கார்ட் கார்னி.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள். ஏன்?
’தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்’ என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி,  பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது.
ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே  பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த  நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகல கருப்புப் பக்கங்களையும் போட்டு உடைக்கிறார்.
பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம். எப்படி? கொஞ்சம் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டு மேலே தொடருங்கள்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றன. இந்தியாவில் எலும்பு மாதிரிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் அதை எப்படிச் செய்கின்றது?
முதலில் கம்பெனியில் இருக்கும் 4 தொழிலாளிகள் நோட்டம் விட்டு தங்கள் ஊரைச் சுற்றியுள்ள சுடுகாடுகளில் பிணங்கள் வருகிறதா எனத் தெரிந்து கொள்வார்கள். புதைக்கப்பட்ட பிணம் என்றால் அப்படியே அலேக், எரிக்கப்படும் பிணம் என்றால் சொந்தக்காரர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்ற பின், வெட்டியானிடம் பேசி வைத்துப் பாதி எரியும் போதே தூக்கி விடுவார்கள்.
தூக்கிய பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள். ஆன்மாவுக்கு சொர்க்கமோ நரகமோ, அடுத்த பிறவியோ, என்ன கருமமோ, யாருக்குத் தெரியும்? உயிர் கடவுளுக்கு, உடல் அமெரிக்கப் பல்கலைக்கழகத்திற்கு.
மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கும், புர்பஸ்தலி  எனும் ஊரில் உள்ள  “யங் ப்ரதர்ஸ் (Young Brothers)” என்ற  ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தும் முக்தி பிஸ்வாஸுக்கு குடும்பத் தொழில் இது தான். அந்த யங் ப்ரதர்ஸ் நிறுவனம் என்பது ஒரு எலும்புத் தொழிற்சாலை. 150 ஆண்டு காலப் பாரம்பரியம் உடையது. கொள்ளுத் தாத்தாவுக்குத் தாத்தா காலத்தில் இருந்து இப்பொழுது முக்தி பிஸ்வாஸின் மகன் வரை செய்யும் ஒரே குடும்பத் தொழில். நல்ல இலாபம். அவர்களின் கம்பெனியில் இருப்பு வைக்கப்பட்டுள்ள எலும்புகளின்  மதிப்பு மாத்திரம் 70,000 அமெரிக்க டாலர்கள்.
ஏன் அமெரிக்காவில் கிடைக்காத எலும்புகளா அல்லது அங்கு சாகாத மக்களா? என்று ஒரு கேள்வி எழும். நல்ல கேள்வி! முன்னர் அமெரிக்கா, இங்கிலாந்து முழுவதும் கூட பிணத்திருடிகள் (Grave Robbers) உண்டு.  அவர்கள் பிணத்தைத் திருடிப் போனபிறகு அதனை மீட்க பிணைப்பணம் கேட்பார்கள். இது போல் சார்லி சாப்ளினின் பிணத்தையும் திருடி, அதனை  மீட்ட கதையெல்லாம் கூட உண்டு. பின்பு அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அங்கு உடல் உறுப்பு சம்பந்தப்பட்ட வியாபாரம் என்றால் ’சட்டம் தன் கடமையைச் செய்யும்’!
அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு  இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக்  கண்டுகொள்வதில்லை.  ஒரு பக்கம், ’ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் செய்யும் தொண்டு’ என்று சால்ஜாப்பு. இன்னொரு பக்கம், பணத்தின் மூலம்  சட்டத்தை வளைத்து விடுவது. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
மூன்றாம் உலக நாடுகள், குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் இந்த உடல் உறுப்புச் சந்தையான சிவப்புச் சந்தை (Red Market) பல பில்லியன் டாலர்கள் புழங்குகின்ற ஒரு துறை. சட்டப்படி இதைச் செய்தால் அதிக செலவு பிடிக்கும். அப்படியே சட்டத்துக்குப் புறம்பாகச் செய்தால் நல்ல கமிஷன் கிடைக்கும். கிட்னி  சந்தையைப் பார்ப்போம், அப்பொழுது புரியும்.
சென்னை மணலிக்கு அருகில் இருக்கும், சுனாமியில் அடிபட்ட ஒரு  குப்பத்தின் பெயர் கிட்னிவாக்கம். அங்கு கிட்னி விற்காதவர்கள் பிறந்த குழந்தைகள் மாத்திரம் தான்.
சுனாமி நகரில் வாழும் மக்கள் கடற்கரையோரம் வாழ்ந்து, சுனாமியால் வாழ்க்கையை இழந்து, அரசால் மறு-குடியமர்த்தப்பட்டவர்கள். இவர்களைப் பார்த்து புகைப்படம்  எடுத்துக்கொண்டு,  நலம் விசாரிக்க ஜப்பானின் ஜாக்கிசான் முதல் அமெரிக்காவின் மைக்கல் ஜாக்ஸன் வரை வருவார்கள், நடுநடுவே கிளின்டன், நம்ம ஊர் விஜயகாந்த் கூட வருவார்.  இத்தகைய மேன்மக்களுக்குக் காட்சிப் பொருளாக இருக்கும் இம்மக்களது வாழ்க்கை நிலைமை மிகவும் மோசம்.
கலா எனும் பெண்மணியின் கணவர் சுனாமியில் இறந்து விட்டார். அவர்களுடைய தொழிலும் போயிற்று. வரதட்சணை கொடுக்க முடியவில்வில்லை என்பதால் மகள் வாழாவெட்டியாகத் திரும்ப வந்து விட்டாள். அருகில் இருந்த சில கிட்னி ஏஜெண்டுகள் மூலம் தன் கிட்னியை விற்க கலா ஒப்புக்கொண்டார். 50 ஆயிரம் வரும்; பெண்ணுக்கு வரதட்சணை 30,000 போக, மீந்த பணத்தில் இட்லிக் கடை வைத்து சம்பாதித்து விடலாம் என்பது அவரது யோசனை. இப்பொழுது செய்யும் சித்தாள் வேலையை விட்டுவிடலாம். மதுரையில் ஆபரேஷன், முடிந்தவுடன் காசு.
மதுரைக்குச் சென்றார் கலா, ஆபரேஷனில் ஏதோ சிறு தவறு. காயம் ஆற ஒரு மாதம் ஆகும் எனச் சொல்லிவிட்டார்கள், சரி பணம்? ஏஜெண்ட் கமிஷன் போக 40 ஆயிரம் ரூபாய் கைக்கு வந்தது. கிட்னி எடுக்கும் ஆபரேஷன் வரை தான் மருத்துவச் செலவு அவர்களுடையது, அதன் பின் கலா தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கலா அந்தத் தனியார் மருத்துவமனைக்குக் கட்டணம் கட்ட முடியாமல் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார். உடலைக் காப்பாற்ற 15 ஆயிரம் செலவானது. 25,000 வரதட்சணைக்குக் கொடுத்து விட்டார். ஆபரேஷனுக்குப் பின், முன் போல சித்தாள் வேலையும் பார்க்க முடியவில்லை. சரி காவல்துறையிடம் புகார் கொடுக்கலாம் என்று போனார். ஏட்டு  சட்டத்தை எளிமையாக அவரிடம் எடுத்துச் சொல்லிவிட்டார். “இந்திய சட்டப்படி உங்கள் உடல் உறுப்பைத் தானம் தான் கொடுக்க வேண்டும், விற்பனை செய்தால் விற்றவர் கடுமையான தண்டனை பெற வேண்டும்”.
ஏழையால் வேலை செய்து வாழ முடியாத சமுக அவலம், அந்த சமுக அவலத்தைப் பணமாக்கிக் கொள்ளும் இன்னொரு அவலம். இந்த சமூக அவலத்தில் இந்தியாவில் கிட்னி திருட்டும் வியாபாரமும் தழைத்தோங்குகிறது. GDP சேர்த்தால் பல புள்ளிகள் அள்ளலாம். விவசாயிகள் முதல், நெசவாளிகள், மீனவர்கள், மலை வாழ் மக்கள் என பல இலட்சம் பேர் கிட்னி விற்பனை செய்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்குப் ’பங்காற்றுகின்றனர்’.
-courtesy: vinavu.com

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...