Tuesday 4 March 2014

ஆப்கான் போர், அமெரிக்கா,மேற்கத்திய நாடுகளின் நலனை பாதுகாக்க:கர்ஸாய் குற்றச்சாட்டு!


ஆப்கான் போர், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நலனை பாதுகாக்கவாகும் என்று அந்நாட்டின் அதிபர் ஹமீத் கர்ஸாய் குற்றம் சாட்டியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்டிற்கு அளித்த பேட்டியில் கர்ஸாய் கூறியிருப்பது:ஆப்கானை பாதுகாக்கவோ, அங்குள்ள மக்களின் நன்மைக்காகவோ ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்படவில்லை.

மேற்கத்திய நாடுகளின் நலன்களை பாதுகாக்கவும், அமெரிக்காவுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவுமே ஆக்கிரமிப்புப் போர் நடத்தப்பட்டது.நான் ஏமாற்றப்படுகிறேனோ என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.

ஆக்கிரமிப்பு நாட்டிற்கு ஏற்படுத்திய நட்டங்கள் என்னை தனிப்பட்ட ரீதியாக பெருமளவு அலைக்கழித்தது.ஆப்கானில் தாலிபான் மையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவ்தை விட பாகிஸ்தானில் உள்ள கிராமங்களையே இலக்காக கொள்ள அமெரிக்கா முயற்சிச் செய்தது.இவ்வாறு கர்ஸாய் கூறினார்.பேட்டியில் அமெரிக்க மக்களுக்கு நன்றியை தெரிவித்த கர்ஸாய், அமெரிக்க அரசுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவேண்டும் என்றார்.

நன்றி - http://www.thoothuonline.com

உக்ரேனில் நடப்பது என்ன... ?


சிரியாவில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் வன்முறைகளையும் கடந்து, கடந்த சில வாரங்களாக உக்ரேன் செய்திகள் உலக ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. அமைதியாக இருந்த உக்ரேனில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக என்ன நடக்கின்றது..? ஏன் அங்கு வன்முறைகள் உச்சக் கட்டத்தை அடைந்தன..? 

காரணம் ஐரோப்பிய ஒன்றியம். ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என்று உக்ரேனில் ஒரு பகுதியினர் நடத்திவரும் போராட்டமும் அதற்கு எதிராக அரசு எடுத்த நடவடிக்கைகளும்தான் இந்த உச்ச வன்முறைக்கும், அந்நாட்டு அதிபரும், பிரதமரும் பதவியைவிட்டோடியுள்ள நிலைக்கும் காரணம்.

சோவியத் ஒன்றியக் கூட்டமைப்புக்குள் இருந்து பிரிந்து தனித்தேசமானதுதான் உக்ரேன். தனித் தேசமானபோதும் அது தமது செ(ர)ல்வாக்குக் கட்டுப்பட்ட தேசமாக இருக்க வேண்டும் என்பது ரஷ்ய ஆட்சியாளர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அதனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைத்து ரஷ்யாவை ஓரங்கட்டிவிடுவதுடன், பொருளாதார நலன்களையும் அடையவேண்டும் என்பது மறுதரப்பின் எதிர்பார்ப்பு. இந்த இரு தரப்புக்கும் இடையில் சிக்கித்திணறுகின்றது உக்ரேன்.


உக்ரேன் நிலைமைகளைப் பார்ப்பதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியம் குறித்துச் சற்று மேலோட்டமாகப் பார்ப்போம். 1992ம் ஆண்டு 12 ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து அமைத்துக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union அல்லது EU) இப்போது 28 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு என பொதுவான ஐரோப்பியச் சட்டவிதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களுக்கும் உட்பட்டே அந்த நாடுகள் தங்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியும். 

அத்துடன், இந்த 28 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 21 நாடுகள் ‘நோட்டோ’ (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஆனாலும், ஐரோப்பிய ஒன்றியக் கூட்டுப் படையொன்றை அமைப்பதை அடுத்த இலக்காகக்கொண்டு இந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை ஒரு பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவருவதாக இந்த படையமைப்பு விளங்கும் என்று கருதப்படுகின்றது. அதேவேளை, பொருளாதார ரீதியாகவும் ஒரு பலமிக்க கட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மாற்றமடைந்துவருகின்றது.


உலகில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சீனா, இந்தியா என்ற இரு நாடுகளுக்குள் அடைந்துகிடக்க, இப்போது இன்னொரு மூன்றில் ஒரு பகுதியினருக்கும் அதிகமானவர்கள் இந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ளடங்கியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய பல்வேறு அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு (ஒவ்வொரு நாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையில்) தங்கள் நாட்டு உறுப்பினரைத் தெரிவு செய்கின்றனர்.

இந்த ஐரோப்பிய ஒன்றியத்தில் இறுதியாகக் கடந்த ஆண்டு யூலை முதலாம் திகதி இணைந்து கொண்டது குரோசியா. இப்போது இந்த அணியில் தங்கள் நாட்டையும் இணைந்துகொள்ள உக்ரேனின் ஒரு பிரிவினர் முயன்று வருகின்றனர். இதனைவிட துருக்கியும் தம்மை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைப்பதற்குக் கடுமையாக முயன்று வருகின்றது (இதுகுறித்து இன்னொரு தருணத்தில் பார்ப்போம்).

தங்கள் நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு உக்ரேனியர்கள் போலந்தை உதாரணமாகக் கூறுகின்றனர். வளங்கள் பல இருந்தும், உக்ரேன் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. எனவே இந்தச் சரிவில் இருந்து மீள ஐரோப்பிய ஒன்றியத்தின் பக்கம் சாய்வதா? அல்லது ரஷ்யாவுடன் ஒண்டிக்கொண்டிருப்பதா என்ற நிலை. தமது நாட்டுக்கு அருகில் உள்ள போலந்து, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்ததன் பின்னர் பெரும் பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளதாகக் கூறும் உக்ரேன் எதிர்க்கட்சியினர், தங்கள் நாட்டையும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளும் வகையில் ஒன்றிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினார்கள்.

ஆனால், உக்ரேன் அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யாவுடன் அதிகம் உறவைக் கொண்டிருக்க விரும்புபவர். தமது நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு எதிரான கொள்கையைக் கொண்டிருப்பவர். எதிர்க்கட்சியினர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் கருத்துக்களை வலியுறுத்தத் தொடங்கியநிலையில்தான், அதிபர் விக்டர் யானுகோவிச் ரஷ்யா சென்று அதிபர் விளாடுமீர் புட்டீனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, உக்ரேனுக்கு சலுகை விலையில் எரிவாயுவை வழங்குவதுடன், பல பில்லியன் டொலர்களை செலுத்தி உக்ரைன் நிறுவனங்களின் பிணை முறிகளையும் ரஷ்யா கொள்வனவு செய்ய முன்வந்து உடன்படிக்கைகளைச் செய்துகொண்டது. அத்துடன், அரசு நிறுவனங்களில் சுமார் 15 பில்லியன் டொலர் முதலீடு செய்யும் திட்டம் ஒன்றை மேற்கொள்வதாகவும் ரஷ்யா உறுதியளித்துள்ளது. 

ரஷ்யாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகச் செயற்பாடுகள் பலவற்றில் இருந்து உக்ரேன் விலகிக் கொண்டது. இது ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தியது. ஐரோப்பிய ஒன்றியதுடன் உக்ரேன் இணைவதனை தடுப்பதற்காகவே ரஷ்யா வேண்டுமென்று இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.  

அதிபர் விக்டர் யானுகோவிச்சின் நடவடிக்கையால் கொதிப்படைந்த எதிர்க்கட்சியினர், கடந்த நவம்பர் மாதம் போராட்டத்தில் குதித்தனர். ரஷ்யாவினுடைய உதவியை பெறுவதற்காக உக்ரேனின் நிறுவனங்களையும் வருமான மார்க்கங்களையும் ரஷ்யாவிடம் யனுகோவிச் தாரைவார்த்துவிட்டதாகக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகளின் தலைவரும் குத்துச்சண்டை வீரருமான விடாலி கிலிட்ஷோகோ, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டவர மொஸ்கோவுடனான பொருளாதார ஒப்பந்தத்தை திரும்பப் பெறுமாறு சிறையில் இருந்தபடியே கோரிக்கை விடுத்தார்.

ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அதிபர் மறுத்துவிட்டார். போராட்டம் தொடர்ந்தது. எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டீன் கடும்கண்டனம் தெரிவித்தார். இதேவேளை, போராட்டத்தைக் கட்டுப்படுத்த அதிபர் விக்டர் யானுகோவிச் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டார். நிலைமையை விளக்கி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் யானுகோவிச், ‘தேர்தல் மூலம் மக்கள் வாக்களித்தே தாங்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததாகவும், எதிர்க்கட்சியினர் ஜனநாயகம் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசுக்கு எதிராக மக்களை திரட்ட அழைப்பு விடுக்கின்றனர். என்னைப் பதவியில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று முயற்சிக்கின்றனர். இந்த மோதல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்’ என எச்சரிக்கை விடுத்தார்.

அத்துடன், போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்பவர்களையும், போராடுபவர்களையும் ஐந்து ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய சட்டங்களையும் நாடாளுமன்றம் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். போராட்டக்காரர்களை அடக்குவதற்காக படையினர் தலைநகரில் கொண்டுவந்து குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி ஆதாரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் போராட்டம் இன்னும் உத்வேகம் பெற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைன் இணைய வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வலியுறுத்தியும் புதிய போராட்டத்தை மேற்கொண்ட அவர்கள், அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலகக்கோரியும் தலைநகர் கீவில் குவியத் தொடங்கினார்கள். இதேவேளை, தலைநகர் கீவில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது.

அதேவேளை, ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மர்க்கலுடன், அதிபர் ஒபாமா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலைமைகள் குறித்து ஆலோசித்தார். இதேவேளை, அதிபர் யானுகோவிச்சிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடோன், ‘எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை காலம் தாழ்த்தாமல் அமைதியான முறையில் முடிவுக்கு கொண்டு வருமாறும், தற்போது அவசர நிலையை பிரகடனப்படுத்தினால் போராட்டம் தீவிரமடையும் என்று எச்சரித்தார்.

இதேவேளை, போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், போராட்டத்தைத் தணிக்க போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு அளிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி ஆதரவுடன் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதிபரின் நிபந்தனைகளை எதிர்க்கட்சி நிராகரித்து விட்டது. அதிபர் பதவி விலகும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் எதிர்க்கட்சி அறிவித்தது. இதனால், உக்ரேன் பிரதமர் மிகோலா அகாரோ தனது பதவியைவிட்டு விலகினார். அதிபர் தொடர்ந்து பதவி வகித்துவந்தார். அதிபர் யானுகோவிச் பதவி விலக வேண்டும் அல்லது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்த போராட்டம், கடந்த 17ம் திகதி திங்களன்று மோசமடைந்தது. 

கலவரத்தை அடக்க நடந்த மோதலில் சிலர் கொல்லப்பட்டதையடுத்து, மறுநாள் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பல்லாயிரக் கணக்கில் குவிந்தனர். அவர்களைத் தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. மறுநாள் புதன்கிழமை வரை தொடர்ந்த வன்முறையில் சுமார் 75 பேர் வரை கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் காயங்களுக்கு உள்ளானார்கள். கொல்லப்பட்டவர்களில் 7 காவல்துறையினரும் அடங்கியிருந்தனர். இருதரப்பிலும் காயமுற்ற 255 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

உக்ரேன் வன்முறைகள் உச்சமடைந்ததால், ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்கவும் உடனடியாகத் தலையிட்டன. உக்ரேன் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடையைக் கொண்டுவந்தது. கடந்த 21ம் திகதி வெள்ளிக்கிழமை பிரசெல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு இந்தத் தடை கொண்டுவரப்பட்டது. இந்தத் தடையில் மருத்துவ உதவிகள், காயமடைந்தவர்கள் மற்றும் அரசு அதிருப்தியாளர்களுக்கு விசா வழங்குதல் ஆகியவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. தலைநகரில் இருந்து படையினரை விலக்கிக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. அரசாங்கமும் மற்றும் எதிர்கட்சியினர் பேச்சுவார்த்தையை நடத்தி வன்முறைகளை நிறுத்தத் தவறிய நிலையில் இந்தத் தடை கொண்டுவரப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேவேளை, அமெரிக்காவும் இதில் தலையிட்டது. இந்த வன்முறைகளுக்கு காரணமானவர்கள் உக்ரேன் ஆட்சியாளர்கள் எனக் கடுமையாகக் குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, உக்ரேனில் பெரும்பான்மையான மக்கள் வர்த்தகம், கலாசார பரிமாற்றம் போன்றவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில் ஆர்வமாக உள்ளனர் என்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சில தலைவர்கள் மற்றும் ரஷ்ய அதிபருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேச்சுக்களையும் ஒபாமா நடத்தினார். இதன்போது, உக்ரேனில் வன்முறை நீடிக்காமல் தடுத்து சுமூகமாகத் தீர்வுகாண உரிய முயற்சிகளை எடுக்குமாறு அந்நாட்டுத் தலைவர்களிடம் ஒபமா வலியுறுத்தியதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன், உக்ரேனின் 28 அரச அதிகாரிகளுக்கு விசா வழங்கவும் அமெரிக்கா தடை விதித்தது.

இதேவேளை, உக்ரைனில் உள்ள தனது நாட்டுத் தூதரகம் தாற்காலிகமாக மூடப்படுவதாக கனடா அறிவித்தது. அரசு எதிர்ப்பாளர்கள் புகலிடம்தேடி கனடா தூதரகத்தில் நுழைய முயன்றதையடுத்து கடந்த 20ம் திகதி வியாழக்கிழமை இந்த முடிவை அந்த நாடு எடுத்துள்ளது. கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹார்பர் கூறுகையில், உக்ரேனில் நிகழும் வன்முறைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். யானுகோவிச் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு புதிய பொருளாதாரத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். உக்ரேனில் சுமார் ஒன்றேகால் இலட்சம் கனடா நாட்டினர் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உக்ரேனில் நிகழ்ந்து வரும் விரும்பத்தகாத அனைத்து சம்பவங்களுக்கும் கிளர்ச்சியாளர்களே பொறுப்பு என்று குற்றம்சாட்டிய ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெல்கோவ்,  இந்த விவகாரத்தில் அதிபர் புட்டீனின் கருத்துப்படி ஆட்சிக் கவிழ்ப்பை நோக்கியே போராட்டங்கள் நிகழ்வதாகவும்,  ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை ரஷ்யா கவனித்துக் கொண்டிருக்கிறது’ என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃப்ராங் வால்டர் ஸ்டீமினீயரை சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் உக்ரேனில் எதிர்க்கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட ஊக்குவிப்பதாக கண்டனம் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிலைமை இவ்வாறிருக்க, உக்ரேன் எதிர்க்கட்சிகளின் தொடர்போராட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் உக்ரேன் அதிபர், அதிபர் மாளிகையில் இருந்து இரகசியமாகத் தப்பிச் சென்றுள்ளார். நாடாளுமன்ற வாக்கெடுப்பை ஏற்க மறுத்த அவர், தானே அதிபர் பதவியில் நீடிப்பதாகவும், நாடாளுமன்ற நடவடிக்கை அனைத்தும் சட்டவிரோதமானது என்று கூறியதுடன், நாட்டில் தீவிரவாதத்தை தூண்டிவிடும் சமூகவிரோதிகளின் செயல்பாடுகளை ஏற்று எதிலும் கையெழுத்து போட மாட்டேன் என்று கூறிவிட்டு, பதவி விலகல் கடிததத்தில் கையப்பமிட மறுத்துவிட்டுடே அதிபர் மாளிகையில் இருந்து இரகசியமாக உலங்குவானூர்தியில் தப்பிச்சென்றுள்ளார்.  

விமான நிலையம் ஒன்றில் இருந்து ரஷ்யாவிற்கு தப்பிச்செல்ல இருந்த அதிபரை, படையினர் தடுத்து நிறுத்தியதால், உக்ரேனின் கிழக்குப் பகுதியில் தலைமறைவாகத் தங்கியிருப்பதாகக் கூறப்படுகின்றது. தற்போது இவரைக் கைது செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிபர் பங்கேற்காமலேயே நாடாளுமன்றத்தை அவசரமாக கூட்டிய ஆளுங்கட்சிக்கு ஆதரவான அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சபாநாயகரை தேர்வு செய்து அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியை பறித்து தீர்மானம் நிறைவேற்றியதுடன், வருகிற மே 25ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்தனர். எதிர்கட்சித் தலைவியையும் விடுதலை செய்ய நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

இதனையடுத்து மறுநாள் சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவி விடாலி கிலிட்ஷோகோ சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ரஷ்யாவுடன் செய்துகொள்ளப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதி உடன்பாட்டில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாக ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த இவர், கடந்த 22ம் திகதி சனிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே இரு தடவைகள் பிரதமாராகப் பதவி வகித்த இவரை, உக்ரேன் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்வரும் மே மாதம் தேர்தலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்பதவியை ஏற்க இவர் விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, விடுதலை செய்யப்பட்ட உக்ரேன் எதிர்க்கட்சி தலைவி, சுதந்திர சதுக்கத்தில் அதிபருக்கு எதிராகப் போராடிவருபவர்களிடையே பேசியபோது, அதிபர் விக்டர் யனுகோவிச்சின் சர்வாதிகாரம் வீழ்ந்தது. ஜனநாயகம் வென்றது என்று தெரிவித்ததுடன், இந்த இடத்தில் கொலைசெய்யப்பட்ட மக்களுக்கு யார் காரணமோ அவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சூளுரைத்தார்.

எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்ததையடுத்து, அந்நாட்டில் கூட்டாட்சியை நிறுவ வேண்டும் என அமெரிக்கா தற்போது வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.  அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜே கார்னி இதுகுறித்துக் கூறுகையில், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் எங்களது குறிக்கோள்களை நெருங்கி வந்துள்ளன. அந்நாட்டு மக்கள் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான கோட்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்காமல் அரசு வழிநடத்தப்பட வேண்டியது அவசியம். உக்ரேனில் அமைதியை நிலைநாட்டவும், அரசு நிறுவனங்கள் முறையாகச் செயல்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அந்நாட்டில் வலுவான ஜனநாயகம் மலர ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச அமைப்புகள் மற்றும் எங்கள் கூட்டணி நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா உதவும் என்று ஜே கார்னி தெரிவித்தார்.

அமைதியாக இருந்த உக்ரேன் இப்போது ஒரு புயலைச் சந்தித்து ஓய்ந்திருக்கின்றது. இனி உக்ரேன் யார் வசம் செல்லப்போகின்றது என்ற கேள்வியே முக்கியமானது. ஏற்கனவே ரஷ்யத் தலைநகரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சுற்றிவளைத்திருக்கின்றன. இதில் உக்ரேனும் சேர்ந்துகொண்டால் ரஷ்யா ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நிலைக்குச் சென்றுவிடும் என்பதால், இந்த இணைவுக்கு ரஷ்யா எதிராகவே இருக்கும் என்பது உறுதியானது. ஆனால், உக்ரேனை இணைப்பதன் மூலம் ரஷ்யாவைத் தனிமைப்படுத்திவிட முடியும் என்று கருதுபவர்கள் எதிர்க்கட்சியினரை ஆட்சிக்குக் கொண்டுவரவே விரும்புவார்கள். இந்த இரு பகுதியினருக்கும் இடையேயான மோதலில் யார் வெற்றிபெறப்போகின்றார்கள்..? எதிர்வரும் மே மாதமே விடை தெரியும்.

நன்றி: ஈழமுரசு

Sunday 2 March 2014

அமெரிக்கா வெளியிட்ட மனித உரிமை அறிக்கையில் மோடி பெயர் நீக்கம்




வாஷிங்டன்: கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் மதக் கலவரம் ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். மனித உரிமைகள் மீறப்பட்டதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து, மோடிக்கு விசா வழங்க அமெரிக்க மறுத்து வருகிறது. இந்நிலையில், சென்ற மாதம் காந்தி நகரில் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெல் டெல்லியில் சந்தித்து பேசினார்.இந்நிலையில், அமெரிக்க மனித உரிமை அறிக்கை-2013ஐ அமெரிக்கா நேற்று வெளியிட்டது. அதில் மோடியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் ஜென் பாஸ்கி நேற்று வாஷிங்டனில் கூறுகையில், குஜராத் மாநில முதல்வரும் பா.ஜ. பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் மீதான குற்றச்சாட்டு குறித்தான அமெரிக்க கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. குஜராத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற மதக் கலவரத்தில் இயற்கை சூழல் மற்றும் மனித உரிமைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. அங்கு ஒவ்வொருவருக்கும் மனித உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன என்று எங்களது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறோம். அமெரிக்க மனித உரிமை அறிக்கை-2013ல் மோடியின் பெயர் நீக்கப்பட்டு இருந்தாலும், அவர் மீதான எங்களது கொள்கையில் எந்த மாற்றம் இல்லை என்றார்.

Saturday 6 April 2013

படங்கள் - ஜெய்லானி Vs பொதுபலசேனா













கிரீஸ் நாட்டு பள்ளிவாசலில் 90 வருடங் களுக்கு பின்னர் தொழுகைக்கு அனுமதி



கிரீஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான தெஸலொனிக்கியில் உள்ள பள்ளிவாசலில் 90 ஆண்டுகளுக்கு பின்னர் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர்.

கொமொடி நகரில் இருந்து வந்த 50 மத்ரசா மாணவர்கள் 111 ஆண்டு பழைமையான தெஸலொனிக்கி பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை தொழுகை நடத்தியுள்ளனர். நகர மேயர் யியனிஸ் புடாரிஸின் ஏற்பாட்டுக்கு அமையவே பல தசாப்தங்களுக்கு பின்னர் இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டது சாதகமான முடிவு என கிரீஸ்கான துருக்கி தூதுவர் கெரின் உராஸ் குறிப்பிட்டுள்ளார். “ஏனைய விடயங்களையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

குறிப்பாக ஏதன்ஸ் நகரும் முஸ்லிம் தொழக்கூடிய இடமாக மாறும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.

தெஸலொனிக்கி பள்ளிவாசல் 1902 ஆம் ஆண்டு இத்தாலி கட்டடக் கலைஞர் ஒருவரால் கட்டப்பட்டது. ஆனால் 1923 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் மூடப்பட்டது. பின்னர் 1925 தொடக்கம் 1963 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த பள்ளிவாசல் நூதனசாலையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இது தெஸலொனிக்கி மாநகர கண்காட்சி மண்டபமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

10.7 மில்லியன் சனத்தொகை கொண்ட கிரீஸில் 1.3 வீத முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகில் பள்ளிவாசல் இல்லாத ஒரே தலைநகராக கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் உள்ளது. 1800களின் ஆரம்பப் பகுதியில் உஸ்மானிய அரசின் முடிவுக்கு பின் ஏதன்ஸில் பள்ளிவாசல்கள் செயற்படவில்லை. சுமார் 200,000 முஸ்லிம்கள் ஏதென்ஸில் வசித்த போதும் அவர்கள் நிலவறைகள் மற்றும் தனியார் அறைகளிலேயே தொழுகை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஏதென்ஸில் ஜன்னல்கள், காற்றோட்டம் இல்லாத சுமார் 130 தொழுகை நடத்தும் நிலவறைகள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

எனினும் பழைமைவாத கிறிஸ்தவ திருச்சபைகள், ஏதென்ஸில் மினாரத்தை காண இன்னும் தயார் இல்லை என கூறி வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் கிரீஸில் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளும் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2011 ஏதென்ஸில் பெருநாள் தொழுகையை நடத்த முற்பட்ட முஸ்லிம்களுக்கு உள்ளூர் மக்கள் இடையூறு விலைவித்தது குறிப்பிடத்தக்கது. தொழ வந்த முஸ்லிம்களை முட்டையால் தாக்கிய உள்ளூர் குடியிருப்பாளர்கள் வானொலிகளின் சத்தத்தை அதிகரித்து இடையூறு விளைவித்தனர்.

எனினும் ஏதென்ஸ் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலை அமைத்துக் கொடுக்க கிரீஸ் அரசு தற்போது முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வஹாபிய தூய்மைவாதமும் உலமா சபை எதிர்கொள்ளும் சவால்களும்




சமயத் தூய்மைவாதம், தீவிரவாதம், எளிமை ஆகிய அம்சங்களே வஹாபியத்தின் அடிக்கட்டுமானங்களாகக் கருதப்படுகின்றன. வஹாபியம் சமய உண்மைகளை நேர் பொருளிலேயே விளக்குகின்றது. அக்கொள்கை விளங்குவதற்கும் அதன் பரவுகைக்கும் அது எளிதாக அமைந்தது. இஸ்லாம் எளிமையான மார்க்கம் என்பதை இப்பின்புலத்திலேயே அது விளக்கியது. சமய உண்மைகளுக்கு தமது நோக்கில் விளக்கமளிப்பதற்கும் சிலவற்றை சமயத்திற்கு எதிரானவை என்று நிராகரிப்பதற்கும் எளிமைக் கொள்கை அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. இது பிற்காலத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியிலும் அவர்களுக்கு வெளியிலும் ஓர் உளவியல் யுத்தமாக மாறியது.


சமயத்தை நேருக்கு நேராகவும் எளிமையாகவும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வஹாபிகளின் இறுக்கமான கோரிக்கை செமித்திய மதங்களின் பண்பாடுகளின் பின்புலத்திலிருந்தே நாம் நோக்க வேண்டும். எல்லா உண்மைகளையும் அர்த்தங்களையும் எளிமையாகக் காண்பதில் வஹாபிகள் பிடிவாதமாக இருந்தனர். அதனால் இஸ்லாமிய புனிதப் பிரதிகளின் தர்க்கவியல், தத்துவம், உருவகம், மொழி அழகியல், குறியீடு போன்றவற்றால் வஹாபிகள் சினமூட்டப்பட்டனர். ‘தூய இஸ்லாத்தின் பக்கம் திரும்புங்கள்’ என்பதே வஹாபிகளின் சர்வதேச அழைப்பாகும். ஆனாலும் வஹாபியம் வேறுபல கூறுகளையும் சமாச்சாரங்களையும் தன்னகத்தை கொண்டுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அதில் அரபுத் தேசியவாதமும் ஒன்றாகும். அரபுத் தேசங்களில் பரவிய துருக்கிய, பாரசீக ஆதிக்கத்தையும் அவர்களின் சமயக் கொள்கைகளையும் மறுவாசிப்புக்களையும் முற்றாக எதிர்த்தது. இவற்றுக்கு எதிராக அரபு மண்ணில் எழுந்த அரபிஸத்திற்கு வஹாபியம் உறுதுணையாக இருந்தது. அரபு மண்ணிலிருந்து துருக்கியை வெளியேற்றியதில் வஹாபியத்திற்கு நேரடியான பங்கிருந்தது.

வஹாபிய எழுச்சி ஐக்கிய அரபுத் தேசத்தையும் அரபு மைய அதிகாரத்தையும் வலுப்படுத்தியுள்ளது. மத்தியகிழக்கில் நிலைத்து வாழ்ந்தோரும் அசையும் நாடோடிச் சமூகங்களுக்குமிடையில் எழுந்த முரண்பாடுகளையும் மோதுகைகளையும் அழித்தொழிப்பதில் வஹாபிய இயக்கம் வெற்றிபெற்றுள்ளது. வஹாபியத்தின் எழுச்சி ஒரு தற்செயல் நிகழ்வோ, சமயத்தை மட்டும் இலக்காக்க் கொண்டதோ அல்ல. ஏறத்தாழ 300 ஆண்டுகள் நஜ்த் பிராந்தியத்தில் ஏற்பட்டுவந்த சமூக, அரசியல் மோதுகைகளின் விளைவுகளிலேயே இதன் தோற்றமும் வளர்ச்சியும் இடம்பெறுகின்றது. அசையும் நாடோடிச் சமூகங்களுக்கு எதிராக நிலைத்து வாழ்வோர் அணிதிரண்டு போராடியதே வஹாபிய வரலாறாகும். பொருளாதார நெருக்கடி, விவசாயப் பிரச்சினைகள், சமயப் பண்பாட்டு நெருக்கடிகள் யாவும் வஹாபியப் போராட்டத்தில் கலந்திருந்தன.

நிலைத்து வாழ்வோரின் நகரமயமாக்கமும் நகர்ப்புற நாகரிக அபிலாஷைகளும் வஹாபிய சமயத் தூய்மைவாதத்துடன் முரண்பட்டு நின்றன. உலமாக்களின் தீவிரப் போக்கும் அசையும் நாடோடிகளின் கிராமிய மனப்பாங்கும் வஹாபியத்துக்குள் உள்முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. வஹாபியத் தூய்மைவாதம் பிற்போக்கிற்கு இட்டுச் செல்லும் இறுக்கமான சமயக்கட்டுப்பாடுள்ள வாழ்க்கைக்கு இஸ்லாத்தைப் போதிக்க தயாராக இருந்தது. நவீன தொழில்நுட்ப முன்னேற்றகர யுகத்தில் பின்னோக்கிச் செல்லும் உத்தியின் மூலமே சமயத்தில் உறுதிப்பாட்டைத் தோற்றுவிக்கலாம் என்பதை வஹாபியம் உறுதியாக நம்பியது.

ஆனால் இதற்கு எதிரான நிலைப்பாடு வஹாபியத்தின் உட்கட்டமைப்பிலிருந்தே உருவாகியது. நிலைத்து வாழ்வோரின் நாகரிக உணர்வு வஹாபியத்தில் வெற்றிகண்டதை 1929 இல் அப்துல் அஸீஸின் படைகள் வெற்றிபெற்றதில் அவதானிக்கலாம். சமூகக் கட்டமைப்பிலும் கருத்தியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தாது புதிய நாகரிக உற்பத்திகளை நுகர்வதற்கு வஹாபிய சஊதி அரசு தயாராக இருந்தது. இதற்கு வஹாபிய சமயத் தூய்மைவாதிகள் எதிர்ப்புக்காட்டினர். ஆகாயவிமானத்தையும் தெலைபேசியையும் இவர்கள் பித்அத் பட்டியலில் இணைத்த அபத்தங்கள் அங்கே நிகழ்ந்தன. பித்அத்துக்கு அவர்கள் வழங்கிய விளக்கங்கள் அதன் எல்லைகளையும் தாண்டிச் சென்று சமூக நடவடிக்கைகளிலும் மானிட முன்னேற்றங்களிலும் நவீனத்துவ நோக்குகளிலும் தலையிட்டது. வஹாபியத்துக்குள்ளே தோன்றிய முன்னேற்றத்திற்கெதிரான சக்திகளுடன் வஹாபியமே போராட வேண்டியிருந்தது.
விஞ்ஞானத் தொழில்நுட்பக் கல்வியையும் அது உருவாக்கிக் கொடுக்கும் கருவிகளையும் வஹாபிய தீவிரவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இசைக்கும் அழகியலுக்கும் எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும் அரபு நாடோடித்துவ பிற்போக்கு யுகத்திற்கேற்ற கோட்பாடாக இஸ்லாத்தை அவர்கள் உருவகித்துக் காட்டினர். கவினுறு கலைகள், விஞ்ஞானம், தொழில்நுட்பம், மெய்யியல், சமூகவியல், விளிம்புநிலை மக்களுக்கான இடம் உட்பட பல்வேறு துறைகளையும் கொண்ட இஸ்லாத்தின் பரந்த நாகரிக மரபுகள் ஒதுக்கப்படுவதையும் ஓரங்கட்டப்படுவதையும் வஹாபிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

சமாதிகளையும் கபுறுகளையும் சுவடே தெரியாமல் அழித்தொழிப்பதில் வஹாபிகள் கட்டற்ற தீவிரவாதத்தை வெளிப்படுத்தினர். பதினாலு நூற்றாண்டுகால இஸ்லாத்தின் பண்பாடுகளையும் நாகரிக எச்சங்களையும் பிரதிபலிக்கக்கூடிய ஒரு சிலவற்றையாவது விட்டுவைக்க வேண்டும் என்பதற்கு அவர்கள் இணங்க மறுத்தனர். 1800 களின் ஆரம்பத்தில் நபிகளின் சமாதி மண்டபத்தை உடைப்பதற்கு அவர்கள் முடிவெடுத்த போது அதற்கெதிராக உலக முஸ்லிம்கள் எதிர்ப்புக்காட்டினர். 1920 களில் மீண்டும் உடைப்பதற்கு முயற்சித்த போது இந்தியாவின் கிலாபத் இயக்கம் அதனைக் கடுமையாகக் கண்டித்தது. 1950 களில் இந்திய இஸ்லாமிய அறிஞர் அபுல் ஹஸன் அலி நத்வி, இஸ்லாமிய மரபுச் சின்னங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார்.

சமாதிகளிலும் கபுறுகளிலும் நடாத்தப்பட்ட அனாச்சாரங்களையும் மூட நம்பிக்கைகளையும் கட்டுப்படுத்துவதிலும் இல்லாதொழிப்பதிலும் வஹாபிகள் உண்மையில் ஒரு முற்போக்கான பங்கை ஆற்றினர். போலி அவுலியா வழிபாட்டினால் வளர்ந்த மௌட்டீகம் இஸ்லாத்தினை எவ்விதத்திலும் பிரதிபலிக்கவில்லை. மத்ஹபுகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டிருந்த முஸ்லிம் உலகை அவர்கள் விடுதலை செய்தனர். கண்மூடிப் பின்பற்றுவதை கைவிடுமாறு அழைப்பு விடுத்தனர். ஒரு முஸ்லிம் எந்தவொரு விடயத்தைப் பேசினாலும் ஆதாரத்தோடு பேசவேண்டும் என்பதை வலியுறுத்தினர். இஜ்திஹாதுக்கு தனிநபர் சுதந்திர சமயத்தீர்ப்புக்கு இடமுண்டு என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் இவை மத்ஹபு வாதிகளின் கடும்போக்கிற்கு எதிராக அமைந்த போதிலும் நவீன உலகிற்கு ஏற்றவாறு இஸ்லாத்தை விளக்கும் பணியில் அவர்கள் பங்காற்றவில்லை என்பது முக்கியமாகும்.

ஆனால் முஸ்லிம்களையே முஸ்லிம்களுக்கு எதிராக கொண்டுபோய் நிறுத்துவதற்கும் தூய இஸ்லாத்தை கடைப்பிடிக்க வில்லை என்ற உளவியல் யுத்தத்தை இன்றுவரை நடத்திக் கொண்டிருப்பதற்கும் முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களை அழித்தொழித்து வரலாறற்ற சமூகங்களாக அவர்களை மாற்றுவதிலும் வஹாபிகளுக்கு மகத்தான பங்குண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

முஹம்மத் பின் சுஊதின் அரசியல் அபிலாஷைகளுக்கும் அப்துல் வஹாபின் சமயத் தூய்மைவாத மறுமலர்ச்சித் திட்டங்களுக்கும் இடையிலான பரஸ்பர உடன்படிக்கைகளும் ஒத்துழைப்புக்களின் ஊடாகவே இவை அனைத்தும் நடந்தேறின. எண்ணைவளக் கண்டுபிடிப்பும் செல்வப் பெருக்கமும் நவீனத்துவத்துடன் அரேபியா இணைவதை துரிதப்படுத்தின. விஞ்ஞான தொழில்நுட்ப உதவிகளுக்காகவும் உலக வர்த்தகத்தில் பங்குகொள்வதற்காகவும் சஊதி பிரித்தானியாவையும் அமெரிக்காவையும் நாடவேண்டி இருந்தது. மன்னர் சுஊதுக்குப் பின்னர் அப்துல் அஸீஸ், பைசல், பஹ்த் என மன்னராட்சியும் தொடர்ந்து வந்தது. இவர்கள் தாராளவாத கொள்கையை அனுஷ்டித்ததுடன் நாட்டை நவீனப்படுத்தும் திட்டங்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தனர். சர்வதேச சட்டங்களிலும் வர்த்தக ஒழுங்குகளிலும் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் ஷரிஆச் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் குற்றவியல், சிவில், தனிநபர் சட்டங்களில் மாற்றங்களைச் செய்யவில்லை. இப்னு தைமியாவின் சிந்தனைகளும் ஹன்பலி சட்டவியலும் தான் அப்துல் வஹாப் அவர்களை சமயத்தூய்மைவாதத்தை நோக்கி ஆழமாக வழிநடாத்தியதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் இவர் பிறந்த நஜ்த் பிரதேசத்தில் ஹன்பலி சட்டமரபு காணப்பட்டமையும் அம்மரபையே அவர் ஆரம்பக் கல்வியாகப் பெற்றமையும் இதற்கான பின்புலமாகும். ஹன்பலி மத்ஹபு தனியார் சட்டங்களில் ஏனைய முஸ்லிம் சட்டப்பள்ளிகளைவிட மிகவும் பழமைவாத தன்மை கொண்டதாக இருந்தது.

இதே காலப்பிரிவில் இலங்கையிலும் மற்றெல்லா சமூகங்களையும் போல இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சிக்கான முன்னெடுப்புக்களும் போராட்டங்களும் மேற்கிளம்புவதை அவதானிக்கலாம். மேற்கத்திய காலனித்துவ அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ளும் நோக்கோடு இலங்கை முஸ்லிம் சமூகம் பல படிநிலைகளில் தன்னைத் தயார்படுத்திக் கொள்கின்றது. இஸ்லாமியச் சூழலில் மேற்கத்திய கல்விமுறையை முஸ்லிம் பண்பாட்டுக்குள் உள்ளீர்க்கின்ற பணியை அறிஞர் சித்தி லெவ்வை மேற்கொள்கின்ற அதேவேளை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் இஸ்லாமிய சமய பண்பாட்டுக்குள் தன்னை உட்படுத்திக் கொண்டு புதிய யுகத்திற்கேற்றவாறு இலங்கையின் பல்பண்பாடுகளையும் அனுசரித்த நிலையில் மத்ரஸாக் கல்வி முறையைத் தோற்றுவிக்கின்றார். 19 ஆம் நூற்றாண்டில் மேற்குக் கரையில் தோன்றிய இக்கலாசாலைகள் 1950 களுக்குப் பின் கிழக்குப் பகுதியிலும் பரவ ஆரம்பிக்கின்றன. இஸ்லாமிய பாரம்பரிய கலாநிலையங்களில் கற்று வெளியேறிய ஆலிம்கள் அல்குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரு துறைகளோடு மட்டும் தமது பயில்வை சுருக்கிக் கொள்ளாது பதினான்கு நூற்றாண்டுகளாக தோன்றிய பல துறைகளையும் கற்றவர்களாக வெளியேறினர். இதனால் இலங்கையில் வாழ்ந்த ஏனைய பண்பாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் எழா வண்ணம் சகவாழ்வுப் போக்கிலேயே தமது சமய சிந்தனைகளை முன்வைத்து வந்தனர்.

ஆனால் ஐம்பதுகளுக்குப் பின் மத்திய கிழக்கில் தோன்றிய எண்ணெய்வளப் புரட்சியும் செல்வப் பெருக்கமும் காலனித்துவத்திற்கு நீண்டகாலம் உட்பட்டு சுரண்டப்பட்ட இலங்கையிலிருந்து ஆன்மீகம், கல்வி, பொருளாதாரம் இன்னபிற தேவைகளுக்காக மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயணிக்கும் நிலை ஏற்படுகின்றது. மத்திய கிழக்கில் தோன்றிய வஹாபிய மறுமலர்ச்சிச் சிந்தனையும் அதில் இழையோடும் இஸ்லாமியத் தூய்மைவாதமும் இலங்கை சமூகத்திற்குள்ளும் படிப்படியாகக் கடத்தப்படுகின்றது. யாரை ஒன்றிணைத்தாலும் ஆலிம்களை ஒன்றிணைக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு சூழலில் ரியால் மௌலவி போன்ற ஒரு சில ஆலிம்களின் அர்ப்பணிப்புக்களின் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் செல்வாக்குப் பெற்ற சிவில் அமைப்பாக உலமா சபை உருவாகின்றது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே தனக்கான காரியாலயத்தை கொழும்பில் அமைத்துக் கொண்ட அது, அதற்கு முன்னர் ரியால் மௌலவி அவர்களின் கைப்பையிலேயே இயங்கி வந்தது இங்கு குறிப்பிட வேண்டிய வரலாற்றுண்மையாகும். அந்தளவு பல தியாகங்களுக்கு மத்தியில் மத்ரஸாக்களில் எட்டு வருடங்களை கழித்துவிட்டு வெளியேறுகின்ற மௌலவிமார்களின் மேலதிகக் கல்வி, தொழில் போன்ற பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய வகையில் இலங்கை உலமா சபை கணிசமான பங்களிப்பை வழங்கியதை யாரும் மறுக்கமுடியாது. அல் ஆலிம் பாடத்திட்டம், இலங்கை பாடசாலையின் இஸ்லாம், அரபு கலைத்திட்டம் போன்றவற்றோடு முஸ்லிம்களின் தொழுகை நேரசூசி, பெருநாட்கள், பிறை விவகாரம் போன்ற பண்பாட்டு விடயங்களில் தேசிய ஒருமைப்பாட்டைப் பேணுவதிலும் அது மிகவும் கரிசனை கொண்டிருந்தது.

ஆனால் இலங்கையின் அரசியல்வாதிகளும் முஸ்லிம் வர்த்தக மேட்டுக்குடிகளும் விடுத்த சவால்களைவிடவும் இலங்கையில் உருவாகிய வஹாபிய சக்திகள் உலமா சபையை பலவீனப் படுத்துவதில் பல அந்தர் பெல்டிகளை அடித்துள்ளனர். பன்முகத் தன்மையான பல்பண்பாடுகள், பல் மொழிகள், பல்வகைச் சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாட்டில் தட்டையான, ஒருதலைப்பட்சமான போக்கிலேயே அதன் செயற்பாடுகள் அமைய வேண்டும் என்பதில் வஹாபிகள் உறுதியாக இருந்து வந்துள்ளனர். இன்றும் கூட பொதுபல சேன குறிவைத்திருப்பது வஹாபிஸத்தையே அன்றி உலமா சபையை அல்ல. ஆனால் துரதிஸ்ட வசமாக குறிவைக்கப்பட்டவர்கள் உலமா சபைக்கு வெளியிலேயே நிற்கின்றனர். இந்த இரண்டக நிலையை நாம் விளங்கிக் கொள்வது மிகவும் முக்கியமாகும். இன்று உலமா சபைக்கு வஹாபிய முகமூடி அணிவிக்கப்பட்டிருப்பதற்கான காரணங்கள் யாவை என்பதை மிகச்சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வஹாபியம் வேறு இலங்கை பாரம்பரிய இஸ்லாமிய சிந்தனை மரபு வேறு என்பதை பொதுக்களத்தில் வெளிப்படுத்துவதில் உலமா சபை பின் நின்றதாலும் அண்மையில் இன, மத பேதமில்லாது எதிர்க்கப்பட்ட ரிசானா விவகாரத்தில் உலமா சபை காத்த மௌனமும் எவ்வளவு பேராபத்தில் அவர்களைச் சிக்கவைத்திருக்கிறது என்பதை இன்னும் அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. குனூத், தொப்பி, விரலாட்டுதல், தராவீஹ் என எண்ணற்ற மார்க்கத்தின் கிளைப் பிரச்சினைகளில் சொல்லொண்ணா நெருக்கடிகளை இலங்கை முழுவதும் உருவாக்கி, பள்ளிவாயல்களையும் பிரித்து தனியான பள்ளிவாயல்களையும் உருவாக்கி பொலிஸ் ஸ்டேஷன் வரை கொண்டு சென்று முஸ்லிம்களை கைகட்டி, வாய்பொத்தி நிற்கவைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்திய துர்ப்பாக்கியமான சூழ்நிலையை உருவாக்கிய வஹாபிய தூய்மைவாதத்தை மிகச்சரியாக இனங்கண்டு உலமா சபை எதிர்வினையாற்றவுமில்லை. அவர்களை அறியாமலேயே வஹாபியத்தின் தூய்மைவாத நோக்குமுறைக்குள் அவர்களை உட்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தெரிந்தோ தெரியாமலோ ஹராம்-ஹலால் தூய்மைவாதம் இந்த வரலாற்றுப் போக்கில் அறியாமல் உள்வாங்கப்பட்டதே. நீண்டகாலமாக முஸ்லிம் புலமைத்துவ வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்த கருத்தாக்கமாக அது இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை நீண்டகால நோக்கில் சிக்கல்கள் எழாதவாறு அமைக்கப்பட்டிருக்கும்.

அரை நூற்றாண்டுக்கு மேலாக உலக விவகாரங்களிலே கிஞ்சிற்றும் அக்கறை செலுத்தாத பள்ளிவாசலுக்குள் உலக விவகாரங்களைப் பேசினாலே நாற்பது நாள் செய்த அமல் போய்விடும் என்று கடைசி வரைக்கும் சொல்லிக் கொண்டு செயல்வாதிகளாக இருந்த தப்லீக் இயக்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்னால் உலமா சபையை கைப்பற்றுவதை யாராலும் தவிர்க்க முடியவில்லை. இதுவும் கூட வரலாற்றுப் போக்கில் வஹாபியம் கொடுத்த அழுத்தம் காரணமாக தன்னைத் தக்கவைப்பதற்கு தப்லீக் தேடிக்கொண்ட புகலிடமாக உலமாசபை மாறுகின்றது. அப்போதுதான் அவர்கள் தம்முடைய நிகழ்ச்சி நிரலில் இல்லாத இலங்கை முஸ்லிம்கள் அரசியல், பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு முகம்கொடுக்க ஆரம்பிக்கின்றனர். அதற்குரிய முதிர்ச்சியும் அதனிடம் இருக்கவில்லை. பொதுமைப்படுத்தப்பட்ட இலங்கையின் எல்லா முஸ்லிம்களையும் பிரதிநித்துவப்படுத்தும் உலமா சபைக்கு அத்தகைய புலமைச் சாகித்தியம் கொண்ட தலைமையே பொறுப்பேற்றிருக்க வேண்டும். ஆனால் இலங்கையின் பல்பண்பாட்டை புரிந்து கொண்ட ஆலிம்சாக்களை கணிசமாகக் கொண்டிருந்த ஒரு சூழலில் தெளிவில்லாத ஆலிம்கள் வந்தமரக்கூடிய இடமாக உலமா சபை மாறியமை இஸ்லாமிய புலமைத்துவத்தின் கையறு நிலையையும் நீண்டகாலமாக முஸ்லிம்களை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் வஹாபிய பிசாசின் பித்தலாட்டமுமே காரணம் என்பதை வரலாறு நிறூபித்துக் கொண்டிருக்கிறது. ஆழமான இஸ்லாமிய புலமைத்துவவாதிகள் உலமா சபைக்கு வெளியே இருப்பது மட்டுமல்ல இலங்கையிலுள்ள இஸ்லாமிய இயக்கங்களுக்கும் வெளியேதான் இருக்கிறார்கள். இலங்கை அனுபவத்தில் பெரிய இஸ்லாமிய புலமைத்துவவாதிகளை திட்டமிட்டு உருவாக்கிய வரலாறுகளும் இல்லை. அவர்களாக சுயமாக வாசித்து பல்வேறு அனுபவ பட்டறிவுகளுடன் உருவாகிக் கொண்டால்தான். இறுக்கமான இயக்க கட்டமைப்புகளும் ஆழமான இஸ்லாமிய புத்திஜீவிகளை உள்வாங்கிக் கொள்வதற்கான நெகிழ்வுத்தன்மைகளும் இல்லாதிருப்பதே இதற்கான காரணமாகும்.

கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்காக தொடங்கப்பட்ட முஸ்லிம் அரசியல் இயக்கம் எவ்வாறு மேற்கில் பெருந்தேசிய வாதங்களுடன் அல்லது முஸ்லிம் மேட்டுக்குடி வர்த்தக சமூகங்களுடன் சராணகதி அடைந்ததோ அதே போன்றுதான் இலங்கை முழுவதும் பரந்து வாழும் முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக் கட்டுக்கோப்பையும் பல்பாண்டுகளுக்கு மத்தியில் சகவாழ்வை மேற்கொள்வதற்கான காலத்துக்கேற்ற சமய சிந்தனைகளையும் மறுசீரமைப்புச் செய்ய வேண்டிய இலங்கை உலமா சபை தொடர்ந்தும் மேற்குப் பகுதி ஆலிம்களாலேயே இதுவரை வழிநடாத்தப்படுகின்றது. இஸ்லாமிய யுத்த தர்மங்களையே ஒட்டுமொத்தமாக மறந்து கிழக்கில் என்னதான் இழப்புக்கள் இருந்தாலும் தொப்புள்கொடி உறவாக இருந்த தமிழ்-முஸ்லிம் உறவை அறுத்தெறியும் நடவடிக்கையாகவே உலமா சபை ஜெனீவா சென்று வக்காலத்து வாங்கியதையும் அதற்குப் பின்னால் இருக்கும் சமய சந்தர்ப்பவாத அரசியலையும் ஒதுக்கிவிட்டு எவ்வாறு பார்க்க முடியும்? இலங்கை முஸ்லிம்களின் மற்ற சமூகங்களின் எல்லா விடயங்களிலும் தொடர்ச்சியான ஊடாட்டம் இருந்து ஒரு முடிவை எடுப்பதற்கும் சிறுபான்மைச் சமூகத்தை பிரதிநித்துவம் செய்கின்ற உலமாசபை போன்ற அமைப்பு திடீரென ஒரு தரப்புக்குச் சார்பாக நிலைப்பாடு எடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

இன்று உலக அளவில் நடைபெற்று வரும் மாற்றங்களை விளங்கிக் கொள்வதிலும் உலமா சபை பின்னுக்குத்தான் நிற்கின்றது. இலங்கை போன்ற தென்னாசிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற வல்லரசு சக்திகளுக்கு மத்தியில் ஒரு அதிகாரப் போட்டிக்குரிய களமாக எவ்வாறு மாறிவருகிறது என்பதை புரிந்து கொள்ளவில்லை. சீனப் பொருளாதாரம், சீன-இலங்கை சமயத் தொடர்புகள், பௌத்த சமூகங்களுக்கு மத்தியில் அது உருவாக்கி வரும் சமயவாதங்கள் குறித்த விரிவான புரிதலுக்குரிய தளங்களையோ, வாதவிவாதங்களையோ, அவற்றுக்குரிய புத்திஜீவித்துவ மட்டங்களையோ இதுவரை உலமா சபை உருவாக்கிக் கொள்ளவுமில்லை.

இலங்கையின் மத்ரஸா வரலாறு கூட குறிப்பிட்ட இயக்கங்களின் சிந்தனைகளை விரிவாக்கம் செய்வதற்காகவே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மை புரியப்பட்டு பொதுத் தளத்திற்கான இஸ்லாமிய மத்ரஸா கலைத்திட்டத்தை உருவாக்கும் பணியிலோ அவற்றைப் பயில்நிலைக்கு கொண்டுவரும் நிலையிலோ இதுவரை உலமா சபை இயங்கவில்லை. உலமா சபையின் தலைமை மட்டுமல்ல, அதன் நிருவாகக் கட்டமைப்பு இலங்கையின் பல பாகங்களையும் உள்ளடக்கியதாக தகைமை, தலைமைக் காலம் வரையறுக்கப்பட்டு ஆலிம்களின் வாக்கெடுப்புக்கள் பரிந்துரைகளுக்கு மத்தியில் தெரிவு செய்யப்படும் நிலையும் இதுவரை காணப்படவில்லை. உலமா சபை இலங்கை முஸ்லிம்களின் மிகவும் பொறுப்புவாய்ந்த சிவில் சமூகக் கட்டமைப்பு என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் அல்லது நகர்ப்புற மேட்டுக்குடி வலதுசாரி உலமாக்களின் ஆடுகளமாக மாறிவிடக்கூடாது.

இந்த ஹலால் கருத்தியலைக்கூட இதுவரை மிகச்சரியாக முன்வைத்து உரையாடவில்லை என்பதுதான் உண்மை. மனித ஆரோக்கியத்திற்கான இஸ்லாமிய கோட்பாடுதான் ஹலால் என்பது. அதை வைத்து பிழைப்பு நடத்துகின்ற ஒரு கும்பலை இஸ்லாத்தின் பெயரால் உருவாக்குவது நீண்டகாலத்தில் எத்தகைய துஸ்பிரயோகங்களை உருவாக்கிக் கொடுக்கும் என்பது ஒருபுறமிருந்தாலும் போர் முடிவுற்று நான்காண்டுகளுக்குப் பிறகும் அடுத்த சிறுபான்மையான முஸ்லிம்களை கருவறுக்க காத்திருக்கும் ஒரு சூழ்நிலையில் நாம் அறியாமல் உள்வாங்கி இருக்கும் வஹாபியத் தூய்மைவாதம் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் காவுகொள்கின்ற நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதே தற்போதைய இலங்கை நிலவரமாகும். நிருவாகக் கட்டமைப்பில், ராணுவத்தில், ஊடகத்துறையில், கல்வியில் உறுதியாக கால்பதித்திருக்கும் பெருந்தேசியவாத வர்க்கங்கள் அடுத்து முன்னேற துடியாய்த் துடிப்பது பொருளாதாரமே. அந்தப் பொருளாதாரத்திற்கு முட்டுக்கட்டையாக அமையும் ஹலால் தூய்மைவாதத்தை தூக்கி எறிவதற்கு அவர்கள் தயங்கமாட்டார்கள்.

ஒரு குறித்த காலத்தில் ஆட்சியிலிருக்கும் அரசையோ அரசியல்வாதிகளையோ மட்டும் உலமா சபை இன்னும் நம்பி ஹலால் தொடர்பான கணக்கறிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருக்க முடியாது. அது நீண்டகாலத்தில் சாதகமான முடிவையே தரும் என எதிர்பார்க்கவும் முடியாது. பொதுவாக போர் முடிந்துவிட்டாலும் இனத்துவ அரசியலும் பௌத்தமயமாக்கலும் காணப்படுவதால் ஹலால் தூய்மை வாதத்தை ஒரு நிறுவன முறையாக தொடர்ந்தும் தக்கவைப்பதற்கான சாத்தியமான வழிகளை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. ஹலால் விவகாரம் முடிவதோடு பிரச்சினை முடிந்துவிடும் என்பதல்ல. அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய தூய்மைவாத இலக்குகள் குறித்தும் அழுத்தங்கள் வரலாம் என்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டி இருக்கிறது.

நூற்றாண்டு காலமாக பல்பண்பாடுகளுடன் புளங்கிய சோனக முஸ்லிம் பண்பாட்டு வெளியின் முகம் திடீரென மாற்றமடைவதையும் இங்கு கவனப்படுத்த வேண்டியுள்ளது. உடல் மொழி, தொப்பி, நீண்ட தாடி, நீண்ட அங்கி, கறுப்பு ஹிஜாப், முகத்திரை, கையுறை, புதிய பள்ளிவாயல் என தடாலடியாக மாற்றியமைக்கப்பட்டு வரும் முஸ்லிம் பண்பாட்டு வெளி பெரும்பான்மை சமூகங்களின் மனத்தில் பேரச்சத்தை உருவாக்கி வருகிறது. அடையாளத்தையும் தூய்மைவாதத்தையும் அளவுக்கதிகமாக தூக்கிப்பிடிக்கும் போது மற்றமைகள் வெறுக்கப்படுவதும் மிரள்வதும் இயல்பே. இது பெருந்தேசிய குழுக்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் எதிர்ப்பதற்கு ஏதுவாகவும் அமைந்துவிடுகிறது. எந்தவொரு செயல்திட்டத்திலும் மக்கள் பங்கேற்பும் அரச ஆதரவும் இருப்பதே விவேகமானது. இல்லாவிட்டால் அது ஒரு குழுசார்பானதாக மாறிவிடும். உணர்ச்சிகரமான நிலையில் வஹாபியத் தூய்மைவாதத்திற்குச் செல்லாமல் மற்றமைகளையும் கருத்திற்கொண்டு செயற்படுவதே பொருத்தமானது. மேலும் மேலும் முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்துவதற்கான தூய்மைவாத இலக்குகளைப் பற்றி ஆராயாமல் மற்றமைகளுடன் கலந்து ஊடாடி பண்பாட்டு புரிதலை உருவாக்குவதே எதிர்காலத்தில் ஆரோக்கியமானது.
நன்றி - http://idrees.lk

Saturday 2 March 2013

ஹலாலும் பொது பல சேனாவும்


[21-02-2013 அன்று நடந்த "ஹலாலும் பொது பல சேனாவும்" என்ற தலைப்பிலான சமூக விஞ்ஞான கற்கை வட்டத்தின் கலந்துரையாடலின் போது பகிரப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாக இக்குறிப்பு அமைகிறது. அவ்வுரையாடலினைத் தொடக்கிவைத்து உரையாற்றிய அசீஸ் நிசார்தீன் ( badrkalam.blogspot.com ) அவர்களது கருத்துக்களும் கலந்துரையாடலில் கூறப்பட்ட கருத்துக்களும் சுருக்கமாக இக்குறிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக்குறிப்பு 28-02-2013 இல் வெளியான சமூக விஞ்ஞான கற்கைவட்டத்தின் செய்திமடல் - 91 இல் பிரசுரமாகியுள்ளது]

ஹலால் என்ற சொல் இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி "ஆகுமானது" என்ற பொருளிற் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு எதிர்ச்சொல் "ஹராம்" அல்லது "விலக்கப்பட்டது" என்பதாகும். உணவு தொடக்கம் மனிதரின் நடத்தை வரைக்கும் ஆகுமானது எது, விலக்கப்பட்டது எது என்று பிரித்தறியப்படுகிறது. எடுத்துக்காட்டாக, பொய் சொல்வது ஹராம்; உண்மையைப் பேசுவது ஹலால். நாணயமாக நடந்துகொள்வது ஹலால்; ஏமாற்றி மோசடி செய்வது ஹராம்.

எல்லாச் சமூகங்களிலும் இருப்பதுபோல இஸ்லாமியச் சமூகத்திலும் ஏற்கப்பட்ட உணவுகளும் விலக்கப்பட்ட உணவுகளும் உள்ளன. இவ்வேற்பும் விலக்கும் இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையில் வந்தவை. இறந்த விலங்கு ஒன்றினை வெட்டி அதன் இறைச்சியை உண்பது விலக்கப்பட்டுள்ளது. பன்றி இறைச்சி விலக்கப்பட்டுள்ளது. அதுபோல விலங்கொன்றைக் குறித்த வழிமுறைகளின்படி வெட்டி எடுக்கப்படும் இறைச்சியே ஹலால் ஆக்கப்பட்டுள்ளது.

2005இல் ஹலால் சான்றிதழ் இலங்கையில் வழங்கப்படத் தொடங்கும் வரைக்கும், நம்பிக்கையான முஸ்லிம் கடைகளில் இறைச்சியை வாங்குவதன் மூலமும் சந்தேகத்துக்கிடமான நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் உணவில் ஹலால் விடயத்தினை முஸ்லிம்கள் கையாண்டு வந்தார்கள்.

இலங்கையில் ஹலால் சான்றிதழ் முறைமை நடைமுறைக்கு வந்தமை இலங்கையிலுள்ள முஸ்லிம்களின் கோரிக்கை காரணமாக மட்டுமே அல்ல. அது இஸ்லாமியர் அல்லாதவர்களும் உள்ளடங்கிய பன்னாட்டு/உள்நாட்டு வணிகர்கள், முதலாளிகளின், பெரு நிறுவனங்களின் தேவைக்காகவும் நடைமுறைக்கு வந்தது.  உணவுப்பொருட்களை விற்பனை செய்த அப்பன்னாட்டு/உள் நாட்டு நிறுவனங்களுக்கு முஸ்லிம்களின் சந்தை மிகவும் தேவையானதாக இருந்தது. மரபான முஸ்லிம் உணவுப்பழக்கங்களை விட்டு வெளியில் வராத சமூகமாக இருந்த முஸ்லிம்களின் உணவுப்பழக்கத்தை மாற்றி தமது வாடிக்கையாளர்களாக ஆக்குவதன் மூலம் பெரும் இலாபம் சம்பாதிக்கவேண்டுமானால் அவர்களைத் தம்பக்கம் இழுப்பதற்கான ஒரு கருவி தேவைப்பட்டது. அக்கருவியாகவே ஹலால் சான்றிதழ் அந் நிறுவனங்களால் கருதப்பட்டது. இதுதவிர, அரபு நாடுகளுக்கு உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வோரின் நலனும் இதில் அடங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்தே முஸ்லிம்களை நம்பிச் சிறு சிறு இறைச்சிக்கடைகள், கோழிப்பண்ணைகள், உணவுக்கடைகள் வைத்துப் பிழைத்து வந்த சாதாரண முஸ்லிம் தொழில் முனைவோர்கள் நட்டப்பட்டுக் காணாமற்போனார்கள். மதம் சார்ந்த ஒரு விடயமான இந்த "ஹலால்" என்பது இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களுக்கும், சிறு உள்ளூர் வியாபாரிகள் ஒழிந்து பெரும் நிறுவங்கள் காலூன்றுவதற்கும் எவ்வாறு பங்களித்துள்ளது என்பதனை நுணுக்கமாக விளங்கிக்கொள்ளவேண்டியுள்ளது.

ஹலால் சான்றிதழினை நடைமுறைப்படுத்தும் உலமாசபையானது முழுக்க முழுக்க இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் நிழலில் அவர்களுக்குச் சார்பான அமைப்பாகவே இயங்குகிறது. இலங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை மறுத்து இலங்கை அரசாங்கத்தை நியாயப்படுத்த ஜெனீவா வரை சென்று வாதாடிய மத அமைப்பாக அது இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, "ஹலால்" பற்றிய சரியான விளக்கம் முஸ்லிம்களிடையே வலியுறுத்தப்படுவதற்கு மாறாக, உணவோடு சம்பந்தப்படுத்திய மிகக்குறுகிய மேலோட்டமான விளக்கமே பரவலாக்கப்பட்டிருக்கிறது. பன்றி இறைச்சியைக்கண்டு அருவருத்து வெறுத்து ஒதுங்கும் முஸ்லிம்கள் அதேயளவுக்கு ஹராமாக்கப்பட்டுள்ள வட்டி, மோசடி, மது, கடத்தல், வியாபாரத்தில் மோசடி, பொய் போன்றவற்றைக்கண்டு பொதுவாக அந்தளவு அருவருப்பதில்லை. இது இஸ்லாத்தின் "ஹலால்" பற்றிய அடிப்படைகளையே நடைமுறைப்படுத்தத் தவறும் ஒரு நிலையாகும்.

ஹலால் சான்றிதழானது உணவுகளை மேலோட்டமாக வகைபிரிக்க உதவுகிறதேயன்றி அதன் நடைமுறைச்சாத்தியம் கேள்விக்குரியதே. ஹராமான வட்டிப்பணத்தினை முதலிட்டு உருவாக்கப்படும் இஸ்லாமிய வட்டியில்லா வங்கிச்சேவைகளுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மக்களிடம் பொய் சொல்லி மோசடி செய்யும் நிறுவங்களின் உற்பத்திப்பொருட்கள் வெறுமனே அவற்றின் உணவுப் பொருட் கலப்பை மட்டுமே கருத்திற்கொண்டு ஹலால் சான்றிதழளிக்கப்படுகின்றன.

இவ்வாறாக, ஹலால் சான்றிதழின் தோற்றம், அதனால் ஏற்பட்ட விளைவுகள், அதன் நடைமுறைச்சாத்தியம் போன்ற கேள்விகள் இருக்கவே செய்யும் நிலையில் ஹலால் சான்றிதழுக்கெதிரான சிங்கள பவுத்த பேரினவாதிகளின் பிரசாரமும் போராட்டங்களும் தோன்றியுள்ளன. இவ்வமைப்புக்களின் நோக்கம் ஹலால் சான்றிதழின் நடைமுறை, நோக்கங்கள், இஸ்லாமிய சமூகத்தின் நன்மை போன்றவற்றின் மீதான அக்கறை அல்ல. மாறாக, இனவாதத்தைத்தூண்டிவிட்டு தமது சுயநல அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளுவதேயாகும்.

இலங்கையில் இவ்வாறான அமைப்புக்களுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. இவ் இனவாத அமைப்புக்கள் சிங்கள மக்களுடைய நன்மைகளுக்காகக்கூட என்றைக்கும் போராடியது கிடையாது. ஆளும் வர்க்கத்துக்கும், ஏகாதிபத்தியங்களுக்கும், பிற்போக்குவாதிகளுக்குமாகவே இவ்வமைப்புகள் இயங்கிவந்துள்ளன.  இவை நாட்டு மக்களிடையே தமது சுயநலங்களுக்காக உருவாக்கிவிடும் பிளவுகளும் சந்தேகக் கண்ணோட்டங்களும் மக்களது நல்ல எதிர்காலத்தையே நாசப்படுத்தி, போரும் அலைச்சலும் நிம்மதியற்றதுமான வாழ்வையே உருவாக்கியிருக்கிறது. இவ்வமைப்புக்களை அளவிற் சிறியனவென்றோ, கணக்கெடுக்கக்கூடாதென்றோ புறக்கணித்துவிட முடியாது. ஏனெனில் இவை சிறுகச்சிறுகச் சிங்கள பவுத்தர்கள் மத்தியில் விதைக்கும் இனவாதக்கருத்துக்கள் சிங்கள சமூகத்தின் அடியாழம் வரைக்கும் போய் நிலைத்துவிடக்கூடியனவாக இருக்கின்றன.

ஏழை எளிய முஸ்லிம்களின் பிரச்சினைகளை மூடி மறைப்பதுடன், முஸ்லிம் அதிகார வர்க்கத்தினால் சாதாரண முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும், முஸ்லிம்களிடையே உள்ள பல்வேறு வேறுபாடுகள் முரண்பாடுகள் போன்றவற்றையும் ஒரேயடியாக மறுத்து, "முஸ்லிம்கள்" என்றொரு வெறுப்பு முலாம் பூசப்பட்ட ஒற்றை அடையாளத்தினுள் ஒட்டுமொத்த இஸ்லாமியச்சமூகத்தையே அடக்கி முத்திரையிட்டு அவ்வடையாளத்தின் மீதான வெறுப்பாயும் தாக்குதலாயும் இவ்வரசியல் கட்டமைக்கப்படுகிறது.

இப்பேரினவாத இயக்கங்கள் இன்று ஹலால் சான்றிதழைச் சாட்டாக வைத்து முன்னெடுக்கும் அரசியலானது இந்நாட்டின் பல்லினத்தன்மையையும் மதசார்பற்ற தன்மையையும் கேள்விக்குள்ளாக்கி, இதனைச் சிங்கள பவுத்த நாடு என்று நிறுவுவதன் பாற்பட்டது. இத்தகைய போக்கு ஓர் இராணுவச் சர்வாதிகார ஆட்சிக்குச் சாதகமானதாகும்.

எனவே, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் ஹலால் சான்றிதழின் தேவை பற்றியும் அதன் நடைமுறைகளைப்பற்றியும் ஆக்கபூர்வமாக விமர்சிப்பதும் உரையாடுவதும் ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, ஹலாலை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் இத் தீவிர இனவாதப் பரப்புரையினை முறியடிக்க வேண்டிய தேவையும் உள்ளது.

ஹலாலோடு நின்றுவிடாத இந்தப் பேரினவாத நிகழ்ச்சிநிரல் படிப்படியாக இலங்கையின் சிறுபான்மைத் தேசிய இனங்கள், குழுக்கள் யாவற்றின் மீதும் தனது தாக்குதலைச் செய்யும். தாமே உருவாக்கும் குண்டுவெடிப்புக்கள், கலவரங்களைச் சாதகமாக்கிக்கொண்டு ஆயுதப்போராட்டத்தைக்கூட இவை முஸ்லிம்கள் மீது திணிக்கலாம். அதன்போது சிறுபான்மைத் தேசிய இனங்களும் குழுக்களும் சிங்கள பவுத்தர்களுள் இருக்கும் நட்புச்சக்திகளையும் இணைத்துக்கொண்டு ஒன்றிணைந்து போராடவேண்டிய தேவை உருவாகும்.

முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறையைச் சாதமாக்கிக்கொண்டு குறுகிய அடிப்படைவாதக் கண்ணோட்டங்களை முஸ்லிம்கள் மத்தியில் விதைக்க முயற்சிக்கும் சக்திகளை இனங்கண்டு முறியடிப்பதும் இப்போது முஸ்லிம்கள் முன்னால் எழுந்துள்ள சவாலாகவிருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் இஸ்லாமியர்களின் பலவகையான பண்பாட்டுக்கூறுகளை மறுதலித்தும், அவர்களது வரலாற்றுச் சின்னங்களைச் சிதைத்தழித்தும் பரப்பப்பட்டுவரும் ஒற்றைப்படுத்தப்பட்ட வகாபிச சிந்தனைகள் இத்தகைய போக்குக்களுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும்.

தமிழர்கள் மீதான ஒடுக்குமுறையைச் சாதகமாக்கிக்கொண்டு குறுகிய தமிழ்த்தேசியவாதம் தமிழரின் விடுதலைப்போராட்டத்தினுள் ஊடுருவி இடம்பிடித்துக்கொண்டமை பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தியது. இந்நிலை முஸ்லிம்களுக்கும் ஏற்படாமல் முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

முஸ்லிம்களின் அரசியல் அமைப்புக்கள் தம்மை ஏனைய ஒடுக்கப்படும் சமூகங்களிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளாமல், எல்லா ஒடுக்கப்படும் மக்களுடைய போராட்டங்களிலும் தம்மை இணைத்துக்கொண்டு இலங்கையின் பேரினவாத ஒடுக்குமுறையை முறியடிப்பதன் மூலம் மட்டுமே சனநாயக விரோத ஆட்சி ஒன்றின் அடிப்படைகளையும் இனப்பிளவுகளையும் இலங்கையிலிருந்து அகற்ற முடியும்.

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...