Monday 26 March 2012

ஏகாதிபத்தியத்தின் அடுத்த இலக்கு இரான்


லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன  அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். 
அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.
இரானில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தப் பொருளாதாரத் தடையுத்தரவுகள், எதிர்த்தரப்பினரைத் தூண்டிவிடுதல், இரகசியக் குழுக்களைக் கட்டி அந்நாட்டினுள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல் எனப் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இப்பொழுது அந்நாட்டின் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளைக் குவித்து வருகிறது. இராக்கிலிருந்து தனது கடைசித் துருப்புகளையும் விலக்கிக் கொண்டுவிட்டதாக அறிவித்துள்ள ஒபாமா, அத்துருப்புகளை இரானை அச்சுறுத்தும் நோக்கத்தோடு குவைத்தில் இறக்கிவிட்டுள்ளார். இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகவும் அது தொடர்பாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்.
இரான் இரகசியமாக அணுகுண்டைத் தயாரித்து வருகிறது என்ற தமது புளித்துப்போன குற்றச்சாட்டை நிரூபிக்கவும், இரானை ஓர் பயங்கரவாத நாடென முத்திரை குத்தவும் முயலும் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி, அதற்காக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் வழமை போல சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா. மன்றமும் அடியாளாகச் செயல்பட்டு வருகின்றன.
சர்வதேச அணுசக்தி முகமை, “இரான் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நடத்தி வந்த பரிசோதனைகளை இன்னமும் கைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக’’க் குறிப்பிட்டு கடந்த நவம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதற்காக இரானைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆக்கப் பணிகளுக்காகத்தான் அணுசக்தி பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக இரான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத சர்வதேச அணுசக்தி முகமை, இரான் அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரிக்க முயன்று வருகிறது என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்தவொரு புதிய சான்றையும் தனது அறிக்கையிலோ தீர்மானத்திலோ சுட்டிக் காட்டவில்லை. மாறாக, இது பற்றிய ஆதாரங்கள் பின்னர் தரப்படும் என்று பொத்தாம் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளது.
உண்மையில் சர்வதேச அணுசக்தி முகமையின் இந்தப் புளுகுணி அறிக்கையும் கூட, அதனின் சொந்தசரக்கு கிடையாது. இரானின் அணுசக்திப் பரிசோதனைகள் குறித்து மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் உளவு நிறுவனங்கள் அளித்த விவரங்கள் அடங்கிய ஒரு கணினிக் கோப்பை அடிப்படையாகக் கொண்டுதான் சர்வதேச அணுசக்தி முகமை தனது அறிக்கையைத் தயாரித்துள்ள உண்மையும் இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரும், அமெரிக்காவின் அணுஆயுதத் துறையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவருமான ராபர்ட் கெல்லி, இந்த மோசடியை ஸெய்மோர் ஹெர்ஷ் என்ற பத்திரிக்கையாளரிடம் அம்பலப்படுத்தி பேட்டியளித்திருக்கிறார். இதுவொருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி முகமை ‘தயாரித்த’ அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் முன்பே, அது ‘கடத்தி’ச் செல்லப்பட்டு, மேற்குலகப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் “பிரேகிங் நியூஸாக” வெளியிடப்பட்டது.
இப்படி அறிக்கையைத் தயாரித்ததிலும், அது வெளியானதிலும் நடந்த பல உள்ளடி வேலைகளும் சதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த போதிலும், அமெரிக்க ஆளும் கும்பலும், மேற்குலக ஊடகங்களும் அது பற்றியெல்லாம் கூச்சப்படவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், அமெரிக்காவில் இரானுக்கு எதிரான போர்வெறிக் கூச்சல் நாலாந்திர பாணியில் காதுகூசும் அளவிற்கு நடந்து வருகிறது.
‘‘இரானுடன் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு நாடும் அமெரிக்க டாலரைச் செலாவணியாகப் பயன்படுத்தக்கூடாது; யூரோவைச் செலாவணியாகப் பயன்படுத்தினால், பொருளாதாரத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களை இரானில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் யூரோவைப் பயன்படுத்தவில்லை என்று இறக்குமதி செய்யும் நாடுகளின் மத்திய வங்கிகள் சான்றளிக்க வேண்டும்” என மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இரானின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளை ஏற்கெனவே போட்டுள்ளன. தற்பொழுது, அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையைக் காட்டி, “இரானின் மத்திய வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்களோடு வணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாது” என்ற புதிய பொருளாதாரத் தடையுத்தரவை விதித்திருக்கிறார்.
அமெரிக்காவின் இப்புதிய பொருளாதார தடையுத்தரவு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும். இரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நாடுகள் அனைத்தும் இரானின் மத்திய வங்கியோடு தொடர்பு வைத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. இந்த நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம், இரானின் உயிர்நாடியான எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலுமாக முடக்கிவிட நரித்தனமாக முயலுகிறது, அமெரிக்கா.
இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும்; இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் இரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுள் முக்கியமானவை. ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஜூலை 1 முதல் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாகத் தடை செய்யப் போவதாக அறிவித்து, அமெரிக்காவின் மனதைக் குளிரவைத்துவிட்டது. ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவின் விருப்பப்படி தங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரானிலிருந்து சவூதி அரேபியாவிற்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டன.
அமெரிக்கா தனது புதிய பொருளாதார தடையுத்தரவை அமல்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது. இந்தியா, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைக் குறைக்கப் போ்வதில்லை என வீறாப்பாக அறிவித்திருக்கிறது. சீனாவோ அமெரிக்காவின் பொருளாதார தடையுத்தரவை வாயளவில் கண்டித்தாலும், மறுபுறம் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, தான் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிகக் கட்டணச் சலுகை தர வேண்டும் எனப் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது திணித்துள்ள இப்பொருளாதார தடையுத்தரவு, அந்நாட்டின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒப்பானது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கி வைத்துள்ள இம்மறைமுகமான போரை எதிர்கொள்வது என்ற அடிப்படையில், தனது நாட்டின் கடற்பரப்புக்குட்பட்ட ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய் போக்குவரத்தைத் தடைசெய்வதன் மூலம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுப்போம் என இரான் அறிவித்திருக்கிறது.
அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகளுக்கு, இரானின் இந்தத் தடையை எதிர்ப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. மேலும், தன்னைவிட மிகப் பெரும் இராணுவ வலிமையும், அணு ஆயுத பலமும் மிக்க அமெரிக்காவின் அச்சுறுத்தலை இப்படிபட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம்தான் இரான் போன்ற ஏழை நாடுகள் எதிர்கொள்ள முடியும்.
மேற்காசிய நாடுகளில் இருந்து கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் நான்கில் மூன்று பங்கு எண்ணெய் ஹொர்முஸ் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிறு இடையூறுகூட, உலக நாடுகள் எங்கும் பாரதூரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட அலறத் தொடங்கியுள்ளனர். இரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையுத்தரவுகளை விலக்கிக் கொள்வது மட்டும்தான் இப்பிரச்சினைக்கு ஒரே, எளிமையான தீர்வு. ஆனால், அமெரிக்காவோ, இரானை ஆத்திரமூட்டும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலையும் துருப்புகளையும் கொண்டுவந்து இறக்கி, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகிறது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் எதிர்த்தரப்பைத் தூண்டிவிட்டு, இரானின் இசுலாமியக் குடியரசுக்கு எதிராக ஒரு வண்ணப் புரட்சியை நடத்த முயன்று தோற்றுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்பொழுது இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போரையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும்தான் நம்பியிருக்கிறது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளை இறக்கிய அதேவேளையில், இரானைச் சேர்ந்த இளம் அணு விஞ்ஞானியான முஸ்தபா அகமதி ரோஷன் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, அவரது காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இறந்துபோனார். 20 சதவீத அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் முயற்சியில் தான் வெற்றி அடைந்துவிட்டதாக இரான் அறிவித்த இரண்டாவது நாளே இப்படுகொலை நடந்துள்ளது.
இரானைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள் இப்படிக் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஷன் உள்ளிட்டு ஆறு அணுவிஞ்ஞானிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். பொருளாதார தடையுத்தரவுகள் மூலம் முடக்கவியலாத இரானின் அணுசக்தி பரிசோதனைகளை, அந்நாட்டின் அணு விஞ்ஞானிகளைக் கொல்வதன் மூலம் சாதிக்கப் பார்க்கிறது, அமெரிக்கா.
இப்படுகொலைகள் ஒருபுறமிருக்க, இரானின் அணுசக்தி பரிசோதனைக் கூடங்கள், இராணுவ ஏவுகணைத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை இரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் தவறுதலாக இரானின் வான்பரப்புக்குள் சென்றுவிட்டதாகக் கூறி, உண்மையை மூடிமறைக்க முயன்று தோற்றுப் போனது அமெரிக்கா. இரானின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னே இசுரேலின் உளவு நிறுவனமான மொசாத் இருப்பதை லீ ஃபிகாரோ என்ற பிரெஞ்சு நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.
இப்படி இரான் மீது கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்க இசுரேல் கூட்டணியைத்தான், பயங்கரவாத நாடுகளாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும். ஆனால், அமெரிக்கவோ சர்வதேச அரங்கில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்கான சவூதி அரேபியத் தூதரைக் கொல்ல இரான் முயன்றதாகவும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் இரானுக்கும் தொடர்பிருப்பதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி, இரானைப் பயங்கரவாத நாடென முத்திரை குத்திவிடக் கீழ்த்தரமாக முயன்று வருகிறது
அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்றால், யுரேனியத்தை 90 சதவீத அளவிற்கு செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இரானோ மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் யுரேனியத்தை 20 சதவீதம் அளவிற்கே செறிவூட்டும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, ஏராளமான அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் இசுரேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இன்னும் அணு ஆயுத ஆற்றலைப் பெறாத இரானை அமெரிக்காவும் அதனின் கூட்டாளிகளும் தண்டிக்கத் துடிப்பது அநீதியானது. தம்மிடம் குவிந்து கிடக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவோ, கைவிடவோ விரும்பாத அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளான இசுரேலும், இந்தியாவும், “இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலக் கூடாது என உபதேசிப்பதும், அதற்காக அதனைத் தண்டிக்க முயலுவதும்” கேலிக்கூத்தானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே நியாயமற்றது.
இராக் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கும் முன்பாக, அந்நாட்டைப் பலவீனப்படுத்தும் சதித் திட்டத்தோடு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைப் போலவே, இரான் மீதும் அடுக்கடுக்காகப் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்துவருகிறது, அமெரிக்கா. சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் இன்னும் ஓராண்டிற்குள் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் திறனைப் பெற்றுவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இப்பீதியூட்டும் புளுகுணிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி, இரானைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இரானின் அணுசக்தி பரிசோதனை முயற்சிகள் தொடர்பாக நடைபெற்று வந்த சர்வதேச பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்தது, அமெரிக்கா. இவையனைத்தும் 1970களில் தான் இழந்த சொர்க்கத்தை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு சாத்தானின் பேரரசு அலைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.
நன்றி: வினவு

Saturday 24 March 2012

சனல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்


வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.

சர்வதேச சமூகமும்இ மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.

இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.

முஸ்லிம்களாகிய நாமும் சனல் 4 உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களுக்கு பயங்கரவாதப் புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களையும்இ போர்க் குற்றங்களையும் அம்பலப்படுத்தும் செயற்பாட்டில் குதிக்கவேண்டும். புலிகள் மேற்கொண்ட இந்த அக்கிரமங்களை உங்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட ஏனைய இணையத் தளங்களிலும் பதிவுசெய்யுமாறு அன்புடன் அழைக்கிறோம்..!!


இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட சோக வரலாற்று நிகழ்வு இது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வடக்கில் வாழ்ந்து வந்த சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வடக்குக்கு வெளியே புலிகளால் விரட்டப்பட்டனர். யாழ்ப்பாணத்துக்கு வெளியே ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற 48 மணிநேர அவகாசம் வழங்கப்பட்டது. யாழ் நகர முஸ்லிம்களுக்கு இரண்டே இரண்டு மணிநேரமே கால அவகாசம் வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முப்பதாம் திகதி யாழ் நகரப் பகுதிகளில் உறுமிக் கொண்டிருந்த புலிகளின் வாகனங்களிலிருந்த ஒலிபெருக்கிகள் அலறிக்கொண்டிருந்தன.

'யாழ் நகரத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் வட மாகாணத்துக்கு வெளியே செல்ல வேண்டும். உடுத்த உடுப்புடனும் ஐந்நூறு ரூபாவுக்கு மேற்படாத பணத்துடனும் அனைத்து முஸ்லிம்களையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரிக்கு வருமாறு இத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி நடப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும்'
இதுதான் புலிகளின் அந்த அறிவுறுத்தல்.

ஒஸ்மானியாக் கல்லூரியில் கூடிய அனைத்து முஸ்லிம்களும் லொறிகளில் ஏற்றப்பட்டு வட மாகாணத்துக்கு வெளியே கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர். 1981ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின்படி யாழ் நகரத்தில் மட்டும் வாழ்ந்த முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை 14இ844.

யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ வவுனியாஇ மன்னார்இ கிளிநொச்சி ஆகிய வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 78ஆயிரம் முஸ்லிம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். யாழ் நகர முஸ்லிம் மக்களை இரண்டு மணித்தியால கால அவகாசத்தில் வெளியேற்றிய புலிகள்இ முப்பதாம் திகதிக்கு முன்னதாகவே வடக்கின் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றினார்கள்.

முதன் முதலாக யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 12 மைல்கள் அப்பாலுள்ள சாவகச்சேரியில் வாழ்ந்து வந்த சுமார் 1500 முஸ்லிம்கள் விரட்டப்பட்டனர். இது அக்டோபர் மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது. இதன் பின்னர் கிளிநொச்சிஇ மன்னார் என்று அனைத்து வடபுல மாவட்டங்களிலிருந்தும் விரட்டப்பட்டனர்.
வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விரட்டுவதற்கு முன்னதாகவே கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்களைப் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி கிழக்கில் காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாசல்களுக்குள் வைத்து 140 முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக்கொன்றனர்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹுசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மீரா ஜும்மாப் பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதபாணிகளாகப் புகுந்த புலிகள் தொழுதுகொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இத் தாக்குதலின்போது சுமார் 70 முஸ்லிம்கள் காயங்களுக்கு இலக்கானார்கள்.

இக் கொடூரம் இடம்பெற்றுச் சரியாக ஒன்பது நாட்களுக்குப் பின்னர் மற்றொரு இரத்த வேட்டையைப் புலிகள் நடத்தினார்கள். ஏறாவூர்இ பிச்சிநகர் என்ற முஸ்லிம் கிராமத்துக்குள் ஆயுததாரிகளாகப் புகுந்த புலிகள் 118 முஸ்லிம் மக்களைச் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இந்த ஈனத்தனமான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டவர்களில் 51 பேர் ஆண்கள்இ 36 பேர் பெண்கள்இ 31 பேர் பிள்ளைகள். நகைகளையும் பெறுமதி வாய்ந்த பொருட்களையும் கூடப் புலிகள் கொள்ளையடித்துச் சென்றனர். மட்டக்களப்பு – பொலநறுவை வீதியில் ஏறாவூர் அமைந்துள்ளது. மட்டக்களப்பிலிருந்து ஒன்பது மைல்கள் அப்பால் ஏறாவூர் உள்ளது. பிச்சிநகர்ப் படுகொலை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.

1990ஆம் ஆண்டு கிழக்கில் சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட முஸ்லிம்களைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். அந்த வருடம் ஜூலை மாதம் முப்பதாம் திகதி அக்கரைப்பற்றில் 14 முஸ்லிம்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி அம்பாறைஇ முள்ளியன்காடு என்ற கிராமத்தில் வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்த 17 முஸ்லிம் விவசாயிகளைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். மறுநாள் ஆறாம் திகதி அம்பாறையில் மேலும் 33 முஸ்லிம் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 15ஆம் திகதி அம்பாறைஇ அரந்தலாவைக்கு அருகேயுள்ள முஸ்லிம் கிராமமொன்றுக்குள் புகுந்த புலிகள் ஒன்பது முஸ்லிம்களைச் சுட்டுக் கொன்றனர். இவற்றை விடவும் மேலும் பல படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
வடக்கிலிருந்து முஸ்லிம் மககள் விரட்டப்படுவதற்குச் சில மாதங்கள் முன்னதாக 35 முஸ்லிம் வர்த்தகர்களைப் புலிகள் கடத்திச் சென்றனர். கப்பம் கோரியே இந்த வடபகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டனர்.

இவர்களில் 18 பேர் கடத்தப்பட்டுச் சில மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஏனைய 17 வர்த்தகர்களுக்கும் என்ன நடந்ததென்ற மர்மம் இன்றுவரை மூடுமந்திரமாகவே இருக்கிறது. புலிகளுக்குக் கப்பம் வழங்கிய வர்த்தகர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் புத்தளம்இ அநுராதபுரம்இ குருநாகல் உட்படப் பல தென்னிலங்கைப் பகுதிகளில் 150இற்கு மேற்பட்ட அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருந்தனர். இருபது வருடங்கள் கழிந்துவிட்ட இன்றைய நிலையில் அந்த மக்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளது. இன்னமும் அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் முற்றுமுழுதாக மீள்குடியேற்றப்படவில்லை என்ற நிலைமை தொடரத்தான் செய்கிறது.





















நன்றி : யாழ் முஸ்லிம் 

Friday 2 March 2012

ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!


ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!ஐந்து கண்டங்களிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பும் செயற்கைக் கோள்கள், ‘வால் ஸ்டிரீட் ஜர்னல்’, ‘டைம்ஸ் ஆப் லண்டன்’, ‘நியூயார்க் போஸ்ட்’ உள்ளிட்டு உலகெங்கும் 175 செய்தித்தாள்கள், அமெரிக்காவில் மட்டும் 35 தொலைக்காட்சி நிலையங்கள், 19 விளையாட்டு சானல்கள், டுவென்டியத் சென்சுரி பாக்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனம்… இத்தனைக்கும் சொந்தக்காரரான உலக ஊடக சாம்ராச்சியத்தின் சக்ரவர்த்தி ரூபர்ட் முர்டோச் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்.
ஊடக சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவைகளின் இலக்கணத்தைப் படைத்து மனித குலத்துக்கு வழங்கியதாக பீற்றிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளின் செய்தி ஊடகங்கள் அதிர்ச்சியில் வீழ்ந்திருப்பது போன்றதொரு போலித் தோற்றத்தைக் காட்டுகின்றன. நடக்கக் கூடாததும், நடக்கவே முடியாததும் நடந்து விட்டதைப் போன்ற ஒரு பாசாங்கு!
ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாராஜ்ஜியத்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ எனும் பத்திரிகை போலீசுக்கு இலஞ்சம் கொடுத்து, லண்டன் குண்டு வெடிப்பு மற்றும் அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் போன்றவற்றில் இறந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுடைய தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டுள்ளது என்ற உண்மை அம்பலமாகியிருக்கிறது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து அரச குடும்பத்தினரின் தொலைபேசிகளையும் கூட முர்டோச்சின் பத்திரிகை கள்ளத்தனமாக ஒட்டுக் கேட்டிருக்கிறது. ராஜ குடும்பத்தின் அந்தரங்கத்திலேயே மூக்கை நுழைத்து விட்டார் ருபர்ட் முர்டோச் என்று போட்டி சாம்ராஜ்ஜியங்களைச் சேர்ந்த ஊடகங்கள் சாமியாடிக் கொண்டிருக்கின்றன.
இங்கிலாந்தில் ருபர்ட் முர்டோச்சின் மேல் நடந்து வரும் விசாரணைகளைப் போலவே, அமெரிக்கப் புலனாய்வுத் துறையும் தங்கள் நாட்டில் முர்டோச்சின் ஊடகங்கள் பின்பற்றிய முறைகேடான விவகாரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறது.
முதலாளித்துவ தனிநபர் சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதல் போன்று தோற்றமளிக்கும் இந்த நிகழ்வுகள் உண்மையில் எம்.ஜி.ஆர். – நம்பியார் கத்திச் சண்டை ரகத்தைச் சேர்ந்தவையே. புலனாய்வு என்ற பெயரில் மஞ்சள் மசாலாக்களை கடைவிரிக்கும் இதழியலுடன் இவை நேரடித்தொடர்பு கொண்டவை.
கடந்த 2002ம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனைச் சேர்ந்த மில்லி டோலர் என்கிற 13 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போகிறார். முர்டோச்சிற்கு சொந்தமான ‘நியூஸ் ஆப் தெ வோர்ல்ட்’ பத்திரிகையின் சார்பாக களமிறங்கும் தனியார் துப்பறியும் நிபுணர் க்ளென் முல்கெய்ர், மில்லியின் தொலைபேசியை கள்ளத்தனமாக இயக்கி,  மில்லி எங்கோ இருக்கிறார் என்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார். மில்லியின் குடும்பமும் இதை நம்புகிறது. போலீசாரும், இதையே ஆதாரமாக வைத்து தமது புலனாய்வை தவறான திசையில் தொடருகிறார்கள். கடைசியில் அதே ஆண்டு நவம்பர் மாத வாக்கில் மில்லியின் சிதைந்த உடற்பாகங்கள் கண்டெடுக்கப்படுகின்றன. அதுவரை அக்குடும்பம் மில்லி உயிரோடு இருப்பதாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. போலீசாரும் அதே கோணத்தில் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே இக்கொலைச் சம்பவம் குறித்தும் விசாரணைகள் பற்றியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை பரபரப்பாக எழுதுகிறது.
அடுத்து 2005ம் ஆண்டு நவம்பர் வாக்கில் இளவரசர் வில்லியம்ஸின் மூட்டு வலி பற்றிய ஒரு செய்தியும் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையில் வெளியாகிறது. மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்த மூட்டு வலி விசயம் வெளியானதையடுத்து அதிர்ச்சியடைந்த இங்கிலாந்து போலீசார், இது குறித்து விசாரணை ஒன்றை நடத்துகிறார்கள். ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை தொலைபேசிகளை திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கிறது என்பது தெரிய வந்தாலும், அது நிரூபிக்கப் படவில்லை. 2002ல் இப்பத்திரிகை இழைத்த குற்றம் 2011 ஜூலையில்தான் ஆதாரபூர்வமாக பிடிபடுகிறது.
முர்டோச்சின் பத்திரிகை பல்வேறு தருணங்களில் போலீசாருக்கு லஞ்சம் கொடுத்தும், சட்டவிரோதமான வகையில் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டும் செய்திகளைத் திரட்டியுள்ளது என்பது இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக வெளியே வருகிறது. லண்டன் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடைய தொலைபேசிகளும், 9/11 இரட்டை கோபுரத் தகர்ப்பில் கொல்லப்பட்ட பிரிடிஷ் பிரஜைகளின் உறவினர்களின் தொலைபேசி உரையாடல்களும் கூட ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கின்றன என்று தெரிய வருகிறது. தொடர்ந்து நடந்த விசாரணைகளில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகை லண்டன் போலீசின் கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மொத்தத்தையும் லஞ்சம் கொடுத்து கள்ளத்தனமாக கைப்பற்றியிருக்கிறது என்ற உண்மையும் அம்பலமாகிறது. அதாவது, இங்கிலாந்தின் குடிமக்கள் யார் எப்போது எந்த வழக்கில் சிக்கியிருந்தாலும், அந்த விவரம் இப்போது முர்டோச்சினுடைய பத்திரிகையின் கைக்கு வந்துவிட்டது.
1969 இல் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை விலைக்கு வாங்கிய முர்டோச், அதனை டேப்லாய்ட் வகையைச் சார்ந்த ஒரு பத்திரிகையாக மாற்றினார். வேறு விதமாகச் சொன்னால் அது ஒரு மஞ்சள் பத்திரிகை. முர்டோச்சுக்கே சொந்தமான இன்னொரு வாரப்பத்திரிகையான ‘தி சன்’ என்ற மஞ்சள் பத்திரிகையைக் காட்டிலும் கேவலமான பத்திரிகை இது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களின் படுக்கையறைச் செய்திகள், கள்ள உறவு பற்றிய கிசுகிசுக்கள் ஆகியவைதான் இப்பத்திரிகையின் மூலதனம்.
இன்றைக்கு விவகாரம் அம்பலமானவுடன் மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் காட்டும் ஆச்சர்யம்தான் உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கது. ஏதோ ரூபர்ட் முர்டோச் இத்தனை காலமாக யோக்கியமாகத் தொழில் செய்து வந்தவர் போலவும், இப்போதுதான் அவரது ஊழல்கள் வெளியாகியுள்ளது போலவும் இந்தப் பத்திரிகைகள் அங்கலாய்க்கின்றன. ஆனால், ரூபர்ட் முர்டோச் தனது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியதிலாகட்டும், தனது கிளைகளான ஒவ்வொரு ஊடகங்களையும் வெற்றிகரமாக நடத்தியதாகட்டும் – அனைத்திலும் அவர் பின்பற்றியது பச்சை அயோக்கியத்தனமான வழிமுறைகள் தானென்பது அனைவருமே அறிந்து வைத்திருந்த ‘ரகசியம்’தான்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!
முர்டோச்சின் ஊடக ஏகபோகம். நன்றி - கார்டியன் (படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)
ஐந்து கண்டங்களையும் தழுவி பல்வேறு நாடுகளில் 175க்கும் மேற்பட்ட செய்தித் தாள்கள், நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள், இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள், உலகெங்கும் செயற்கைக்கோள் தொலைகாட்சி சேவை வழங்கும் நிறுவனங்கள் என்று பரந்து விரிந்து கிடக்கும் ரூபர்ட் முர்டோச்சின் ஊடக சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகள் நமது கற்பனைகளை விஞ்சிய ஒன்று. 1953ல் ஆஸ்திரேலியாவில் அவரது தந்தையான கெயித் முர்டோச்சின் ஊடக நிறுவனத்தின் பொறுப்பிற்கு வரும் ரூபர்ட் முர்டோச், அடுத்த சில ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் அசைக்கமுடியாத ஒரு மீடியா மன்னனாகிறார்.
பின்னர், மார்கரெட் தாட்சரின் முழுமையான ஆதரவோடு இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் பங்குகளை வாங்குவதன் மூலம் அப்பத்திரிகையைக் கைப்பற்றுகிறார். எண்பதுகளின் துவக்கத்தில், ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையின் வழமையான வடிவத்தை உதறி விட்டு அதனை ஒரு டேப்லாய்ட் வகைப்பட்ட பத்திரிகையாக மாற்றுகிறார்.
செய்திப் பத்திரிகை என்பதன் கடமை செய்திகளைச் சொல்வது எனும் இலக்கணத்தை உடைத்து, செய்திகளினூடாக மசாலாத் தூவப்பட்ட மலினமான கிசுகிசுக்களை விற்பனை செய்ததே முர்டோச்சின் பிரம்மாண்ட வளர்ச்சியின் அடிநாதமாக இருந்தது. இது துவக்கம். காலம் செல்லச் செல்ல, வெறும் கிசுகிசுக்கள் மற்றும் வலதுசாரி அரசியலின் வெறிகொண்ட துவேசப் பிரச்சாரங்கள் மட்டுமே செய்திப் பத்திரிகையின் முதன்மைச் செய்திகளாயின. சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் போன்ற மேட்டுக்குடியினரின் கள்ளக்காதல் விளையாட்டுக்கள் பற்றிய கிசுகிசுக்களைத் தேடி அவரது பத்திரிகையாளர்கள் அலையும் தேவை இருக்கவில்லை. திரைப்பட, தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனங்களையும் முர்டோச்சே நடத்தி வந்ததால், பிரபலங்கள் தேடி வந்தனர்.
முர்டோச் தொடங்கி வைத்த வழிமுறைகளைப் பிற போட்டி பத்திரிகைகளும் பின்பற்றத் துவங்கியதால், ஆபாசத்தை விற்பதில் அவர்களுக்குள்ளேயே கழுத்தறுப்புப் போட்டிகள் துவங்கின. ‘கதைகள்’ கிடைக்காத சந்தர்பங்களில் எதேச்சையாக நடந்து விடும் குற்றச் சம்பவங்களை இட்டுக் கட்டி மசாலாத் தடவி வெளியிடுவது, நடந்தேயிராத செய்திகளை உருவாக்குவது, பிரபலங்களின் படுக்கையறை விவகாரங்கள், கள்ள உறவுகள் ஆகியவற்றைத் தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் துப்பறிந்து வெளியிடுவது, அதி நவீன புகைப்படக் கருவிகள் மூலம் அவர்களது அந்தரங்கங்களைப் படம் பிடித்துப்போடுவது போன்ற கீழ்த்தரமான வழிமுறைகளைக் கையாண்டனர். இத்தகைய புகைப்பட நிருபர்கள் ‘பாப்பராஸி’ என்றழைக்கப்பட்டனர். பிரபலங்களின் அரை அம்மண, அம்மணப் படங்கள், கள்ளக் காதல்கள் ஆகியவற்றை படமெடுத்து பத்திரிகைகளுக்கு விற்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தொழில், ஒரு மாபெரும் ‘சுயதொழிலாக’ உலகமெங்கும் பரவத்தொடங்கியது. பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் காதல் விவகாரத்தை படம் பிடிப்பதற்காக பாப்பராஸிகள் அவரைக் காரில் துரத்த, அவர்களிடமிருந்து தப்புவதற்காக விரைந்த டயானாவின் கார் கவிழ்ந்து டயானா இறந்ததும், உடனே பாப்பராஸிக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் பற்றிய விவாதத்தில் பத்திரிகை உலகம் இறங்கியிதும் 90களின் செய்திகள்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!தரத்தில் காமக் கிளுகிளுப்புக்கு இணையானதும் அதே அளவுக்கு சந்தையில் விலை போகக் கூடியதுமான பண்டம் – அச்சத்தையும் வெறுப்பையும் தூண்டும் துவேசப் பிரச்சாரம். ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடையே சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வையும் அச்சத்தையும் விசிறி விட்டதில் முர்டோச்சின் ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
முர்டோச்சின் ஊடக நிறுவங்கள் தாம் இயங்கிய நாடுகள் அனைத்திலும், அங்கிருந்த வலதுசாரி பாசிஸ்டு கட்சிகளையும் அதன் தலைவர்களையுமே உயர்த்திப் பிடித்தன. இசுலாமியர்கள், இசுலாமிய நாடுகளின் மீது வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டதில் முர்டோச்சின் ஊடகங்கள் தலைமைப் பாத்திரம் ஆற்றின. இந்த அச்சமும் வெறுப்புணர்வும்தான் இன்று வரையில் ஈராக்கில் சிதறும் உடல்கள் மேற்குலக மக்களின் மனசாட்சியை உலுக்காமல் இருப்பதற்கான உளவியல் ரீதியிலான அடிப்படை ஒன்றைத் தோற்றுவித்துள்ளது.
இங்கே தலித்துகள், இசுலாமியர்கள், தமிழ் உணர்வாளர்கள், கம்யூனிஸ்டுகள் மீதான வெறுப்புணர்வை ‘தினமலர்’ திட்டமிட்டே எப்படி தோற்றுவிக்கிறதோ, அதேபோல் மேற்கில் இசுலாமிய வெறுப்பை விதைத்ததில் முர்டோச்சின் ஊடக நிறுவனங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.
இரண்டாயிரமாவது ஆண்டின் பிற்பகுதியில் இருந்தே தனது பத்திரிகைகள் மற்றும் தொலைகாட்சிகளில், ‘இதோ சதாம் அணு ஆயுதம் தயாரிக்க அவரது விஞ்ஞானிகளிடம் சொல்லி விட்டார்’, ‘இதோ ஈராக்கில் அணு குண்டு பரிசோதனை நடந்து விட்டது’ என்பது போன்ற பச்சை புளுகுகளை அவிழ்த்து விடத் துவங்கினார் முர்டோச். சதாம் உசேனால் இந்த பூமிக்கே ஆபத்து என்பது போலெல்லாம் விரிந்த அந்தக் கதைகள் ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த சாதாரண மக்களின் மனங்களில் அவரை சாத்தானின் அவதாரம் என்று பதிய வைத்தது. சதாம் அழிக்கப் படவேண்டியவர் என்றும், இந்தப் போரினால் நாகரீக உலகத்து மக்களின் நலவாழ்வு பாதுகாக்கப்படும் என்றும் அம்மக்கள் நம்பும் அளவுக்கு உளவியல் ரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் மூலம் போருக்கு ஆதரவாக உலகெங்கிலும் ஒரு பொதுக்கருத்தை உண்டாக்குவதில் முர்டோச் வெற்றியடைந்தார்.
ஈராக்கின் மேலான யுத்தம் துவங்கியதும் ஜார்ஜ் புஷ்ஷுக்கும், டோனி பிளேருக்கும் தனது முழுமையான ஆதரவைத முர்டோச் வெளிப்படையாகத் தெரிவித்தார். அமெரிக்கா இதுகாறும் நடத்தியுள்ள போர்களைப் பற்றிய செய்திகளை சாகசகக் கதைகள் போல் விவரித்து, போர் என்பது மனிதர்கள் கொல்லப்படும் கொடூர நிகழ்வு என்பதாக இல்லாமல் ஒரு சாகச விளையாட்டு என்பதாகப் பொதுபுத்தியில் பதியச் செய்தார். சர்வதேச அளவிலான பிற முதலாளித்துவ பத்திரிகைகளும் இதே பாணியில்தான் இயங்கின என்றாலும், முர்டோச்சின் பத்திரிகைகளே இதில் முன்னணியில் நின்றன.
போரின் முடிவில் அணு ஆயுதங்கள் ஏதும் ஈராக்கில் கண்டிபிடிக்கப் படவில்லை. ஆனால், முர்டோச்சின் பத்திரிகைகள் உள்ளிட்டு அந்தக் கதைகளைப் பரப்பிய எந்த முதலாளித்துவ ஊடகமும், இத்தகையதொரு பொய்யான பொதுக்கருத்தை உருவாக்கியதற்காக தண்டிக்கப்பட வேண்டும் என்று முதலாளித்துவ அறிஞர்களோ மேற்குலக ஜனநாயகவாதிகளோ கருதவில்லை. போரில் கொல்லப்பட்ட  ஈராக்கியர்களின் எண்ணிக்கை சுமார் பத்து லட்சம். இன்று அந்த நாடே வாழ்க்கையிழந்து நிற்கிறது. எனினும் முர்டோச் வெளியிட்ட செய்திகளுக்கு என்ன ஆதாரம் என்றோ, அதன் விளைவுக்கு என்ன பதில் என்றோ யாரும் கேட்கவில்லை.
பல்வேறு நாடுகளின் ஆளும் வர்க்கத்தோடும் அதிகார வர்க்கத்தோடும் முர்டோச் கொண்டிருந்த உறவும், செல்வாக்கும், அவரது மீடியா சாம்ராஜ்ஜியத்தின் அபரிமிதமான வீச்சும் அவருக்கு வரம்பற்ற பலத்தையும் திமிரையும் அளித்திருந்தன. ஈராக் மட்டுமல்லாமல், சிரியா, லிபியா, பாலஸ்தீனம் என்று அமெரிக்காவுக்கு அடங்காத இசுலாமிய நாடுகள் மீதும் அதன் தலைவர்கள் மீதும் விஷத்தைக் கக்கி, உலகெங்கும் மக்கள் மத்தியில் இசுலாமிய விரோதத்தை ஊட்டி வளர்க்கும் முர்டோச்சின் பத்திரிகை நிறுவனத்தில் இரண்டாம் பெரிய பங்குதாரர் சவூதி இளவரசர் அல்லாவி பின் தலால். (மதமா – வர்க்கமா என்கிற முரண்பாடுகள் எழும் போது முதலாளித்துவவாதிகள் எப்போதும் சரியான நிலையையே எடுக்கிறார்கள் என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டு).
தற்போது முர்டோச்சின் வழிமுறைகள் அம்பலமாகியிருப்பினும் இதெல்லாம் முதலாளித்துவ உலகத்திற்கு புதிய செய்தியில்லை. இன்றைக்கு முர்டோச்சைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் பிற முதலாளித்துவ ஊடகங்கள் பின்பற்றுவதும் இதே வழிமுறைகளைத்தான். ஆயினும், தற்போது எழுந்திருக்கும் சலசலப்புகளால் 168 வருடங்களாக வெளியாகி வந்த ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பத்திரிகையை நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு முர்டோக் ஆளாகியுள்ளார். விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு கைகட்டி நிற்கிறார்.
எப்பேர்பட்ட கொம்பனாக இருந்தாலும் அந்தத் தவறுக்கு தண்டனை உண்டு என்பதைப் போன்றும், மேற்கு நாடுகளில் நிலவும் தனிமனித உரிமை போன்ற ஜனநாயக விழுமியங்கள் இன்னமும் செத்துப் போகாமல் இருப்பதன் ஒரு சமகால சாட்சிதான் முர்டோச் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது என்பது போலவும் சர்வதேச ஊடகங்கள் எழுதுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களும் அவ்வாறே நம்பவைக்கப் படுகிறார்கள். உப்புத் தின்றவன் தண்ணி குடிப்பான்; தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். படம் முடிந்தது. ரசிகர்கள் வீட்டுக்குக் கிளம்பலாம என்று முதலாளித்துவ ஊடகங்கள் இதற்கு ஒரு ‘சுபம்’ போட்டு முடிக்கப் பார்க்கின்றன.
ஆனால், இது அத்தனை சுலபத்தில் கடந்து போகும் ஒரு பிரச்சினையல்ல. முர்டோச்சின் பாணியும் வழிமுறைகளும் அவருக்கு மட்டுமே சொந்தமானதாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க, இன்றைக்கு ‘குற்றங்கள்’ என்று அவர்மேல் சுமத்துப்பட்டுள்ள செயல்கள் எதுவுமே அவர் புரிந்துள்ள உண்மையான குற்றங்களின் நிழலைக் கூட தொடவில்லை என்பதே உண்மை.
அரச குடும்பத்தையே ஒட்டுக்கேட்டது, ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களின் தனிமனித உரிமையில் கைவைத்தது, போன்ற சில்லரை அத்துமீறல்கள்தான் இன்று இங்கிலாந்திலும் பிற மேற்கத்திய நாடுகளிலும் அதிர்ச்சியையும் சத்தியாவேசத்தையும் தூண்டியுள்ளது. ஈராக் பற்றி வெளியிட்ட புளுகுச் செய்திகளுக்காக அவரைத் தண்டிக்க வேண்டும் என்று எவரும் கோராததற்குக் காரணம், அது ஏகாதிபத்தியங்களின் விருப்பம் மற்றும் நலன் சார்ந்தது. இந்த அடிப்படையில் இருந்துதான் மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களுடைய உயிர்களை விட அரச குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் ‘ப்ரைவசி’ மற்றும் தனிநபர் உரிமைகளை மேன்மையானதாகச் சித்தரிக்கும் அவர்களின் விசாரணைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!நியூஸ் கார்பொரேஷன் நிறுவனத்தின் தலைமையை இன்னமும் முர்டோச் குடும்பத்தினரே ஆக்கிரமித்துள்ளனர். மேற்கத்திய கார்ப்பரேட் நிர்வாக முறையின் பார்வையில் மிகவும் பின்தங்கியதான இந்தக் குடும்ப ஆதிக்கமும், முர்டோச்சை நோக்கி எழும் விமர்சனங்களுக்கு ஒரு கூடுதல் காரணமாக இருக்கிறது. கூக்குரல்கள் அனைத்தும் இந்தத் ‘தலையை’ மட்டுமே குறிவைக்கின்றன. நியூஸ் கார்பொரேஷன் எனும் மொத்த உடலையும் இயக்கி அதன் நாளங்களில் இரத்தமாய்ப் பாய்ந்து கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நலன் குறித்த விவாதங்களே எழவில்லை என்பதிலிருந்து நாம் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள முடியும்.
மீளாத போர் வெறியில் மூழ்கிக் கிடக்கும் ஏகாதிபத்தியங்களுக்கு ரூபர்ட் முர்டோச்களின் தேவை தீர்ந்து விடவில்லை. சதாம் உசேனும், பின்லேடனும் ஒழிந்து விட்டார்கள். ஆனால், நாளையே வேறு ஒரு மூன்றாம் உலக நாட்டின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் துவக்குவதற்கு முன் மக்களின் பொதுபுத்தியைக் கட்டமைக்க வேண்டியிருக்கும். இசுலாமியர்கள் மேல் கருத்துக்களத்தில் தாக்குதல் தொடுத்து அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டியிருக்கும். அதற்கு ரூபர்ட் முர்டோச் கட்டாயம் தேவைப்படுவார்.
அவர் தயாரித்து வழங்கிய பாசிச பிரச்சார ஆயுதத்தின் பணி இன்னமும் நிறைவுறவில்லை. இறுகும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வை ஏகாதிபத்தியங்கள் போர்களினூடேதான் தேடிச் செல்லும். அப்போது பொறுத்தமான கதைகள் விதைக்கப்பட வேண்டும்; வில்லன்கள் குறித்த அச்சமூட்டும் வர்ணனைகள் செய்யப்பட வேண்டும்; மக்களின் பொதுக்கருத்தை நெம்பி வளைக்க வேண்டும் – அதற்கு நியூஸ் கார்ப்பொரேஷன் போன்ற பிரச்சார ஆயுதங்கள் வேண்டும். எனவேதான், படுக்கையறையை எட்டிப்பார்த்த ரூபர்ட் முர்டோச்சின் அநாகரீகங்கள் பரபரப்பாகப் பேசப்படும் அளவுக்கு அவரின் கொலைப் பாதகங்கள் பேசப்படுகிறதில்லை.
ரூபர்ட் முர்டோச் ஊடகத் துறையில் துவக்கி வைத்துள்ள போக்குகள் மேற்குலகம் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றல்ல. அதன் பாதிப்புகளும், பிரதி பிம்பங்களும் உலகெங்கும் உள்ள முதலாளித்துவ ஊடகங்களின் செயல்பாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவில் தனியார் தொலைகாட்சி சேனல்கள் அனுமதிக்கப்பட்டு, இன்றைய தேதியில் சுமார் 600 தொலைக்காட்சி சேனல்களுக்கான லைசென்சுகளை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை வழங்கியிருக்கிறது.
மேற்கத்திய நாடுகளைப் போல் செய்திகளுக்கு மசாலா சேர்ப்பது, பரபரப்புக் கூட்டும் ‘Breaking News’ மற்றும் ‘Exclusive News’ போன்ற கழிசடைக் கலாச்சாரங்கள் தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஸ்டார் குழுமத்தால் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. புதிய ரக உயர் நடுத்தரவர்க்கத்தினரின் நொறுக்குத் தீனிகளுக்கு இந்த பரபரப்பு பாணி செய்திகள் சுவை கூட்டின.
செய்தியையும் அதன் கண்ணோட்டத்தையும் பகுத்தறிய முடியாத வண்ணம், ரூபர்ட் முர்டோச்சின் பாணியை நகலெடுத்து ‘டைம்ஸ் நௌ’, ‘என்.டி.டி.வி.’, ‘ஐ.பி.என்.’, ‘டி.வி.9′, ‘ஹெட்லைன்ஸ் டுடே’ என்று புற்றீசல் போல ஊடக கார்பரேட்டுகள் தோன்றின. இவர்களின் செய்திச் சந்தையின் இயக்கத்திற்கான அச்சாணி, மலிவான முறையில் உணர்ச்சியையும் பரபரப்பையும் தூண்டுவது மட்டுமே என்றான பின்னால், இதுகாறும் போலியாகவாவது தூக்கிப் பிடிக்கப்பட்டு வந்த நேர்மை, புனிதம் போன்ற பழைய விஷயங்கள் தேவையற்றதாகின.
லண்டனைச் சேர்ந்த மாணவியான மில்லி டோலரின் மரணத்தில் ‘நியூஸ் ஆப் த வோர்ல்ட்’ பின்பற்றிய அதே வழிமுறைகளைத்தான் தில்லியைச் சேர்ந்த ஆருஷி என்கிற பள்ளி மாணவியின் மரணத்திலும் இந்திய ஊடகங்கள் பின்பற்றின. ரூபர்ட் முர்டோச்சின் ஊடகங்கள் உலகளவில் இசுலாமியர்கள் மீதும் இசுலாமிய நாடுகள் மீதும் வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றன என்றால், இந்திய முதலாளித்துவ ஊடகங்களோ இசுலாமியர்கள் மீதும் பாகிஸ்தான் மீதும் அவதூறுப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. ஒவ்வொரு முறை இந்தியாவில் குண்டுகள் வெடிக்கும் போதும், செய்திச் சேனல்கள் விசாரணையேதுமின்றி இசுலாமியர்களை நோக்கியும் பாகிஸ்தானை நோக்கியும் விரலைச் சுட்டுகின்றன.
ரூபர்ட் முர்டோச்: ஊடகங்களால் உலகை வேட்டையாடும் கிழட்டு நரி!முர்டோச்சின் ஊடகங்கள் சொன்ன பேரழிவு ஆயுதங்கள் பற்றிய புளுகுகள் அம்பலமானதைப் போன்றே இந்திய ஊடகங்கள் இசுலாமியர்களைக் குற்றவாளிகளாக்கிய எத்தனையோ குண்டு வெடிப்புகளின் உண்மையான காரணம் இந்துத்துவ கும்பல்தான் என்கிற உண்மை அம்பலமாகியிருக்கிறது. தனது பொய்கள் அம்பலமான போது ரூபர்ட் முர்டோச் கடைபிடித்த அதே விதமான கள்ள மௌனத்தைத்தான் இந்திய ஊடகங்களும் கடைபிடிக்கின்றன.
மேற்கில் அன்றாட வாழ்வின் குரல்வளை மேல் அமர்ந்து அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார யதார்த்தத்தை பயங்கரவாத பீதியூட்டி மடைமாற்ற முடிகிறது. இங்கே தமது வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிக் கொள்ள போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள், ஆதிவாசி மக்களின் போராட்டங்களைப் பின்தள்ளுவதற்கு பயங்கரவாதம்  மட்டுமல்ல காந்தியவாதமும் ஊடகங்களுக்குப் பயன்படுகிறது.
நாட்டின் அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிப்பதிலும், திசை திருப்புவதிலும், அரசியல் தலைவர்களை உருவாக்குவதிலும் அழிப்பதிலும், ஊடகங்களின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள், ரசனை, சிந்தனை முறை உள்ளிட்ட அனைத்தையும், அதாவது நமது ஆளுமையை அடக்கி ஆள்வதில், அல்லது வளைந்து உருவாக்குவதில் ஊடக முதலாளிகளின் பாத்திரம் முன் எப்போதைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்து விட்டது.
ரூபர்ட் முர்டோச் எனும் கிழவன் நமது தோளில் அமர்ந்து உத்தரவிடுகிறான். சிரிக்கவும், வெறுக்கவும், அழவும் சொல்லிக் கொடுக்கிறான். முன்னால் சென்று வழி காட்டுகிறான். பின்னால் நின்று கண்காணிக்கிறான்.
அவனைக் கூண்டில் ஏற்றிவிட்டதாகவும் தண்டிக்கப்போவதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள் பத்திரிகை சுதந்திரத்தின் காவலர்கள்.
____________________________________________________________________
- புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011 

Thursday 19 January 2012

காணொளி - லிபியாவில் இடம்பெற்ற அமெரிக்க ஜிஹாதின் அக்கிரமம்!


இஸ்லாம் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கமாகும்.  அல்லாஹ்வின் இறுதித் தூதை சுமந்து வந்த றசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை அல்குர்ஆன் அகிலத்திற்கான ஓர் அருட்கொடை என வர்ணிக்கின்றது.

போரின் போதும் சமாதான சூழ்நிலையிலும் ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும்? அவனது செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும்? என்று நபி (ஸல்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

போர் ஒன்றின் பின்னர் கைதிகள் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என இஸ்லாம் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.  நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு தளபதியாக நின்று போரியல் விதி முறைகளை எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

பத்ர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளை, அவர்களை வைத்து முஸ்லிம் சிறார்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுகொடுத்ததன் பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.  உலகத்திற்கு ஓர் அருட்கொடையாக  அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் சகல துறைகளுக்கும் முன்மாதிரி என்று நாங்கள் உரத்து கோஷமிடும் அளவிற்கு  எங்களில் அந்த முன்மாதிரி இல்லை என்பதை எமது சமகால செயற்பாடுகள் சாட்சிகளாக இருக்கின்றன.

இங்கே நீங்கள் காண்பது 2011 செப்டம்பர் மாதம் 20ம் திகதி லிபியாவின் சிர்த் நகரத்தில் புனித இஸ்லாத்தின் பெயரில் ஜிஹாதின் பெயரில் இடம் பெற்ற காட்டுமிராண்டித்தனம் ஒன்றை எடுத்துக் காட்டும் ஒரு காணொளி.

லிபியாவின் தலைவர் கதாபியின் கடைசி நிமிடங்களில் அவரோடு இறுதிவரை நின்று அமெரிக்க நேட்டோ படைகளோடும், பல அரபு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அல்கைதா கூலிப்படைகளோடும் போராடிய மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ் அவர்களின் உடலத்திற்கு, அமெரிக்காவினாலும் அதன் அடிவருடி புததிஜீவி யூசுப் அல் கர்ளாவி போன்ற கைக்கூலிகளினாலும் வடிவமைக்கப்பட்ட ஜிஹாதிய வாதிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளை இந்தக் காணொளியில் பார்க்கமுடியும்.

அல்லாஹு அக்பர் என்ற வீர முழக்கத்துடன் அரங்கேறும் இந்த அக்கிரமங்களை,  அல்லாஹ்வையும் அவனது துாதர் (ஸல்) அவர்களையும் எற்றுக்கொண்ட ஒருவனால் அங்கீகரிக்க முடியாது.

இறந்த மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ் அவர்களின் முகத்திற்கு நீல நிற சாயத்தை பூசி அவரது உடலத்தை வதைப்படுத்தும் அவரின் உடமைகளை கொள்ளையிடும் “அமெரிக்க ஜிஹாதிய” வாதிகளை அவர்களின் அநாகரிகமான செயல்களை இந்தக்காணொளி தெளிவாகக் காட்டுகிறது.


                             லிபிய இராணுவ மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ்

நாம் ஜாஹிலிய்யா என்று வர்ணிக்கின்ற மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் கூட போர் ஒன்றின் பின்னர் நடக்கும் இத்தகைய அட்டுழியங்களை அனுமதிப்பதில்லை. ஜெனீவா சாசனம் கூட இதனைத் தடுக்கின்றது.

அல்லாஹ்வின் திருப்திக்காக அநீதிக்கு எதிராக போராடுதல் என்ற கருத்தை வழங்கும் ஜிஹாத் என்ற சொல்லாடல் இன்று அநீதியாளர்களின், அநியாயக் காரர்களின் தேவைக்காக அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப் படுகின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.

ஜிஹாத் தொடர்பாக முழு முஸ்லிம் உம்மத்தும் முழுமனதாக ஏற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீன் மீட்பை அதற்கான போராட்டத்தை எதிரிகள் திசை திருப்பி விட்டார்கள். பலஸ்தீன் போராட்டம் அநாதையாக்கப் பட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களை தனது சொந்த பூமியில் அநாதைகளாக்கிய இஸ்ரேலிய அக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக முஸ்லிம் உம்மத்தில் ஊற்றெடுத்து வந்த ஜிஹாதிய போர்க்குணம் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டிருக்கிறது.

எதிரிகளை விட்டு விட்டு எங்களுக்குள்ளே மோதுகின்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்குள் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் எதிரிகள் என்று நாங்கள் காலம் காலமாய் நம்பி வந்தவர்களே இப்போது எங்களுக்கு கட்டளை இடுகின்றார்கள்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் தனது எதிரிகளை இனம் கண்டு எங்களுக்குக் காட்டித்தருகின்றன. அதற்கு ஜிஹாதிய பத்வா வழங்கி ஆன்மிக உரமிட்டு உணர்வுகளை தட்டிக்கொடுக்க கைக்கூலிகள் பல பேர் காத்துக்கிடக்கின்றார்கள்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு இருந்த அச்சுறுத்தல்கள் கட்டம் கட்டமாக அழிக்கப்படுகின்றன. தடைகள் தகர்க்கப்படுகின்றன. தேசங்கள் சிதைக்கப்படகின்றன.

ஆப்கானைப் போன்று, ஈராக்கைப் போன்று அமெரிக்காவின் அதிகாரத்திற்குக் கீழ் லிபியாவை கொண்டு வந்த திருப்தியில் அடுத்த இலக்கை நோக்கி இந்த ஆன்மீக அட்டகாசம் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

இப்போது,  ஐநாவை  சிரியா விவகாரத்தில் தலையிடுமாறு வேண்டி  ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியும், அமெரிக்க ஆதரவு ஜிஹாதின் “கோட் பாதரு'' மான யூசுப் அல் கர்ளாவி கோரிக்கை விட்டிருக்கிறார்.

பலஸ்தீன போராட்டத்திற்கு இன்றுவரை உறுதுணையாக இருக்கும், பலஸ்தீன போராளிகளுக்கு தனது நாட்டில் அலுவலகங்களை அமைத்துக் கொடுத்து, சகல ஒத்தாசைகளையும் வழங்கி சுதந்திரமாக அவர்களை செயல்பட அனுமதித்திருந்த சிரியாவின் நிலையும் நாளை லிபியாவைப் போன்று மாற்றமடையலாம்.

இந்த ஏகாதிபத்திய அரசியல் நலன்காக்கும் இஸ்லாமிய (?) ஏஜன்ட்களின் அடுத்த எஜன்டா எதுவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்!



Wednesday 18 January 2012

கத்தார் மன்னரின் இரகசிய இஸ்ரேல் விஜயம்


கத்தார் மன்னர் செய்க் ஹமாத் பின் கலீபா இஸ்ரேல் நாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேண்கொண்டு இஸ்ரேலிய கதிமா கட்சியின் தலைவி ஸிபி லிவினியை சந்தித்துள்ளார்.

இந்த இரகசிய பயணத்தில் கத்தாரின் பிரதமர் செய்க் ஹமாத் பின் ஜாஸிம் அல்தானியும் பங்குகொண்டுள்ளார்.

இந்த இரகசிய பயணத்தின் போது இஸ்ரேலிய அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருப்பதாக அறிய வருகின்றது.

இஸ்ரேலுடனான எரிவாயு ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட கத்தார் மன்னர், கத்தாரின் நடைமுறையிலுள்ள பாடநூல்களை மறுசீரமைப்பது பற்றிஅந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் அறிய வருகின்றது.

கத்தாரின் இஸ்ரேலுடனான இந்த உறவு அந்நாட்டிலுள்ள மற்றும் அந்த நாட்டை அதரிக்கின்ற இஸ்லாமியவாதிகளிடம் எவ்வித எதிர்ப்பு உணர்வுகளையும் ஏற்படுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மற்றும் இது தொடர்பாக அரச குடும்பத்தோடு மிகவும் நெருங்கிய உறவு வைத்திருக்கும் யூசுப் அல் கர்ளாவி ஆழ்ந்த மௌனம் சாதித்து வருகின்றார்.

Tuesday 17 January 2012

கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!


அவை மிகக் கலங்கலான வீடியோக் காட்சிகள். கடந்த வாரம் வெளியான அந்தக் காட்சிகளைக் கண்டு உலகெங்கும் மனிதாபிமானம் கொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். முதல் வீடியோவில் அந்த வயதான மனிதர் காரிலிருந்து தரதரவென்று இழுத்துச் செல்லப் படுகிறார். அவரது உடலெங்கும் இரத்தக்கறை படிந்துள்ளது. தலை கலைந்துள்ளது. அங்குமிங்கும் அலைபாயும் கண்களில் இன்னதென்று விளக்கவியலாத ஒரு உணர்ச்சி உறைந்து போயிருக்கிறது. வாயிலிருந்து ஏதோ புரியாத வார்த்தைகள் வெளிப்படுகிறது. அந்த மனிதரைக் கீழே தள்ளும் வெறி பிடித்த கூட்டம் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைக்கிறது. தொடர்ந்து சில துப்பாக்கி முழக்கங்கள் கேட்கிறது. வேதனை அலறலும் மரண ஓலமும் வெறிக்கூச்சலும் எழுகிறது. இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் கைபேசிக் காமெரா அங்குமிங்குமாய் அலைபாய்கிறது. சிறுது நேரத்திலேயே அனைத்தும் ஒரு முடிவுக்கு வருகிறது. தொடரும் காட்சிகளில் உயிரற்ற அந்த மனிதரின் பிணம் தரையோடு தேய்த்து இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறார்கள். சுற்றி நிற்கும் துப்பாக்கியேந்திய ‘வீரர்கள்’ வெற்றி முழக்கமிடுகிறார்கள்.


———————————————————


இது இரண்டாவது வீடியோக் காட்சி. ஒரு அடைசலான அறை. அதன் ஒரு மூலையில் இரத்தம் தோய்ந்த உள்ளாடைகளோடு இளைஞனொருவன் சுவரில் சாய்ந்து அமர்ந்துள்ளான். உறுதியான பார்வை. தன் உடலில் உண்டாயிருக்கும் காயங்களை அசிரத்தையாகப் பார்வையிடுகிறான்.  ‘உன் காயங்களுக்கு நாங்கள் மருந்து போடுவோம்’ என்று துப்பாக்கியேந்திய ‘வீரன்’ ஒருவன் உறுதியளிக்கிறான். ‘இது காயங்களல்ல. என் மார்பில் பதிக்கப்பட்ட பதக்கங்கள்’ என்கிறான் அந்த இளைஞன். மெல்லிய ஆனால் உறுதியான குரல். அவன் பார்வையில் அச்சமில்லை. தண்ணீர் குடிக்கிறான். தனது கடைசி சிகரெட்டை இரசித்துப் புகைக்கிறான். சில நொடிகளிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்த முடிவு அவன் எதிர்பாராத ஒன்றல்ல.
அந்த வயதான மனிதர் முவாம்மர் அல் கடாஃபி. அந்த இளைஞன் கடாஃபின் மகன் முட்டெஸிம் அல் கடாஃபி. கடந்த 20-ம் தேதி லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியும் அவரது மகன் முட்டெஸிம் அல் கடாஃபியும் சிர்ட்டே நகரக்கு வெளியே நேட்டோ கூலிப்படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளோடு நேட்டோ படைகளின் ‘மனிதாபிமானம்’ ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. சிர்ட்டே தான் கடாஃபியின் பூர்வீகம். இதே மண்ணில் தான் எழுபதாண்டுகளுக்கு முன் கடாஃபி பிறந்திருந்தார்.
கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி! -
கடாஃபி - மூட்டெஸிம்
அரபுலகில் நடந்த ‘வண்ணப் புரட்சிகளைத்’ தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதத்துடன் லிபியாவின் பெங்காஸி பகுதியை நேட்டோ ஆதரவு பெற்ற கூலிப்படை ஒன்று கைபற்றுகிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கும், கத்தார் போன்ற கைக்கூலி நாடுகளுக்கும் லிபிய மக்களின் மேல் திடீர் ‘பாசம்’ பொத்துக் கொண்டது. இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி நேட்டோ படைகள் தரைவழியே முன்னேறி வந்த கூலிப்படைக்கு ஆதரவாக வான்வழித் தாக்குதல் தொடுத்து வந்தது.
இந்த விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை லிபியர்கள் மேல் வீசியிருக்கிறார்கள். லிபியாவின் மேலான கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆரம்பித்தது. தாக்குதல் துவங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக B-52 ரக போர் விமானம் மூலம் 45 டன் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதந்த நாசகாரிக் கப்பல்களில் இருந்து சிறிய ரக அணு ஏவுகணைகளை (Uranium Depleted missiles) வீசியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான அப்பாவி லிபியர்களின் பிணத்தின் மேல் நேட்டோ நடத்திய ‘மனிதாபிமான’ வெற்றிப் பேரணியின் விளைவாய் ஆகஸ்ட் 23-ம் தேதி லிபிய தலைநகர் திரிபோலி கூலிப்பட்டாளத்தின் கையில் விழுகிறது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவுப் படைகளோடு திரிபோலியிலிருந்து பின்வாங்கும் கடாஃபி, தனது சொந்த ஊரான சிர்டே பகுதிக்குத் தப்பிச் செல்கிறார். இதற்கிடையே கடந்த ஒரு மாத காலமாக சிர்டே நகரத்தை தரை மார்க்கமாக சுற்றி வளைக்கும் கூலிப்படை, அதைக் கைப்பற்றவும் கடாஃபியைத் தீர்த்துக் கட்டவும் கடும் பிரயத்தனங்கள் செய்து வந்தது. இதற்கு ஆதரவாக நேட்டோ படைகள் வான் மார்க்கமாக தாக்குதல் தொடுத்து வந்தது. பல்லாயிரம் அப்பாவி மக்கள் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
கடாஃபி கொல்லப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. கடந்த 18-ம் தேதி த்ரிபோலிக்கு ஒரு இரகசிய பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளிண்டன், அங்கே கூலிப்படையின் ஆதரவாளர்கள் மத்தியில் ‘கூடிய விரையில் கடாஃபி கொல்லப்படுவார்’ என்று உறுதியளித்துள்ளார். கடாஃபியைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்பது அவர்கள் நோக்கமாக இல்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அமெரிக்காவோடு கடந்த பத்தாண்டுகளாக கடாஃபி கொண்டிருந்த நெருக்கமும், லிபிய மண்ணில் அமெரிக்கா நடத்தி வந்த இரகசிய சித்திரவதை மைய்யங்கள், கடாஃபியோடு போட்டுக் கொண்டி இரகசிய இராணுவ ஒப்பந்தங்கள் போன்றவை பற்றி அவர் வாய் திறக்கும் சாத்தியம் இருந்தது. அப்படியொன்று நடந்து, தனது மனிதாபிமான இமேஜுக்கு இழுக்கு நேர்வதை அமெரிக்கா விரும்பவில்லை.
இந்நிலையில், கடந்த இருபதாம் தேதி கடாஃபி தனது நெருக்கமான ஆதரவாளர்களோடு சிர்ட்டே நகரை விட்டு தப்பிச் செல்வதை அறிந்த நேட்டோ, தனது போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அவர் நகர முடியாமல் செய்கிறது. இந்தத் தகவலை தரையிலிருந்து இயங்கும் கூலிப்படைக்குத் தெரிவித்து, கடாஃபியும் அவரது மகனும் கொல்லப்படுவதை உறுதி செய்து கொள்கிறது.
மரணம் நெருங்கி வந்த அந்த இறுதி நிமிடங்களில் கடாஃபியின் கண்களில் தெரிந்த அந்த உணர்ச்சியின் பொருளென்ன? சகல சௌபாக்கியங்களுடனும் வசதிகளுடனும் சுகித்திருந்த அந்த இளைஞனை எள் அளவும் மரணபயமின்றி அவ்வாறு பேச வைத்த உணர்ச்சி என்னவாக இருக்கும்? அது என்னவாயிருக்குமென்று இவர்களின் மரணச் செய்தி கேட்டதும் ‘வாவ்’ என்று குதூகலித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ஹிலாரி கிளிண்டனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், அவரது சொந்த நாட்டில் ஒவ்வொரு நகரமாய் ஆக்கிரமித்துச் சூழ்ந்து வரும் 99% அமெரிக்கர்களுக்கு அது சர்வ நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்.
ஒபாமாவுடன் கடாஃபி
ஒபாமாவுடன் கடாஃபி
முவாம்மர் அல் கடாஃபி ஒரு முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்று சொல்லி விட முடியாது. அறுபதுகளின் இறுதியில் உலகெங்கும் உண்டான ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையின் லிபிய பிரதிநிதி தான் முவாம்மர் அல் கடாஃபி. 1969-ல் திடீர் புரட்சி மூலம் இத்ரீஸின் மன்னராட்சிக்கு முடிவுகட்டி அதிகாரத்திற்கு வரும் கடாஃபி, அதற்கு முன் லிபிய மண்ணில் மேற்கத்திய நாடுகள் நிறுவியிருந்த எண்ணை நிறுவனங்களை அரசுடமையாக்கினார். அமெரிக்காவுக்கு லிபியாவில் இருந்த வீலஸ் விமான தளத்தை இழுத்து மூடினார். அது தான் அன்றைய தேதியில் ஆப்ரிக்க கண்டத்திலேயே அமெரிக்காவுக்கு இருந்த மிகப் பெரிய இராணுவ செயல்தளம். ஆனால், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின் கடாஃபி இதற்கெல்லாம் நேரெதிரான நிலையை எடுக்கிறார்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தியதாகட்டும், இந்த நூற்றாண்டின் துவக்க பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் ‘தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு’ வால் பிடித்ததாகட்டும், ஐரோப்பிய அமெரிக்க எண்ணை நிறுவனங்களுடன் எண்ணை ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்களை போட்டதாகட்டும் – அவர் ஏகாதிபத்தியங்கள் மனங்கோணாதவாறு நடந்து கொள்வதில் எச்சரிக்கையாகவே இருந்தார். இப்படி ஒருபக்கத்தில் மக்கள் விரோத பொருளாதார நடவடிக்கைகள் எடுத்தும், தனது குடும்ப சர்வாதிகார ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியும் மிருக பலத்துடன் லிபிய மக்களை அடக்கியாண்ட அதே காடாஃபி தான் தனது மக்களுக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைந்தபட்ச அளவுக்காவது உறுதிப் படுத்தியிருந்தார்.
லிபியாவை ஆப்ரிக்காவின் ஸ்விட்சர்லாந்து என்பார்கள். இந்தப் புதிய நூற்றாண்டுக்குள் லிபியா நுழைந்த போது அது ஒப்பீட்டளவில் பிற ஆப்ரிக்க நாடுகளை விட சிறப்பான மனித வளக் குறியீடுகளைக் கொண்டிருந்ததை மேற்கத்திய நாடுகளே மறுப்பதில்லை. எண்ணை வர்த்தகத்தை கடாஃபி குடும்பம் நேரிடையாகக் கட்டுப்படுத்தி அடித்த கொள்ளையில் ஊதாரித்தனமான சுகபோகத்தில் திளைத்திருந்த போதிலும் அதன் லாபத்தில் ஒரு பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினார். மேற்கத்திய நாடுகளின் கார்ப்பொரேட் கம்பெனிகளோடு எண்ணை துரப்பண ஒப்பந்தங்களைப் போட்டிருந்தாலும், எண்ணை வர்த்தகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் முழுமையாக ஒப்படைக்காமலே வைத்திருந்தார்.
________________________________________________________
இப்போது லிபியா ‘விடுவிக்கப்பட்டிருக்கும்’ நிலையில், அதன் எண்ணை வளங்களும் தங்கம், யுரேனியம் உள்ளிட்ட அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்களும் முழுமையாக பன்னாட்டுக் கம்பெனிகளின் கரங்களில் வந்து விழுந்துள்ளது. ஈராக்கில் விட்டதை லிபியாவில் பிடிக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேலும், லிபிய அரசாங்கத்தோடு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் செய்திருந்த சீனா, ரசியா, பிரேஸில் போன்ற நாடுகளையும் போட்டியிலிருந்து விலக்கியாகி விட்டது. கலகக்காரர்கள் பெங்காஸி பகுதியைக் கட்டுப்படுத்தியிருந்த ஆரம்ப காலத்திலேயே அவர்களின் அதிகாரத்தை அங்கீகரிக்கும் மேற்குலக நாடுகள், அவர்களோடு எண்ணை வர்த்தகம் பற்றிய பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து விட்டனர். மேலும், சீனாவோடும் ரசியாவோடும் முந்தைய லிபிய அரசாங்கம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
ஆப்ரிக்க கண்டம் முழுவதையும் தனது சுரண்டலுக்கான பின்னிலமாக வைத்திருப்பது, இதில் போட்டிக்கு வரும் சீனா ரசியா போன்ற நாடுகளை ஓரங்கட்டுவது போன்ற ஏகாதிபத்திய நலனில் இருந்து பிறந்தது தான் அமெரிக்காவின் ‘மனிதாபிமான’த்திற்கும்’ ஜனநாயகத்தை நிலை நாட்ட அவர்களுக்கு புதிதாய் பிறந்திருக்கும் இந்த அக்கறைக்கும் அடிப்படையான காரணம். ஏற்கனவே அரபுலக மன்னர்களெல்லாம் அமெரிக்கப் பாத நக்கிகளாக இருக்கும் நிலையில், எண்ணை வளத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பிராந்தியத்தில் இரண்டாம் இடத்திலிருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளையும் வளைத்துக் கொண்டால், உலக எண்ணை ரிசர்வில் 60 சதவீத அளவுக்கு அமெரிக்காவின் பிடியில் சிக்கும்.
தற்போது ஏகாதியபத்திய உலக ஒழுங்கைக் கவ்விப் பிடித்திருக்கும் பொருளாதாரப் பெருமந்தத்திற்கான தீர்வை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டுவது, இதற்கான தடைகளைப் போர்களின் மூலம் அகற்றுவது என்கிற பாதையில் மேற்குலகம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே புழுத்து நாறும் கட்டமைப்புச் சீர்கேடுகள் இந்த மீள முடியாத போர்களால் ஒரு முடிவுக்கு வந்து விடப் போவதில்லை என்பதையே அமெரிக்கா தொடங்கி மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரையில் பற்றிப் பரவும் ‘ஆக்கிரமிப்புப்’ போராட்டங்கள் காட்டுகின்றன.
உலகை ஆக்கிரமிக்கக் கிளம்பியிருக்கும் அமெரிக்காவின் காலடியிலேயே அதன் ஆன்மாவை ஆக்கிரமிக்கும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கத் தெருக்களில் திரண்டிருக்கும் 99 சதவீத மக்களின் முழக்கங்களில் அடங்கியிருக்கிறது லிபிய மக்களின் ஒப்பாரிச் சத்தம். உலகை மேலாதிக்கம் செய்யது துடிக்கும் அமெரிக்காவின் கனவுகளின் பொருளாதார அடித்தளத்தின் மீது அதன் சொந்த மக்களே தொடுத்திருக்கும் இந்தப் போர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களின் வெற்றியை கொண்டாட முடியாதபடி வைத்திருக்கிறது. தற்போது வலுவிழந்து மரணக் குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய கட்டமைப்பை குழியில் தள்ளி மண்ணை மூடி நிரப்ப வேண்டிய கடமை உலக மக்கள் அனைவருக்கும் உள்ளது. வாழ்க்கையிழந்த அமெரிக்கர்கள் ஏகாதிபத்திய அழிவின் அறிமுக உரையை எழுதத் துவங்கி விட்டனர் – இதன் முடிவுரையை எழுதும் கடமை நமக்கிருக்கிறது.
நன்றி-வினவு http://www.vinavu.com
______________________________________________________

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...