Thursday 19 January 2012

காணொளி - லிபியாவில் இடம்பெற்ற அமெரிக்க ஜிஹாதின் அக்கிரமம்!


இஸ்லாம் வாழ்க்கையின் சகல துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கமாகும்.  அல்லாஹ்வின் இறுதித் தூதை சுமந்து வந்த றசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை அல்குர்ஆன் அகிலத்திற்கான ஓர் அருட்கொடை என வர்ணிக்கின்றது.

போரின் போதும் சமாதான சூழ்நிலையிலும் ஒரு முஸ்லிம் எப்படி வாழவேண்டும்? அவனது செயற்பாடுகள் எப்படி அமைய வேண்டும்? என்று நபி (ஸல்) அவர்கள் எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

போர் ஒன்றின் பின்னர் கைதிகள் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என இஸ்லாம் கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது.  நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு தளபதியாக நின்று போரியல் விதி முறைகளை எமக்குக் கற்றுத் தந்திருக்கின்றார்கள்.

பத்ர் போர்க்களத்தில் கைது செய்யப்பட்ட கைதிகளை, அவர்களை வைத்து முஸ்லிம் சிறார்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுகொடுத்ததன் பின்னர் அவர்களை விடுதலை செய்தார்கள்.  உலகத்திற்கு ஓர் அருட்கொடையாக  அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் சகல துறைகளுக்கும் முன்மாதிரி என்று நாங்கள் உரத்து கோஷமிடும் அளவிற்கு  எங்களில் அந்த முன்மாதிரி இல்லை என்பதை எமது சமகால செயற்பாடுகள் சாட்சிகளாக இருக்கின்றன.

இங்கே நீங்கள் காண்பது 2011 செப்டம்பர் மாதம் 20ம் திகதி லிபியாவின் சிர்த் நகரத்தில் புனித இஸ்லாத்தின் பெயரில் ஜிஹாதின் பெயரில் இடம் பெற்ற காட்டுமிராண்டித்தனம் ஒன்றை எடுத்துக் காட்டும் ஒரு காணொளி.

லிபியாவின் தலைவர் கதாபியின் கடைசி நிமிடங்களில் அவரோடு இறுதிவரை நின்று அமெரிக்க நேட்டோ படைகளோடும், பல அரபு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அல்கைதா கூலிப்படைகளோடும் போராடிய மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ் அவர்களின் உடலத்திற்கு, அமெரிக்காவினாலும் அதன் அடிவருடி புததிஜீவி யூசுப் அல் கர்ளாவி போன்ற கைக்கூலிகளினாலும் வடிவமைக்கப்பட்ட ஜிஹாதிய வாதிகளால் இழைக்கப்பட்ட கொடுமைகளை இந்தக் காணொளியில் பார்க்கமுடியும்.

அல்லாஹு அக்பர் என்ற வீர முழக்கத்துடன் அரங்கேறும் இந்த அக்கிரமங்களை,  அல்லாஹ்வையும் அவனது துாதர் (ஸல்) அவர்களையும் எற்றுக்கொண்ட ஒருவனால் அங்கீகரிக்க முடியாது.

இறந்த மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ் அவர்களின் முகத்திற்கு நீல நிற சாயத்தை பூசி அவரது உடலத்தை வதைப்படுத்தும் அவரின் உடமைகளை கொள்ளையிடும் “அமெரிக்க ஜிஹாதிய” வாதிகளை அவர்களின் அநாகரிகமான செயல்களை இந்தக்காணொளி தெளிவாகக் காட்டுகிறது.


                             லிபிய இராணுவ மேஜர் ஜெனரல் அபூபக்கர் யூனுஸ்

நாம் ஜாஹிலிய்யா என்று வர்ணிக்கின்ற மனிதனால் இயற்றப்பட்ட சட்டங்கள் கூட போர் ஒன்றின் பின்னர் நடக்கும் இத்தகைய அட்டுழியங்களை அனுமதிப்பதில்லை. ஜெனீவா சாசனம் கூட இதனைத் தடுக்கின்றது.

அல்லாஹ்வின் திருப்திக்காக அநீதிக்கு எதிராக போராடுதல் என்ற கருத்தை வழங்கும் ஜிஹாத் என்ற சொல்லாடல் இன்று அநீதியாளர்களின், அநியாயக் காரர்களின் தேவைக்காக அவர்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தப் படுகின்ற ஒன்றாக மாறியிருக்கிறது.

ஜிஹாத் தொடர்பாக முழு முஸ்லிம் உம்மத்தும் முழுமனதாக ஏற்றுக்கொண்டிருக்கும் பலஸ்தீன் மீட்பை அதற்கான போராட்டத்தை எதிரிகள் திசை திருப்பி விட்டார்கள். பலஸ்தீன் போராட்டம் அநாதையாக்கப் பட்டிருக்கிறது.

பலஸ்தீன் மக்களை தனது சொந்த பூமியில் அநாதைகளாக்கிய இஸ்ரேலிய அக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக முஸ்லிம் உம்மத்தில் ஊற்றெடுத்து வந்த ஜிஹாதிய போர்க்குணம் திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டிருக்கிறது.

எதிரிகளை விட்டு விட்டு எங்களுக்குள்ளே மோதுகின்ற ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் ஒன்றுக்குள் நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் எதிரிகள் என்று நாங்கள் காலம் காலமாய் நம்பி வந்தவர்களே இப்போது எங்களுக்கு கட்டளை இடுகின்றார்கள்.

இஸ்ரேலும் அமெரிக்காவும் தனது எதிரிகளை இனம் கண்டு எங்களுக்குக் காட்டித்தருகின்றன. அதற்கு ஜிஹாதிய பத்வா வழங்கி ஆன்மிக உரமிட்டு உணர்வுகளை தட்டிக்கொடுக்க கைக்கூலிகள் பல பேர் காத்துக்கிடக்கின்றார்கள்.

மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கு இருந்த அச்சுறுத்தல்கள் கட்டம் கட்டமாக அழிக்கப்படுகின்றன. தடைகள் தகர்க்கப்படுகின்றன. தேசங்கள் சிதைக்கப்படகின்றன.

ஆப்கானைப் போன்று, ஈராக்கைப் போன்று அமெரிக்காவின் அதிகாரத்திற்குக் கீழ் லிபியாவை கொண்டு வந்த திருப்தியில் அடுத்த இலக்கை நோக்கி இந்த ஆன்மீக அட்டகாசம் நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

இப்போது,  ஐநாவை  சிரியா விவகாரத்தில் தலையிடுமாறு வேண்டி  ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியும், அமெரிக்க ஆதரவு ஜிஹாதின் “கோட் பாதரு'' மான யூசுப் அல் கர்ளாவி கோரிக்கை விட்டிருக்கிறார்.

பலஸ்தீன போராட்டத்திற்கு இன்றுவரை உறுதுணையாக இருக்கும், பலஸ்தீன போராளிகளுக்கு தனது நாட்டில் அலுவலகங்களை அமைத்துக் கொடுத்து, சகல ஒத்தாசைகளையும் வழங்கி சுதந்திரமாக அவர்களை செயல்பட அனுமதித்திருந்த சிரியாவின் நிலையும் நாளை லிபியாவைப் போன்று மாற்றமடையலாம்.

இந்த ஏகாதிபத்திய அரசியல் நலன்காக்கும் இஸ்லாமிய (?) ஏஜன்ட்களின் அடுத்த எஜன்டா எதுவாக இருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம்!



Wednesday 18 January 2012

கத்தார் மன்னரின் இரகசிய இஸ்ரேல் விஜயம்


கத்தார் மன்னர் செய்க் ஹமாத் பின் கலீபா இஸ்ரேல் நாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேண்கொண்டு இஸ்ரேலிய கதிமா கட்சியின் தலைவி ஸிபி லிவினியை சந்தித்துள்ளார்.

இந்த இரகசிய பயணத்தில் கத்தாரின் பிரதமர் செய்க் ஹமாத் பின் ஜாஸிம் அல்தானியும் பங்குகொண்டுள்ளார்.

இந்த இரகசிய பயணத்தின் போது இஸ்ரேலிய அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருப்பதாக அறிய வருகின்றது.

இஸ்ரேலுடனான எரிவாயு ஏற்றுமதி தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்ட கத்தார் மன்னர், கத்தாரின் நடைமுறையிலுள்ள பாடநூல்களை மறுசீரமைப்பது பற்றிஅந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடி இருப்பதாகவும் அறிய வருகின்றது.

கத்தாரின் இஸ்ரேலுடனான இந்த உறவு அந்நாட்டிலுள்ள மற்றும் அந்த நாட்டை அதரிக்கின்ற இஸ்லாமியவாதிகளிடம் எவ்வித எதிர்ப்பு உணர்வுகளையும் ஏற்படுத்தவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மற்றும் இது தொடர்பாக அரச குடும்பத்தோடு மிகவும் நெருங்கிய உறவு வைத்திருக்கும் யூசுப் அல் கர்ளாவி ஆழ்ந்த மௌனம் சாதித்து வருகின்றார்.

Tuesday 17 January 2012

கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி!


அவை மிகக் கலங்கலான வீடியோக் காட்சிகள். கடந்த வாரம் வெளியான அந்தக் காட்சிகளைக் கண்டு உலகெங்கும் மனிதாபிமானம் கொண்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். முதல் வீடியோவில் அந்த வயதான மனிதர் காரிலிருந்து தரதரவென்று இழுத்துச் செல்லப் படுகிறார். அவரது உடலெங்கும் இரத்தக்கறை படிந்துள்ளது. தலை கலைந்துள்ளது. அங்குமிங்கும் அலைபாயும் கண்களில் இன்னதென்று விளக்கவியலாத ஒரு உணர்ச்சி உறைந்து போயிருக்கிறது. வாயிலிருந்து ஏதோ புரியாத வார்த்தைகள் வெளிப்படுகிறது. அந்த மனிதரைக் கீழே தள்ளும் வெறி பிடித்த கூட்டம் கண்மண் தெரியாமல் அடித்துத் துவைக்கிறது. தொடர்ந்து சில துப்பாக்கி முழக்கங்கள் கேட்கிறது. வேதனை அலறலும் மரண ஓலமும் வெறிக்கூச்சலும் எழுகிறது. இந்தக் காட்சிகளைப் படம் பிடித்துக் கொண்டிருக்கும் கைபேசிக் காமெரா அங்குமிங்குமாய் அலைபாய்கிறது. சிறுது நேரத்திலேயே அனைத்தும் ஒரு முடிவுக்கு வருகிறது. தொடரும் காட்சிகளில் உயிரற்ற அந்த மனிதரின் பிணம் தரையோடு தேய்த்து இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டுகிறார்கள். சுற்றி நிற்கும் துப்பாக்கியேந்திய ‘வீரர்கள்’ வெற்றி முழக்கமிடுகிறார்கள்.


———————————————————


இது இரண்டாவது வீடியோக் காட்சி. ஒரு அடைசலான அறை. அதன் ஒரு மூலையில் இரத்தம் தோய்ந்த உள்ளாடைகளோடு இளைஞனொருவன் சுவரில் சாய்ந்து அமர்ந்துள்ளான். உறுதியான பார்வை. தன் உடலில் உண்டாயிருக்கும் காயங்களை அசிரத்தையாகப் பார்வையிடுகிறான்.  ‘உன் காயங்களுக்கு நாங்கள் மருந்து போடுவோம்’ என்று துப்பாக்கியேந்திய ‘வீரன்’ ஒருவன் உறுதியளிக்கிறான். ‘இது காயங்களல்ல. என் மார்பில் பதிக்கப்பட்ட பதக்கங்கள்’ என்கிறான் அந்த இளைஞன். மெல்லிய ஆனால் உறுதியான குரல். அவன் பார்வையில் அச்சமில்லை. தண்ணீர் குடிக்கிறான். தனது கடைசி சிகரெட்டை இரசித்துப் புகைக்கிறான். சில நொடிகளிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறான். அந்த முடிவு அவன் எதிர்பாராத ஒன்றல்ல.
அந்த வயதான மனிதர் முவாம்மர் அல் கடாஃபி. அந்த இளைஞன் கடாஃபின் மகன் முட்டெஸிம் அல் கடாஃபி. கடந்த 20-ம் தேதி லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியும் அவரது மகன் முட்டெஸிம் அல் கடாஃபியும் சிர்ட்டே நகரக்கு வெளியே நேட்டோ கூலிப்படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைகளோடு நேட்டோ படைகளின் ‘மனிதாபிமானம்’ ஒரு தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. சிர்ட்டே தான் கடாஃபியின் பூர்வீகம். இதே மண்ணில் தான் எழுபதாண்டுகளுக்கு முன் கடாஃபி பிறந்திருந்தார்.
கடாஃபி கொலையோடு தீராது அமெரிக்க வெறி! -
கடாஃபி - மூட்டெஸிம்
அரபுலகில் நடந்த ‘வண்ணப் புரட்சிகளைத்’ தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மேற்கத்திய நாடுகளின் ஆசீர்வாதத்துடன் லிபியாவின் பெங்காஸி பகுதியை நேட்டோ ஆதரவு பெற்ற கூலிப்படை ஒன்று கைபற்றுகிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேட்டோ நாடுகளுக்கும், கத்தார் போன்ற கைக்கூலி நாடுகளுக்கும் லிபிய மக்களின் மேல் திடீர் ‘பாசம்’ பொத்துக் கொண்டது. இதனடிப்படையில், கடந்த மார்ச் மாதம் தொடங்கி நேட்டோ படைகள் தரைவழியே முன்னேறி வந்த கூலிப்படைக்கு ஆதரவாக வான்வழித் தாக்குதல் தொடுத்து வந்தது.
இந்த விமானத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான டன்கள் வெடி பொருட்களை லிபியர்கள் மேல் வீசியிருக்கிறார்கள். லிபியாவின் மேலான கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் பிப்ரவரி 17-ம் தேதி ஆரம்பித்தது. தாக்குதல் துவங்கிய இருபத்து நான்கு மணி நேரத்துக்குள்ளாக B-52 ரக போர் விமானம் மூலம் 45 டன் வெடி குண்டுகளை வீசியுள்ளனர். மத்தியத் தரைக்கடலில் மிதந்த நாசகாரிக் கப்பல்களில் இருந்து சிறிய ரக அணு ஏவுகணைகளை (Uranium Depleted missiles) வீசியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான அப்பாவி லிபியர்களின் பிணத்தின் மேல் நேட்டோ நடத்திய ‘மனிதாபிமான’ வெற்றிப் பேரணியின் விளைவாய் ஆகஸ்ட் 23-ம் தேதி லிபிய தலைநகர் திரிபோலி கூலிப்பட்டாளத்தின் கையில் விழுகிறது. அதைத் தொடர்ந்து தனது ஆதரவுப் படைகளோடு திரிபோலியிலிருந்து பின்வாங்கும் கடாஃபி, தனது சொந்த ஊரான சிர்டே பகுதிக்குத் தப்பிச் செல்கிறார். இதற்கிடையே கடந்த ஒரு மாத காலமாக சிர்டே நகரத்தை தரை மார்க்கமாக சுற்றி வளைக்கும் கூலிப்படை, அதைக் கைப்பற்றவும் கடாஃபியைத் தீர்த்துக் கட்டவும் கடும் பிரயத்தனங்கள் செய்து வந்தது. இதற்கு ஆதரவாக நேட்டோ படைகள் வான் மார்க்கமாக தாக்குதல் தொடுத்து வந்தது. பல்லாயிரம் அப்பாவி மக்கள் இந்தத் தாக்குதல்களில் உயிரிழந்தனர்.
கடாஃபி கொல்லப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருந்தது. கடந்த 18-ம் தேதி த்ரிபோலிக்கு ஒரு இரகசிய பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளிண்டன், அங்கே கூலிப்படையின் ஆதரவாளர்கள் மத்தியில் ‘கூடிய விரையில் கடாஃபி கொல்லப்படுவார்’ என்று உறுதியளித்துள்ளார். கடாஃபியைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்பது அவர்கள் நோக்கமாக இல்லை. ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அமெரிக்காவோடு கடந்த பத்தாண்டுகளாக கடாஃபி கொண்டிருந்த நெருக்கமும், லிபிய மண்ணில் அமெரிக்கா நடத்தி வந்த இரகசிய சித்திரவதை மைய்யங்கள், கடாஃபியோடு போட்டுக் கொண்டி இரகசிய இராணுவ ஒப்பந்தங்கள் போன்றவை பற்றி அவர் வாய் திறக்கும் சாத்தியம் இருந்தது. அப்படியொன்று நடந்து, தனது மனிதாபிமான இமேஜுக்கு இழுக்கு நேர்வதை அமெரிக்கா விரும்பவில்லை.
இந்நிலையில், கடந்த இருபதாம் தேதி கடாஃபி தனது நெருக்கமான ஆதரவாளர்களோடு சிர்ட்டே நகரை விட்டு தப்பிச் செல்வதை அறிந்த நேட்டோ, தனது போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அவர் நகர முடியாமல் செய்கிறது. இந்தத் தகவலை தரையிலிருந்து இயங்கும் கூலிப்படைக்குத் தெரிவித்து, கடாஃபியும் அவரது மகனும் கொல்லப்படுவதை உறுதி செய்து கொள்கிறது.
மரணம் நெருங்கி வந்த அந்த இறுதி நிமிடங்களில் கடாஃபியின் கண்களில் தெரிந்த அந்த உணர்ச்சியின் பொருளென்ன? சகல சௌபாக்கியங்களுடனும் வசதிகளுடனும் சுகித்திருந்த அந்த இளைஞனை எள் அளவும் மரணபயமின்றி அவ்வாறு பேச வைத்த உணர்ச்சி என்னவாக இருக்கும்? அது என்னவாயிருக்குமென்று இவர்களின் மரணச் செய்தி கேட்டதும் ‘வாவ்’ என்று குதூகலித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ஹிலாரி கிளிண்டனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால், அவரது சொந்த நாட்டில் ஒவ்வொரு நகரமாய் ஆக்கிரமித்துச் சூழ்ந்து வரும் 99% அமெரிக்கர்களுக்கு அது சர்வ நிச்சயமாய்த் தெரிந்திருக்கும்.
ஒபாமாவுடன் கடாஃபி
ஒபாமாவுடன் கடாஃபி
முவாம்மர் அல் கடாஃபி ஒரு முழுமையான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி என்று சொல்லி விட முடியாது. அறுபதுகளின் இறுதியில் உலகெங்கும் உண்டான ஏகாதிபத்திய எதிர்ப்பு அலையின் லிபிய பிரதிநிதி தான் முவாம்மர் அல் கடாஃபி. 1969-ல் திடீர் புரட்சி மூலம் இத்ரீஸின் மன்னராட்சிக்கு முடிவுகட்டி அதிகாரத்திற்கு வரும் கடாஃபி, அதற்கு முன் லிபிய மண்ணில் மேற்கத்திய நாடுகள் நிறுவியிருந்த எண்ணை நிறுவனங்களை அரசுடமையாக்கினார். அமெரிக்காவுக்கு லிபியாவில் இருந்த வீலஸ் விமான தளத்தை இழுத்து மூடினார். அது தான் அன்றைய தேதியில் ஆப்ரிக்க கண்டத்திலேயே அமெரிக்காவுக்கு இருந்த மிகப் பெரிய இராணுவ செயல்தளம். ஆனால், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சிக்குப் பின் கடாஃபி இதற்கெல்லாம் நேரெதிரான நிலையை எடுக்கிறார்.
தொண்ணூறுகளின் துவக்கத்தில் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்தியதாகட்டும், இந்த நூற்றாண்டின் துவக்க பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் ‘தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு’ வால் பிடித்ததாகட்டும், ஐரோப்பிய அமெரிக்க எண்ணை நிறுவனங்களுடன் எண்ணை ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்களை போட்டதாகட்டும் – அவர் ஏகாதிபத்தியங்கள் மனங்கோணாதவாறு நடந்து கொள்வதில் எச்சரிக்கையாகவே இருந்தார். இப்படி ஒருபக்கத்தில் மக்கள் விரோத பொருளாதார நடவடிக்கைகள் எடுத்தும், தனது குடும்ப சர்வாதிகார ஆதிக்கத்தை உறுதிப்படுத்தியும் மிருக பலத்துடன் லிபிய மக்களை அடக்கியாண்ட அதே காடாஃபி தான் தனது மக்களுக்களின் வாழ்க்கைத் தரத்தை குறைந்தபட்ச அளவுக்காவது உறுதிப் படுத்தியிருந்தார்.
லிபியாவை ஆப்ரிக்காவின் ஸ்விட்சர்லாந்து என்பார்கள். இந்தப் புதிய நூற்றாண்டுக்குள் லிபியா நுழைந்த போது அது ஒப்பீட்டளவில் பிற ஆப்ரிக்க நாடுகளை விட சிறப்பான மனித வளக் குறியீடுகளைக் கொண்டிருந்ததை மேற்கத்திய நாடுகளே மறுப்பதில்லை. எண்ணை வர்த்தகத்தை கடாஃபி குடும்பம் நேரிடையாகக் கட்டுப்படுத்தி அடித்த கொள்ளையில் ஊதாரித்தனமான சுகபோகத்தில் திளைத்திருந்த போதிலும் அதன் லாபத்தில் ஒரு பகுதியை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தினார். மேற்கத்திய நாடுகளின் கார்ப்பொரேட் கம்பெனிகளோடு எண்ணை துரப்பண ஒப்பந்தங்களைப் போட்டிருந்தாலும், எண்ணை வர்த்தகத்தை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் முழுமையாக ஒப்படைக்காமலே வைத்திருந்தார்.
________________________________________________________
இப்போது லிபியா ‘விடுவிக்கப்பட்டிருக்கும்’ நிலையில், அதன் எண்ணை வளங்களும் தங்கம், யுரேனியம் உள்ளிட்ட அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்களும் முழுமையாக பன்னாட்டுக் கம்பெனிகளின் கரங்களில் வந்து விழுந்துள்ளது. ஈராக்கில் விட்டதை லிபியாவில் பிடிக்க அமெரிக்காவுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது. மேலும், லிபிய அரசாங்கத்தோடு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் செய்திருந்த சீனா, ரசியா, பிரேஸில் போன்ற நாடுகளையும் போட்டியிலிருந்து விலக்கியாகி விட்டது. கலகக்காரர்கள் பெங்காஸி பகுதியைக் கட்டுப்படுத்தியிருந்த ஆரம்ப காலத்திலேயே அவர்களின் அதிகாரத்தை அங்கீகரிக்கும் மேற்குலக நாடுகள், அவர்களோடு எண்ணை வர்த்தகம் பற்றிய பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து விட்டனர். மேலும், சீனாவோடும் ரசியாவோடும் முந்தைய லிபிய அரசாங்கம் போட்டிருக்கும் ஒப்பந்தங்களை மறு பரிசீலனை செய்யப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
ஆப்ரிக்க கண்டம் முழுவதையும் தனது சுரண்டலுக்கான பின்னிலமாக வைத்திருப்பது, இதில் போட்டிக்கு வரும் சீனா ரசியா போன்ற நாடுகளை ஓரங்கட்டுவது போன்ற ஏகாதிபத்திய நலனில் இருந்து பிறந்தது தான் அமெரிக்காவின் ‘மனிதாபிமான’த்திற்கும்’ ஜனநாயகத்தை நிலை நாட்ட அவர்களுக்கு புதிதாய் பிறந்திருக்கும் இந்த அக்கறைக்கும் அடிப்படையான காரணம். ஏற்கனவே அரபுலக மன்னர்களெல்லாம் அமெரிக்கப் பாத நக்கிகளாக இருக்கும் நிலையில், எண்ணை வளத்தைப் பொறுத்தவரையில் அந்தப் பிராந்தியத்தில் இரண்டாம் இடத்திலிருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளையும் வளைத்துக் கொண்டால், உலக எண்ணை ரிசர்வில் 60 சதவீத அளவுக்கு அமெரிக்காவின் பிடியில் சிக்கும்.
தற்போது ஏகாதியபத்திய உலக ஒழுங்கைக் கவ்விப் பிடித்திருக்கும் பொருளாதாரப் பெருமந்தத்திற்கான தீர்வை மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை மேலும் மேலும் ஒட்டச் சுரண்டுவது, இதற்கான தடைகளைப் போர்களின் மூலம் அகற்றுவது என்கிற பாதையில் மேற்குலகம் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், ஏற்கனவே புழுத்து நாறும் கட்டமைப்புச் சீர்கேடுகள் இந்த மீள முடியாத போர்களால் ஒரு முடிவுக்கு வந்து விடப் போவதில்லை என்பதையே அமெரிக்கா தொடங்கி மேற்கு ஐரோப்பிய நாடுகள் வரையில் பற்றிப் பரவும் ‘ஆக்கிரமிப்புப்’ போராட்டங்கள் காட்டுகின்றன.
உலகை ஆக்கிரமிக்கக் கிளம்பியிருக்கும் அமெரிக்காவின் காலடியிலேயே அதன் ஆன்மாவை ஆக்கிரமிக்கும் போராட்டம் நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே வருகிறது. அமெரிக்கத் தெருக்களில் திரண்டிருக்கும் 99 சதவீத மக்களின் முழக்கங்களில் அடங்கியிருக்கிறது லிபிய மக்களின் ஒப்பாரிச் சத்தம். உலகை மேலாதிக்கம் செய்யது துடிக்கும் அமெரிக்காவின் கனவுகளின் பொருளாதார அடித்தளத்தின் மீது அதன் சொந்த மக்களே தொடுத்திருக்கும் இந்தப் போர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்களின் வெற்றியை கொண்டாட முடியாதபடி வைத்திருக்கிறது. தற்போது வலுவிழந்து மரணக் குழியின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய கட்டமைப்பை குழியில் தள்ளி மண்ணை மூடி நிரப்ப வேண்டிய கடமை உலக மக்கள் அனைவருக்கும் உள்ளது. வாழ்க்கையிழந்த அமெரிக்கர்கள் ஏகாதிபத்திய அழிவின் அறிமுக உரையை எழுதத் துவங்கி விட்டனர் – இதன் முடிவுரையை எழுதும் கடமை நமக்கிருக்கிறது.
நன்றி-வினவு http://www.vinavu.com
______________________________________________________

Sunday 15 January 2012

காணொளி - லிபியா ! அமெரிக்காவின் கைக்கு மாறும் ஓர் அரபு தேசம்


பலஸ்தீன போராளி - ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash)


பலஸ்தீன் !
ஆக்கிரமிப்பின் குறியீடு
மனித உரிமை மீறலின் அடையாளம்
உயிர் வாழும் அக்கிரமம்,
அநீதியின் அச்சு
சொந்த நாட்டுக்குள் சிறைப்பட்ட
கண்ணீர் கதையின் கரு!

இந்த மக்களின் போராட்டத்தை முஸ்லிம்களின் போராட்டம் என்று மட்டும் பார்க்காமல் மனித இனத்தின் போராட்டமாக பார்க்க வேண்டும்.

உலக ஊடகங்கள் பலஸ்தீன் விவகாரத்தில் ஊமையாக நிற்கின்றன.  வெறுமனே மதச்சாயம் பூசி அந்தப் போராட்டத்தை மலினப்படுத்தியும் வருகின்றன.

சொந்த நாட்டை மீட்கப் போராடும் அவர்களை பயங்கரவாதிகளாக மேற்கின் ஊடகங்கள் பார்க்கின்றன.  கதைகளைப் பரப்புகின்றன.

இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அல்லாத நிறைய பேர் அங்கம் வகித்திருக்கின்றார்கள். அங்கம் வகித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உரிமைப்போராட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பை ஊடகங்கள் எப்போதும் மறைத்தே வந்திருக்கின்றன.

காரணம் பலஸ்தீன் போராட்டம் தனியாக முஸ்லிம்களின் போராட்டம் என்று காட்டுவதன் மூலம் அவர்களுக்கு அரசியல் ரீதியாக நிறைய ஆதாயம் கிடைக்கின்றது.

அந்தப் போராட்டத்தை முஸ்லிம் போராட்டம் என்று தனிமைப்படுத்தி முத்திரைக் குத்துவதன் மூலம் உலக அளவில் பலஸ்தீனத்திற்குக் கிடைக்கும் ஆதரவிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

பலஸ்தீன் போராட்டத்தில் அப்படி மூடிமறைக்கப்பட்ட ஒருவர்தான் இந்த ஜோர்ஜ் ஹபாஷ் .

பலஸ்தீன விடுதலைக்காக தனது வாழ்க்கையை முழுதாக அர்ப்பணித்த ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash), பலஸ்தீனத்தி்ல் லைடா Lydda என்ற நகரத்தில் ஒரு பணக்கார கிறிஸ்தவ ஒத்தொடொக்ஸ் குடும்பத்தில் 1925 ஆகஸ்ட் 1ம் திகதி பிறந்தார்.  

1948 ல், பெய்ரூத்திலுள்ள அமெரிக்க மருத்துவ கல்லூரியில் மாணவராக இருந்த காலத்தில் இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவதற்காக வேண்டி போராட்ட அணியொன்றை உருவாக்கினார்.

அவரும் அவரது முழு குடும்பமும், தனது சொந்த நகரமான லைடா மக்களில் 95 சதவீதமானோரும் இட்சாக் ரபின் தலைமையில்  இயங்கிய சியோனிச குழுவின்  துப்பாக்கி முனையில் அடித்து விரட்டப்பட்டனர். சட்டவிரோத  இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம் பலஸ்தீன் மக்கள் மீது கொடும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது.

"அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஆயிரக்கணக்கான பலஸ்தீன் மக்கள் அழுது புலம்பியவாறு ஆனாதரவாக  தங்கள் வீடுகளில் இருந்து அடித்து உதை்து வெளியேற்றப்பட்டார்கள். இந்தக் காட்சிகளை பார்த்த ஒருவனால் போராட்டக் காரனாக மாறாமல் இருக்கவும் முடியாது. "

ஜோர்ஜ் ஹபாஷ் பிற்காலத்தில் ஸியோனிஸ கொடுமைக்கு எதிரான தனது போராட்டத்திற்கான காரணத்தை மேற்கண்டவாறு விபரித்தார்.

1951 இல், தனது மருத்துவ மேல் படிப்பை முடித்துக்கொண்ட ஜோர்ஜ் ஹபாஷ், துணை மருத்துவராக தொழில் புரிய ஆரம்பித்தார். அரசியல் காரணங்களுக்காக ஒரு வருடத்தின் பின்னர் தனது பதவியை இராஜிநாமா செய்து விட்டு  ஜோர்தான் நோக்கி புறப்பட்டார்.  ஜோர்தான் தலைநகர் அம்மானில் ஒரு மருத்துவமனையை திறந்து அங்கு தனது வைத்திய தொழிலை ஆரம்பித்தார். 1952 இல் அவர் எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாஸரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையினால் ஈர்க்கப்பட்டு, அரபு தேசிய இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராக பலஸ்தின் போராட்ட களத்தில் முன்னணிக்கு வந்தார்.

ஜோர்ஜ் ஹபாஷ் மத்திய கிழக்கின் அரபுகளின் ஒற்றுமை தொடர்பாக தனது கவலையை அடிக்கடி வெளியிட்டு வந்தார். தனது இனத்தை இஸ்ரேலுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு எகாதிபத்தியத்திற்கு அடிமையாக மாறி வருகின்ற வெட்கம் கூச்சமற்ற அரபு ஆட்சியாளர்களை ஜோர்ஜ் ஹபாஷ் கடுமையாக விமர்சித்து வந்தார். அரபு ஆட்சியாளர்கள் மீதான அவரது கபடமற்ற விமர்சனம் அரபு நாடுகளில் அவருக்கு நெருக்குதல்களை உருவாக்கின. இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாடின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. 1967 வரை பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அங்கத்தவராக இருந்த ஜோர்ஜ் ஹபாஷ், 1967ல் இடம் பெற்ற இஸ்ரேலுடனான யுத்தத்தில் அரபு நாடுகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இயக்கத்திலிருந்து வெளியேறினார்.

அதே ஆண்டு டிஸம்பர் மாதம் Popular Front for the Liberation of Palestine (PFLP)  பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் எதிராக இவரின் (PFLP) இயக்கம் பிரசார வேளைகளை அரபு நாடுகளில் முடுக்கிவிட்டது.  சிரியா டமஸ்கஸ்ஸில் ஒரு பிரசார கூட்டத்தில் ஜோர்ஜ் ஹபாஷ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார். ஒரு மாத கால சிறைவாசத்தின் பின்னர் எகிப்துக்கு சென்றார். எகிப்தில் ஜனாதிபதி அப்துல் நாஸரோடு கலந்துரையாடி இஸரேலுக்கு எதிரான தனது ஆயுதப் போராட்டத்திற்கு அனுசரணையைப் பெற்றுக்கொள்கின்றார்.

1970ம் ஆண்டு நான்கு விமானங்களைக் கடத்தி வந்து அவற்றில் இருந்த அனைவரையும் விடுதலை செய்து விட்டு மூன்று விமானங்களை ஜோர்தான் பாலைவனத்திலும், ஒன்றை கெய்ரோவிலும் வைத்து வெடிக்க வைத்ததன் மூலம் ஜோர்ஜ் ஹபாஷின் பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணி (PFLP)  உலகளாவிய ரீதியில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த விமானக் கடத்தலைக் கண்டித்த ஜோர்தான் மன்னர் ஹுஸைன் தனது நாட்டிலிருந்த பலஸ்தீன் போராட்டக் குழுக்களை உடனடியாக வெளியேற்றினார். பலஸ்தீன் போராட்ட வரலாற்றில் இந்நிகழ்வு கறுப்பு செப்டம்பர்  "Black September". என வர்ணிக்கப்படுகின்றது.

1974களில் ஜோர்ஜ் ஹபாஷ் விடுதலைப் போராட்டத்தில் யாஸிர் அரபாத்தோடும் அவரது இஸ்ரேலை அங்கீகரிக்கின்ற போக்குகளோடும் முரண்பட்டார். யாஸிர் அரபாத் சொந்த நலனுக்காக விடுதலைப் போராட்டத்தை விற்று விட்டதாக ஜோர்ஜ் ஹபாஷ் குற்றம் சாட்டினார்.

ஜோர்ஜ் ஹபாஷ் பலஸ்தீன் போராட்டத்தில் இருக்கின்ற ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் போன்ற அமைப்புகளோடு தனது பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டார். 1993ல் இடம் பெற்ற ஒஸ்லோ உடன்படிக்கையை இந்த மூன்று தரப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். யாஸிர் அரபாத்தை தனது கைகளுக்குள் போட்டுக்கொண்ட அமெரிக்கவும், இஸ்ரேலும் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தை யாஸிர் அரபாத் என்ற கைக்கூலியை வைத்து கொச்சைப் படுத்தின.

ஒஸ்லோ ஒப்பந்தம் பலஸ்தீன் மக்கள் மீது திணித்த தன்னாட்சிப் பிரதேசம் autonomous territories என்று குறிக்கப்பட்ட பலஸ்தீன் அதிகார சபையை (Palestinian Authority) தீர்வை ஜோர்ஜ் ஹபாஷ், ஹமாஸைப் போன்று இஸ்லாமிக் ஜிஹாதைப் போன்று கடுமையாக எதிர்த்தார். சர்வதேச விதிகளின் படி பலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களுக்கு தனது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை இந்த பலஸ்தீன் அதிகார சபை மறுப்பதாக இவர் குற்றம் சாட்டினார்.

2000ம் ஆண்டு ஜோர்ஜ் ஹபாஷ் பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தலைமைப் பதவியிலிருந்து விலகினாலும்  இறுதிவரை தனது அமைப்போடு சேர்ந்து பாடுபட்டார். மரணிக்கும் வரை பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமைப் பதவியை தலைமைத்துவத்தின் பயிற்சியை ஏனையோரும் பெற வேண்டுமென்று மற்ற ஒருவருக்கு வழங்கிவிட்டு சாதராரன அங்கத்தவராக செயற்பட்டார்.  அவரது வாழ்க்கையின் இறுதி நேரத்தில் காஸா மக்களின் கஷ்டங்களை நினைத்து மிகவும் கவலை கொண்டார். இன மத பேதமின்றி பலஸ்தீன் பூமியில் பிறந்தவர்கள்  அத்தனைப் பேரும் அந்த மண்ணின் மைந்தர்களே அவர்களின் உரிமைக்காக தொடர்ந்தது குரல் கொடுப்பது பலஸ்தீன் பிரஜை ஒவ்வொருவரினதும் பிறப்புரிமையாகும் என்ற கருத்தை ஜோர்ஜ் ஹபாஷ் தனது போராட்ட வாழ்க்கையில் நிலைநாட்டினார்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி ஜோர்ஜ் ஹபாஷ் அம்மானில் காலம் சென்றார். பாலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவரது மரணத்தைத் தொடர்ந்து மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்தார்.

“பலஸ்தீன் மக்களின்  மறுமலர்ச்சியை அவர்களின் எழுச்சியை துடைத்து அழிக்கக் காத்துக் கிடக்கும் அரபு தேசங்கள் அவற்றின் சரிவை வெகு விரைவில் சந்திக்கப் போகின்றன.”  ஜோர்ஜ் ஹபாஷ் ஒரு போது கருத்து தொிவித்தார்.

Saturday 14 January 2012

அல்ஜஸீராவும் அல் அரேபியாவும் அமெரிக்க பாணியில்..பொய் பரப்புகின்றனவா?

சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு தொடர்பாக மேற்கின் ஊடகங்களும், அதற்கு சார்பான அரபு ஊடகங்களும் பொய்யை திரித்துக் கூறி வருவதாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்க ஏகாதிபத்திய ஊடகங்கள் தனக்கு எதிரான நாடுகளுக்கு எதிராக கடந்த காலங்களில் செய்த பொய்ப் பிரசார பணியை இன்று அதன் அடிவருடிகளாக செயற்படும் அரபு சுல்தான்களின் ஊதுகுழல் ஊடகங்களான அல் ஜஸீராவும், அல் அரேபியாவும் செய்து வருகின்றன.

இந்த காணொளியைப் பாருங்கள்.

ஈரான் அணு விஞ்ஞானியைக் கொன்றது இஸ்ரேலும், அமெரிக்காவும்தான் - ஈரான் குற்றச்சாட்டு



ஈரான் தெஹ்ரான் பல்கலைக்கழகத்திற்கு அருகே காரில் காந்தக் குண்டினைப் பொருத்தி அதை வெடிக்க வைத்ததில் அந்நாட்டின் அணு அறிவியல் அறிஞர் முஸ்தபா அஹ்மதி ரொஸான் கொல்லப்பட்டார். அதில் 2 பேர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிள் வந்த இருவரே அந்தக் குண்டினை வெடிக்கச் செய்தாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.



     கொல்லப்பட்ட அணு அறிவியலாளரின் ஜனாஸா நல்லடக்கம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

     குண்டு வெடிப்பு மூலம் அணு அறிவியலாளர் கொல்லப்பட்டதற்குப் பின்னணியாக இஸ்ரேலும், அமெரிக்காவும் உள்ளது என்றும் ஈரானின் அணு செயற்திட்டத்திற்கு எதிராகவே இந்தச் செயலை அந்நாடுகள் செய்திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலை சர்வதேச அணு அதிகாரசபை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்தச் செயல் ஈரானிய அணு விஞ்ஞானிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

     ஆனால் அமெரிக்கா இந்தக் கொலைக் குற்றச்சாட்டை வழமை போல் மறுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் எந்த ஆர்வத்தையும் அது இதுவரை வெளியிடவுமில்லை.

இஸ்ரேல் என்ற நாட்டை பூகோள வரைபடத்திலிருந்து அழித்து விட்டு பலஸ்தீனை மீட்டெடுக்க வேண்டும் என்று ஈரான் கோரி வருகிறது.
ஈரான் மீது தாக்குதல் ஒன்றை நடாத்தி மத்திய கிழக்கில் தனக்கிருக்கும் தடையை அழிக்க உதவுமாறும் இஸ்ரேல் அடிக்கடி அமெரிக்காவை கோரி வருகின்றது.

இந்த அரசியல் பின்னணியில்தான் ஈரான் இதுவரை மூன்று அணு விஞ்ஞானிகளை இழந்திருக்கிறது..


     ஈரானில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதே போன்ற தாக்குதல்கள் மூலம் 3 அறிவியல் அறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  அதில் 2 பேர் அணு அறிவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் தனக்கு நிகராக அணு விஞ்ஞான அறிவியல் துறையில் எழுந்து வரும் ஈரானை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி வைப்பதில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் அண்மைய காலமாக கடும் போக்குகளைக் கடைப்பிடித்து வருகின்றன. பாரிய பொருளாதார தடைகளை ஈரான் மீது அவை திணித்து வருகின்றன.

மரபு ரீதியான போர் ஒன்றிற்கான ஆயத்தங்களுடன் பல பொருளாதார நெருக்குதல்கள் மூலம் நேரடியாக ஈரானோடு மோதி வரும் இந்தச் சக்திகள், அதே வேளை மறைமுக யுத்தமாக இத்தகைய பயங்கரவாத கொலைகளை  தனது ஏஜன்ட்களை வைத்து ஈரானில் நடாத்தி வருகின்றன.  இத்தகைய கொலைகள் அணு விஞ்ஞான துறையில் ஈடுபடும் அறிவியலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இந்தத் துறையில் ஈரானை பின்னடையச் செய்யும் ஒரு வழிமுறையாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

அண்மையில் சர்வதேச அணு ஆற்றல் அதிகார சபை (IAEA) ஈரானின் அணு விஞ்ஞானிகளின் பெயர்பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியிருப்பதாக மத்திய கிழக்கின் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (Center for Middle East Studies) பணிப்பாளர் ஹிஸாம் ஜஃபர் குற்றம் சாட்டியுள்ளார்

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...