Sunday 15 January 2012

காணொளி - லிபியா ! அமெரிக்காவின் கைக்கு மாறும் ஓர் அரபு தேசம்


பலஸ்தீன போராளி - ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash)


பலஸ்தீன் !
ஆக்கிரமிப்பின் குறியீடு
மனித உரிமை மீறலின் அடையாளம்
உயிர் வாழும் அக்கிரமம்,
அநீதியின் அச்சு
சொந்த நாட்டுக்குள் சிறைப்பட்ட
கண்ணீர் கதையின் கரு!

இந்த மக்களின் போராட்டத்தை முஸ்லிம்களின் போராட்டம் என்று மட்டும் பார்க்காமல் மனித இனத்தின் போராட்டமாக பார்க்க வேண்டும்.

உலக ஊடகங்கள் பலஸ்தீன் விவகாரத்தில் ஊமையாக நிற்கின்றன.  வெறுமனே மதச்சாயம் பூசி அந்தப் போராட்டத்தை மலினப்படுத்தியும் வருகின்றன.

சொந்த நாட்டை மீட்கப் போராடும் அவர்களை பயங்கரவாதிகளாக மேற்கின் ஊடகங்கள் பார்க்கின்றன.  கதைகளைப் பரப்புகின்றன.

இந்தப் போராட்டத்தில் முஸ்லிம்கள் அல்லாத நிறைய பேர் அங்கம் வகித்திருக்கின்றார்கள். அங்கம் வகித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உரிமைப்போராட்டத்திற்கான அவர்களின் பங்களிப்பை ஊடகங்கள் எப்போதும் மறைத்தே வந்திருக்கின்றன.

காரணம் பலஸ்தீன் போராட்டம் தனியாக முஸ்லிம்களின் போராட்டம் என்று காட்டுவதன் மூலம் அவர்களுக்கு அரசியல் ரீதியாக நிறைய ஆதாயம் கிடைக்கின்றது.

அந்தப் போராட்டத்தை முஸ்லிம் போராட்டம் என்று தனிமைப்படுத்தி முத்திரைக் குத்துவதன் மூலம் உலக அளவில் பலஸ்தீனத்திற்குக் கிடைக்கும் ஆதரவிற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

பலஸ்தீன் போராட்டத்தில் அப்படி மூடிமறைக்கப்பட்ட ஒருவர்தான் இந்த ஜோர்ஜ் ஹபாஷ் .

பலஸ்தீன விடுதலைக்காக தனது வாழ்க்கையை முழுதாக அர்ப்பணித்த ஜோர்ஜ் ஹபாஷ் (George Habash), பலஸ்தீனத்தி்ல் லைடா Lydda என்ற நகரத்தில் ஒரு பணக்கார கிறிஸ்தவ ஒத்தொடொக்ஸ் குடும்பத்தில் 1925 ஆகஸ்ட் 1ம் திகதி பிறந்தார்.  

1948 ல், பெய்ரூத்திலுள்ள அமெரிக்க மருத்துவ கல்லூரியில் மாணவராக இருந்த காலத்தில் இஸ்ரேலின் பலஸ்தீன் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடுவதற்காக வேண்டி போராட்ட அணியொன்றை உருவாக்கினார்.

அவரும் அவரது முழு குடும்பமும், தனது சொந்த நகரமான லைடா மக்களில் 95 சதவீதமானோரும் இட்சாக் ரபின் தலைமையில்  இயங்கிய சியோனிச குழுவின்  துப்பாக்கி முனையில் அடித்து விரட்டப்பட்டனர். சட்டவிரோத  இஸ்ரேல் நாட்டின் உருவாக்கம் பலஸ்தீன் மக்கள் மீது கொடும் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது.

"அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஆயிரக்கணக்கான பலஸ்தீன் மக்கள் அழுது புலம்பியவாறு ஆனாதரவாக  தங்கள் வீடுகளில் இருந்து அடித்து உதை்து வெளியேற்றப்பட்டார்கள். இந்தக் காட்சிகளை பார்த்த ஒருவனால் போராட்டக் காரனாக மாறாமல் இருக்கவும் முடியாது. "

ஜோர்ஜ் ஹபாஷ் பிற்காலத்தில் ஸியோனிஸ கொடுமைக்கு எதிரான தனது போராட்டத்திற்கான காரணத்தை மேற்கண்டவாறு விபரித்தார்.

1951 இல், தனது மருத்துவ மேல் படிப்பை முடித்துக்கொண்ட ஜோர்ஜ் ஹபாஷ், துணை மருத்துவராக தொழில் புரிய ஆரம்பித்தார். அரசியல் காரணங்களுக்காக ஒரு வருடத்தின் பின்னர் தனது பதவியை இராஜிநாமா செய்து விட்டு  ஜோர்தான் நோக்கி புறப்பட்டார்.  ஜோர்தான் தலைநகர் அம்மானில் ஒரு மருத்துவமனையை திறந்து அங்கு தனது வைத்திய தொழிலை ஆரம்பித்தார். 1952 இல் அவர் எகிப்திய ஜனாதிபதி கமால் அப்துல் நாஸரின் ஏகாதிபத்திய எதிர்ப்பு கொள்கையினால் ஈர்க்கப்பட்டு, அரபு தேசிய இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராக பலஸ்தின் போராட்ட களத்தில் முன்னணிக்கு வந்தார்.

ஜோர்ஜ் ஹபாஷ் மத்திய கிழக்கின் அரபுகளின் ஒற்றுமை தொடர்பாக தனது கவலையை அடிக்கடி வெளியிட்டு வந்தார். தனது இனத்தை இஸ்ரேலுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு எகாதிபத்தியத்திற்கு அடிமையாக மாறி வருகின்ற வெட்கம் கூச்சமற்ற அரபு ஆட்சியாளர்களை ஜோர்ஜ் ஹபாஷ் கடுமையாக விமர்சித்து வந்தார். அரபு ஆட்சியாளர்கள் மீதான அவரது கபடமற்ற விமர்சனம் அரபு நாடுகளில் அவருக்கு நெருக்குதல்களை உருவாக்கின. இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாடின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. 1967 வரை பலஸ்தீன விடுதலை இயக்கத்தில் அங்கத்தவராக இருந்த ஜோர்ஜ் ஹபாஷ், 1967ல் இடம் பெற்ற இஸ்ரேலுடனான யுத்தத்தில் அரபு நாடுகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து இயக்கத்திலிருந்து வெளியேறினார்.

அதே ஆண்டு டிஸம்பர் மாதம் Popular Front for the Liberation of Palestine (PFLP)  பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கும் அடக்குமுறைக்கும் எதிராக இவரின் (PFLP) இயக்கம் பிரசார வேளைகளை அரபு நாடுகளில் முடுக்கிவிட்டது.  சிரியா டமஸ்கஸ்ஸில் ஒரு பிரசார கூட்டத்தில் ஜோர்ஜ் ஹபாஷ் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றார். ஒரு மாத கால சிறைவாசத்தின் பின்னர் எகிப்துக்கு சென்றார். எகிப்தில் ஜனாதிபதி அப்துல் நாஸரோடு கலந்துரையாடி இஸரேலுக்கு எதிரான தனது ஆயுதப் போராட்டத்திற்கு அனுசரணையைப் பெற்றுக்கொள்கின்றார்.

1970ம் ஆண்டு நான்கு விமானங்களைக் கடத்தி வந்து அவற்றில் இருந்த அனைவரையும் விடுதலை செய்து விட்டு மூன்று விமானங்களை ஜோர்தான் பாலைவனத்திலும், ஒன்றை கெய்ரோவிலும் வைத்து வெடிக்க வைத்ததன் மூலம் ஜோர்ஜ் ஹபாஷின் பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணி (PFLP)  உலகளாவிய ரீதியில் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த விமானக் கடத்தலைக் கண்டித்த ஜோர்தான் மன்னர் ஹுஸைன் தனது நாட்டிலிருந்த பலஸ்தீன் போராட்டக் குழுக்களை உடனடியாக வெளியேற்றினார். பலஸ்தீன் போராட்ட வரலாற்றில் இந்நிகழ்வு கறுப்பு செப்டம்பர்  "Black September". என வர்ணிக்கப்படுகின்றது.

1974களில் ஜோர்ஜ் ஹபாஷ் விடுதலைப் போராட்டத்தில் யாஸிர் அரபாத்தோடும் அவரது இஸ்ரேலை அங்கீகரிக்கின்ற போக்குகளோடும் முரண்பட்டார். யாஸிர் அரபாத் சொந்த நலனுக்காக விடுதலைப் போராட்டத்தை விற்று விட்டதாக ஜோர்ஜ் ஹபாஷ் குற்றம் சாட்டினார்.

ஜோர்ஜ் ஹபாஷ் பலஸ்தீன் போராட்டத்தில் இருக்கின்ற ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் போன்ற அமைப்புகளோடு தனது பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டார். 1993ல் இடம் பெற்ற ஒஸ்லோ உடன்படிக்கையை இந்த மூன்று தரப்பினரும் கடுமையாக எதிர்த்தனர். யாஸிர் அரபாத்தை தனது கைகளுக்குள் போட்டுக்கொண்ட அமெரிக்கவும், இஸ்ரேலும் பலஸ்தீன் மக்களின் போராட்டத்தை யாஸிர் அரபாத் என்ற கைக்கூலியை வைத்து கொச்சைப் படுத்தின.

ஒஸ்லோ ஒப்பந்தம் பலஸ்தீன் மக்கள் மீது திணித்த தன்னாட்சிப் பிரதேசம் autonomous territories என்று குறிக்கப்பட்ட பலஸ்தீன் அதிகார சபையை (Palestinian Authority) தீர்வை ஜோர்ஜ் ஹபாஷ், ஹமாஸைப் போன்று இஸ்லாமிக் ஜிஹாதைப் போன்று கடுமையாக எதிர்த்தார். சர்வதேச விதிகளின் படி பலஸ்தீனத்திலிருந்து விரட்டப்பட்ட மக்களுக்கு தனது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கான உரிமையை இந்த பலஸ்தீன் அதிகார சபை மறுப்பதாக இவர் குற்றம் சாட்டினார்.

2000ம் ஆண்டு ஜோர்ஜ் ஹபாஷ் பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தலைமைப் பதவியிலிருந்து விலகினாலும்  இறுதிவரை தனது அமைப்போடு சேர்ந்து பாடுபட்டார். மரணிக்கும் வரை பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

பலஸ்தீன் விடுதலைக்கான மக்கள் முன்னணியின் தலைமைப் பதவியை தலைமைத்துவத்தின் பயிற்சியை ஏனையோரும் பெற வேண்டுமென்று மற்ற ஒருவருக்கு வழங்கிவிட்டு சாதராரன அங்கத்தவராக செயற்பட்டார்.  அவரது வாழ்க்கையின் இறுதி நேரத்தில் காஸா மக்களின் கஷ்டங்களை நினைத்து மிகவும் கவலை கொண்டார். இன மத பேதமின்றி பலஸ்தீன் பூமியில் பிறந்தவர்கள்  அத்தனைப் பேரும் அந்த மண்ணின் மைந்தர்களே அவர்களின் உரிமைக்காக தொடர்ந்தது குரல் கொடுப்பது பலஸ்தீன் பிரஜை ஒவ்வொருவரினதும் பிறப்புரிமையாகும் என்ற கருத்தை ஜோர்ஜ் ஹபாஷ் தனது போராட்ட வாழ்க்கையில் நிலைநாட்டினார்.

2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி ஜோர்ஜ் ஹபாஷ் அம்மானில் காலம் சென்றார். பாலஸ்தீன் அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் அவரது மரணத்தைத் தொடர்ந்து மூன்று நாள் துக்க தினத்தை அறிவித்தார்.

“பலஸ்தீன் மக்களின்  மறுமலர்ச்சியை அவர்களின் எழுச்சியை துடைத்து அழிக்கக் காத்துக் கிடக்கும் அரபு தேசங்கள் அவற்றின் சரிவை வெகு விரைவில் சந்திக்கப் போகின்றன.”  ஜோர்ஜ் ஹபாஷ் ஒரு போது கருத்து தொிவித்தார்.

Saturday 14 January 2012

அல்ஜஸீராவும் அல் அரேபியாவும் அமெரிக்க பாணியில்..பொய் பரப்புகின்றனவா?

சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு தொடர்பாக மேற்கின் ஊடகங்களும், அதற்கு சார்பான அரபு ஊடகங்களும் பொய்யை திரித்துக் கூறி வருவதாக செய்திகள் வெளிவந்துக்கொண்டிருக்கின்றன.

அமெரிக்க ஏகாதிபத்திய ஊடகங்கள் தனக்கு எதிரான நாடுகளுக்கு எதிராக கடந்த காலங்களில் செய்த பொய்ப் பிரசார பணியை இன்று அதன் அடிவருடிகளாக செயற்படும் அரபு சுல்தான்களின் ஊதுகுழல் ஊடகங்களான அல் ஜஸீராவும், அல் அரேபியாவும் செய்து வருகின்றன.

இந்த காணொளியைப் பாருங்கள்.

ஈரான் அணு விஞ்ஞானியைக் கொன்றது இஸ்ரேலும், அமெரிக்காவும்தான் - ஈரான் குற்றச்சாட்டு



ஈரான் தெஹ்ரான் பல்கலைக்கழகத்திற்கு அருகே காரில் காந்தக் குண்டினைப் பொருத்தி அதை வெடிக்க வைத்ததில் அந்நாட்டின் அணு அறிவியல் அறிஞர் முஸ்தபா அஹ்மதி ரொஸான் கொல்லப்பட்டார். அதில் 2 பேர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிள் வந்த இருவரே அந்தக் குண்டினை வெடிக்கச் செய்தாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.



     கொல்லப்பட்ட அணு அறிவியலாளரின் ஜனாஸா நல்லடக்கம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. அதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

     குண்டு வெடிப்பு மூலம் அணு அறிவியலாளர் கொல்லப்பட்டதற்குப் பின்னணியாக இஸ்ரேலும், அமெரிக்காவும் உள்ளது என்றும் ஈரானின் அணு செயற்திட்டத்திற்கு எதிராகவே இந்தச் செயலை அந்நாடுகள் செய்திருப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரானின் அணு விஞ்ஞானிகளின் பெயர் பட்டியலை சர்வதேச அணு அதிகாரசபை அண்மையில் வெளியிட்டிருந்தது. இந்தச் செயல் ஈரானிய அணு விஞ்ஞானிகளின் பாதுகாப்பை கேள்விக் குறியாக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

     ஆனால் அமெரிக்கா இந்தக் கொலைக் குற்றச்சாட்டை வழமை போல் மறுத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்தக் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதில் எந்த ஆர்வத்தையும் அது இதுவரை வெளியிடவுமில்லை.

இஸ்ரேல் என்ற நாட்டை பூகோள வரைபடத்திலிருந்து அழித்து விட்டு பலஸ்தீனை மீட்டெடுக்க வேண்டும் என்று ஈரான் கோரி வருகிறது.
ஈரான் மீது தாக்குதல் ஒன்றை நடாத்தி மத்திய கிழக்கில் தனக்கிருக்கும் தடையை அழிக்க உதவுமாறும் இஸ்ரேல் அடிக்கடி அமெரிக்காவை கோரி வருகின்றது.

இந்த அரசியல் பின்னணியில்தான் ஈரான் இதுவரை மூன்று அணு விஞ்ஞானிகளை இழந்திருக்கிறது..


     ஈரானில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதே போன்ற தாக்குதல்கள் மூலம் 3 அறிவியல் அறிஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  அதில் 2 பேர் அணு அறிவியலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் தனக்கு நிகராக அணு விஞ்ஞான அறிவியல் துறையில் எழுந்து வரும் ஈரானை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்தி வைப்பதில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் அண்மைய காலமாக கடும் போக்குகளைக் கடைப்பிடித்து வருகின்றன. பாரிய பொருளாதார தடைகளை ஈரான் மீது அவை திணித்து வருகின்றன.

மரபு ரீதியான போர் ஒன்றிற்கான ஆயத்தங்களுடன் பல பொருளாதார நெருக்குதல்கள் மூலம் நேரடியாக ஈரானோடு மோதி வரும் இந்தச் சக்திகள், அதே வேளை மறைமுக யுத்தமாக இத்தகைய பயங்கரவாத கொலைகளை  தனது ஏஜன்ட்களை வைத்து ஈரானில் நடாத்தி வருகின்றன.  இத்தகைய கொலைகள் அணு விஞ்ஞான துறையில் ஈடுபடும் அறிவியலாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இந்தத் துறையில் ஈரானை பின்னடையச் செய்யும் ஒரு வழிமுறையாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

அண்மையில் சர்வதேச அணு ஆற்றல் அதிகார சபை (IAEA) ஈரானின் அணு விஞ்ஞானிகளின் பெயர்பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கியிருப்பதாக மத்திய கிழக்கின் கற்கைகளுக்கான நிறுவனத்தின் (Center for Middle East Studies) பணிப்பாளர் ஹிஸாம் ஜஃபர் குற்றம் சாட்டியுள்ளார்

Friday 13 January 2012

ஹோர்மூஸ் நீரிணை - பலப் பரீட்சையில் அமெரிக்காவும் ஈரானும்


ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக எழுந்தள்ள பிரச்சினை, தொடரும் ஈரான் அமெரிக்க பலப் போட்டியின் மையப் புள்ளியாக மாற்றமடைந்து வருகின்றது.

2011 டிஸம்பர் 25ம் திகதி ஈரான் அதன் நான்காவது நாள் கடற்படை பயிற்சியை ஹோர்மூஸுக்கு அருகில் நடாத்திக் காட்டியது. இந்த ஹோர்மூஸ் நீரிணை எண்ணெய் வளம் கொளிக்கும் பாரசீக வளைகுடாவின் கேந்திர ஜலசந்தியாகும்.
ஹோர்மூஸ் நீரிணை உலக பொருளாதார அரசியல் விவகாரங்களில் ஒரு முக்கிய புள்ளியாக திகழ்கின்றது. தனது ஏகாதிபத்திய அரசியலில் எண்ணெய்க்காக அரபு நாடுகளை அடித்தும் அரவணைத்தும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயற்சித்து வரும் அமெரிக்காவிற்கு ஹோர்மூஸ் நீரிணை முக்கிய தளமாக திகழ்கிறது. ஹோர்மூஸ் நீரிணை உலக சந்தைக்கு எண்ணெய்யை எடுத்துச் செல்கின்ற முக்கிய மார்க்கமாகும்.
இந்த ஹோர்மூஸ் நீரிணையின் வட பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. ஓமானும், ஐக்கிய அரபு இராஜ்ஜியமும் அதன் தென் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.
ஹோர்மூஸ் நீரிணை 112 மைல் நீளமும் 21 மைல் அகலமும் கொண்டதாகும். 2011ம் ஆண்டு  ஒரு நாளைக்கு 17 மில்லியன் பெரல் எண்ணெய் இந்த நீரிணையால் கொண்டு செல்லப்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. உலக எண்ணெய் வர்த்தகத்தில் கடல் மார்க்கமாக 35 வீதமான எண்ணெய் இந்த ஹோர்மூஸ் நீரிணையூடாகவே எடுத்துச் செல்லப்படுகின்றது. வளைகுடாவின் 90 வீதமான எண்ணெய்யும், மொத்த உலக எண்ணெய் வர்த்தகத்தில் 20 வீதமான எண்ணெய்யும் இந்த நீரிணையை ஊடறுத்தே செல்கின்றன.
இன்றைய உலக அரசியல் போக்கில் ஹோர்மூஸ் நீரிணை பரபரப்பாக பேசப்படுவதற்கு இதுவே காரணம்.
ஈரானின் எண்ணெய்க்கு அமெரிக்கா தடை விதித்தால் ஒரு துளி எண்ணெய் இந்த ஹோர்மூஸ் நீரிணை ஊடாக வெளியுலகிற்கு நகர முடியாது என ஈரானின் துணை ஜனாதிபதி முஹம்மத் ரீஸா றஹீமி எச்சரிக்கை விடுத்தள்ளார்.
ஹோர்மூஸ் நீரிணையை மூடுவது தண்ணீர் ஒரு மிடரைக் குடிப்பதை விட எங்களுக்கு மிக இலகுவானது என ஈரானின் கடற்படைத்தளபதி ஹபீபுல்லாஹ் ஸய்யாரி எச்சரித்துள்ளார்.
மேலும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் வளைகுடா பகுதியிலும் பாரசீக வளைகுடா பகுதியிலும் நுழையக்கூடாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் அப்பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டிருப்பதால், அப்பகுதியில் அமெரிக்க கப்பல்கள் நுழையக்கூடாது. மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்யும் வழக்கம் எம்மிடம் இல்லை. முதலும் இறுதியுமாக  எச்சரிக்கிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் ‘இந்த எச்சரிக்கை  பொருளாதார தடைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தெஹ்ரானின் பலவீனத்தை காட்டுவதாக’ அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்க இராணுவ தலைமையகமான பெண்டகனின் ஊடக பேச்சாளர் ஜார்ஜ் லிட்டில் இது பற்றி கூறுகையில் வளைகுடா பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல ஆண்டுகளாக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி வருகிறது. இந்நிலைமை தொடரும். பொருளாதார தடைகளால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஈரான், அதிலிருந்தும் உள்நாட்டு பிரச்சினைகளிலிருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இவ்வாறு பேசி வருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
ஹோர்மூஸ் நீரிணை தொடர்பாக இந்த இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் முறுகல் நிலை மசகு எண்ணெயின் விலையில் ஏற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றது.
இந்நிலையில் ஈரானின் தேசிய தொலைக்காட்சி விடுத்துள்ள தகவலின் படி, ஓர்முசு நீரிணையின் (Straits of Hormuz) பாதுகாப்பை நிலைப்படுத்துவதற்காக ஈரான் எதுவேண்டுமென்றாலும் செய்யும் என ஈரானின் பாதுகாப்பு துறை அமைச்சர் அஹ்மட் வாஹிதி தெரிவித்துள்ளார்.
‘அமெரிக்க கடற்படையினரின் பாரசீக குடா மீதான ஆதிக்கம் தேவையற்றது. விசனத்தை ஏற்படுத்த கூடியது. அமெரிக்க விமானங்கள் வளைகுடாவில் பறக்கத்தொடங்கினால், ஈரான் முழு வீச்சில் அதை எதிர்க்கும். 10 நாட்களுக்கு ஈரானின் கடற்படையின் யுத்த பயிற்சி அங்கு நடைபெறும். ஈரானின் எண்னெய் வளம் மீது மேற்குலக நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். பாரசீக வளைகுடாவிலிருந்து ஈரான் எரிபொருள் ஏற்றுமதியாவது தடைவிதிக்கப்படுமாயின், ஓர்மூசு நீரிணையின் வழியே எரிபொருள் கொண்டு செல்வதற்கு எவருக்கும் உரிமை இருக்காது’ என அவர் எச்சரித்தார்.

Thursday 12 January 2012

லிபியா 1911-2011 ஒரு நூற்றாண்டின் நிகழ்வு - காட்டிக்கொடுப்பும் கழுத்தறுப்பும்


1911 ம் ஆண்டு இத்தாலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய உமர் முக்தாரின் வாழ்க்கையை வைத்து பிரபல ஹொலிவூட் திரைப்பட தயாரிப்பாளர் முஸ்தபா அக்காத் அவர்களினால் உருவாக்கப்பட்ட பாலைவனச்சிங்கம் திரைப்படத்தை பலமுறை பார்த்திருக்கின்றேன்.

வயது முதிர்ந்த ஒருவரின் இரத்த நாளங்களைச் சூடேற்றி, வாலிபத்தின்  வீரசாகசங்களைப் புரிய வைக்கும் போர்க்குணம் விடுதலையை உயிராய் நேசிப்பவனின்மனதுக்குள் ஊற்றெடுக்கின்றது.

லிபியாவின் விடுதலைக்காக அன்று உலகின் பயங்கரவாதத்திற்கு பெயர்பெற்ற இத்தாலியின் மிருகப்படையோடு மோதுகின்ற வல்லமையை அந்த வயது முதிர்ந்த உமர் முக்தார் பெற்றிருந்தார்.

முசோலினியின் படைக்கு சிம்மசொப்பனமாக இருந்த உமர் முக்தார் இறுதியில் ஒரு சில லிபிய மக்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு பகிரங்கமாக தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்படுகின்றார்.

லிபியாவின் அந்த போராட்ம் இத்தாலிக்கு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த ஆண்டு 1911.  சரியாக ஒரு நூற்றாண்டின் பின்னர் அதாவது 2011ம் ஆண்டு மீண்டும் ஒரு முறை அந்த நாடு காட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

1911 ஆண்டு இத்தாலிக்கு, 2011 ஆண்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு.

லிபியா “அன்றும் இன்றும் ” வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும் போது எனக்குத் தோன்றியவை இவை.

இந்த நிழற்படங்களைப் பாருங்கள்


1911 இத்தாலியின் ஆக்கிரமிப்பின் போது லிபிய மக்கள் அகதி முகாம் ஒன்றில்


2011 இன்றைய  ஆக்கிரமிப்பில் லிபிய மக்கள் அகதி முகாம் ஒன்றில் 


1911 முசோலினியின் அராஜகத்தை ஏற்றுக்கொண்ட அப்போதைய புகழ்பெற்ற முப்தியின் ஆசிர்வாதம்


இத்தாலிய கொலைக் காரர்களுக்கு காட்டிக் கொடுத்தவர்கள் வழங்கும் குதூகலமான வரவேற்பு

1911 இத்தாலிய கொலைக் காரர்களுக்கு காட்டிக் கொடுத்தவர்கள் வழங்கும் குதூகலமான வரவேற்பு


2011 அமெரிக்க கொலைக் காரர்களுக்கு காட்டிக் கொடுத்தவர்கள் வழங்கும் குதூகலமான வரவேற்பு (2011 ஆகஸ்ட் 18ம் திகதி அமெரிக்க அரச செயலர் ஹிலாரி கிளின்டனின் லிபிய விஜயத்தின் பொது எடுக்கப்பட்ட படம்)

Clinton told reporters: "We hope he will be captured or killed soon."
http://edition.cnn.com/2011/10/18/world/africa/libya-clinton/index.html



வெகு விரைவில் கத்தாபி பிடிபடுவார் அல்லது கொலை செய்யப்படுவார்
ஹிலாரி கிளின்டன்

2011  லிபியாவில் அமையவிருக்கும் இஸ்லாமிய கிலாபத்திற்கு அமெரிக்காவின் ஆசிர்வாதம் (2011 ஆகஸ்ட் 18ம் திகதி அமெரிக்க அரச செயலர் ஹிலாரி கிளின்டனின் லிபிய விஜயத்தின் பொது எடுக்கப்பட்ட படம்)




2011 லிபியாவில் அமெரிக்காவின் அராஜகத்தை ஏற்றுக்கொண்ட இப்போதைய புகழ்பெற்ற முப்தி கர்ளாவியின் ஆசிர்வாதம்


கதாபியை சுட்டுக் கொல்லுங்கள்
                                                      கர்ளாவி 


“Whoever in the Libyan army is able to shoot a bullet at Mr. Gaddafi should do so,” Qaradawiannounced Monday, “to rid Libya of him.”
http://www.theblaze.com/stories/egyptian-muslim-brotherhood-cleric-orders-gaddafi-assassination/

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...